Monday, November 5, 2012

இட ஒதுக்கீடும் பர்த்டே பார்ட்டியும்!!

என்ன ஒரு தலைப்பு!!..

அது என்னனங்க போன வாரம் ஒரு பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிட்டாங்கன்னு போயிட்டோம்..அது ஏன் போனோம்னு நானும் ரங்கமணியும் தலையில முட்டிக்காத குறை தான்.

ஒரு இந்திய தமிழ் குழந்தையின் பார்ட்டி அது. அந்த குழந்தையின் பெற்றோர் எங்களுக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள் என்றாலும், முகுந்த் உடன் படிக்கும் பையன் பார்ட்டி என்பதால் அங்கு சென்றோம்.


அந்த பர்த்டே பார்ட்டியில ஒரு குறிப்பிட்ட சாதி வகுப்பை சேர்ந்த பலரும் சில அமெரிக்கர்களையும், சில வேறு சாதி மக்களையும் அந்த குழந்தையின் பெற்றோர் அழைத்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் நடத்தப்பட்டது அந்த பார்ட்டி.

அங்கு வந்திருந்த பலர் இந்தியாவில் நடக்கும் இட ஒதுக்கீடு பற்றியும், அது எப்படிப்பட்ட முட்டாள்தனம் என்பது போன்று பேசிக்கொண்டு இருந்தனர். எப்போதும், இப்படி நடக்கும் டிஸ்கஸன்களில் நமக்கு ஏன் வம்பு என்று பேசாமல் இருந்து விடுவேன். எல்லாரும் வாய் கிழிய தமிழில் பேசிய பிறகு..கேக் வெட்டும் நேரம் வந்தது..பிறகு எல்லாரும் சாப்பிட வாங்க என்று அந்த பெற்றோர் அழைத்தனர்.  நாங்கள் எல்லரும் தட்டை எடுத்து கொண்டு புஃபேக்கு சென்று வரிசையில் நிற்க..அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டும் அவர்களின் டைனிங் டேபிளில் உட்கார்த்திருக்க..அவர்களுக்கு என்று தனி சாப்பாடு பரிமாறப்பட்டது.

எங்களை போன்ற சில குடும்பங்களுக்கு அமெரிக்கர்கள் உட்பட வேறு சாப்பாடு வைத்து இருந்தனர். அதில் ஒரு அமெரிக்க அம்மா..அது என்ன சாப்பாடு என்று கேட்க..அதற்கு அந்த பர்த்டே பார்ட்டி அம்மா, ”அது கடவுளுக்கு படைத்தது..வேறு மக்கள் சாப்பிட கூடாது” என்று கூறினார்.

அட..இது நல்லா இருக்கே..அப்படி கடவுளுக்கு படைத்த சாப்பாட்டை வேறு சாதி மக்கள் சாப்பிட கூடாது என்று சொல்பவர்கள்..எதற்கு மற்ற மக்களை பார்ட்டி என்று அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை..

அதே போல சாப்பிட்ட பிறகு கை கழுவ என்று மற்ற சாதி மக்களுக்கு தனி இடம் என்று வைத்து இருந்தது கண்டு..அட அட என்ன அழகா நமக்கு இவங்க இடம் ஒதுக்கி இருக்காங்கப்பா என்று எனக்கு மலைப்பாக இருந்தது.

அவர்கள் சிறிது நேரத்துக்கு முன்பு வரை “இட ஒதுக்கீடு” பற்றி பேசிய பேச்சுக்கும் அவர்கள் எங்களுக்கு கொடுத்த “இட ஒதுக்கீடு” பற்றியும் நினைத்து ”அட நாம அமெரிக்காவில தான இருக்கோம்” கிள்ளி பார்த்து கொண்டு அந்த இடத்தை விட்டு விட்டால் போதும் என்று காலி செய்தோம்.

Sunday, October 28, 2012

பேனை பெருமாளாக்குவது எப்படி?


1910 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த பான்ச்சோ வில்லா ஒரு திருட்டு கும்பலை அமைத்துக்கொண்டு ரயில்களில் திருடுவது, பணக்காரர்களிடம் திருடுவது, கொலைகள் செய்வது என்று ஒரு ராபின் ஹீட் போல செயல் பட்டு வந்தான். மெக்ஸிகோ நாட்டின் ஜெனரெல் காரென்ஸ்ஸா, வில்லாவை தோற்கடித்து கட்டுக்குள் வைத்து இருந்தார்.

1916 ஆம் ஆண்டு மறுபடியும் தலை எடுக்க நினைத்த வில்லா, கொலம்பஸ், நியூமெக்ஸிகோ நகரத்தை சூறையாடி 17 அமெரிக்க ராணுவத்தினரை கொன்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வில்சனிடம் அவருடைய மந்திரிகள் வில்லாவை ஒழிக்க படையை அனுப்பும் படி செய்தனர். ஒரு சிறு திருட்டு கும்பலை அழிக்க பத்தாயிரம் படை வீரர்களை அனுப்பினர்.  அத்தனை பேருக்கும் தண்ணி காட்டி வில்லா தப்பிக்க தப்பிக்க எல்லாருக்கும் பத்திரிக்கைகளுக்கும், ஊருக்கும் அது பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது.  நாட்கள் செல்ல செல்ல வில்லாவின் தவறை மறந்த மக்கள் அவன் தப்பிக்கும் திறமையை மெச்ச ஆரம்பித்து விட்டனர். ”ஆனானப்பட்ட அமெரிக்காவிற்கே கண்ணுல விரலை விட்டு ஆட்டுறான் பாரு” என்று அனைவரும் மெச்ச அவன் திருட்டையும் கொலைகளையும் மறந்த மக்கள் அவனை ஒரு தலைவன் என்று கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் அமெரிக்காவுக்கோ இது பெரிய அவமானமாகி விட்டது.  வில்லா தலைக்கு $50,000 பணம் என்று அறிக்கை விட்டாலும் யாரும் வில்லாவை பிடித்து தர தயாராக இல்லை.  முடிவில் வில்லாவை பிடிக்க முடியாமல் அவர்கள் திரும்பவேண்டி இருந்த போது இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்னேகால் லட்சம் வீரர்களாகி இருந்தது. இப்படி வீரர்களின் உயிரையும், பணத்தையும் செலவிட்ட வில்சன் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தி அவர் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாகி விட்டது.

தன்னுடைய பவரை காட்ட ”ஒரு கொசுவை பிடிக்க யானையை அனுப்புவது போல” படையை அனுப்பும் போது வில்சன் “என்கிட்ட மோதாதே!, நான் அமெரிக்கா, அமெரிக்காவிடம் மோதினால் என்ன நடக்கும் என்று காட்டுகிறேன் பார்?” என்ற மமதையுடன் அனுப்பினார்.

ஆனால், அது வில்லாவுக்கு சாதகமாக அமையும் என்று அவர் எதிர் பார்த்து இருக்கமாட்டார்.

வில்சன் படையை அனுப்புவதற்கு முன் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த வில்லாவின் பெயர்.. “அட அமெரிக்காவையே ஆட்டுறவர் டா” என்று அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது.

வெறும் பேனாக இருந்த வில்லா பெருமாள் அளவுக்கு ஊதி பெரிதாக்கப்பட்டார்.

இப்படிபட்ட பேன்களை சரிகட்ட என்ன செய்திருக்கலாம் வில்சன்

“உதாசீனப்படுத்தி இருக்கலாம்”. ஒன்றுமில்லா எதிரியை உதாசீனப்படுத்துவது மட்டுமே நல்ல பழிவாங்குதலாகும். அதுவே அந்த எதிரியை வளர விடாமலும் செய்யும். தமக்கு சமமில்லாத எதிரிக்கு ஒருவர் முக்கியத்துவம் கொடுத்து போர் தொடுப்பதோ இல்லை பழிவாங்குதலோ அந்த எதிரியின் பவரை அதிகப்படுத்துமே ஒழிய, எதிரியை ஒழிக்காது.

