Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Tuesday, October 21, 2014

எபோலா வைரஸு க்கு மருந்து ஏன் இன்றுவரை இல்லை!

தற்போது உலகளவில் பயமுறுத்தும் ஒரு சொல் "எபோலா வைரஸ்", கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆப்ரிக்கா நாடான  காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கபட்டது.

மைக்ரோஸ்கோபில் பார்க்கும் போது , சின்னம்மை வைரஸ் அல்லது ஃப்ளு வைரஸ் போன்ற ஒரு தோற்றம் கொண்ட இந்த வைரஸ் , ஃப்ளு போன்று மூச்சுகுழாயை தாக்கும்  (upper respiratory infection) வைரஸ் ஆக இல்லாமல் உடலின் எந்த ஒரு செல்லையும், உறுப்பையும் தாக்கும் திறன் கொண்டது. 




எப்படி பரவும் ?

எபோலா வைரஸ் எங்கிருந்து உண்டானது என்பது இன்னும் அறியமுடியாவிட்டாலும், தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட வைரஸ் பரவலானது ஒரு மிருகத்தில் இருந்து மனிதருக்கு பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சரி, இது எப்படி பரவுகிறது என்றுபார்க்கலாம்? நோய்வாய்ப்பட்ட மனித உடலில் இருந்து வெளியேறும் திட,திரவங்கள் மூலம் இது எளிதில் பரவலாம். அவை சிறுநீர், எச்சில், வேர்வை, மலம்,  வாந்தி , தாய்பால்  , ரத்தம் மற்றும் விந்து.  நோய்வாய்ப்பட்ட மிருகத்தில் இருந்தும் இது பரவலாம்.  நோயாளிகள்  உபயோகபடுத்திய ஊசி மூலமும் இவை பரவும் தன்மை வாய்ந்தது. 

எந்த உறுப்பிலும் நுழைந்த உடன் தன்னை பல பிரதி எடுத்து உடனடியாக அந்த உறுப்பின் முதல் 
பாதுகாப்பு கவசமான T-cells அழித்துவிடும். பின்பு, அந்த உறுப்பை செயலிழக்க செய்து, மரணத்தை ஏற்படுத்தவல்லது. 

எப்படி பரவாது?

இந்த வைரஸ் காற்றின் மூலமும் நீரின் மூலமும் பரவாது. உணவின் மூலமும் பரவாது. அதனால், நோய் வாய்ப்பட்ட  மனிதர் இருக்கும் இடத்தில் காற்றை சுவாசிப்பதால் இது பரவாது. கொசு மற்றும் பூச்சி கடிப்பதாலும் இது பரவாது.

என்ன அறிகுறிகள்?

நோய் கிருமி தாக்கிய அவரவர் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப 2 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கலாம். அவை, காய்ச்சல், கடுமையான தலைவலி, உடம்பு வலி, சோர்வு, வயிற்றுபோக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி போன்றவை.

ஏன் மருந்து இல்லை?

இத்தனை வருடங்களில் ஏன் இதற்கென்று ஒரு மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை?  பல காரணங்கள் உண்டு என்றாலும் ஒரு சில மருத்துவ காரணங்கள் இங்கே.,, 

முதல் காரணம் , இது வைரஸ் என்பதால், வெகு சீக்கிரம் தன்னை தகவமைத்து கொண்டு (mutates) மாற்றி கொண்டு விடுகிறது.

இரண்டாவது காரணம்,  இது பல உறுப்புகளை தாக்கவல்லது என்பதால், உறுப்பை சார்ந்த மருந்துகளை செலுத்துவது, கண்டு பிடிப்பது சில நேரங்களில் கடினமானது.

இப்போது மருத்துவம் தாண்டிய பொருளாதாரம் சார்ந்த ஒரு காரணம். 

இது, HIV போலவோ, கான்செர், ஃப்ளு, சின்னம்மை போன்ற  அதிகம் அறியப்பட்ட "high profile" நோய் அல்ல. அதனாலே, இதற்க்கான மருத்துவ ஆராய்ச்சிக்கு அதிகம் செலவிடப்படவில்லை. அதனை தவிர, உலகின் உள்ள பல மருந்துகளை தடுப்பூசிகளை தயாரிக்கும் பெரிய மருத்துவ நிறுவனங்கள் இந்த நோயை அதிகம்  கண்டு கொள்ளவில்லை, காரணம் இது நிகழ்ந்தது ஏழை நாடுகளை கொண்ட ஆப்பிரிக்க கண்டத்தில், அங்கு மருந்துக்கான  மார்க்கெட் இல்லை என்று அவர்கள் நினைத்ததால்.

