Friday, February 17, 2012

இரண்டு வருட பதிவுலக வாழ்க்கையும் விருதும்.

போன மாதமே இதனை எழுதி இருக்க வேண்டும். ஆனால், பதிவுலகில் இருந்து என்ன பெரிதாக சாதித்து விட்டோம் என்று நினைத்து இதனை எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனாலும், சென்ற வாரம் நான் படித்த இரண்டு பதிவுகளும், அவர்கள் உண்மைகள் அவர்கள் எனக்கு வழங்கிய விருதும், என்னை பற்றி சுயபரிசோதனை செய்ய தூண்டியதன் விளைவே இந்த பதிவு.

2008 இல் இருந்து பதிவுலகம் எனக்கு அறிமுகமானாலும் பதிவு எழுதுவது எப்படி என்பது குறித்தோ, திரட்டி குறித்தோ நான் அறிந்திருக்கவில்லை. வேலை பளு காரணமாகவும் எழுதுவது குறித்து நான் நினைக்கவும் இல்லை.

ஆனால் 2009 இல் முகுந்த் பிறந்தபிறகு நான் எடுத்த பேறுகால விடுமுறை எனக்கு நிறைய நேரம் தந்தது. அதுவரை ஓடி ஓடி பழக்கப்பட்ட எனக்கு நேரம் நிறைய இருந்தது போர் ஆகிவிட்டது. எதையாவது உருப்படியாக செய்யலாமே என்று ஆரம்பித்தது தான் வலைப்பூ. என் கணவரே வலைப்பூ ஆரம்பி என்று blogspot ஐ அறிமுகப்படுத்தினார்.

முதலில் எதனை எழுதுவது என்று தெரியாமல், நான் படித்த புத்தகம் பற்றியும், என்னுடைய அனுபவம் பற்றியும் எழுதி வைத்து பார்த்து கொண்டு இருந்தேன். முதன் முதலில் என் வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டமும் இட்டு, திரட்டி குறித்து அறிமுகப்படுத்தி அதில் பதிவை இணைக்க சொல்லி கூறியவர் தெகா அவர்களும், முத்துலெட்சுமி அவர்களும் தான்.

பதிவை தமிழ்மணத்தில் இணைத்த பின் மேலும் பலர் வந்து பார்த்து பின்னூட்டம் இட ஆரம்பித்ததும், blog bug ஆல் கடிக்கப்பட்டு இணையத்திற்கு நான் அடிமையானது நினைத்து இப்போது சிரிப்பு தான் வருகிறது. யார் பார்த்தார்கள், எப்போது எங்கிருந்து வந்தார்கள் என்று எப்போதும் கம்யூட்டரே கதி என்று ரெஃப்ரெஸ்ஷ் செய்து பார்த்திருக்கிறேன்.

இது ஒருவிதமான அடிக்‌ஷன் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வித ஆர்வத்தில் ஆரம்பிக்கும் இது போகப்போக வெறியாகி, ஹிட்டை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்று மனது யோசிக்க தொடங்கும். ஒரு நாளைக்கு ஒரு பதிவு, இரண்டு பதிவு என்று போட்டி போட்டுக்கொண்டு எழுத ஆரம்பித்து, உபயோகமான பதிவுகள் இல்லாமல், வெறும் மொக்கை பதிவுகள் போட ஆரம்பித்து விடும் அபாயம் உண்டு.

மன அமைதிக்காக பிளாக் என்பது போயி,  மன நிம்மதி கெடுவதற்குறி்ய ஒரு காரணியாக போய் விடும். நல்ல வேளை, இது ஒரு மாய உலகம் என்று நான் ஆரம்பத்திலேயே சுதாரித்து கொண்டேன். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டுமே பதிவிடுவது, பதிவுகளை பார்ப்பது என்று என்னை நானே சுருக்கி கொண்டுவிட்டேன்.

சென்ற ஆண்டு ஆரம்பத்தில் மறுபடியும் வேலைக்கு சேர்ந்தபிறகு என்னுடைய பதிவிடும் நேரமும் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடும் நேரமும் அதிகளவில் குறைந்து போய் விட்டன.

