வான்இன்று அமையாது ஒழுக்கு .
எண்ணெய் யுத்தம் கேள்வி பற்றிருக்கிறோம். அது கச்சா எண்ணைக்காக தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் தண்ணீருக்காக இதே போல் ஒரு யுத்தம் நடக்கும், இவ்வாறு நான் சொல்லவில்லை ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி பூமியில் தற்போது இருக்கும் நீரில் 2.5% நீரே குடிநீராக உபயோகப்படுத்தமுடியும். அவற்றிலும் ௦.0007% நீரே ஆறு,குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் இருக்கிறது. உலகத்தில் மக்கள்தொகை உயர உயர நீரின் தேவையும் அதிகம் ஆகும். ஆனால் இப்போது இருக்கும் நிலவரப்படி உபயோகிக்க கூடிய குடிநீர் அளவு ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் மிக மிக குறைந்து வருகிறது.

மேலே இருக்கும் புகைப்படத்தில்(1) ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் நாடுகளில் எல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது என்றும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் நாடுகள் தண்ணீர் தட்டுப்பாட்டின் விளிம்பில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. அவற்றில் உலகில் மிகஅதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும் சீனாவும் அடங்கும். இது தற்போதைய நிலை தான். இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்தால் என்ன ஆகும்? யோசித்து பாருங்கள். தற்பொழுது எண்ணைக்காக ஆக்கிரமிப்புகள் நடப்பது போல நாளை நீர்வளம் இருக்கும் நாடுகளை நோக்கி ஆக்கிரமிப்பு தொடங்கும். விளைவு போர்.

உலக புள்ளிவிவரங்கள் எல்லாம் இருக்கட்டும், தற்போது தமிழ்நாட்டுக்கும் அதன் அண்டை மாநிலங்களுக்கும் அடிக்கடி நடக்கும் உரசல்கள் எல்லாம் நதிநீர் சம்பந்தப்பட்டது. அது உள்ளூர் கலவரமானது அனைவரும் அறிந்ததே.
சரி! இதற்கு தீர்வு!
1. இருக்கும் நீர் நிலைகளை காப்பது
2. கழிவு கூடாரமாகி இருக்கும் ஆறு குளங்களை சுத்தபடுத்துவது
3. மேலும் கழிவு ஆறு குளங்களில் கலக்காமல் காப்பது.
4. நிலத்தடி நீரை அதிகப்படுத்துவது

மேலே இருக்கும் புகைப்படம் (2) ஒரு ஆலை கழிவு கங்கை ஆற்றில் கலக்க படும் புகைப்படம். ஆலை கழிவுகள் சுத்திகரிக்க பட வேண்டும் என்று எத்தனையோ சட்டம் இருந்தாலும் அதன் ஓட்டைகளை அறிந்து கொண்டு அதனை செயல்படுத்தாமல் இருப்பவர்களே அதிகம். சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
கங்கை ஆற்றில் கலக்கும் கழிவுகளில் 20% கழிவுகளே ஆலை கழிவுகள், மீதமுள்ள 80% கழிவுகள் மனிதனால் உண்டாவது (3). இவற்றில் மக்கள் தூக்கி வீசுவது கொஞ்சம் தான், மாநிலங்களே அவற்றை என்ன செய்வது என்று அறியாமல் ஆறுகளிலும், ஏரிகளிலும் கலக்கிறார்கள் அல்லது தீயிட்டு கொளுத்தி காற்றை மாசுபடுத்துகின்றனர்.
இதனை தடுக்க ஒரே வழி மறுசுழற்சி முறையை மக்களிடம் கொண்டு செல்வது. கழிவுகளை பகுத்து எவை, மக்கும் கழிவுகள், எவை எல்லாம் மக்கா கழிவுகள், இவற்றை எல்லாம் எப்படி மறுசுழற்சி செய்வது என்பது போன்ற திட்டங்களை உருவாக்குதல். கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன். இவை எல்லாம் அரசாங்கத்தின் வேலை தானே நாம் நம் வேலைகளை கவனிப்போம் என்று எண்ணாமல் நாமும் நம் வீட்டில் மறுசுழற்சி முறையை தொடங்கலாம்.
எப்படி.
1. வீட்டில் சமையல் கழிவுகளை பகுத்தல். இதனை மற்ற கழிவுகளுடன் கலக்காது மண்ணில் மக்க செய்தால், இது இயற்கை உரமாகலாம்.
2. பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் இவற்றை முடிந்தவரை பயன்படுத்தாது இருத்தல்.
3. எங்கு சென்றாலும் துணிப்பை எடுத்து செல்லுதல், இது பிளாஸ்டிக் பை உபயோகத்தை குறைக்க உதவும்.
4. கண்ணாடி, பேப்பர் போன்ற கழிவுகளை, பழைய பேப்பர் காரனிடம் மட்டுமே போடுதல்.
மேலே நான் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் எனக்கு தெரிந்த சில வழிகள் மட்டுமே. இன்னும் நெறைய வழிகள் கட்டாயம் இருக்கும்.
"You must be the change you wish to see in the world" என்ற அண்ணல் காந்தியடிகளின் வார்தைக்கிணங்க ஒவ்வொருவரும் இதனை ஆரம்பிப்போம்! உலகத்தை காப்போம்!
இதனை போன்ற மனநிறைவு தரும் ஒரு பதிவை தொடர் பதிவாக எழுத என்னை அழைத்த சிறுமுயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கும், இது போன்ற ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த அனைத்து பதிவர்களையும் அழைத்த மண், மரம், மழை, மனிதன் வின்சென்ட் அவர்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.
References
1. www.un.org/waterforlifedecade
2. www.danielbachhuber.com/tag/photography/
3. www.cag.gov.in/reports/scientific/2000_book2/gangaactionplan.htm