Thursday, July 30, 2015

அலுப்பும் நோய் தொற்றும் தொடர்புள்ளவையா?


இது குழந்தைகளிடம் அதிகம் காணலாம். உதாரணமாக, நீங்கள் அவர்களை வீட்டு பாடம் செய்ய சொல்லுகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உடனே அவர்களுக்கு அப்பொழுது தான் தலை வலிக்கும், உடல் வலிக்கும், தூக்கம் வரும் எல்லாமே செய்யும். அதே அவர்களை இதனை முடித்தால் நீங்கள் விளையாடலாம் அல்லது டிவி பார்க்கலாம் என்று சொல்லி பாருங்கள். உடனே, வேலை நடக்கும். அப்பொழுது அவர்கள் முதலில் உடல் வலிக்கிறது, தலை வலிக்கிறது என்று  பொய் சொன்னார்களா? யோசித்து வையுங்கள். 

இதே கேள்வியை உங்களிடமும் கேக்கிறேன். ஒரு நாள் ஆபிசில் இருந்து பயங்கர சோர்வாக வீட்டுக்கு வருகிறீர்கள். உங்களுக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது. அப்பொழுது உங்கள் நீண்ட கால நெருங்கிய நண்பர் போன் பேசுகிறார் அல்லது வீட்டுக்கு வருகிறார் என்று வைத்து கொள்ளுவோம். உடனே, அவரிடம் கல கல வென்று பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். பழைய நினைவுகளை எல்லாம் அசை போடுகிறீர்கள். சிறிது நேரத்தில் உங்கள் சோர்வு மறைந்து விடுகிறது. அப்பொழுது முதலில் உங்களுக்கு இருந்த  சோர்வு பொய்யா? 

வேறு ஒரு சூழல் சொல்கிறேன்.  உங்களுக்கு பிடிக்காத மீட்டிங் ஆனால் நீங்கள் போயே ஆக வேண்டும். வேண்டா வெறுப்பாக பொய் உக்கார்ந்து இருக்கிறீர்கள். அப்பொழுது பார்த்து எங்கிருந்து தான் உங்களுக்கு கொட்டாவி வருமோ தெரியாது. தொடர்ந்து வந்து அனைவரும் உங்களை திரும்பி பார்க்கும் வரை தொடரும். தொடர்ந்து தலைவலியும் கொண்டு வந்து விடும். அதே நேரம்  வெளியில் வந்து கொஞ்ச நேரம் நடந்தாலோ அல்லது இசை கேட்டாலோ அல்லது நண்பர்களுடன் பேசினாலோ கொட்டாவி, தலைவலி எல்லாம் போய் விடுகிறது. எப்படி?

மேலே சொன்ன உதாரணங்களில், ஒருவரின் மனநிலை அவரின் உடல்நிலையை பாதிக்கிறது. மருத்துவத்தில் நியூரோஇம்யுனாலாஜி என்று ஒரு துறை இருக்கிறது அதில் நரம்பு மண்டலம் நம் உடல் நிலையை, எதிர்ப்பு சக்தியை எப்படி பாதிக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். உதாரணமாக, உங்களின் மூட், தூக்கம் நடவடிக்கை பொறுத்து உங்களின் உடம்பில் இருக்கும் cytokine எனப்படும் செய்தி எடுத்து செல்லும் மேச்சென்ஜெர் மாலிகுல்கல் பாதிக்க படுகின்றன அல்லது தூண்டப்படுகின்றன என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இவை பொதுவாக தலையில் காயம் ஏற்படும் போது , வைரல் அல்லது பாக்டீரியல் தாக்குதலின் போது பாதிக்கப்படும் மேச்சென்ஜெர்கள் ஆகும் (1). இதே போன்ற cytokine மற்றும்  chemokine போன்றவை நரம்பு மண்டலத்தில் செய்தி கடத்தும் மாலிகுல்கலை எப்படி பாதிக்கிறது என்று அறியப்பட்டு இருக்கிறது (2)

தொடர்ந்த மன அழுத்திற்கும் , அதிக வைரல் தொற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விலங்குகளில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. விலங்குகளை, அதிக மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது  glucocorticoid அளவு அதிகமாகி, streptococcal எனப்படும் தோல் தொற்று அதிகமாவது நிரூபிக்க பட்டு இருக்கிறது (3).