தற்போது உலகமெங்கும் இந்த நோய் பரவும் ஆபத்து இருப்பதால், இதற்கான மார்க்கெட் நன்றாக இருக்கும் என்று அனைவரும் நினைத்ததால், நீ, நான் என்று அனைவரும் போட்டி போட்டு கொண்டு இந்த வைரஸ்காண தடுப்பூசி கண்டுபிடிக்க முனைகிறார்கள். இதனை சில வருடங்களுக்கு முன்பு செய்திருந்தால் பல ஆயிரம் உயிர்கள் போவது தடுக்கபட்டு இருக்கலாம்.  

நன்றி 

References

http://www.cdc.gov/vhf/ebola/
http://www.mirror.co.uk/news/world-news/ebola-virus-symptoms-start-sore-3933920
http://www.huffingtonpost.com/2014/08/05/big-pharma-ebola_n_5651855.html



Saturday, May 31, 2014

ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை உபயோகிப்பது நல்லதா இல்லையா?

சமீபத்தில் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்ட போது , anti-bacterial lotion எனப்படும் பாக் டீரியா நுண்ணுயிர்  எதிர்ப்பு கை கழுவும் லோஷன் பற்றிய விளம்பரங்களை அதிகம் காண நேர்ந்தது. ஒவ்வொரு கம்பெனியும், தன்னுடைய லோஷன் 15 நிமிடத்தில் செயல்படும், என்னுடையது 10 நிமிடத்தில் செயல்படும் என்று ஒரே புராணத்தை பாடி கொண்டிருந்தார்கள்.

உண்மையில், இப்படி ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை  உபயோகிப்பது நல்லதா இல்லையா? பார்ப்போம் இங்கே .

நம்மை சுற்றி நம் சுற்றுபுறத்தில் கோடிகணக்கான பாக்டீ ரியாக்கள் உள்ளன. நம் digestive system நன்கு செயல்படவும், பல நன்மை பயக்கும் பாக்டீ ரியாக்கள் காரணமாக இருக்கின்றன. நம்முடைய ecosystem அனைத்திலும் பாக்டீ ரியாக்கள் செய்யும் வேலைகள் பல, இலை தளை  மக்கவைப்பது, கழிவுப்பொருள்களை மீண்டும் உரமாக்குவது என்பது அவற்றுள் முக்கியமானவை. நாம் வாழும் ஈக்கோ சிஸ்டத் தில் பாக்டீ ரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நம்மை சுற்றி பல நன்மை பயக்கும் பாக்டீ ரியாக்கள் இருந்தாலும், பல தீமை விளைவிக்கும் பாக்டீ ரியாக்கலும் உள்ளன . இந்த தீமை விளைவிக்கும் பாக்டீ ரியாக்களை கொல்லவே தற்போது நிமிடத்திற்கு நிமிடம் ஆண்ட்டி பாக்டீரியல் சோப் விளம்பரங்கள் ஒலிபரப்பபடுகின்றன. 

சரி இப்போது அடிக்கடி ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை ஏன் உபயோகப்படுத்த கூடாது என பார்போம்.

முதலில், இந்த வகை சோப்கள் கெட்ட கிருமிகளை மட்டும் கொல்வதில்லை, அவற்றோடு, நமக்கு நன்மை கொடுக்கும் பலவும் அழிகின்றன.

தற்போது, இங்கு இருக்கும் மருத்துவர்கள் பலர் , ஆண்டி பயொடிக்க்ஸ் மருந்துகளை சாதாரண இருமல் காய்ச்சல் என்று போனால் பரிந்துரை செய்வதில்லை, அதற்கும் ஆ ண்ட்டி பாக்டீரியல் சோப்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டும் பாக்டீ ரியாக்களை கொல்ல உபயோகபடுத்த படுகின்றன.



Photo courtesy Rocky Mountain Laboratories
என்ன பிரச்சனை என்றால், இந்த பாக்டீ ரியாக்களை கொல்ல நாம் மருந்துகளையோ  அல்லது கை கழுவும் திரவங்கலையோ உபயோகபடுத்த படுத்த , அவை மிக சாதுர்யமாக தங்களை mutate எனப்படும் மாற்றி அமைத்து கொள்கின்றன. தற்போது இங்கிருக்கும் மருத்துவ மனைகள் சந்திக்கும் ஒரு மிகபெரிய பிரச்சனை antibiotic resistant bacteria. தற்போது ஒரு சில anti biotics மருந்துகளுக்கு கட்டுபடாத MRSA  101 எனப்படும் பாக்டீ ரியா பெருகி வருகிறது. அதனை superbug என்று சொல்லும் அளவுக்கு. 