"Making a big deal out of a petty problem just fuels it and turns it into something worse." Robert Greene

Saturday, August 25, 2012

இந்திய தவளையும் ஆபிஸ் பாலிடிக்ஸும்!

ஊரில் ஒரு கதை உண்டு, அது சில தவளைகள் ஒரு கிணற்றுக்குள் மாட்டிகொண்டனவாம். அது மிகவும் வழுக்கல் நிறைந்த கிணறாம். அதிலிருந்து தப்பிக்க ஒரு தவளை முயற்சி செய்தாலும் அடுத்தடுத்த தவளைகள் காலை பிடித்து கீழே இழுக்குமாம்..இப்படி செய்து செய்து ஒரு தவளையும் மேலே வர முடியவில்லையாம்..

எதுக்கு இப்போது ஒன்னாம் வகுப்பு கதையை செல்கிறேன் என்றால், பொது இடங்களிலும் அலுவலகத்திலும் நான் சந்திக்கும் இந்தியாவை சேர்ந்த மனிதர்கள் எனக்கு இந்த தவளை கதையை அடிக்கடி நினைவுபடுத்துகிறார்கள்.

  • எதாவது உதவி என்று கேட்டால், அடுத்த நாட்டை சேர்ந்த மக்களுக்கு நம் நாட்டை சேர்ந்தவர்கள் விழுந்து விழுந்து உதவுவார்கள்,  நாம் சென்று கேட்டால் “எனக்கு தெரியாது” என்று சொல்லிவிட்டு போய் மேனேஜரிடம் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது போல சொல்லி விடுவதையே சிலர் தொழிலாக வைத்து இருக்கிறார்கள். மேனேஜருக்கு உண்மையாக நடந்துகிறார்ங்களாமாமாம்!!

  • இன்னும் சிலர் இருக்கிறார்கள்..அவர்கள் தானாகவே உதவி வந்து செய்வார்கள், நம்மை பற்றியும் நம் குடும்பத்தை பற்றியும் துருவி துருவி கேட்பார்கள்...அவர்கள் நம்பி எதாவது சொல்லிவிட்டோம்..தொலைந்தோம்...ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்காத குறையாய் எல்லோரிடமும் சொல்லிவிடுவார்கள்..அதில் ஒரு அற்ப சந்தோசம் அவர்களுக்கு...

  • இன்னும் சிலரோ...நண்பர்கள் போல பழகுவார்கள்...வேலை தெரியவில்லை என்று நம்மிடம் அடிக்கடி சந்தேகம் கேட்பது போல கேட்பார்கள்..நாமும் பாவப்பட்டு சொல்லி தருவோம்..ஆனால் எல்லாவற்றையும் நம்மிடமே கற்றுக்கொண்டு சில நாட்களில் நம்மையேஅதிகாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

  • இன்னும் சிலர்..வேலை ஒன்றுமே தெரியாது..ஆனாலும் எல்லா மீட்டிங்குகளிலும் அவர்கள் தவறாமல் இருப்பார்கள்..உலகத்தில் இருக்கும் அனைத்து டெக்னாலஜியும் தனக்கு தெரியும் என்பது போல தம்பட்டம் அடிப்பார்கள்..ஆனால் உண்மையில் நுனிப்புல் மட்டுமே மேய்பவர்கள் இவர்கள்...ஒரு வேலையையும் உருப்படியாக செய்ய தெரியாது..ஆனால் வேறு யாரோ செய்த வேலையை  தனது வேலை என்று சொல்லி கிரெடிட் வாங்கி கொள்வதில் சமர்த்தர்கள்..

மேலே நான் சொன்ன மனிதர்களை போன்றவர்கள்  சிலர் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பினும்...அவர்கள் இந்தியர்களாக இருப்பின் மற்றவர்களை எப்போதும் ஒரு பொறாமை நோக்குடனே பார்க்கிறார்கள்..
நாம் முன்னேறா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அடுத்தவர்களை முன்னேற விட கூடாது. இதுவே பல இந்தியர்களின் மன நிலையாக உள்ளது.  அது தான் ஏன் என்று எனக்கு விளங்கவில்லை!!

Saturday, June 30, 2012

அரசியலால் வில்லன்கள் ஆகும் காமெடியன்கள்!

அது 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம், அப்போது ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க வில் இணைந்திருந்தார் காமெடி நடிகர் செந்தில். ஆனந்தவிகடன் பேட்டி ஒன்றில் “ஏய் கருணாநிதி!, ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?” என்று கேட்டு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த தேர்தலில் அ.தி.மு.க தோற்று தி.மு.க வென்றது..

அ.தி.மு.கா வுக்கு ஆதரவாக மு.க வை தாக்கிய அந்த ”ஒண்டிக்கு ஒண்டி” வார்த்தையை திட்டி பல பிரபலங்கள் பேட்டி கொடுத்தனர்.


 
ஏற்கனவே பட வாய்ப்புகள் குறைந்திருந்த செந்திலுக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்க பயந்து பட அதிபர்கள் ஒதுக்க  ஆரம்பித்தனர்.  பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் ஒடுங்க ஆரம்பித்தார் செந்தில் அவர்கள்.
 
எந்த கட்சியையும் சாராமல் இருந்த வடிவேலுவும், விவேக்குக்கும் அதிக வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன.
 
 
சீன் மாறுகிறது.
 
இது 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம். அப்போது ஆளும்கட்சியாக இருந்த தி.மு.காவில் சேர்ந்திருந்தார் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர் வடிவேலு.
 
தி.மு.காவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக அவர், எதிர் கட்சி கூட்டணியில் இருந்த தே.மு.தி.கா தலைவரை தாக்கி பேசினார்.
 
 அந்த தேர்தலில் தி.மு.க தோற்று அ.தி.மு.க வென்றது..


தி.மு.கா வுக்கு ஆதரவாக விஜயகாந்தைவை தாக்கியதை, திட்டி பல பிரபலங்கள் பேட்டி கொடுத்தனர்.



ஆளும்கட்சியை பகைத்துகொண்டு  வடிவேலுவுக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்க பயந்து பட அதிபர்கள் ஒதுக்க ஆரம்பித்தனர். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் ஒடுங்க ஆரம்பித்தார் வடிவேலு அவர்கள்.


எந்த கட்சியையும் சாராமல் இருந்த சந்தானத்திற்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் பிரசாரம் செய்த இரண்டு காமெடியன்களும் அரசியல் செய்ய தெரியாமல் வாயில் வந்ததை பேசி வில்லன்கள் ஆக்கப்பட்டு வாய்ப்பை இழக்கின்றனர்.

 இதிலிருந்து என்ன தெரிகிறது, அரசியல்வாதிகளும், ஆளும் கட்சியும் தான் ஒரு நடிகனின் மார்கெட்டை தீர்மானிக்கிறார்கள். மக்கள் தீர்மானிப்பதில்லை!!

Sunday, June 3, 2012

வாழ்க்கை போராட்டம்.

ஏன் வாழ்க்கையை போராட்டம் என்றழக்கிறார்கள் என்று நான் யோசித்ததுண்டு. போராட்டம் என்றாலே கொடிபிடிப்பது, கூச்சல் போடுவது, மறியல் செய்வது என்று மட்டுமே சிறுவயதில் நினைத்திருந்தேன் நான். ஆனால் ஒவ்வொரு நாளும் வாழுவதற்கு நாம் அனைவரும் ஏதோ ஒரு போராட்டம் செய்கிறோம். நாம் செய்யும் போராட்டங்களை பற்றிய அலசலே இந்த பதிவு.

