Sunday, April 14, 2013

ஒரு சோகமும் சில நிகழ்வுகளும்

இரண்டு வருடங்கள் கழித்து இந்தியா வந்த நேரமோ என்னவோ, அடுத்தடுத்து, இரண்டு முறை இந்தியா செல்ல நேர்ந்தது. முதல் முறை, சந்தோசமான பயணமாகவும், இரண்டாம் முறை சோகமாகவும் அமைந்தது. முதன் முறை நீண்ட நாள்களுக்கு பின், இந்தியாவில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை, மற்றும் உறவினர் திருமணம் என்று எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்தேனோ, அதற்க்கெல்லாம் சேர்த்து வைத்து வந்தது, அப்பாவின் மரண செய்தி. எதிர்பாராத மரணம். வெளிநாட்டில், வாழ்வதால் இருக்கும் பல இழப்புகளில், முதன்மையானது பெற்றோரை அருகிருந்து பார்த்து கொள்ள முடியாதது. அதுவும், அவர்களின் கடைசி நிமிடங்களில் அருகிருக்கும் வாய்ப்பை இழந்தது.

 பொங்கல் சமயம் இந்திய வந்த போது நான் சந்தித்த , என்னுடன் படித்த கல்லூரி நண்பர்  சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.  வெளிநாட்டில் ஆராய்ச்சி படிப்பு முடிந்ததும் சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு அவர் இந்தியா திரும்பி விட்டார்.  ஏன் என்று நான் கேட்ட போது அவர் சொன்னது இது தான், "என் கல்யாணத்தின் போது இருந்த பலர் இப்போது போட்டோவாகி விட்டனர், என் பெற்றோரை போட்டோவாக மட்டும் நான் பார்க்க விரும்பவில்லை", அவர் சொன்ன வார்த்தைகள் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தன.

ஒருவரின் அருமை, அவர் இருக்கும் போது நமக்கு தெரிவதில்லை. இறப்புக்கு பின்னே பலரின் அருமை நமக்கு தெரிகிறது. சரி, இருக்கும் வரை என் அம்மாவை நன்கு கவனித்து கொள்ளலாம் என்று முடிவு செய்தால், இருப்பது இரண்டு வழிகள் மட்டுமே. ஒன்று, அவரை இங்கு அழைத்து வருவது, இல்லை நாங்கள் இந்தியா திரும்புவது.

இதில், இரண்டாவது முடிவு, பற்றி சற்று அதிகமா சிந்திக்க ஆரம்பித்தேன். என் முகத்தில்
அறைந்தது, இந்தியாவில் இருக்கும் பணம், பணம் என்று பண பைத்தியமாகும் மக்கள். உறவுகள் என்னும் காக்கை கூட்டம், சாவு வீட்டுக்கு வந்திருந்தாலும், பணம் பர பற்றி பேசிய பேச்சு, பணம் இருந்தவர்கள் காட்டிய படோடபம், பணம் இல்லாதவர்களை அவர்கள் நடந்திய விதம், என்று அனைத்தும். ஒரு சாவு வீடு என்று கூட பார்க்காமல் வந்திருந்த அனைவரும் என்னிடம் கேட்ட கேள்வி " எவ்வளோ சம்பளம் உனக்கு.", " வீட்டுக்கு பணம் அனுப்புறையா, எவ்வளவு.". " அமெரிகாவில கிரீன் கார்டு இருக்கா., வீடு இருக்கா..? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள். இதில் சிலர் " என்னிடம் வந்து நான் கஷ்டபடுகிறேன், கொஞ்சம் என்னை கவனிக்க கூடாதா? என்று கேட்டது, அதிலும் சிலர், "என் பையன் வேலை இல்லாம கஷ்டப்படுறான் ஏதாவது வேலை பார்த்து கொடேன் ", என்று நான் எம்ப்லோய்மென்ட் exchange நடந்துவது போல application போட்டனர். ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து "பார்க்கலாம் " என்று சொன்னாலோ, என் முதுகுக்கு பின்னால் எனக்கு கேட்கும் படியே சிலர் " எல்லாம் பணத்திமிர்" என்று திட்டுவதை கேட்க்க முடிந்தது. கஷ்டப்படுகிறார்களே என்று பணம் கொடுத்தாலும் " இவ்வளவுதானா,?" என்று முகத்தை திருப்பிக்கொண்டு சிலர் சென்றனர். இதில் பணம் இருக்கும் சிலரோ தங்கள் படோடபத்தை எல்லாம், தாங்கள் வார்த்தைகளில் தெளித்து, தாங்கள் பெரிய ஆட்கள் என்று காட்டிகொண்டிருன்தனர்.