எனக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு தெரிந்த ஒருவர் சாதாரண ஆபரேஷன் என்று மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை முடிந்து சில நாட்களில் இறக்க நேரிட்டது. இத்தனைக்கும் அவருக்கு மிகச்சாதாரணமான ஒரு ஆபரேஷன் மட்டுமே. என்னவென்று விசாரித்தால், சிகிச்சை முடிந்த பின்னர் அவருக்கு antibiotic resistant bacteria தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. அதனை கொல்ல எந்த antibiotic மருந்துகளும் பயன்படவில்லை.

சரி, இப்போது தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம்,நாம் தேவை இல்லாமல் ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை உபயோகபடுத்த உபயோகபடுத்த, அவை நம்முடைய உடம்பின் ecosystem மாற்றியமைப்பது மற்றுமின்றி, இதனை போன்ற antibiotic resistant bacteria உருவாகவும் காரணமாக இருக்கிறது. முடிந்தவரை இதனை போன்ற கண்கவர் விளம்பரங்கள் வராது தடுக்கவும், மக்களுக்கு இதன் எதிர்விளைவை சொல்லவும் வேண்டும்.

சரி, அதற்கென்று எப்படி கிருமிகளை ஒழிப்பது என்று பலர் கேட்கலாம், நாம்  அன்றாடம் உபயோகிக்கும் சோப்புகளை கைகழுவ உபயோகிக்கலாம். இதற்காக, அடிக்கடி ஆண்ட்டி பாக்டீரியல் சோப் தனியாக உபயோகிக்க வேண்டாம்.

நன்றி.

Friday, October 7, 2011

ஒரு பசுவின் கண்ணீர் கதை



”என் சோக கதையை கேளு மனிதகுலமே” என்று ஒரு பசு என் கனவில் நேற்று வந்து கண்ணீர் விட்டது.

”என்ன பசு?, என்ன பிரச்சனை உனக்கு?” இது நான்.

”என்ன பிரச்சனையா?, பிரச்சனையே நீங்க தானே!”

“என்னது..நானா?, நான் என்ன செஞ்சேன்”

”நீங்கன்னா...மனிதர்களை சொன்னேன்”

”என்னது மனிதர்களா?, நாங்களாம் எவ்வளவு நல்லவங்க, எப்படி உங்க குலத்தை கோமாதா எங்கள் குல மாதான்னு கும்பிடுறோம், மாட்டுப்பொங்கல்ன்னு ஒரு விழாவே உங்களை வச்சு கொண்டாடுறோம், நீ என்னடான்னா ரொம்ப தான் சலிச்சுகிறியே..இவ்வளவும் செய்யிற எங்களை போயி பிரச்சனைன்னு சொல்லுறியே”

“அடா, அடா..உங்க மக்கள் செய்யிற செயலை நீ தான் மெச்சிக்கணும்., எப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்த முடியுமோ அதை எல்லாம் செய்துட்டு..சாமியா கும்பிடுராங்களாம்..நல்ல கதைப்பா”

“என்னது நாங்க கொடுமை செய்யுரமா?..என்னா சொல்லுற”

”நீங்க சொய்யிற கொடுமை ஒன்னா, ரெண்டா...வரிசையா சொல்லுரேன் கேளு”

”நான் ஏன் தான் பசுவா பிறந்தேனோன்னு நோகாத நாளில்லை..பிறந்த கொஞ்ச நாளில அம்மா கிட்ட இருந்து என்னை பிரிச்சிட்டாங்க..அப்புறம், நான் இனப்பெருக்கத்துக்கு தயாரானவுடன் என்னுடைய சோதனை காலம் ஆரம்ப்பிச்சிடுச்சு”

“வருடம் முழுதும் புள்ளதாச்சின்ங்கிற கதையா..எப்போ பார்த்தாலும் செயற்கை முறையில விந்தனுவை செலுத்தி என்னை புள்ளதாச்சி ஆக்கிடறாங்க...அப்புறம் கன்று பிறந்தவுடன்..கன்றையா பாலை குடிக்க விடறீங்க?....நீங்க தானேப்பா பாலை கறந்து குடிக்கிறீங்க..அதுவும் இப்பொல்லாம் எதோ rBGH ஒரு ஊசியை போட்டு அதிக நாள் பால் கொடுக்கிற மாதிரி பண்ணுறீங்க” என்று கண்ணீர் விட்ட பசு...கொஞ்ச நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு தொடர்ந்தது.