ஏழைகளும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே வாழ்வதற்கு போராட வேண்டும் மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கை போராட்டம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் வாழ்வில் எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும் சரி அவருடைய வாழ்விலும் ஒரு போராட்டம் இருக்கும். அது பொருளாதாரம் சார்ந்த போராட்டமாக இல்லாமல் இருக்கலாம்..ஆனால் அவர்களும் வாழ்வில் போராடவே வேண்டியிருக்கிறது.

இதற்கு சில உதாரணங்கள் சில.

முதல் உதாரணசில நாட்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு பெண்ணை கூறலாம். அவள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய மண்னை சேர்ந்த பெற்றோரை கொண்டவள். அவளுடைய அப்பா, ஒரு மில்லியனர், ரிசாட் ஹோட்டல் ஹோட்டல் உரிமையாளர். பார்க்க அழகாக இருப்பாள். அவளுக்கு டாக்டருக்கு படிக்கும் ஒரு இந்திய மரபை சேர்ந்த பாய்ஃப்ரெண்ட்ம் உண்டு. அந்த பாய்ஃப்ரெண்ட் குடும்பமோ ஒரு கோடீஸ்வரர்கள் குடும்பம் படிப்பு. பாய்ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் நிலையை தாண்டி, தற்போது கணவன் மனைவியாகி விட்டனர்.

அந்த பையன் ஒரு அப்பாவி வேறு, எல்லாம் இவள் சொற்படி தான் நடப்பார்.  பணம், அழகு, அந்தஸ்து, அழகான, பணக்காரனான கணவன்..இப்படி அந்த பெண்ணுக்கு எல்லாமே உண்டு..ஆனால் அவளிடம் நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசினால் போதும்..வாழ்வில் விரக்தி வந்துவிடும்..காலையில் எழுந்ததில் இருந்து படுக்கப்போகும் வரை தான் சந்திக்கும் ஒவ்வொருவரும் தனக்கு துரோகம் செய்கிறார்கள் என்பாள். தன்னுடைய தந்தையை பற்றி அசிங்க அசிங்க வார்த்தைகளால் திட்டுவாள். தன கணவனை பற்றியும், அவரின் குடும்பத்தார் பற்றியும் அவள் திட்டும் வாரத்தைகள் கேட்க்க காது கூசும்.அவளை பொறுத்த வரை ஒவ்வொரு நாளும் வாழ்க்கை ஒரு போராட்டமே. 

அடுத்து நான் சொல்ல இருப்பது என்னை போன்ற ஒரு பெண் ஆராய்ச்சியாளரின் கதை,  இரண்டு குழந்தைகளுக்கு தாய் அவர். முனைவர் பட்டம் பெற பல்கலைகழகத்தில் சேர்ந்த சில மாதங்களில் திருமணம் ஆனது. குழந்தை பேரு வேண்டாம் என்று தள்ளி போட்டு கொண்டிருந்த அவர், பட்டம் பெற சில மாதங்கள் இருக்கும் பொது தாயாகி விட்டார். அவரின் கைடுக்கு அது பிடிக்காமல் போக, குழந்தையை பார்த்து கொள்ள முடியாத அளவு வேலைப்பளு கொடுத்து, வேலையை முடி இல்லை டிகிரி கிடையாது என்று மறைகமாக மிரட்ட, குழந்தைக்கும், எதிர்காலத்துக்கும் நடுவில் அவர் நடத்திய வாழ்க்கை போராட்டம் இன்னும் என் கண் முன் நிற்கிறது. கடைசியில் இந்த ஆராய்ச்சியே வேண்டாம் என்று தாக்கி போட்டுவிட்டு இன்னொரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும், அவரிடம் இருக்கும் அறிவும் ஆர்வவும் நினைத்த தொழிலை செய்ய முடியாமல் அவர் படும் வேதனையும் அவர் வாழ்க்கையை ஒரு போராட்ட களமாக்கி விட்டிருக்கிறது.

 கடைசியாக நான் சொல்ல இருப்பது நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும், இன்னும் உயர் பதவிக்கு வர துடிக்கும் ஒரு பெண்ணை பற்றியது. இவருக்கும் குழந்தைகள் உண்டு என்றாலும் அவர்களை முழுக்க முழுக்க கவனித்து கொள்ளுவது ஆயாக்களும் அவர் கணவரும் தான். ஒரு நாளின் 24 மணிநேரத்தில் வெறும் 4 மணி நேரம் மட்டுமே இவர் உறங்குவார். மற்ற எல்லா நேரமும் வேலை வேலை வேலை தான். நிறுவனத்தில் நடக்கும் அரசியல்களை சமாளிக்க, மேலும் பதவி உயர்வு பெற இவர் போராடும் போராட்டம் அப்பப்பா  சொல்லமுடியாது 

Wednesday, May 9, 2012

30 வயது பெண்களும், தமிழ் சினிமாவும்

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். தமிழ் சினிமால காட்டுற மாதிரி எப்போதும் நாம ஸ்கூல் படிக்கிற, காலேஜ் படிக்கிறவங்களா இருந்திட்டா எப்படி இருக்கும். ஏன் இந்த கேள்வியை இப்போ கேட்குறேன்னா, 100 க்கு 99 தமிழ் சினிமாலா வர்ற ஹீரோயின் எல்லாரும் ஒன்னு ஸ்கூல் படிப்பாங்க..இல்ல காலேஜ் படிப்பாங்க.. அதுவும் இல்லாம கிராமத்து பொண்ணா இருந்தா நம்ம பதினாறு வயதினிலேலெ வர்ற மயிலு மாதிரி  மத்த விசயம் எல்லாம் ஒன்னுமே தெரியாத ஆனா “என் மன்னன் எங்கே?”ன்னுட்டு செந்தூரப்பூவை கேட்டுட்டு இருப்பாங்க.

தமிழ் சினிமால வர்ற 99/100 ஏன் 100/100 பெண்ணுங்களுமே ஏன் 15-25 வயசுக்குள்ளார இருக்காங்க.. அதுக்கு மேலே வயசுல பொண்ணுங்கள காட்டினா..அவங்கள ஒரு மாதிரி பொண்ணு மாதிரி சொல்ல போனா  ”ஆண்ட்டி” ன்னு ஒரு பட்ட பேர வச்சி..எப்போ பாரு பொண்ணுங்கள ஒரு வட்டத்துக்குள்ளாரயே வச்சி இருக்கிகாங்க தமிழ் சினிமால..

இந்த மாதிரி ட்ரெண்டு சாவித்திரி,சரோஜா தேவி..காலத்தில இருந்து, இப்போ வரை தொடருது..வர வர இப்போ வந்த எல்லா படத்திலையும் ஸ்கூலு லவ்வையே காட்டி..கடுப்படிக்குறாங்கப்பா..


எவ்வளவோ கீழே இருந்து போராடி ஜெயிச்சு எடுத்துக்காட்டா திகழ்ற எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்கப்பா..ஒரே ஒரு உதாரணம் சொல்லனும்னா..பர்மாவின் Aung San Suu Kyi...என்னா ஒரு பொண்ணுப்பா அவங்க..நாட்டுக்காக..கடைசிவரை வீட்டு சிறையில இருந்துட்டு..காதலிச்சு கல்யாணம் முடிச்ச கான்சரில் அவதிப்பட்ட தன்னோட கணவரை அவரின் கடைசி நிமிடம் கூட பார்க்க முடியாமல் போனாலும் தன்னோட நாடு முக்கியம்னு நினைச்சு வாழ்ந்த/வாழ்ந்துட்டு இருக்கிற பொண்ணுங்க மாதிரி பொண்னுங்க எல்லாம் இந்த தமிழ் சினிமா எடுக்குறவங்க கண்ணுக்கு தெரியாதா..