இவை என்ன தெரிவிகின்றன என்றால்,  உங்கள் குழந்தைகளிடம் வீட்டுபாடம் செய்ய சொல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் அலுப்புகள் அவர்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து அவர்களுக்கு தலை வலியை கொடுக்கலாம். அதனால் அவர்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.

அதனால், எப்பொழுது பார்த்தாலும் படி, வீட்டுபாடம்  செய், இல்லை அதனை செய் இதனை செய் என்று நீங்கள் நடத்தினீர்கள் அல்லது வேலை கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் மன அழுத்தம் அதிகமாகி உடல் நிலை சரியில்லாமல் போக நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனால் எப்பொழுது பார்த்தாலும் படி படி என்று அவர்களை படுத்தாமல், அவர்களுக்கு மன சந்தோசம் தரும் விசயங்களையும் செய்ய கொடுங்கள், நிறைய விளையாடவும் நேரம் கொடுங்கள். அப்பொழுது தான் அவர்கள் சந்தோசமாக நோய் தொற்று இன்றியும்  இருப்பார்.

நன்றி.

References 
1) http://grants.nih.gov/grants/guide/pa-files/pa-05-054.html
2) Kipnis J, Derecki NC, Yang C, Scrable H (October 2008). "Immunity and cognition: what do age-related dementia, HIV-dementia and 'chemo-brain' have in common?". Trends Immunol. 29 (10): 455–63
3) Kawli, Trupti; He, Fanglian; Tan, Man-Wah (2010-01-01).It takes nerves to fight infections: insights on neuro-immune interactions from C. elegans. Disease Models & Mechanisms 3 (11-12): 721–731.

Tuesday, July 28, 2015

படித்தது, பார்த்தது, வருந்தியது!

படித்தது 

ராபர்ட் கிரீன் என்னுடைய பிடித்த எழுத்தாளர்கள் லிஸ்டில் இருப்பவர். இவரின் 48 Laws of Power மற்றும் Mastery இரண்டும் ஒவ்வொரு வரியும் அடிக்கோடிட்டு படித்து இருக்கிறேன். எப்பொழுதெல்லாம் ஆபிஸ் விசயங்களில் நிறைய டிப்ஸ், எப்படி பிரச்சனைகளை சமாளிப்பது என்பதெல்லாம் அறிய நான் ரெபர் செய்வது இவரின் புத்தகங்களாக தான் இருக்கும். பவர் அல்லது கண்ட்ரோல் நம்மிடம் இருந்து விலகுவது போன்று தோன்றும் போதோ அல்லது பவர் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு நான் ரெபர் செய்வது இவரின் இந்த புத்தகங்களாக தான் இருக்கும்.


இவரின் இன்னொரு புத்தகம் "The art of Seduction" நான் படித்திருக்க வில்லை. ஏனெனில் Seduction என்பது பாலியல் சார்ந்தது என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் என் என்னுடைய என்னத்தை மாற்றி கொள்ள உதவி இருக்கின்றனர். ஏனெனில் கவர்ந்து இழுக்க கூடிய, மக்களை மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர் போல கட்டிபோடகூடிய பேச்சாற்றல் அல்லது ப்ரெசென்ஸ், கவர்ந்து இழுக்க கூடிய தன்மை ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களிடம் இருந்து இருக்கிறது.  சொல்ல போனால் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆரம்ப கால பேச்சுக்கள் கேட்டால் அவர்  எப்பொழுதும் கவர்ந்து இழுக்கக்கூடிய பேச்சாளராக இருந்ததில்லை என்று புரியும் . பின்னர் எப்படி இவர்களால் கவர்ந்து இழுக்க கூடியவர்களாக மாற முடிந்தது என்று நினைத்து இருக்கிறேன்.  ஆனால் "The art of Seduction" புத்தகம் நம் அனைவருக்குள்ளும் இருக்கும் ஸ்டேஜ் ப்ரெசென்சை எப்படி உபயோகிப்பது என்று நிறைய டிப்ஸ் கொடுகிறது.  

