2010 ஆம் வருடம் கிரேக் வெண்டர் அவர்கள் செயற்கை செல் உருவாக்கிய செய்தி வந்தது தான் தாமதம், பதிவுலகில் உள்ள நாத்திகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாருங்கள் செயற்கை செல் உண்டாக்கி விட்டனர் அறிவியலார், அதனால் கடவுள் என்ற ஒன்று இல்லாவே இல்லை என்ற விவாதம் ஆரம்பித்தனர்.
ஆத்திகர்களே விடுவேனா பார் என்று நாத்திகர்களுக்கு 'counter' கொடுப்பதாக நினைத்து வரிந்து கட்டி கொண்டு, பரிணாமம் என்ற ஒன்று இல்லாவே இல்லை, கடவுள் இந்த உலகத்தை இத்தனையாவது நாள் இப்படி தான் படைத்தார் என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தனர்.
என்னை போன்ற ஆ/நாத்திகர்களே, ஆத்திகர்கள் பக்கமும் செல்ல முடியாமல் நாத்திகர்கள் பக்கமும் செல்ல முடியாமல், என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க ஆரம்பித்து விட்டோம்.
அதென்ன ஆ/நாத்திகர்கள், “நமக்கு மேலே ஒரு சக்தி இருந்து நம்மை ஆட்டுவிக்கிறது என்று நம்பும் அறிவியலார்கள்”.
சரி இதெல்லாம் இப்போது எதற்கு சொல்கிறேன் என்று கேட்பவர்களுக்கு.
சில நாட்களுக்கு முன்பு தமிழ் மணத்தை பல நாட்கள் இடைவேளைக்கு பிறகு திறக்க நேர்ந்தது..அதில் அதிக பதிவர்கள் பரிந்துரைத்த இடுகை என்ற ஒரு இடுகை "Central Dogma" எனப்படும் மாலிகுலர் பயாலஜி அடிப்படை தத்துவத்தை கூறுவது என்று பறைசாற்றப்பட்டு கிட்டதட்ட 30க்கும் அதிகமானவர்கள் பரிந்துரைத்து இருந்தனர். அட, நம்ம சப்ஜெக்ட் ஆச்சே..நாமலே ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சதே..என்று..மிக மிக ஆர்வத்துடன் சென்று பார்த்தேன்..
படித்த சில நேரத்தில் அதில் கூறப்பட்டிருந்த அடுக்கடுக்கான அறிவியல் மற்றும் பரிணாமத்தை பற்றிய திரிபுகளை பார்த்த பிறகு பொறுக்க மாட்டாமல், சில கேள்விகளை எழுப்பிவிட்டு தயவு செய்து தவறான அறிவியலை போதிக்காதீர்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.
அதற்கான பதிலாக தன் கூற்றை நியாயப்படுத்தி தன் கட்டுரையில் உள்ள குற்றம் இருந்தால் காட்டும்மாறு சவால் விட்டு இருந்தார்.
பரிணாமம் என்பது என்ன? மனித பரிமாணம் மட்டுமே பரிணாமம் என்றழைக்கப்படுகிறதா?, வேறெந்த உயிரினமும் பரிணாமிக்காதா? என்ற சில கேள்விகளை எழுப்பி இருந்தேன்?...பதில் ஏதும் அங்கிருந்து வந்ததாக தெரியவில்லை.
முன்பே பரிணாமம் பற்றி தருமி அய்யா அவர்களும், தி அனலிஸ்ட் அவர்களும் அழகாக எழுதி இருக்கிறார்கள்.
அதனால், நான் இங்கு கூற இருப்பது எல்லாம் பரிணாமத்திற்கான சிறந்த உதாரணமாக இருக்கும் ஃப்லூ வைரஸ் பற்றியே.
அதென்ன ஃப்லூ வைரஸ், பறவைக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல், ஃப்லூ காய்ச்சல் என்ற வித விதமான காய்சல் பரப்பும் ஒரு சின்னச்சிறிய உயிரி அது.
ஒரு ஓவியரின் கைவண்ணத்தில் கீழே காட்டப்பட்டு இருப்பது தான் ஒரு ஃப்லூ வைரஸும் அதில் இருக்கும் ஜீன்களும்.
நமக்கெல்லாம் இருப்பது போலே ஆயிரக்கணக்கான ஜீன் களை ஃப்லூ வைரஸ் கொண்டிருக்கவில்லை. அவைகள் கொண்டிருப்பது மொத்தம் பன்னிரெண்டு ஜீன்கள் மட்டுமே..இந்த 12 ஜீன் களும் 'segmented genome' என்றழக்கப்படும் 8 கூறுகளாலான மரபுப்பொருள்களை உடைய பகுதிகளாக பிரிக்கபட்டு இருக்கும்.
வெறும் 12 ஜீன்களை கொண்டு எப்படி இத்தனை effective ஆக மக்களை அவர்களால் தாக்க முடிகிறது, வாழ முடிகிறது, ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் கிலி ஏற்படுத்த முடிகிறது என்றால்..அதற்கு ஒரே ஒரு காரணம் தான், வைரஸ் கிருமிகள், எப்படி திறமையாக வாழ்வது என்ற பரிணாம கொள்கையை நன்கு அறிந்து கொண்டிருக்கின்றன.
"survival of the fittest" என்றழைக்கப்படும் அந்த கொள்கையை எப்படி அவை பயன்படுத்துகின்றன என்று பார்ப்போம்.
ஏற்கனவே, ஃப்லூ வைரஸ் 8 கூறுகளையுடைய மரபுப்பொருள்களை கொண்டது என்றறிந்தோம், இந்த கூறுகளை permutation and combination முறையில் பலவாறு சேர்த்து, பிரித்து ஒழுங்குபடுத்தி எந்த கூறுகள் வாழ்வதற்கு தகுந்ததோ அவற்றை அழகாக இணைத்து கொள்கிறது ஃப்லூ.
உதாரணமாக கீழே கொடுக்கபட்டு இருக்கும் இரண்டு பிங்க் மற்றும் கிரீன் வைரஸ்கள் தங்களின் மரபுப்பொருள்களை எப்படி ஒழுங்குபடுத்தி அதிக ஆற்றல் கொண்ட ஃப்லூவை உருவாக்குகிறது பாருங்கள்.
ஃப்லூ நோய்வாய்பட்ட ஒருவரிடம் இருந்து எந்த நிமிடத்தில் வைரஸை நீங்கள் பிரித்தெடுத்தாலும், அவற்றில் கிட்டதட்ட 40% வைரஸ்கள், இப்படி ரீஅஸ்ஸார்ட்மெண்ட் செய்துகொண்டு மிக மிக வலிமையான வைரஸ் சந்ததிகளை உருவாக்கி இருக்கும்.
என்ன ஒரு திறமை பாருங்கள்.
இவ்வளவு இன்று போதும் என்று நினைக்கிறேன், பிறகொரு சமயம், மீண்டும் ஃப்லூ பற்றி பார்ப்போம்.
தற்போது..மீண்டும் ஆத்திக, நாத்திக சண்டைக்கு வருவோம்..
ஆத்திகர்களே..நீங்கள் கடவுள் என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறீர்கள், அதோடு விட்டுவிடுங்கள்..பரிணாமம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதெல்லாம் வேண்டாம்.
நாத்திகர்களே..பரிணாமம் உண்மை..ஆனால் தயவு செய்து பரிணாமத்திற்கும் கடவுளுக்கும் முடிச்சு போடவேண்டாம்.
நன்றி.