“அந்த rBGH எங்களை என்ன பாடு படுத்துன்னு யாருக்காவது தெரியுமா? பால் மடியில எரிச்சல் ஏற்படுத்தி ஒரு பக்க பால்மடி பெருத்து வழி ஏற்படுத்துது. இதுவாவது பரவாயில்லை, இது எங்களை லேம்னெஸ் எனப்படும் நோயை தருகிறது. எங்களால் சரியாக நடக்க முடியாமல், நிற்க முடியாமல், செயல்பட முடியாமல் படும் பாடு இருக்கிறதே..அப்பப்பா!”

“சில நேரங்களில் இது எங்கள் கருப்பையில் கட்டிகளை ஏற்படுத்தி, அது கான்சேர் கட்டிகளாகும் அபாயத்தையும் தருகிறது, இதுவாவது பரவாயில்லை, எங்கள் கன்றுகுட்டிகளுக்கு ஏற்படும் நிலை இருக்கிறதே...அது இன்னும் பரிதாபம்”

 ”பிறந்த சில நாட்களில் எங்களிடம் இருந்து பிரிக்கப்படும் எங்கள் கன்றுகள், பசுங்கன்றுகளாக இருப்பின் என்னை போன்ற கதி அதற்கும் ஏற்படுகிறது..எருதுகளாக இருப்பின்...வெகு சீக்கிரமே அடிமாடுகளாக மாற்றப்படுகின்றன...,சில நேரங்களில் அவை நன்கு கொலுக்க என்று அதிக புரோட்டீன் கொண்ட உணவு கொடுக்க படுகிறது..அந்த உணவை செரிக்க முடியாமல் பல நேரங்களில் Mad cow disease போன்ற பலவும் எங்களுக்கு ஏற்படுகின்றன” என்று குலுங்கி குலுங்கி அழுத பசு...திடீரென்று எதோ நினைத்தாய் பலத்த ஒலியுடன் வில்லன் போல சிரிக்க ஆரம்பித்தது.

பசுவுக்கு என்னாயிற்று என்று நான் நினைத்த தறுவாயில், பசுவே பேச ஆரம்பித்தது....

“இப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்திய மனித குலத்துக்கு நாங்கள் தரும் பரிசு என்ன தெரியுமா, பழிக்கு பழி”

“எங்களை கொடுமை படுத்தி எடுக்கபடும் பாலை குடிப்பதால் அவர்களுக்கும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தியாகி.. சிறுமிகள் சீக்கிரம் பூப்படைவது, தேவையில்லாத அதிக முடிவளர்ச்சி..பெண்களுக்கு Male pattern வருவது...சில நேரங்களில் மார்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுத்துவது,... ஹாஹாஹா, எப்பூடி”

”ஹாஹாஹா” என்று பசு சிரித்தது நாலாபக்கமும் எதிரொலித்து...என் காதுகளை அடைத்தது....சடாரென்று தூக்கத்திலிருந்து எழுந்தேன்...

Monday, September 5, 2011

Outbreak ஹாலிவூட் படமும் நிஜமும்!

சுமார் ஒரு வருடத்திற்கு முதல் பார்த்த படம் அவுட்ப்ரேக். இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞர் டீவியில் அதே படத்தை தமிழில் பார்க்க நேர்ந்தது. ஆப்ரிக்க கண்டத்தில் ஒரு ஊரில் பரவும் வைரஸ் கிருமி எவ்வளவு வேகமாக அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி மக்களை கொல்கிறது என்பதை நிறைய உண்மை + ட்ராமா கலந்த திரைப்படமாக எடுத்து இருப்பார்கள்.

உண்மையில் படத்தில் காட்டுவது போல நடக்குமா? என்று யோசிப்பவர்களுக்கு... 2009 இல் உலகமெங்கும் பரவிய H1N1 பன்றிக்காய்ச்சல் நல்ல உதாரணம்.

2009 இல் என்ன நடந்தது..