இவர்கள் எல்லாம் என்னை என்ன என்று நினைத்து கொண்டனர் என்று தெரியவில்லை. " அப்பா இறந்த சோகத்துடன் இருக்கும்  எங்களிடம் என்ன எதிர் பார்கிறார்கள்?. அழுது அழுது அலுத்து போயிருந்த என் அம்மாவிடம் சென்று சொத்து விஷயம் வேறு பேசியபடி இருந்தனர்.

"எப்போடா சொந்தகாரங்க நல்லவங்கள இருந்திருக்காங்க, இப்போ இருக்க?, என்று மனதை தேத்திகொண்டு இந்தியா வந்துவிடலாம் என்று நினைத்தால், அடுத்து முகத்தில் அறைந்தது, இங்கு ஆராய்சிக்கு கொடுக்கும் அமுக்கியத்துவம். அமுக்கியம்-முக்கியத்தின் எதிர்மறை. நான் படித்த உலகப்புகழ் பெற்ற மதுரை காமராஜர் பல்கலை கழக , உயிரியல் தொழில் நுட்ப துறையில் நடக்கும் சில நிகழ்வுகளால் தற்போது பணம் இருந்தாலோ, அல்லது சிபாரிசு இருந்தாலோ , யாருக்கும் பேராசிரியர் பதவி, தகுதி இருப்பினும் பணம் இல்லாவிடில் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் . ஆராய்ச்சி கூடம் வைக்கலாம் என்றால் "பலருக்கு கொடுக்க வேண்டிய சம்திங்" என, அனைத்தும் என்னை மிரட்ட ஆரம்பித்தன.

சரி,இப்போது IT க்கு தானே மதிப்பு, பேசாம, பீல்ட்  மாத்திட்டு IT ல
சேர்ந்துடலாம்னு நினைச்சா, IT  மக்கள் படும் பாடு இன்னொரு பக்கம் மனதை பிழிந்தது. பெற்றோர் நிமித்தம், அமெரிக்காவை விட்டு அங்கு சென்ற பல IT குடும்பங்கள், அங்கு இருக்கும் 12 மணி நேரந்திற்கும் குறையாத வேலை, சனி கிழமை கூட வேலை, ஆபிஸ் பாலிடிக்ஸ், குடும்பத்துடன் இருக்கும் நேரம் மிக குறைவு, குழந்தைகள் கல்வித்தரம் என்று பார்த்து விட்டு இங்கு திரும்பி வந்ததை நினைத்து பீல்ட்  மாத்துவது என்பது முடியாததாகி விட்டது.

அடுத்து என் முகத்தில் அறைந்தது நான் பார்த்த "pollution" அதனால் முகுந்துக்கு ஏற்பட்ட "வீசிங்". மதுரையில், திருப்பரங்குன்றம் மலையை பகல் நேரங்களில் பார்க்க முடிவதில்லை. அப்படி ஒரு புகை மூட்டம். மதுரையில் எல்லா இடங்களிலும் எரிக்கப்படும் குப்பைகள். அதனால் ஏற்படும் புகை, வளி மண்டலத்தில் கலந்து கொடுக்கும் வீசிங் பிரச்சனைகள். மக்களுக்கு குப்பைகளை எரிப்பதால் பிரச்சனைகள் உண்டாகின்றன என்று தெரிந்திருந்தாலும் எதனையும் கண்டு கொள்ளாத பணம் மட்டுமே  குறியாக உள்ள அரசாங்கம்.

என்ன ஆயிற்று இந்தியாவிற்கு, நான் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த இந்தியாவை காணவில்லை. எங்கும்  பணம் பணம் பணம் தான்.

 எல்லாம் அனுபவித்து உணர்ந்த பிறகு, என் கல்லூரி நண்பரிடம் மீண்டும் பேசினேன். அவர் சொன்னது "இந்தியாவில் நெருங்கிய சொந்தங்கள் தவிர, வேறெதுவும் இல்லை" என்பதே.