புத்தகத்தின் துவக்கத்தில் வரலாற்றில் இருந்த சிறந்த seducers ஆன கிளியோபாட்ரா, ஜோசபின் போன்றோர் பற்றி குறிப்பிடும்  ஆசிரியர், தற்பொழுது எப்படி seducing அரசியலில் உபயோகிக்கபடுகிறது என்று வரை குறிப்பிடுகிறார்.  


பார்த்தது 

இந்த புக்கை படிக்க ஆரம்பித்து சில நாட்களுக்கு பிறகு  இளவரசி டயானா அவர்களின் பிரபலமான 1995  தொலைக்காட்சி பேட்டி ஒன்று தற்செயலாக காண நேர்ந்தது.



அதில் அவர் அவரின் கணவருக்கும், கணவரின் தற்போதைய மனைவி கமிலாவுக்கும் இருந்த தொடர்பு பற்றியும் குறிப்பிட்டதை காண நேர்ந்தது. இதை பார்த்தவுடன் எனக்கு "The art of Seduction" புக்கில் இருந்த முதல் சாப்ட்டர் "தி சைரென்" ஞாபகத்திற்கு வந்தது.

இளவரசி டயானா மிக அழகானவர், கல்யாணம் ஆன போது  உலகமே அவர்களை வியந்து பார்த்தது. இளவரசரோ எல்லாம் தன் வழியில் நடக்க வேண்டும் என்று வளர்க்கப்பட்ட "Spoiled Brat". உலகமே வியந்து பாராட்டிய ஒரு அழகு கொண்டவர் டயானா. இப்படி அழகு சிலை வாய்க்கப்பட்ட அவரோ உலகின் மிக சிறந்த லக்கி தான் என்று சந்தோசம் பற்றிருக்க வேண்டும். மாறாக திருமணதிற்கு முதலில் தொடர்பில் இருந்த தன் காதலியுடன், தற்பொழுது வேறொருவர் மனைவியாக இருப்பவரிடம்  மீண்டும் உறவை புதுப்பித்து கொண்டு வாழ்ந்து இருக்கிறார். இத்தனைக்கும் கமிலா, டயானாவின் அழகிற்கு சிறிதும் அருகில் வர முடியாது. ஆயினும் எப்படி சார்லஸ் போன்ற இளவரசரை கவர அவரால் முடிந்தது.

கமிலாவிடம் ஒரு நல்ல திறமை இருந்து இருக்கிறது, அது கவர்ந்து இழுக்க கூடிய ஒரு திறன். நல்ல பேச்சு திறமை. நிறைய விசயங்களில் அறிவு என்று ஒவ்வொரு நாளும் ஒரு புதிராக இருந்து இருக்கிறார். எல்லாரும் இளவரசரை கண்டு பயப்பட, இவரோ அவருக்கு சரி சமமாக இருந்து பேச, சவால் விட கூடியவராக இருந்து இருக்கிறார். அதுவரை பெண்கள் என்றால் இப்படி தான் இருக்கவேண்டும் என்று பார்த்து பழக்கப்பட்ட இளவரசர், தன்னை சவால் விடக்கூடிய தன்னை ஒவ்வொரு நாளும் புது புது விஷயங்களில் யோசிக்க வைத்த கமிலா இளவரசரை கவர்ந்து இருக்கிறார். இது ஒரு seductive குணம். அது நன்கு கைவர பட்டவராக இருந்து இருக்கிறார் கமிலா.