இல்லை தெரியாம தான் கேட்குரேன்..30 வயசுக்கு மேல பெண்ணுங்க இருக்க கூடாதா..அதை தான் தமிழ் சினிமா சொல்ல வருதா..


Sunday, April 8, 2012

ஈ -வேஸ்ட் வாங்கலையோ ஈ-வேஸ்ட்!!!

Mobile Company Nokia, Samsung, Sony, LG, Motorola, Apple iPhone , Blackberry...

Facilities 3G, dual sim, camera, music player, Bluetooth, Internet, Email....

Electronics Company Onida, Sony, Toshiba, LG, Samsung, Nikon, Fuji, Cannon, Bose, Apple..

Facilities LCD TV, Plasma TV, digital camera,video camera, iPod, iPad, music system, home theater

இப்படி புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது ...தினமும் புது புது மாடல் கள், இன்னைக்கு விட்டு நாளைக்கு வாங்கினால் இன்னும் நல்ல  மாடல் கிடைக்குமே..ஏங்கும் இளைஞர் நெஞ்சங்கள்.


புதுசா லேட்டஸ்ட் ஆ இருந்தா தான் எல்லாரும் மதிப்பாங்க இல்லாட்டி யாரும் மதிக்க மாட்டாங்க!! , இன்றைய உலகம் இதுதான்.

சரி, ஓல்ட் மாடல் செல் போன்களும், டிவிக்களும் என்னவாகும்? அவைகள் எல்லாம் பழைய electronics கடைக்கோ அல்லது குப்பை தொட்டிக்கோ போகப்படும்...



அங்கு. இருந்து அவை எங்கே போகின்றன என்னவாகின்றன?  யாருக்கு கவலை? எனக்கு புது செல் போன் வந்தா போதும்.

நம்ம ஊரு குப்பை போதாதென்று வெளிநாடுகளும் இதனை போன்ற இ-வேஸ்ட் கலை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றது.



இப்படி தூக்கி எறியப்படும் cell போன் களும்  டிவிக்களும், அதில் இருக்கும் இரும்பு, அலுமினியம் போன்ற பொருட்களுக்காக குப்பை பொறுக்குபவர்களால் பொறுக்க படுகின்றன. பின்னர் அதில் இருக்கும் உலோகங்கள் எல்லாம் எடுக்ககப்பட்ட பின்னர் எஞ்சி இருப்பது Integral Circuit & wires

சரி அவை என்னவாகின்றன?

வேறென்ன.? எரிக்கப்படுகின்றன..

ஆனால் இப்படி எரிப்பவர்கள் அந்த circuit இல் Cadmium, lead நச்சு பொருட்கள் இருக்கின்றன , அவை சூழ்நிலைக்கும், தமக்கும் கேடு விளைவிப்பவை என்று அறிவார்களா.

அதனை எரிக்கும் ஏழைகளையும் விடுங்கள்.. அவர்கள் வயிற்று பிழைப்பிற்க்காக வேறு வழி இன்றி இதனை செய்கிறார்கள்.

ஆனால் ..அப்படி எரியூட்டப்படும் இடங்களுக்கு அருகில் வசிப்பதால் தமக்கும் அந்த கேடு விளையும் என்று பொது மக்கள் அறிவார்களா?


இல்லை எந்த வேகத்தில் மார்க்கெட்டிங் செய்து பொருட்களை விற்கின்றோமே அதில் கொஞ்ச அளவாவது ப்ரோபர் டிஸ்போசல் முறைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று கம்பெனி கள்தான் செய்யுமா..

இல்லை...இந்திய மிளிர்கிறது என்று விளம்பரபடுத்தும் அரசாங்கம் , இப்படியே போனால் இந்தியா வியாதிக்கூடமாகிவிடும் என்று அறிந்து, இ-வேஸ்ட் பற்றியும் ரி சைக்ளிங் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றுமல்லாமல் அதற்குரிய நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் அறியுமா?

God only knows!

Photos: Google Images

Saturday, April 7, 2012

அடிக்கடி கோக், பெப்ஸி குடிப்பவரா நீங்கள்?




அடிக்கடி கோக், பெப்ஸி குடிப்பவரா நீங்கள்?, அதன் நிறமும் சுவையும் மறக்க முடியாதது என்று நினைப்பவரா, எல்லாவற்றுக்கும் ”ஹாவ் எ கோக்” என்று சொல்பவரா நீங்கள்..அப்படி என்றால் உங்களுக்கு கான்சர் வரும் வாய்ப்பு அதிகம்.. எப்படி என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.


Center for Science in the Public Interest (CSPI) சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, கோக் மற்றும் பெப்ஸியில் இருக்கும் காரமல் கலருக்காக சேர்க்கப்படும்  4-methylimidazole (4-MEI) and 2-methylimidazole (2-MEI) போன்ற காரமல் கலரிங் ஏஜெண்ட்ஸ் கார்ஸினோஜெனிக் எனப்படும் கான்ஸரை தூண்டும் பொருள்கள் என கண்டறிய பட்டிருக்கின்றன.


http://www.cbsnews.com/8301-504763_162-57391560-10391704/chemical-found-in-cola-causes-cancer-watchdog-warns-what-does-fda-say/


http://www.dailymail.co.uk/news/article-2112335/Coke-Pepsi-change-recipe-avoid-putting-cancer-warning-labels.html

http://healthcarenewsblog.com/coke-and-pepsi-blink-will-tone-down-dubious-caramel-coloring/


இந்த அபாயமான கலரிங் ஏஜண்ட்ஸ் அதிக அளவில் கோக், பெப்ஸி போன்ற குளிர் பானங்களில் இருப்பதால் இங்கிருக்கும் கலிபோர்னியா மாகானத்தில் இந்த கலரிங் ஏஜெண்ட்ஸ் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
இதே போல பல மாகானங்களும் தடை செய்யபோவதாக அறிவித்ததால் பெப்சி, மற்றும் கோக் கம்பெனிகள் இந்த கலரிங் பொருளை மாற்றுவதாக இங்கு அறிவித்திருக்கிறார்கள்.



இது இந்தியாவில் இன்னும் அமல் படுத்த படவில்லை..இந்தியாவில் இளைஞர்களிடையே அதிக பாப்புலராக இருக்கும் இந்த காலத்தில் இந்திய மக்கள் நலன் கருதி அரசாங்கம் உடனடியாக இந்த கான்சர் ஏஜெண்டை தவிர்க்குமாறு கோக் மற்றும் பெப்ஸி கம்பெனிகளை வலியுறுத்த வேண்டும்..இல்லையேல் கான்சர் தாக்கம் அதிகரிக்கலாம்.

நன்றி.

படங்கள் : நன்றி கூகுள்.



Friday, April 6, 2012

வளர்சிதை மாற்றம் 

"லீவு எடுத்தாச்சு ஏதாவது பழைய படம் பாக்கலாம்" சொன்னது மனசு,
சிறுவயதில் நான் ரசித்த படம் ஒன்று டிவியில் வர  
அந்த படத்த சிறிது நேரம் கூட பார்க்க முடியல.
சிறு வயதில் பார்த்து ரசித்த அதே காட்சிகளும் செண்டிமெண்ட் களும்
இப்போது பார்க்க மனம் வெறுக்கிறதே ஏன்? 

கட் ஷு வும் ஜீன்சும் போடவேண்டும்
என்று ஏங்கிய காலம் போய்,
தினமும் அதை பார்க்கவே
வெறுப்பு ஏற்படுவதும் ஏன் ? 