பெண்ணாக இருந்து குடும்ப வேலைகளுக்கு இடையே வீட்டு வேலைகள் ஒழிந்த நேரம் பதிவிடுவது என்பது மிக கடினம். அதுவும், வேலைக்கும் சென்று விட்டு வீட்டுவேலைகளும் செய்து விட்டு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் பதிவிடுவது மிக மிக கடினம். அதுவும் என்னை போல ஆராய்ச்சித்துறையில் இருப்பவர்களுக்கு நேரம் காலம் என்று வேலைக்கு இருப்பதில்லை. வரும் நோய்க்கு நேரம் காலமா தெரிய போகிறது. பல நேரங்களில் விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

அதனால், குடும்பத்தையும், வேலையையும் பாலன்ஸ் செய்வது என்பது மிக மிக கடினமாகி விட்ட நிலையில், பதிவிற்க்கு என்று நேரம் ஒதுக்குவது முடியாததாகி விட்டது. இந்த நிலையில், ஹிட் பற்றியோ, பின்னூட்டதிற்கு பதில் எழுதுவது பற்றியோ நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.

ஆயினும், இன்னும் பலர் என்னுடைய பதிவிற்கு வந்து படித்து ஊக்குவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் உளமார்ந்த நன்றி.

Liebster award கொடுத்த அவர்கள் உண்மைகள் அவர்களுக்கு என் நன்றி. இதனை என்னை போல இருக்கும் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

குறிப்பாக நான் மிகவும் மதிக்கும் இருவர்.

  1. அறிவியலில் பெண் ஆராய்ச்சியாளராக இருந்து கொண்டு குடும்பத்தையும் அற்புதமாக பாலன்ஸ் செய்யும் அன்னா தி அனலிஸ்ட் அவர்களுக்கும்
  2. மிக அருமையான தமிழால் நம்மை கட்டிப்போடும் அறிவியல் ஆசான் கையேடு ரஞ்ஜித் அவர்களுக்கும் அளிக்க விரும்புகிறேன்.


நன்றி.








Friday, February 3, 2012

கடவுளும், பரிணாமமும், மாலிகுகலர் பயாலஜியும்


2010 ஆம் வருடம் கிரேக் வெண்டர் அவர்கள் செயற்கை செல் உருவாக்கிய செய்தி வந்தது தான் தாமதம், பதிவுலகில் உள்ள நாத்திகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாருங்கள் செயற்கை செல் உண்டாக்கி விட்டனர் அறிவியலார், அதனால் கடவுள் என்ற ஒன்று இல்லாவே இல்லை என்ற விவாதம் ஆரம்பித்தனர்.

ஆத்திகர்களே விடுவேனா பார் என்று நாத்திகர்களுக்கு 'counter' கொடுப்பதாக நினைத்து வரிந்து கட்டி கொண்டு, பரிணாமம் என்ற ஒன்று இல்லாவே இல்லை,  கடவுள் இந்த உலகத்தை இத்தனையாவது நாள் இப்படி தான் படைத்தார் என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தனர்.

என்னை போன்ற ஆ/நாத்திகர்களே, ஆத்திகர்கள் பக்கமும் செல்ல முடியாமல் நாத்திகர்கள் பக்கமும் செல்ல முடியாமல், என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க ஆரம்பித்து விட்டோம்.

அதென்ன ஆ/நாத்திகர்கள், “நமக்கு மேலே ஒரு சக்தி இருந்து நம்மை ஆட்டுவிக்கிறது என்று நம்பும் அறிவியலார்கள்”.

சரி இதெல்லாம் இப்போது எதற்கு சொல்கிறேன் என்று கேட்பவர்களுக்கு.

சில நாட்களுக்கு முன்பு தமிழ் மணத்தை பல நாட்கள் இடைவேளைக்கு பிறகு திறக்க நேர்ந்தது..அதில் அதிக பதிவர்கள்  பரிந்துரைத்த இடுகை என்ற ஒரு இடுகை "Central Dogma" எனப்படும் மாலிகுலர் பயாலஜி அடிப்படை தத்துவத்தை கூறுவது என்று பறைசாற்றப்பட்டு கிட்டதட்ட 30க்கும் அதிகமானவர்கள் பரிந்துரைத்து இருந்தனர். அட, நம்ம சப்ஜெக்ட் ஆச்சே..நாமலே ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சதே..என்று..மிக மிக ஆர்வத்துடன் சென்று பார்த்தேன்..

படித்த சில நேரத்தில் அதில் கூறப்பட்டிருந்த அடுக்கடுக்கான அறிவியல் மற்றும் பரிணாமத்தை பற்றிய திரிபுகளை பார்த்த பிறகு பொறுக்க மாட்டாமல், சில கேள்விகளை எழுப்பிவிட்டு தயவு செய்து தவறான அறிவியலை போதிக்காதீர்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.

அதற்கான பதிலாக தன் கூற்றை நியாயப்படுத்தி தன் கட்டுரையில் உள்ள குற்றம் இருந்தால் காட்டும்மாறு சவால் விட்டு இருந்தார்.