இன்னொரு விஷயம் அவருக்கும் டயானாவுக்கும் இருந்த வித்தியாசம். கமிலா, சார்லஸ் ஐ எப்பொழுதும் ஓவர்ஷடோ செய்யவில்லை, அதாவது, சார்லசின் புகழை தன் அழகு அல்லது மீடியா பார்வை கொண்டு தன் பக்கம் திருப்பவில்லை. எப்பொழுதும் தான் சார்லஸ்சின் பின்னால் என்று இருந்து இருக்கிறார். டயானா, தான் விரும்பவில்லை என்றாலும் மீடியாக்களுக்கு அந்த நாட்களில் நல்ல தீனி போட்டு இருக்கிறார். பத்திரிக்கை, டிவி என்று சகலமும் அவரை நன்கு கவர் செய்து இருக்கின்றன. இது பிரபலமாக இருந்ததற்கு அவர் கொடுத்த பரிசு.

தற்போது 10 வருடமாக தன் பழைய காதலியை  திருமணம் முடித்து சந்தோசமாக இருக்கிறார்கள்.


வருந்தியது

கடந்த இரண்டு நாட்களாக, எங்கு திரும்பினாலும் கலாம், கலாம் தான். Blog, FB, Whatsapp என்று அனைத்திலும் நிறைந்து இருந்தார் கலாம் அவர்கள். வழக்கமாக கலாய்க்கும், மொக்கை போடும்  என் தோழிகள் அனைவரும் நேற்று மிக வருத்தத்தில் இருந்தனர்.  என் அண்ணனிடம் இந்தியாவிற்கு பேசும்போது  கூட கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவரை பற்றியே பேசி கொண்டு இருந்தார்கள். பொது விடுமுறை அறிவித்து இருப்பாதாக சொன்னார்.  அந்த அளவிற்கு நிறைய சாதாரண மனிதர்களின் உணர்வுகளை அவர் எப்படி கவர்ந்து  இருக்கிறார் என்று அறியும் போது ஆச்சரியமாக இருந்தது. சாதாரண மனிதராக இருந்து, உழைப்பால் உயர்ந்த கலாம் அவர்களும் மக்களை எப்படி உழைப்பால், தன்னம்பிக்கையால் கவரலாம் என்பதற்கு ஒரு உதாரணம்.

நன்றி.


Monday, July 27, 2015

இந்திய தற்பெருமையும் வீம்பும்

பொதுவாக இங்கிருக்கும் இந்தியர்களிடம்  மொழி, மாநில வித்தியாசம் இன்றி ஒரு விஷயம் செய்வதை பார்த்து இருக்கிறேன். அது, தன் மொழியை பற்றி, மாநிலத்தை பற்றி, இந்திய கலாச்சாரம் பற்றி  அல்லது தன்னை பற்றி எப்பொழுது நேரம் கிடக்கிறதோ அப்பொழுது எல்லாம் அமெரிக்கர்களிடம் பேசுவார்கள். எந்த ஒரு நிகழ்விற்கும் "Back in India/Back home " என்று ஆரம்பிப்பார்கள். பின்னர் குறைந்தது 10-20 நிமிஷம் அவர்களின் பிரசங்கம் கேட்க வேண்டும். முடிவாக அவர்கள் சொல்ல விளைவது என்னவென்றால் "எங்கள் நாடு, மொழி, இனம் எவ்வளவு சிறந்தது. என்பதை தாண்டி, நான் எவ்வளவு உயர்ந்தவன் தெரியுமா? என்று பறை சாற்றவோ" என்று தோன்றும்.

இந்தியாவில் இருக்கின்றோம் என்றால், வேறு மொழி மக்களை சந்திக்கும் போது  "Back in our town" என்று ஆரம்பிப்பார்கள். தன் மொழி எவ்வளவு சிறந்தது தெரியுமா என்று பேசுவதை நிறைய கண்டு இருக்கிறேன்.

