Saturday, August 25, 2012

இந்திய தவளையும் ஆபிஸ் பாலிடிக்ஸும்!

ஊரில் ஒரு கதை உண்டு, அது சில தவளைகள் ஒரு கிணற்றுக்குள் மாட்டிகொண்டனவாம். அது மிகவும் வழுக்கல் நிறைந்த கிணறாம். அதிலிருந்து தப்பிக்க ஒரு தவளை முயற்சி செய்தாலும் அடுத்தடுத்த தவளைகள் காலை பிடித்து கீழே இழுக்குமாம்..இப்படி செய்து செய்து ஒரு தவளையும் மேலே வர முடியவில்லையாம்..

எதுக்கு இப்போது ஒன்னாம் வகுப்பு கதையை செல்கிறேன் என்றால், பொது இடங்களிலும் அலுவலகத்திலும் நான் சந்திக்கும் இந்தியாவை சேர்ந்த மனிதர்கள் எனக்கு இந்த தவளை கதையை அடிக்கடி நினைவுபடுத்துகிறார்கள்.

  • எதாவது உதவி என்று கேட்டால், அடுத்த நாட்டை சேர்ந்த மக்களுக்கு நம் நாட்டை சேர்ந்தவர்கள் விழுந்து விழுந்து உதவுவார்கள்,  நாம் சென்று கேட்டால் “எனக்கு தெரியாது” என்று சொல்லிவிட்டு போய் மேனேஜரிடம் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது போல சொல்லி விடுவதையே சிலர் தொழிலாக வைத்து இருக்கிறார்கள். மேனேஜருக்கு உண்மையாக நடந்துகிறார்ங்களாமாமாம்!!

  • இன்னும் சிலர் இருக்கிறார்கள்..அவர்கள் தானாகவே உதவி வந்து செய்வார்கள், நம்மை பற்றியும் நம் குடும்பத்தை பற்றியும் துருவி துருவி கேட்பார்கள்...அவர்கள் நம்பி எதாவது சொல்லிவிட்டோம்..தொலைந்தோம்...ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்காத குறையாய் எல்லோரிடமும் சொல்லிவிடுவார்கள்..அதில் ஒரு அற்ப சந்தோசம் அவர்களுக்கு...

  • இன்னும் சிலரோ...நண்பர்கள் போல பழகுவார்கள்...வேலை தெரியவில்லை என்று நம்மிடம் அடிக்கடி சந்தேகம் கேட்பது போல கேட்பார்கள்..நாமும் பாவப்பட்டு சொல்லி தருவோம்..ஆனால் எல்லாவற்றையும் நம்மிடமே கற்றுக்கொண்டு சில நாட்களில் நம்மையேஅதிகாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

  • இன்னும் சிலர்..வேலை ஒன்றுமே தெரியாது..ஆனாலும் எல்லா மீட்டிங்குகளிலும் அவர்கள் தவறாமல் இருப்பார்கள்..உலகத்தில் இருக்கும் அனைத்து டெக்னாலஜியும் தனக்கு தெரியும் என்பது போல தம்பட்டம் அடிப்பார்கள்..ஆனால் உண்மையில் நுனிப்புல் மட்டுமே மேய்பவர்கள் இவர்கள்...ஒரு வேலையையும் உருப்படியாக செய்ய தெரியாது..ஆனால் வேறு யாரோ செய்த வேலையை  தனது வேலை என்று சொல்லி கிரெடிட் வாங்கி கொள்வதில் சமர்த்தர்கள்..

மேலே நான் சொன்ன மனிதர்களை போன்றவர்கள்  சிலர் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பினும்...அவர்கள் இந்தியர்களாக இருப்பின் மற்றவர்களை எப்போதும் ஒரு பொறாமை நோக்குடனே பார்க்கிறார்கள்..
நாம் முன்னேறா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அடுத்தவர்களை முன்னேற விட கூடாது. இதுவே பல இந்தியர்களின் மன நிலையாக உள்ளது.  அது தான் ஏன் என்று எனக்கு விளங்கவில்லை!!