  • March 2009 இல் Mexico நாட்டில் உள்ள La Gloria, Veracruz என்ற ஊரில் உள்ள 60% மக்கள் காய்ச்சல் வந்து நோய் வாய்ப்படுகின்றனர்.
  • March 7இல் Mexico நாட்டில் இருந்து வந்த ஒருவர் மூலம் அமெரிக்காவுக்கு அந்த நோய் 14 மாவட்டங்களில் பரவுகிறது.
  • அமெரிக்காவில் உள்ள 18 மாவட்டங்கள் நோய் பரவியதாக அறிவிக்கப்படுகின்றன..
  • ஏப்ரெல் 27இல் ஸ்பெயின் நாட்டில் இந்த வைரஸ் இல் பரவியதாக அறிவிக்கிறார்கள்.
  • ஸ்பெயினை தொடர்ந்து U.K யிலும் இந்த வைரஸ் பரவியதாக அறிவிக்கப்படுகிறது.
  • ஏப்ரெல் 28ல் கனடா, இஸ்ரேல், நியூஸிலாந்து நாடுகள் வைரஸ் பரவியதாக அறிவிக்கின்றன..
  • ஏப்ரெல் 29, 30இல் ல் மற்ற யுரோப்பியன் யூனியன் நாடுகளான ஆஸ்திரியா, ஜெர்மனி, நெதெர்லாண்ட்ஸ் மற்றும் சுவிஸ்சர்லாந்த்து நாடுகள் வைரஸ் பரவியதாக அறிவிக்கின்றன.
  • மே 1இல், சைனாவில் உள்ள ஹாங்ஹாங்கில் கிட்டதட்ட 300 பேர் நோய் பாதிக்கபட்டதாக அறிந்து தனியறையில் அடைக்கப்படுகின்றனர்.
  • நோய் பரவுவதை தடுக்க 5 நாள் முழு அடைப்பை மெக்ஸிகோ மேற்கொள்கிறது.
  • ஆசிய நாடுகளான, சைனா, கொரியாவிற்க்கு நோய் பரவுகிறது.
  • மே 3, அரபு நாடுகளும், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவும் நோய் பரவியதாக அறிவிக்கின்றன.
  • மே 6,7,8 மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கும் நோய் பரவுகிறது.
  • மே 16 இந்தியாவில் நோய் தாக்கிய முதல் கேஸ் அறிவிக்கப்படுகிறது.
  • ஆகஸ்ட் 13 க்குள் 1800 பேர் நோய் தாக்கி இறந்ததாக WHO அறிவிக்கிறது.
  • எந்த எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது என்பதை WHO அறிவிக்கிறது.



சரி இப்போது நீங்களே சொல்லுங்கள்..அந்த படத்தில் காட்டுவதை விட பயங்கரமாக வேகமாக H1N1 பன்றிக்காய்ச்சல் பரவி இருக்கிறது என்று கூறலாம்.

இரண்டு மாததிற்குள் பாதி உலகை H1N1 வைரஸ் ஆட்கொண்டுவிட்டது..அதற்கு காரணம் உலகம் சுருங்கி விட்டதாகும்..யாரும் எங்கேயும் செல்லலாம், அங்கு சென்று நோய் பரப்பலாம் என்று ஆனதே.

இப்போது யோசித்து பாருங்கள். H1N1 வைரஸ் உடனடியாக மரணத்தை விளைவிப்பதில்லை..காய்ச்சலை மட்டுமே தந்தது. கவனிக்கபடாமல் இருந்தால் தான் அது மரணத்தை தந்தது..ஆனால் நோய் ஏற்பட்ட சில மணி நேரத்தில் மரணத்தை கொடுக்கும் ஏதேனும் பயங்கரமான வைரஸ் இந்தியா போன்றதோரு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பரவினால் என்னவாகும்....நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது..

இந்த கருவை மையமாக கொண்டு ”Contagion" என்ற ஒரு படம் வர இருக்கிறது...முடிந்தால் பாருங்கள். கீழே உள்ள படத்தின் டிரைலரை பாருங்கள்.