இன்னும் ஒரு சிலரை சந்தித்து இருக்கிறேன், கொஞ்ச நேரத்தில் தன் சாதி பற்றி பேச ஆரம்பித்து இருப்பார்கள். நாம் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளுவதில் மிக தீவிரமாக இருப்பார்கள். அது தெரிந்து விட்டது என்றால் உடனே எப்படியாவது தங்கள் சாதி எப்படி சிறந்தது என்று குறிப்பிட விளைவதை கண்டு இருக்கிறேன். அதுவும் ஒரு சில சாதி மக்கள், நாம் அவர்கள் சாதியை சார்ந்தவர்கள் அல்லர் என்று தெரிந்ததுமே, நம்மிடம் நன்றாக பழகி கொண்டு இருந்தவர்கள் பிறகு விலக ஆரம்பிப்பார்கள். எனக்கு இவர்களை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும்.

இன்னும் சிலரை சந்தித்து இருக்கிறேன், நமக்கு தெரிந்தவர்களாக  சிறு வயது நண்பர்களாக  இருப்பார்கள், நெடு நாள் கழித்து சந்தித்து  இருப்போம், ஆனால் அவர்களும் எதோ ஒரு வகையில் தன்னை பற்றி "Boasting/Bragging" செய்ய ஆரம்பிப்பார்கள். அது தன்  ஊர், கார், சொத்து அல்லது பற்றி ஏதாவது ஒன்று இருக்கும்.

முன்பு எல்லாம் இப்படி தற்பெருமை பேசுபவர்களை பார்க்க கோவமாக வரும்..எப்பொழுது எல்லாம் வருவதே இல்லை. அதற்க்கு பதில் எனக்கு "வடிவேலுவின் துபாய் காமெடி" ஞாபகத்திற்கு வரும்"





அடுத்து, ஒரு சில மக்கள் இருக்கிறார்கள், இது பெரும்பாலும் 1930-1960 வரை பிறந்த தலைமுறையினரிடம் பார்க்கலாம். இவர்கள் எப்படி என்றால், தனக்கு ஏதாவது வேண்டும் என்றால் வாயை திறந்து கேட்க்க மாட்டார்கள். மாறாக, வீட்டில் இருப்பவர்கள் அவர்கள் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை தானாக முன் வந்து செய்யவேண்டும் என்று நினப்பார்கள். அப்படி நாமாக முன் வந்து வேண்டுமா என்று கேட்டாலும் உடனே வேண்டும் என்று ஒத்து கொள்ள  மாட்டார்கள். நாம் இரண்டு மூன்று முறை தாங்க வேண்டும் என்று படுத்துவார்கள். அப்படி அவர்களை தாங்க வில்லை என்றால் தனக்கு மரியாதை கொடுக்க வில்லை என்று நினைத்துகொள்ளுவார்கள்.அதாவது வெட்டி வீம்பு பிடிப்பது. அதுவும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பிடிப்பது.

இவர்களை பற்றி அறிந்து இருந்த இடை தலைமுறையான 1960-1990 வரை தலைமுறை, ஓரளவு புரிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் வாயை திறந்து கேட்காமல் செய்வதை பார்த்து இருக்கிறேன். அதே போல திரும்ப திரும்ப தாங்குவதையும் பார்த்து இருக்கிறேன்.

ஆனால், 1990 க்கு பிறகு பிறந்த தலைமுறை குழந்தைகள் பலர் very straight forward. பெரியவர்களாக இருப்பவர்கள் வாய் திறந்து கேட்காவிட்டால் இவர்களும் செய்வதில்லை. அப்படியே இவர்கள் கேட்டுபெரியவர்கள்  முதல் முறை வேண்டாம் என்று சொன்னலோ அடுத்த முறை கேட்பதில்லை, தாங்குவதில்லை.

அதுவும் இங்கே புது யுகத்தில் 2000க்கு பிறகு  பிறந்த குழந்தைகள்  இந்த விசயத்தில் மிக மிக straight forward. நாம் திரும்ப கேளு என்று சொன்னாலும் "அவர்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள், எதற்கு அவர்களை கம்பெல் செய்ய சொல்லுகிறாய்?" என்று பதில் கேள்வி கேட்கிறார்கள். இந்த தலை முறை வித்தியாசத்தால் நிறைய மனத்தாங்கல்கள், இடை தலைமுறையான நாம் பல நேரங்களில் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டி வருகிறது.