ஊரில் நடக்கும் சித்திரை திருவிழாவின் போது
சாமி பார்க்க வா என்று அம்மா அழைத்தாலும்
போம்மா நான் படிக்கணும்னு சொல்லிட்டு டிவி பார்த்த காலம் போய் ,
இப்போ மதுரையை பத்தி யாரு கேட்டாலும்
சித்திரை திருவிழாவை பத்தி சொல்லுறது ஏன்?

அதிரவைக்கும் சத்தத்துடன் கலந்த இசையையும்
அவசர உலகையும் ரசித்த எந்தன் மனம்
இப்போது அமைதியான புல்லாங்குழல் இசையையும்
இயற்கையையும் விரும்புவது ஏன்? 

அறிவியலையும், வரலாற்றையும் வெறுத்த காலம் போய்
இப்போது  மாங்கு மாங்கென்று வரலாற்றை படிக்கவும்
அறிவியலை அறியவும் முனைப்பு ஏற்படுவது ஏன்? 

மனிதனால் எல்லாம் முடியும் என்று இறுமாந்திருந்த காலம் போய்,
நம்மால் எதுவும் முடியாது என்ற ஞானம்
இப்போது தோன்றுவது ஏன்? 

காருக்கும் கரன்சிக்கும் ஆசைப்பட்ட காலம் போய்
எல்லாம் இருந்தும் எதுவுமே நிலையானததல்ல
என்ற எண்ணம் தோன்றுவது ஏன் ?

எதற்காக வந்தோம், என்ன செய்ய போகிறோம்
என்று நிறைய கேள்விகள் தினமும் என்னை துளைக்க
எனக்குள்ளே தான் எத்தனை வளர்சிதை மாற்றங்கள்!!!

Sunday, March 11, 2012

மிட் நைட் மசாலா பாடல்களும், சரவணா பவன் சாப்பாடும்!



தெரியாதனமா நேற்று இங்கிருக்கும் சரவணாபவனுக்கு சாப்பிட சென்றுவிட்டோம். அங்கு இசை அருவி சானல் போட்டு அதில் பாடல்கள் போட்டு கொண்டிருந்தார்கள். அதில் அழகு குறிப்பு சொல்ல போன் செய்ய சொல்லி ஒரு DJ பேசி கொன்று கொண்டிருந்தார். அதை கூட தாங்கி கொள்ளலாம் போல இருந்தது. ஆனால் அதற்கு பிறகு போட்ட ஒவ்வொரு பாடல்களும் ஆகா என்ன அருமையான அர்த்தங்கள் கொண்டவை.

“எப்படியும் ஒருத்தனுக்கு கழுத்த நீட்ட போறேன்” ,
 “ஒரு நாள் மட்டும் கேர்ள் ஃப்ரெண்ட் ஆக வரயா” ,
"பம்பர கண்ணாலே”
“அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும்”

இந்த பாடல்களின் அர்த்தம் தெரிந்த நமக்கு நெளிவை ஏற்படுத்த, அதில் வந்த காட்சிகள் எல்லாம் ”உவ்வே” ரகம். அந்த நேரம் பார்த்து சாப்பிட என்று ஒரு அமெரிக்க குடும்பம் 5 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை கூட்டி கொண்டு வந்தனர்.

அவர்கள் வந்து உட்கார்ந்த சில நிமிடங்களில் அவர்களின் இரண்டு குழந்தைகளும் திரையில் வந்த பாடல்களை கண்கொட்டாமல் பார்க்க ஆரம்பிக்க அந்த பெற்றோர்கள் அவர்களை பார்க்க விடாமல் செய்ய செய்த பிரயத்தனம் எங்களுக்கு சிரிப்பை வரவழித்தது.

இங்கு அமெரிக்காவில் குழந்தைகளுக்கு என்று இருக்கும் நிகழ்ச்சிகள், புத்தகங்கள், திரைப்படங்கள் மட்டுமே காட்டுவார்கள்.  வன்முறை காட்சிகள் நிறைந்த படங்களோ, 18 வயதிற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்கும் படி இருக்கும் காட்சிகள் நிறந்த படங்களையோ பார்க்க பல பெற்றோர் அனுமதிப்பதில்லை.

அதிலும் குழந்தைகள் 5 வயதுக்குட்பட்டவராய் இருப்பின் அவர்களுக்கு டிவி பார்ப்பது கூட பல நேரங்களில் தடை உண்டு.

எவ்வளவோ முயற்சி செய்து குழந்தைகளை ’அந்த மாதிரி’ பாடல்களை பார்க்க முடியாமல் செய்ய முடியாமல் ஆக, முடிவாக அந்த கடை நடத்துபவரிடம் சென்று டிவியை அணைக்கும் படி சொன்னார்கள் அந்த அமெரிக்க பெற்றோர்.

இப்படி மிட் நைட் மசாலா பாடல்கள் பட்ட பகல் நேரங்களில் டிவியில் ஒளிபரப்புதல் தேவையா?

டிவிக்கும் கண்டிப்பாக தணிக்கை தேவை என்பது கண்கூடு..கவனிக்குமா இந்திய அரசு.



Monday, March 5, 2012

என்னாது காந்திய கொன்னுட்டாங்களா ??

நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாக்பாட் பார்க்க நேர்ந்தது.

அதில் இரண்டு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பங்கேற்றனர். அதில் ஒரு கேள்வி,
காந்தி படத்தின் முதல் காட்சியான, காந்தியை கோட்சே சுடுவது போன்ற ஒன்று, அதை போட்டு விட்டு, காந்தியை கொன்றது யார்? என்ற கேள்வி கேட்டார்கள்.
என்ன கேணத்தனமான கேள்வியா இருக்குதே, இது கூடவா 10th students don't know,
என்று நான் நினைக்கும் தருவாயில் அந்த அணியினர் பதில் எனக்கு புல்லரிப்பை தந்தது.

ஒரு அணியினர் சொன்ன பதில்.

நோ ஐடியா.

இரண்டாவதி அணியினர் சொன்னது

முசோலினி

அட கடவுளே!!! இது என்ன காந்திக்கு சோதனை.


இங்கே அமெரிக்காவில் நடக்கும் ஜெப்பர்டி ப்ரோக்ராம் பார்க்க நேர்ந்தது, அதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி.

காந்தியை கொன்றது யார்?

அதில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் பச்செர் அழுத்தினர் அனைவரின் பதிலும்

நாதுராம் கோட்சே 

எங்கே செல்கிறது இந்திய  குழந்தைகளின் கல்வித்தரம்

Saturday, March 3, 2012

சரக்கடிடா மச்சான்!!!!

மனதில் கவலையா?
பொண்டாட்டி சொல்லற பேச்சு கேக்க மாட்டேன் என்கிறாளா?,
காதலில் தோல்வியா?
காதலி கலட்டி விட்டுட்டாளா? 

சரக்கடி மச்சான்!!

பண பிரச்சனையா?,
கடன்காரன் தொல்லையா?,
பிசினஸ் லாஸ் ஆ?
வேலை போயுடுச்சா?
சாப்பாட்டுக்கு வழியில்லையா?

சரக்கடி மச்சான்!!!

பர்த்டே பார்ட்டி ஆ?
கெட் டுகெதர் ஆ  ?
பேசுலோர் பார்ட்டி ஆ?
பிசினெஸ் டீலிங் ஆ?
பதிவர் சந்திப்பா?

சரக்கடி மச்சான்!!!