பரிணாமம் என்பது என்ன? மனித பரிமாணம் மட்டுமே பரிணாமம் என்றழைக்கப்படுகிறதா?, வேறெந்த உயிரினமும் பரிணாமிக்காதா? என்ற சில கேள்விகளை எழுப்பி இருந்தேன்?...பதில் ஏதும் அங்கிருந்து வந்ததாக தெரியவில்லை.

முன்பே பரிணாமம் பற்றி தருமி அய்யா அவர்களும், தி அனலிஸ்ட் அவர்களும் அழகாக எழுதி இருக்கிறார்கள்.

அதனால், நான் இங்கு கூற இருப்பது எல்லாம் பரிணாமத்திற்கான சிறந்த உதாரணமாக இருக்கும் ஃப்லூ வைரஸ் பற்றியே.


அதென்ன ஃப்லூ வைரஸ், பறவைக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல், ஃப்லூ காய்ச்சல் என்ற வித விதமான காய்சல் பரப்பும் ஒரு சின்னச்சிறிய உயிரி அது.

ஒரு ஓவியரின் கைவண்ணத்தில் கீழே காட்டப்பட்டு இருப்பது தான் ஒரு ஃப்லூ வைரஸும் அதில் இருக்கும் ஜீன்களும்.


நமக்கெல்லாம் இருப்பது போலே ஆயிரக்கணக்கான ஜீன் களை ஃப்லூ வைரஸ் கொண்டிருக்கவில்லை. அவைகள் கொண்டிருப்பது மொத்தம் பன்னிரெண்டு ஜீன்கள் மட்டுமே..இந்த 12 ஜீன் களும் 'segmented genome' என்றழக்கப்படும் 8 கூறுகளாலான மரபுப்பொருள்களை உடைய பகுதிகளாக பிரிக்கபட்டு இருக்கும்.

வெறும் 12 ஜீன்களை கொண்டு எப்படி இத்தனை effective ஆக மக்களை அவர்களால் தாக்க முடிகிறது, வாழ முடிகிறது, ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் கிலி ஏற்படுத்த முடிகிறது என்றால்..அதற்கு ஒரே ஒரு காரணம் தான், வைரஸ் கிருமிகள், எப்படி திறமையாக வாழ்வது என்ற பரிணாம கொள்கையை நன்கு அறிந்து கொண்டிருக்கின்றன.
"survival of the fittest" என்றழைக்கப்படும் அந்த கொள்கையை எப்படி அவை பயன்படுத்துகின்றன என்று பார்ப்போம்.


ஏற்கனவே, ஃப்லூ வைரஸ் 8 கூறுகளையுடைய மரபுப்பொருள்களை கொண்டது என்றறிந்தோம், இந்த கூறுகளை permutation and combination முறையில் பலவாறு சேர்த்து, பிரித்து ஒழுங்குபடுத்தி எந்த கூறுகள் வாழ்வதற்கு தகுந்ததோ அவற்றை அழகாக இணைத்து கொள்கிறது ஃப்லூ.

உதாரணமாக கீழே கொடுக்கபட்டு இருக்கும் இரண்டு பிங்க் மற்றும் கிரீன் வைரஸ்கள் தங்களின் மரபுப்பொருள்களை எப்படி ஒழுங்குபடுத்தி அதிக ஆற்றல் கொண்ட ஃப்லூவை உருவாக்குகிறது பாருங்கள்.
Figure 1
ஃப்லூ நோய்வாய்பட்ட ஒருவரிடம் இருந்து எந்த நிமிடத்தில் வைரஸை நீங்கள் பிரித்தெடுத்தாலும், அவற்றில் கிட்டதட்ட 40% வைரஸ்கள், இப்படி ரீஅஸ்ஸார்ட்மெண்ட் செய்துகொண்டு மிக மிக வலிமையான வைரஸ் சந்ததிகளை உருவாக்கி இருக்கும்.

என்ன ஒரு திறமை பாருங்கள். 

இவ்வளவு இன்று போதும் என்று நினைக்கிறேன், பிறகொரு சமயம், மீண்டும் ஃப்லூ பற்றி பார்ப்போம்.

தற்போது..மீண்டும் ஆத்திக, நாத்திக சண்டைக்கு வருவோம்..

ஆத்திகர்களே..நீங்கள் கடவுள் என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறீர்கள், அதோடு விட்டுவிடுங்கள்..பரிணாமம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதெல்லாம் வேண்டாம்.

நாத்திகர்களே..பரிணாமம் உண்மை..ஆனால் தயவு செய்து பரிணாமத்திற்கும் கடவுளுக்கும் முடிச்சு போடவேண்டாம்.

