திருமணமான புதிதில் ஒரு நாள் என் கணவர் ஆபீஸ் போவதிற்கு முன்
"அசோகா பண்ணி வச்சிடுமா, சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு!" என்றார்.
நானும் எல்லாம் தெரியும் என்பதை போல தலை ஆட்டி வைத்தேன்.
கல்யாணத்திற்கு முன் எனக்கு டீ கூட போட தெரியாது என்பது பாவம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆபத்பாண்டவணன் ஆக இருந்த சமையல் புத்தகங்களின் உதவியால் நான் ஓரளவு சமைத்து ஒப்பேத்தி கொண்டிருந்தேன். அதனால் பரவாயில்லையே நம்ம wife நல்லா சமைக்கிறாளே என்று நினைத்து கேட்டு இருக்க கூடும் என்று நினைக்கிறேன்.
அசோகா என்று அவர் சொன்ன போது அது ஸ்வீட் ஆ காரமா என்று கூட தெரியாது. எனக்கு தெரிந்த அசோகா எல்லாம் அசோகர் சாலை ஓர மரங்களை நட்டது, அப்புறம் அசோகர் ஒரு போருக்கு பின் புத்த மத துறவியானது இவை போன்ற அசோகா சக்கரவர்த்தி பற்றிய விஷயங்கள் தான்.
என்ன பெரிய அசோகா நம்ம cook book ல இல்லாததா என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்ததாலே "கட்டாயம் பண்ணி வைக்கிறேங்க" என்று அவர் கேட்கும் போது தலை ஆட்டி வைத்தேன். ஆனால் என் கேட்ட நேரம் அதை பற்றி ஒரு விசயமும் என் புக் ல இல்ல.
சரி நம்ம கிட்ட தான் Trusty Survival manual ஆன Google இருக்கே என்று asoka என்று type செய்து தேட விட்டேன். அதிலும் சனி வந்து ஆட்டி வைக்க, வந்தது எல்லாம் King Asoka, Asoka chakra.....இப்படி எல்லாம் அசோகா சக்கரவர்த்தி பற்றிதான்.
சரி அடுத்து என்ன பண்ணலாம் என்று நினைத்து , அசோகா எப்படியும் ஒரு ஸ்வீட் ஆவோ காரமாவோ தான இருக்கணும், "அசோகா காரம்" அப்படின்னு ஒரு கூகிள் ல தேடலாமேன்னு தேட விட்டேன். அதுக்கும் பதில் நஹி.
அடுத்து அசோகா ஸ்வீட் அப்படின்னு ஒரு google search. ஒரு சில Recipe வந்தது. அப்பாடா ஒரு வழியா அசோகான்னு ஏதோ ஒரு recipe இருக்கு ஆன எது அவர் சொன்னது என்று குழம்பினேன்.
முதல்ல நான் பார்த்தது அசோகா அல்வா அப்படின்னு ஒரு அல்வா. அது தஞ்சாவூர் ஸ்பெஷல் என்று இருந்தது. இவர் தூத்துக்குடி காரர் ஆச்சே இவருக்கு எப்படி தஞ்சாவூர் ஸ்வீட் பற்றி தெரியும் என்று நினைத்து, செய்ய ஆரம்பித்தேன்.
"செத்தா தானே சுடுகாடு தெரியும்" என்று என் பாட்டி அடிக்கடி சொல்வார்கள். நானோ அல்வா எல்லாம் லாலா கடையில வாங்கி சாப்பிடதோட சரி. அதுவும் திருநெல்வேலி அல்வா தான். எங்கம்மாவும் எனக்கு வீட்டுல எல்லாம் அல்வா கிண்டி கொடுத்ததில்லை.
அது பெரிய வேலை அப்படின்னு சொன்னது மட்டும் ஞாபகம்.
அசோகா அல்வா பாசிப்பருப்புல செய்றது. முதல்ல பாசிபருப்பை தேங்காய் பாலில வேக வச்சு, எடுத்து மசிச்சு அதில சீனி போட்டு நெறைய நெய் ஊத்தி அடி பிடிக்காம பதமா கிண்டிட்டே இருக்கணும் அப்புறம் பாத்திரத்தில ஒட்டாம வரும் போது எறக்கி வைக்கணும். ரேசிபே படிக்கும் போதே எனக்கு தலை சுற்றியது. சரி நாம வேற வேலை இல்லாம வெட்டியா தானே இருக்கோம் அப்படின்னு ஒரு வழியா கஷ்டப்பட்டு கிண்டி முடிச்சேன்.
ஒரு வெற்றி களிப்போட, ரொம்ப சந்தோசமா சாயங்காலம் அவர் வந்ததுமே, "இதோ பாருங்க அசோகா" அப்படின்னு நீட்டினா மனுஷன் என்னை ஒரு மாதிரி பாக்குறாரு. இதுவா அசோகா! அது கேக் மாதிரில்லா இருக்கும் என்றாரே பாக்கணும். இன்னைக்கு வரை அசோகா கேக் ரேசிபே தேடிட்டு இருக்கேன். யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.