நீ பெரிய அப்பாடக்கருன்னு உலகத்துக்கு காட்ட ஆசை பட்ட,
நல்லா தண்ணி அடிச்சு மட்டையாகிட்டு,
அப்புறம் எழுந்திருச்சு , எவ்வளோ தண்ணி அடிச்ச,
எத்தனை மணி வரைக்கும் அடிச்ச,
என்ன சைடு டிஷ் சப்பட்ட?,
யார் கூட சேர்ந்து தண்ணி அடிச்ச?
அவங்க வயசு என்ன?
எவ்வளவு தண்ணி அடிச்சாலும் வாந்தி எடுக்காம இருக்க என்ன என்னசெய்யிற?
இப்படி எல்லாத்தையும் ஒன்னு விடாம எழுதணும். 
அப்படி மட்டும் எழுதி blog ல 
போட்டுடு, அப்புறம் நீ பெரிய அப்படக்கர் தான்..

உன்னை பாலோ பண்ணினிட்டு இருக்கிற சில அடிபிடிகள்...ஆகா, ஐயூ... சான்ஸ் இல்லை அப்படின்னு உன்னை புகழ்ந்துட்டு அவங்களும் தண்ணி அடிச்சிட்டு மட்டையாயிடுவாங்க. அப்புறம்
என்ன உனக்கும் ஊசியில சரக்கு கிடைச்சிடும்...அதனால

சரக்கடி மச்சான்!!!

பி.கு: இப்படி எல்லாத்துக்கும் சரக்கடி, சரக்கடின்னு சொல்லிட்டு இருந்த என் சித்தி பையன், போன மாதம் ஒரு பார்டியில நல்ல சரக்கடிச்சுட்டு ,motorbike la போயி மோதி இறந்து விட்டார். இப்போது அவர் மனைவியும், இரண்டு குழந்தைகளும் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

Friday, March 2, 2012

அழியப்போகும் ஆண்கள் இனம்.


ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது http://www.bbc.co.uk/news/science-environment-17127617.  http://news.bbc.co.uk/2/hi/europe/8060289.stm     அது இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளில் ஆண் வர்க்கத்தை நிர்ணயிக்கும் Y குரோமோசொம்கள் இருக்காது என்று கணித்திருக்கிறது. என்ன என்று தேடிய போது ஒரு புத்தகம் சிக்கியது அது ஆதாமின் சாபம் என்ற புத்தகம்.

அது என்ன Y குரோமோசொம்கள், எப்படி அவை ஆண்களை அழிக்க போகிறது என்று கேட்பவர்களுக்கு.

மனிதர்கள் அனைவருக்கும் மனித உடலை. உருவ அமைப்பை நிர்ணயிக்கும் 22 pairs குரோமோசொம்களும், 2 செக்ஸ் குரோமோசொம்களாலும் இருக்கும். ஆண்களுக்கு இவை X & Y வும்,  பெண்களுக்கு இது X & X ஆகவும் இருக்கும்.

File:HumanChromosomesChromomycinA3.jpg
குரோமோசொம்கள் செல்பிரிவின் போது




File:NHGRI human male karyotype.png
ஆண் குரோமோசொம்கள்.








பெண் குரோமோசோம்கள்.



மேலே உள்ள இரண்டு படத்தில் இருப்பது கார்யோடைப்பிங்(karyotyping) எனப்படும் முறையில் குரோமோசொம்களை வகைப்படுத்துவது.

குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆண்கள் தான் என்று இன்னும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் அப்பாவிடம் இருந்து வரும் விந்தணுக்களில் Y குரோமோசோம் இருப்பின் பிறக்க போகும் குழந்தை ஆண்குழந்தையாகவும், X இருப்பின் பெண்குழந்தையாகவும் இருக்கும்.

சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.
இந்த Y குரோமோசோம்களே, ஆண் உறுப்புகள், ஆண்களுக்கான ஹார்மோன்கள் அனைத்தையும் உண்டாக்கும் ஜீன்களை கொண்டிருக்கும்.இந்த Y குரோமோசோம்கள் படிப்படியாக தன்னிடம் இருக்கும்  ஜீன்களை இழந்து வருகிறது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் 1400 ஜீன்களை கொண்டிருந்த இந்த குரோமோசோம் இப்போது வெறும் 45 ஜீன்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது போன்ற ஜீன்களை இழக்கும் தன்மை யால் ஜீன்கள்  படிப்படியாக குறைந்து ஒரு சமயம் y குரோமோசோம் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வு. ஆனால் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் இந்த ஜீன் இழப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிந்தாலும் எந்த நேரமும் அது தொடரும் அபாயம் உள்ளது குறித்து  அறிய முடிகிறது.

சரி அப்போது ஆண்கள் இனமே இல்லாது போகுமா? என்ன ஆகும்? யாருக்கும் தெரியவில்லை.உண்மை நிலைமை இப்படி இருக்க ஆண் குழந்தை தான் உசத்தி என்று நினைத்து கொண்டு இந்தியாவில் நடக்கும் பெண் சிசுகொலைகளை என்னவென்று சொல்ல?


Friday, February 17, 2012

இரண்டு வருட பதிவுலக வாழ்க்கையும் விருதும்.

போன மாதமே இதனை எழுதி இருக்க வேண்டும். ஆனால், பதிவுலகில் இருந்து என்ன பெரிதாக சாதித்து விட்டோம் என்று நினைத்து இதனை எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனாலும், சென்ற வாரம் நான் படித்த இரண்டு பதிவுகளும், அவர்கள் உண்மைகள் அவர்கள் எனக்கு வழங்கிய விருதும், என்னை பற்றி சுயபரிசோதனை செய்ய தூண்டியதன் விளைவே இந்த பதிவு.

2008 இல் இருந்து பதிவுலகம் எனக்கு அறிமுகமானாலும் பதிவு எழுதுவது எப்படி என்பது குறித்தோ, திரட்டி குறித்தோ நான் அறிந்திருக்கவில்லை. வேலை பளு காரணமாகவும் எழுதுவது குறித்து நான் நினைக்கவும் இல்லை.

ஆனால் 2009 இல் முகுந்த் பிறந்தபிறகு நான் எடுத்த பேறுகால விடுமுறை எனக்கு நிறைய நேரம் தந்தது. அதுவரை ஓடி ஓடி பழக்கப்பட்ட எனக்கு நேரம் நிறைய இருந்தது போர் ஆகிவிட்டது. எதையாவது உருப்படியாக செய்யலாமே என்று ஆரம்பித்தது தான் வலைப்பூ. என் கணவரே வலைப்பூ ஆரம்பி என்று blogspot ஐ அறிமுகப்படுத்தினார்.

முதலில் எதனை எழுதுவது என்று தெரியாமல், நான் படித்த புத்தகம் பற்றியும், என்னுடைய அனுபவம் பற்றியும் எழுதி வைத்து பார்த்து கொண்டு இருந்தேன். முதன் முதலில் என் வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டமும் இட்டு, திரட்டி குறித்து அறிமுகப்படுத்தி அதில் பதிவை இணைக்க சொல்லி கூறியவர் தெகா அவர்களும், முத்துலெட்சுமி அவர்களும் தான்.

பதிவை தமிழ்மணத்தில் இணைத்த பின் மேலும் பலர் வந்து பார்த்து பின்னூட்டம் இட ஆரம்பித்ததும், blog bug ஆல் கடிக்கப்பட்டு இணையத்திற்கு நான் அடிமையானது நினைத்து இப்போது சிரிப்பு தான் வருகிறது. யார் பார்த்தார்கள், எப்போது எங்கிருந்து வந்தார்கள் என்று எப்போதும் கம்யூட்டரே கதி என்று ரெஃப்ரெஸ்ஷ் செய்து பார்த்திருக்கிறேன்.