நன்றி.

Thursday, February 2, 2012

ஒரு சீட்டுக்கு பத்து லட்சமும், நண்பன் படமும்

ஒரு சில நேரங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக தோன்றும் சில விசயங்களுக்குள்ளும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும், அப்படித்தான் எனக்கு நான் கேள்விப்பட்ட சில விசயங்களுக்கும் நான் பார்த்த நண்பன் படத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக தோன்றுகிறது.

முதலில் நான் கேள்விபட்ட சில விசயங்கள். சென்னையில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி சேர்க்க ஃபீஸ் குறைந்தது 2 லட்சம் அதிக பட்சம் 10 லட்சம் கேட்கிறார்கள். இது நான் அறிந்து கொண்ட அதிர்ச்சி தரும் செய்தி. எல்லா ஊர்களிளும் இது உண்மையா என்று யாராவது சொல்லுங்கள். இந்த ஃபீஸ் தவிர மாதாமாதம் டெர்ம் பீஸ், பஸ் பீஸ், ஹாஸ்டல் பீஸ்....இன்னும் நிறய இருக்கிறது. இதனை தவிர ஒரு குழந்தையை நீச்சல், கராத்தே போன்ற வேறு ஆக்டிவிடியில் சேர்த்து விட்டால் அதற்கு தனி ஃபீஸ். எல்லாவற்றையும் சேர்த்தால் எப்படியும் ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு 10 முதல் 15 ஆயிரம் வரை செலவாகும் போல. எப்படி ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தால் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை.

இத்தனை செலவு செய்து, அந்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, அதனை தவிர கராத்தேயில், பாட்டு கிளாசில்..என்று அடுக்கடுக்காக சேர்த்துவிட்டு அவை எல்லாவற்றிலும் அந்த குழந்தை முதலில் வரவேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறோம். இதற்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் பெற்றோரும் விதி விலக்கல்ல, இங்கு பள்ளிக்கு ஃபீஸ் இல்லை..ஆனாலும் இந்திய பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் இருக்க விடுவதில்லை குமோன், நீச்சல், கராத்தே, பியானோ, பாலே..என்று எண்ணற்ற கிளாஸ்களில் சேர்த்து விட்டு அவற்றில் எல்லாம் தங்கள் குழந்தைகள் முதலில் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். யாரும் குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள் என்று கேட்பதில்லை. இதனை ஒரு மைய கருத்தாக வைத்தே நண்பன் படம் வந்திருப்பது வரவேற்க்கப்பட வேண்டியது.


அடுத்த செய்தி, தற்போது இருக்கும் குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயதினரின் வாழும் வாழ்க்கைமுறை பற்றியது. சிறு வயதிலேயே, டி.வி, செல் போன், வீடியோ கேம், இன்டர்நெட்,ஃபேஸ்புக், டுவிட்டர்..எல்லாம் தெரிகிறது இவர்களுக்கு. முகமறியா நட்புகளே இவர்கள் அறிந்தது. வெளியில் சென்று விளையாடுவதை பல குழந்தைகள் அறிவதில்லை.

நண்பன் என்றால் யார்? உயிர் தோழன், தோழி என்றெல்லாம் நமது இலக்கியங்களில் சொல்லி இருக்கிறார்களே அப்படி என்றால் யார்?, என்ன செய்வார் என்று இன்றைய இளைஞர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்கள் சொல்வது இதுவாகத்தான் இருக்கும், “என் பெஸ்ட் ஃப்ரெண்ட் கூட மால் போனேன், அங்க கே.எஃப்.சி போனோம், தண்ணி அடிச்சேன், பைக்கில/காரில ஈ.சி.யாரில போனேன்..”என்று தான் நூற்றுக்கு தொண்ணூறு இளைஞர்கள் இன்று சொல்கிறார்கள். அதுவும் தண்ணி அடிப்பது என்பது இப்போதெல்லாம் டீ, காபி குடிப்பது போல சர்வ சாதாரணமாக சொல்லப்படுகிறது.

இப்படி செய்யிறவங்கெல்லாம் எங்க ஊரில இல்ல என்று சொல்லுபவர்களுக்கு..இது சென்னையில் மட்டும் நடப்பதல்ல..மதுரை, திருச்சி போன்ற ஊர்களிலும் இப்போது நடக்கிறது..
தோள் கொடுப்பான் தோழன் என்று சொல்வார்கள், நண்பன் படத்தில் காட்டபட்டு இருப்பது போல தன்னுடைய நண்பனை உயர்த்த எத்தனை பேர், தோள் கொடுக்கிறார்கள் இப்போது சொல்லுங்கள்.