Friday, February 25, 2011

பறவை காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும்

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காய்ச்சல் : பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், சிக்கன் குன்யா என வித விதமான காய்ச்சல்கள். ஆனால் இந்த காய்ச்சல் வகைகள் எல்லாம் ஒரே ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா! உண்மை தான்.
இன்ப்லுயன்சா வைரஸ் என்பதே அந்த வைரஸ் கிருமி. பொதுவாக வைரஸ் கிருமிகள், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளை விட வித்தியாசமானவை. மனித செல்களை அடையும் வரை அவை செயல் படுவதில்லை, மனித செல்களை அடைந்தவுடன் வேகமாக தன்னை மனித செல்களுடன் இணைத்து கொண்டு தன்னை தானே படிவமெடுத்து வெளியிட்டு பெருகுகின்றன.

சரி, இன்ஃப்லுயன்ஸா என்பது ஒரு வைரஸ் கிருமி தானே, பிறகு எப்படி பல உயிரினங்களில் வித விதமான காய்ச்சல்கள் ஏற்படுத்துகிறது?
இந்த வைரஸ் கிருமி ஒரு உயிரினத்தில் வசிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்து கொள்ளுவோம், அது அந்த உயிரினத்தில் தன்னை நகல் எடுக்க ஆரம்பிக்கும் போது, தனக்குள்ளே சில மாற்றங்களை செய்து கொள்ளுகிறது, அதனை ஆங்கிலத்தில் மியுட்டேஷன் என்று கூறுகிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் அந்தந்த உயிரினத்திற்கு தகுந்தாற் போல அது தன்னை மாற்றிகொண்டே இருப்பதால், ஒரு நோய்-> ஒரு மருந்து என்ற முறைப்படி நம்மால் மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை.
2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலை இதற்கு உதாரணமாக கூறலாம். இதனை ஏற்படுத்திய இன்ஃப்லுஎன்ஸா வைரஸ் H1N1 என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு 1918 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு H1N1 ஸ்பெயினில் ஏற்பட்டு இருந்தாலும், அப்போது இருந்த வைரஸை விட இப்போது 2009 ல் நோய் உண்டாக்கிய வைரஸ் நிறைய மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. அதனை தவிர 2009 ல் ஏற்பட்ட பன்றிக்காய்சல் பன்றியில் இருந்து வந்திருந்தாலும், ஒரு மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு தாவும் சக்தி பெற்றிருந்தது.


சரி, இது எப்படி ஒரு மனிதனில் இருந்து இன்னொருவருக்கு தாவுகிறது?
காய்ச்சல் உள்ள ஒருவரிடம் இருந்து வரும் தும்மல், இருமல், சளி துப்புதல் இவற்றால் இந்த காய்ச்சல் அதிகம் பரவும் என்பதால், முடிந்த வரை நோயுற்ற ஒருவரிடம் இருந்து விலகி இருப்பது நமக்கு அந்த காய்ச்சல் வராமல் தடுக்கும். அடிக்கடி கை கழுவுவதன் மூலமும் இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.


மேலும் நாம் வசிக்கும் இடத்தில் இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதம் நம் மூக்கை உலராமல் வைத்திருந்து மூக்கில் இருக்கும் மியூக்கஸ் மூலமாக நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் முடிந்த அளவு வீட்டில் ஈரப்பதம் இருக்கும் படியும் பார்த்துக்கொள்ளலாம்.


ஃப்லூ தடுப்பூசி

ஒவ்வொரு வருடமும் இந்த வகை இன்ஃப்லுயன்ஸா வைரஸ் பரவலாம் என்று ஊகித்து அதற்கு மருந்து தயாரிக்கின்றனர். அதனை இங்கு அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஃப்லு ஷாட்ஸ் என்று தடுப்பூசியாக போடுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர் என்று அறிவதால் அவர்களுக்கு இந்த தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆனாலும் ஒரு முறை இந்த தடுப்பூசி போட்டுவிட்டால் ஒவ்வொருவருடமும் போட வேண்டும் இல்லாவிட்டால் ஃப்லூ கட்டாயம் வந்துவிடும் என்று இங்குள்ள அனைவரும் நம்புகிறார்கள்..ஆனால் உன்மை என்னவென்றால் ஃப்லூ தடுப்பு ஊசி போட்டு கொண்டாலும் பலருக்கு காய்ச்சல் வரலாம். ஏன் என்றால் தடுப்பூசி மருந்து இந்த வகை வைரஸ் பரவலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதே இதற்கு காரணம். ஆனால் இந்த இன்ஃப்லூயன்ஸா வைரஸ் இந்த வருடம் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது?, அதற்குறிய மருந்து என்ன? என்பது நோய் வந்த பிறகே கணிக்க முடியும் என்பது வருந்ததக்க உண்மை.