இது ஒருவிதமான அடிக்‌ஷன் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வித ஆர்வத்தில் ஆரம்பிக்கும் இது போகப்போக வெறியாகி, ஹிட்டை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்று மனது யோசிக்க தொடங்கும். ஒரு நாளைக்கு ஒரு பதிவு, இரண்டு பதிவு என்று போட்டி போட்டுக்கொண்டு எழுத ஆரம்பித்து, உபயோகமான பதிவுகள் இல்லாமல், வெறும் மொக்கை பதிவுகள் போட ஆரம்பித்து விடும் அபாயம் உண்டு.

மன அமைதிக்காக பிளாக் என்பது போயி,  மன நிம்மதி கெடுவதற்குறி்ய ஒரு காரணியாக போய் விடும். நல்ல வேளை, இது ஒரு மாய உலகம் என்று நான் ஆரம்பத்திலேயே சுதாரித்து கொண்டேன். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டுமே பதிவிடுவது, பதிவுகளை பார்ப்பது என்று என்னை நானே சுருக்கி கொண்டுவிட்டேன்.

சென்ற ஆண்டு ஆரம்பத்தில் மறுபடியும் வேலைக்கு சேர்ந்தபிறகு என்னுடைய பதிவிடும் நேரமும் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடும் நேரமும் அதிகளவில் குறைந்து போய் விட்டன.

பெண்ணாக இருந்து குடும்ப வேலைகளுக்கு இடையே வீட்டு வேலைகள் ஒழிந்த நேரம் பதிவிடுவது என்பது மிக கடினம். அதுவும், வேலைக்கும் சென்று விட்டு வீட்டுவேலைகளும் செய்து விட்டு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் பதிவிடுவது மிக மிக கடினம். அதுவும் என்னை போல ஆராய்ச்சித்துறையில் இருப்பவர்களுக்கு நேரம் காலம் என்று வேலைக்கு இருப்பதில்லை. வரும் நோய்க்கு நேரம் காலமா தெரிய போகிறது. பல நேரங்களில் விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

அதனால், குடும்பத்தையும், வேலையையும் பாலன்ஸ் செய்வது என்பது மிக மிக கடினமாகி விட்ட நிலையில், பதிவிற்க்கு என்று நேரம் ஒதுக்குவது முடியாததாகி விட்டது. இந்த நிலையில், ஹிட் பற்றியோ, பின்னூட்டதிற்கு பதில் எழுதுவது பற்றியோ நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.

ஆயினும், இன்னும் பலர் என்னுடைய பதிவிற்கு வந்து படித்து ஊக்குவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் உளமார்ந்த நன்றி.

Liebster award கொடுத்த அவர்கள் உண்மைகள் அவர்களுக்கு என் நன்றி. இதனை என்னை போல இருக்கும் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

குறிப்பாக நான் மிகவும் மதிக்கும் இருவர்.

  1. அறிவியலில் பெண் ஆராய்ச்சியாளராக இருந்து கொண்டு குடும்பத்தையும் அற்புதமாக பாலன்ஸ் செய்யும் அன்னா தி அனலிஸ்ட் அவர்களுக்கும்
  2. மிக அருமையான தமிழால் நம்மை கட்டிப்போடும் அறிவியல் ஆசான் கையேடு ரஞ்ஜித் அவர்களுக்கும் அளிக்க விரும்புகிறேன்.


நன்றி.








Friday, February 3, 2012

கடவுளும், பரிணாமமும், மாலிகுகலர் பயாலஜியும்


2010 ஆம் வருடம் கிரேக் வெண்டர் அவர்கள் செயற்கை செல் உருவாக்கிய செய்தி வந்தது தான் தாமதம், பதிவுலகில் உள்ள நாத்திகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாருங்கள் செயற்கை செல் உண்டாக்கி விட்டனர் அறிவியலார், அதனால் கடவுள் என்ற ஒன்று இல்லாவே இல்லை என்ற விவாதம் ஆரம்பித்தனர்.

ஆத்திகர்களே விடுவேனா பார் என்று நாத்திகர்களுக்கு 'counter' கொடுப்பதாக நினைத்து வரிந்து கட்டி கொண்டு, பரிணாமம் என்ற ஒன்று இல்லாவே இல்லை,  கடவுள் இந்த உலகத்தை இத்தனையாவது நாள் இப்படி தான் படைத்தார் என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தனர்.

என்னை போன்ற ஆ/நாத்திகர்களே, ஆத்திகர்கள் பக்கமும் செல்ல முடியாமல் நாத்திகர்கள் பக்கமும் செல்ல முடியாமல், என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க ஆரம்பித்து விட்டோம்.

அதென்ன ஆ/நாத்திகர்கள், “நமக்கு மேலே ஒரு சக்தி இருந்து நம்மை ஆட்டுவிக்கிறது என்று நம்பும் அறிவியலார்கள்”.

சரி இதெல்லாம் இப்போது எதற்கு சொல்கிறேன் என்று கேட்பவர்களுக்கு.

சில நாட்களுக்கு முன்பு தமிழ் மணத்தை பல நாட்கள் இடைவேளைக்கு பிறகு திறக்க நேர்ந்தது..அதில் அதிக பதிவர்கள்  பரிந்துரைத்த இடுகை என்ற ஒரு இடுகை "Central Dogma" எனப்படும் மாலிகுலர் பயாலஜி அடிப்படை தத்துவத்தை கூறுவது என்று பறைசாற்றப்பட்டு கிட்டதட்ட 30க்கும் அதிகமானவர்கள் பரிந்துரைத்து இருந்தனர். அட, நம்ம சப்ஜெக்ட் ஆச்சே..நாமலே ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சதே..என்று..மிக மிக ஆர்வத்துடன் சென்று பார்த்தேன்..

படித்த சில நேரத்தில் அதில் கூறப்பட்டிருந்த அடுக்கடுக்கான அறிவியல் மற்றும் பரிணாமத்தை பற்றிய திரிபுகளை பார்த்த பிறகு பொறுக்க மாட்டாமல், சில கேள்விகளை எழுப்பிவிட்டு தயவு செய்து தவறான அறிவியலை போதிக்காதீர்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.

அதற்கான பதிலாக தன் கூற்றை நியாயப்படுத்தி தன் கட்டுரையில் உள்ள குற்றம் இருந்தால் காட்டும்மாறு சவால் விட்டு இருந்தார்.

பரிணாமம் என்பது என்ன? மனித பரிமாணம் மட்டுமே பரிணாமம் என்றழைக்கப்படுகிறதா?, வேறெந்த உயிரினமும் பரிணாமிக்காதா? என்ற சில கேள்விகளை எழுப்பி இருந்தேன்?...பதில் ஏதும் அங்கிருந்து வந்ததாக தெரியவில்லை.

முன்பே பரிணாமம் பற்றி தருமி அய்யா அவர்களும், தி அனலிஸ்ட் அவர்களும் அழகாக எழுதி இருக்கிறார்கள்.

அதனால், நான் இங்கு கூற இருப்பது எல்லாம் பரிணாமத்திற்கான சிறந்த உதாரணமாக இருக்கும் ஃப்லூ வைரஸ் பற்றியே.


அதென்ன ஃப்லூ வைரஸ், பறவைக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல், ஃப்லூ காய்ச்சல் என்ற வித விதமான காய்சல் பரப்பும் ஒரு சின்னச்சிறிய உயிரி அது.

ஒரு ஓவியரின் கைவண்ணத்தில் கீழே காட்டப்பட்டு இருப்பது தான் ஒரு ஃப்லூ வைரஸும் அதில் இருக்கும் ஜீன்களும்.


