
கடந்த வாரம் தெகா அவர்கள் தன் தளத்தில் Franz Kafka வின் The Metamorphosis புத்தகம் பற்றிய அறிமுகமும் சுட்டியும் கொடுத்திருந்தார். Metamorphosis என்பது சில உயிரினங்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் என்று நான் அறிந்திருந்தாலும் , காஃப்கா பற்றி நான் அறிந்திருக்கக்வில்லை.
மாற்றம் என்பது மாறாதது, என்பதே கதையின் கரு. கதையின் நாயகன் கிறிகர் மூலம் அது காட்டப்படுகிறது. வளர்சிதை மாற்றம் என்பது வெளி தோற்றத்தில் ஏற்படுவது என்பது அறிவியல் கூறும் கருத்து. இந்த புத்தகத்தில் மற்றொரு மாற்றமும் நமக்கு அறிமுகப்படுத்தபடுகிறது. அது மனித மனங்களில் ஏற்படும் மாற்றம்.
கதையின் நாயகன் கிறிகர் சம்சா ஒரு சேல்ஸ் மேன். தன் தந்தை பட்ட கடனுக்காக ஒரு கம்பெனியில் அடிமை போல இரவு பகல், நாள் கிழமை எதுவும் பார்க்காமல் தனக்கென்று எதை பற்றியும் யோசிக்காமல் வேலை பார்கிறான். ஒரு நாள் காலையில் படுக்கையில் இருந்து எழும்போது தன் உடல் ஒரு பூச்சி போன்று மாறி விட்டதை போன்ற புறமாற்றத்தை பார்கிறான். அது ஒரு புற மாற்றமாகவே அவனுக்கு தெரிகிறது. அது சீக்கிரம் சரியாகிவிடும் தன் பணியை தொடரலாம் என்றே அவன் நினைக்கிறான்.
ஆனால், மற்றவர்களுக்கு அவன் உதவாக்கரை ஆகி விட்டான். அங்கிருந்து ஆரம்பிக்கிறது அவனை சார்ந்த மனிதர்களின் மனங்களின் மாற்றங்கள். படிப்படியாக அவன் இருப்பை பற்றியும், அவனை பற்றிய நினைவுகளையும் அனைவரும் மறக்க ஆரம்பிக்கிறார்கள்.
அவன் இருந்த அறை பழைய சாமான்கள் வைக்கும் அறையாக மாறுகிறது. பழைய மிச்சம் மீதிகள் அவனுக்கு உணவாகின்றன. அவன் தன்னுடைய அறையை விட்டு வெளியில் வருவதில்லை. ஆனாலும் ஒரு முறை தன் அறையில், தான் இருக்கும் நிலையை பார்த்து அவன் தாய் மயங்கி விழுந்து விடுகிறாள். அதற்க்கு அவனை காரணம் காட்டி அவன் தந்தை அவனை ஆப்பிள் பழங்கள் கொண்டு வீசி எரிய ஒரு பழம் அவன் முதுகில் பதிந்து புண் ஆகி ரணமாக ஆரம்பிக்கிறது. யாருக்கும் அவனுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் போகிறது.
ஒரு நாள் தன் குடும்பம் பேசும் போது அவன் கேட்க நேரிடுகிறது, அதில் அவனுடைய தந்தை அவனுக்கு தெரியாமல் அவன் சம்பாத்தியத்தை சேர்த்து வைத்திருப்பதாகவும் இன்னும் சில காலம் அது குடும்ப செலவுக்கு பயன்படும் என்றும் அறிகிறான். தந்தை சேர்த்து வைத்த அந்த பணம் தனக்கு கொடுத்திருந்தால் முன்னமே அவன் செய்த அடிமை வேலையை விட்டு விட்டிருக்கலாமே என்றும் நினைக்கிறான். ஆனாலும், தன் தந்தை செய்தது நல்லது தான் என்றும் நினைக்கிறான்.
அது நாள் வரை அவன் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்து கொழுத்த அவன் சொந்தங்கள் இப்போது வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார்கள். அவன் செத்து தொலைந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இவன் ஒரு ஒட்டுண்ணி ஆக தெரிகிறான். ஆனால் அவர்களே இத்தனை நாள் அவனை சார்ந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்தார்கள் என்பதை மறக்கிறார்கள். ஒரு நாள் அவன் மூச்சை விடுகிறான் அவன் குடும்பம் "தொலைந்தது சனியன்" என்று நிம்மதி அடைகிறது. அவன் பெற்றோரின் கவனம் அவன் இளவயது தங்கையின் மேல் விழுகிறது. "அவளின் இளமை அவர்களின் கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கிறது". புத்தகம் முடிகிறது.
கிறிகர்யிடம் உடல் சார்ந்த மாற்றம் மட்டுமே நிகழ்கிறது. அதனை தவிர அவன் மனதளவில் அவன் அவனாகவே இருக்கிறான். ஆனால் பெரும் மாற்றத்திற்கு உட்படுபவர்கள் அவன் சொந்த பந்தங்களே.
புத்தகத்தை படிக்க ஆரம்பித்த போது ”96 பக்கம் தானே சீக்கிரம் முடிச்சிடலாம்” என்றே ஆரம்பித்தேன். படிக்க படிக்க ”ஒவ்வொரு வாக்கியத்தையும் பல முறை படிக்க வேண்டுமோ? , ஒவ்வொன்றுக்கும் பல அர்த்தம் இருக்கும் போல” என்று தோன்றுகிறது.
இப்படி ஒரு நல்ல புத்தகத்தை வாசித்து நெடுநாட்கள் ஆகி விட்டன. இப்படி பட்ட புத்தகத்தை அறிமுகம் செய்த தெகா வுக்கு எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.