எனக்கு நடந்த ஒரு எதிர்பாராத அனுபவம் அது. அம்மாவின் ஆபரேஷன் க்கு பிறகு போஸ்ட் செக்கப்க்கு என்று மருத்துவமனை அழைத்து சென்று இருந்தேன். அங்கு இருந்த ஒரு நர்ஸிடம் ஒரு அம்மா, என் பையன் +2 முடிச்சிட்டான், சயின்ஸ் குரூப், என்ன படிக்கலாம் என்று கேட்டு கொண்டு இருந்தார். அந்த நர்ஸ் அம்மாவும், பயோடெக்னாலாஜி படிக்க வையுங்க என்று சொன்னார். அப்போது, அங்கு செக்கப்க்கு வந்து இருந்த இன்னொரு அம்மா, "வேணாம் மா, என் பைய்யன் அதை தான் படிச்சிட்டு 10 வருசமா வேலை இல்லாம இப்போ தான் மா வேலைக்கு போய் இருக்கான், வேற என்னானாலும் படிக்க வையுங்க இது வேண்டாம்" என்று சொன்னார்.
எனக்கு அந்த அம்மா சொன்னது தூக்கி வாரி போட்டது. என்னது நம்ம பீல்ட் பத்தி இப்படி பேசுறாங்களே என்று. பிறகு அந்த அம்மாவிடம் கேட்டபோது, அவர் சொன்னது இது தான். அவரின் பைய்யன் BTech பயோடெக்னாலாஜி படித்து இருக்கிறார், அதன் பிறகு வேலை இல்லை. பின்னர், PhD சேர்ந்து பிளான்ட் பயோடெக்னாலாஜி படித்து முனைவர் பட்டம் வாங்கி இருக்கிறார். அதன் பிறகும் வேலை என்று பெரியதாக எதுவும் இல்லை ஆனால் 8-9 வருடங்கள் கடந்து இருக்கின்றன. இப்பொழுது Postdoc ஆக வெளி நாட்டுக்கு சென்று இருக்கிறார். அதுவும் postdoc சம்பளம் என்பது மிக குறைந்தது. "சம்பளம் கம்மி என்று யாரும் பொண்ணு கூட கொடுக்க மாட்டேங்கிறாங்க மா!" என்று புலம்பி தீர்த்து விட்டார்.
இது உண்மையா, இந்தியாவில் பயோடெக்னாலாஜி படித்தால் வேலை கிடைக்காதா? என்று எனக்கு தெரிந்த, இந்தியாவில் பயோடெக்னாலாஜி ஸ்டார்ட் அப் கம்பெனி வைத்து இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னது இது தான். இந்தியாவில் பயோடெக்னாலாஜி என்பது வெறும் ஆராய்ச்சி சார்ந்த பீல்ட் மட்டுமே. ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல நிலைகள் clearance செய்ய வேண்டும். இது ஒரு புறம் இருக்க, இப்படி படித்து விட்டு வரும் மாணவர்களும் வெறும் புத்தக அறிவு மட்டுமே கொண்டு இருக்கிறார்கள். ப்ராக்டிகல் அறிவு இருப்பதில்லை. பல கல்லூரிகள் பயோடெக்னாலாஜி என்ற பெயரில்ஆராய்ச்சி கூடம் கூட இல்லாமல் பாடம் நடத்துகிறார்கள். அங்கு படித்து விட்டு வெளிவரும் பலருக்கும் பல விஷயங்கள் தெரிவதில்லை. பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கூட Genetics, Recombinant DNA technology என்று எதுவும் சொல்லி தர தெரியவில்லை. ரொம்ப ஜெனெரல் ஆக படிக்கிறார்கள். specialize எதுவும் செய்து கொள்ளுவதில்லை.
இப்படி அனைத்தையும் மனபாடம் செய்து வெளி வரும் பலரும் இண்டர்வியு நேரத்தில் கேட்கும் அடிப்படை விசயங்களுக்கு கூட பதில் சொல்லுவதில்லை. இதனால் நல்ல subject தெரிந்த பலரை தேடி கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது. அதேபோல, நிறைய பயோடெக் கம்பெனிகளும் இல்லை என்று சொன்னார்.
இது ஒரு புறம் இருக்க, வெறும் BTech பயோடெக்னாலாஜி படிக்கும் பலரும் படித்து முடித்து வெளி வரும் போது கெமிகல் எஞ்சினீர், பயோ மெடிக்கல் எஞ்சினீர், பயோ கெமிஸ்ட்ரி, பயாலாஜி படித்தவர்கள் என்று அனைவருடனும் போட்டி போட வேண்டி இருக்கிறது. அடிப்படை அறிவு இல்லாமல் எல்லாத்தையும் நுனிப்புல் மேய்ந்து விட்டு வரும் இவர்கள் நிறைய தடுமாறுகிறார்கள்.
வெறும் Btech மட்டும் படித்த இவர்களுக்கு மார்க்கெட்டிங் வேலை மட்டுமே கிடைகிறது. மேல்படிப்பு அல்லது Phd படித்தால் மட்டுமே கொஞ்சம் நல்ல வேலை கிடைகிறது. அதனால், IT சார்ந்த படிப்புகள் போல படித்து முடித்தவுடன் 5-6 வருடங்களில் வேலை, ஓரளவு நல்ல துவக்க சம்பளம் என்று எதுவும் கிடைப்பதில்லை.
clearance பிரச்சனையை பற்றி இன்னொரு இடத்திலும் கேள்வி பட்டேன். என்னுடைய தற்போதைய பயணத்தில் ஆராய்ச்சி விசயமாக ஒரு பல்கலைகழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இருக்கும் உபகரணங்கள் எல்லாம் நன்றாக லேட்டஸ்ட் கட்டிங் எட்ஜ் ஆக இருந்தது.. DBT இல் இருந்து பண்டிங்க் கிடைத்ததாக சொன்னார்கள். ஆனால் கிடைத்த பண்டிங்க் வைத்து அவர்களால் உபகரணங்கள் வாங்க முடிந்ததே தவிர அதனை தொடர்ந்து நடத்த, கரண்ட் பில் கட்ட கூட அவர்களால் முடிவதில்லை, clearance என்ற பெயரில் நிறைய ரெட் டேபிசம் நடப்பதாக சொன்னார்கள்.
1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது நோய்களும், வைரஸ்களும், பாக் டீரியாக்களும் வந்து கொண்டு இருக்கையில், பயோ டெக் போன்ற துறை கள் வளர்வது எவ்வளவு முக்கியம். எவ்வளவோ சாதிக்கலாம் . ஆனால் இது தான் தற்போதைய நிலையா? எதிர்காலம் இல்லாமல் இருக்கும் பயோடெக்னாலாஜி பட்டதாரிகள் நிலை என்னாகும்..தெரியவில்லை.
நன்றி.