நமக்கெல்லாம் இருப்பது போலே ஆயிரக்கணக்கான ஜீன் களை ஃப்லூ வைரஸ் கொண்டிருக்கவில்லை. அவைகள் கொண்டிருப்பது மொத்தம் பன்னிரெண்டு ஜீன்கள் மட்டுமே..இந்த 12 ஜீன் களும் 'segmented genome' என்றழக்கப்படும் 8 கூறுகளாலான மரபுப்பொருள்களை உடைய பகுதிகளாக பிரிக்கபட்டு இருக்கும்.

வெறும் 12 ஜீன்களை கொண்டு எப்படி இத்தனை effective ஆக மக்களை அவர்களால் தாக்க முடிகிறது, வாழ முடிகிறது, ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் கிலி ஏற்படுத்த முடிகிறது என்றால்..அதற்கு ஒரே ஒரு காரணம் தான், வைரஸ் கிருமிகள், எப்படி திறமையாக வாழ்வது என்ற பரிணாம கொள்கையை நன்கு அறிந்து கொண்டிருக்கின்றன.
"survival of the fittest" என்றழைக்கப்படும் அந்த கொள்கையை எப்படி அவை பயன்படுத்துகின்றன என்று பார்ப்போம்.


ஏற்கனவே, ஃப்லூ வைரஸ் 8 கூறுகளையுடைய மரபுப்பொருள்களை கொண்டது என்றறிந்தோம், இந்த கூறுகளை permutation and combination முறையில் பலவாறு சேர்த்து, பிரித்து ஒழுங்குபடுத்தி எந்த கூறுகள் வாழ்வதற்கு தகுந்ததோ அவற்றை அழகாக இணைத்து கொள்கிறது ஃப்லூ.

உதாரணமாக கீழே கொடுக்கபட்டு இருக்கும் இரண்டு பிங்க் மற்றும் கிரீன் வைரஸ்கள் தங்களின் மரபுப்பொருள்களை எப்படி ஒழுங்குபடுத்தி அதிக ஆற்றல் கொண்ட ஃப்லூவை உருவாக்குகிறது பாருங்கள்.
Figure 1
ஃப்லூ நோய்வாய்பட்ட ஒருவரிடம் இருந்து எந்த நிமிடத்தில் வைரஸை நீங்கள் பிரித்தெடுத்தாலும், அவற்றில் கிட்டதட்ட 40% வைரஸ்கள், இப்படி ரீஅஸ்ஸார்ட்மெண்ட் செய்துகொண்டு மிக மிக வலிமையான வைரஸ் சந்ததிகளை உருவாக்கி இருக்கும்.

என்ன ஒரு திறமை பாருங்கள். 

இவ்வளவு இன்று போதும் என்று நினைக்கிறேன், பிறகொரு சமயம், மீண்டும் ஃப்லூ பற்றி பார்ப்போம்.

தற்போது..மீண்டும் ஆத்திக, நாத்திக சண்டைக்கு வருவோம்..

ஆத்திகர்களே..நீங்கள் கடவுள் என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறீர்கள், அதோடு விட்டுவிடுங்கள்..பரிணாமம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதெல்லாம் வேண்டாம்.

நாத்திகர்களே..பரிணாமம் உண்மை..ஆனால் தயவு செய்து பரிணாமத்திற்கும் கடவுளுக்கும் முடிச்சு போடவேண்டாம்.

நன்றி.

Thursday, February 2, 2012

ஒரு சீட்டுக்கு பத்து லட்சமும், நண்பன் படமும்

ஒரு சில நேரங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக தோன்றும் சில விசயங்களுக்குள்ளும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும், அப்படித்தான் எனக்கு நான் கேள்விப்பட்ட சில விசயங்களுக்கும் நான் பார்த்த நண்பன் படத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக தோன்றுகிறது.

முதலில் நான் கேள்விபட்ட சில விசயங்கள். சென்னையில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி சேர்க்க ஃபீஸ் குறைந்தது 2 லட்சம் அதிக பட்சம் 10 லட்சம் கேட்கிறார்கள். இது நான் அறிந்து கொண்ட அதிர்ச்சி தரும் செய்தி. எல்லா ஊர்களிளும் இது உண்மையா என்று யாராவது சொல்லுங்கள். இந்த ஃபீஸ் தவிர மாதாமாதம் டெர்ம் பீஸ், பஸ் பீஸ், ஹாஸ்டல் பீஸ்....இன்னும் நிறய இருக்கிறது. இதனை தவிர ஒரு குழந்தையை நீச்சல், கராத்தே போன்ற வேறு ஆக்டிவிடியில் சேர்த்து விட்டால் அதற்கு தனி ஃபீஸ். எல்லாவற்றையும் சேர்த்தால் எப்படியும் ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு 10 முதல் 15 ஆயிரம் வரை செலவாகும் போல. எப்படி ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தால் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை.

இத்தனை செலவு செய்து, அந்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, அதனை தவிர கராத்தேயில், பாட்டு கிளாசில்..என்று அடுக்கடுக்காக சேர்த்துவிட்டு அவை எல்லாவற்றிலும் அந்த குழந்தை முதலில் வரவேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறோம். இதற்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் பெற்றோரும் விதி விலக்கல்ல, இங்கு பள்ளிக்கு ஃபீஸ் இல்லை..ஆனாலும் இந்திய பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் இருக்க விடுவதில்லை குமோன், நீச்சல், கராத்தே, பியானோ, பாலே..என்று எண்ணற்ற கிளாஸ்களில் சேர்த்து விட்டு அவற்றில் எல்லாம் தங்கள் குழந்தைகள் முதலில் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். யாரும் குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள் என்று கேட்பதில்லை. இதனை ஒரு மைய கருத்தாக வைத்தே நண்பன் படம் வந்திருப்பது வரவேற்க்கப்பட வேண்டியது.


அடுத்த செய்தி, தற்போது இருக்கும் குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயதினரின் வாழும் வாழ்க்கைமுறை பற்றியது. சிறு வயதிலேயே, டி.வி, செல் போன், வீடியோ கேம், இன்டர்நெட்,ஃபேஸ்புக், டுவிட்டர்..எல்லாம் தெரிகிறது இவர்களுக்கு. முகமறியா நட்புகளே இவர்கள் அறிந்தது. வெளியில் சென்று விளையாடுவதை பல குழந்தைகள் அறிவதில்லை.

நண்பன் என்றால் யார்? உயிர் தோழன், தோழி என்றெல்லாம் நமது இலக்கியங்களில் சொல்லி இருக்கிறார்களே அப்படி என்றால் யார்?, என்ன செய்வார் என்று இன்றைய இளைஞர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்கள் சொல்வது இதுவாகத்தான் இருக்கும், “என் பெஸ்ட் ஃப்ரெண்ட் கூட மால் போனேன், அங்க கே.எஃப்.சி போனோம், தண்ணி அடிச்சேன், பைக்கில/காரில ஈ.சி.யாரில போனேன்..”என்று தான் நூற்றுக்கு தொண்ணூறு இளைஞர்கள் இன்று சொல்கிறார்கள். அதுவும் தண்ணி அடிப்பது என்பது இப்போதெல்லாம் டீ, காபி குடிப்பது போல சர்வ சாதாரணமாக சொல்லப்படுகிறது.

இப்படி செய்யிறவங்கெல்லாம் எங்க ஊரில இல்ல என்று சொல்லுபவர்களுக்கு..இது சென்னையில் மட்டும் நடப்பதல்ல..மதுரை, திருச்சி போன்ற ஊர்களிலும் இப்போது நடக்கிறது..
தோள் கொடுப்பான் தோழன் என்று சொல்வார்கள், நண்பன் படத்தில் காட்டபட்டு இருப்பது போல தன்னுடைய நண்பனை உயர்த்த எத்தனை பேர், தோள் கொடுக்கிறார்கள் இப்போது சொல்லுங்கள்.