மேலே நான் குறிப்பிட்ட இரண்டு குணங்களும் இந்தியர்களுக்கே உரித்தானதா? அல்லது வேறு இன மக்களிடமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை, எனக்கு தெரிந்த நண்பர்கள் வரை, வேறு யாரிடமும்இந்த இரு குணங்களை பார்த்ததில்லை.உங்களுக்கு வேறு கருத்துகள் இருப்பின், தெரிவியுங்கள்.


நன்றி.

Friday, July 24, 2015

ஸ்டீவ் ஜாப்ஸ்ம் கவர்ச்சியான பேச்சாளர்களும்

என்னது ஸ்டீவ் ஜாப்ஸ் கவர்ச்சியா என்று கேட்பவர்களுக்கு?

எத்தனையோ பேர் மேடையில் பேசுகிறார்கள்,  கட்சி கூட்டங்களில் முழங்குகிறார்கள் அல்லது பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், கருத்தரங்குகள் என்று அனைத்திலும் பேசுவார்கள். ஆனால் அப்படி பேசுபவர்களில் ஒரு சிலர் பேச்சு மட்டுமே நம்மை கவர்ந்து இழுக்கும். திரும்ப திரும்ப அவர் பேச மாட்டாரா என்று நினைக்க வைக்கும். இப்படி பேச்சால் கவர்ந்து இழுக்க வைக்க தெரிந்தவர்கள் மிக சிறந்த அரசியல் தலைவர்கள் ஆகி இருக்கிறார்கள்.

காந்தி, மார்டின் லூதர் கிங், ஹிட்லர், மண்டேலா, பிடெல் காஸ்ட்ரோ...என்று சொல்லி கொண்டே போகலாம். வேறு எங்கும் செல்ல வேண்டாம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வும் மிக சிறந்த பேச்சாளர். கரிஸ்மாடிக்/ கவர்ச்சியான பேச்சாளர்.

அதே போல தற்போது விசுவல் மீடியாவில் இருக்கும் பலரும் சிறந்த VJ/RJ ஆவதில்லை. மாறாக, நன்றாக பேச தெரிந்த, ப்ரெசென்ட் செய்ய தெரிந்த ஒரு சிலரே நன்றாக சோபிக்க முடிகிறது.

ஆபிஸ்களில் பப்ளிக் ஸ்பீகிங் என்று "டோஸ்ட் மாஸ்டர்" போன்ற கோர்ஸ்கள் நடத்துகிறார்கள். அதில் அவர்கள் சொல்லி கொடுக்கும் சில விசயங்கள் எப்படி பார்வையாளர்களை பேச்சால் கவர்ந்து இழுப்பது. எப்படி நீங்கள் பேசவேண்டும், உங்கள் உடல் மொழி எப்படி இருக்க வேண்டும், எப்படி பார்வையாளர்களையும் பேச்சுடன் இன்வோல்வ் செய்யவேண்டும் என்று நிறைய சொல்லி தருகிறார்கள்.

எல்லாரும் நல்ல பேச்சாளராக, பார்வையாளர்களை கட்டி போடுபவராக முடியாது, அதற்க்கு ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ், ஸ்மார்ட் நெஸ் இருக்க வேண்டும். எனக்கு தெரிந்த பலர் சப்ஜெக்ட்டில் புலியாக இருப்பார்கள். ஆனால் அவர்களால் கருத்தரங்குகளில் பேச முடியாது அல்லது பேசினாலும் சப்ஜெக்டில் உள் நுழைந்து மூலை முடுக்கு எல்லாம் பேசுவார்கள் ஆனால், ஒரு சாதாரண மனிதருக்கு புரியும் படி பேச மாட்டார்கள்.

பலர் அரசியல் தலைவர் ஆக மாறுவதற்கு முன் எப்படி பேசுவது என்று கோச்சிங் எடுத்து கொள்ளுவார்கள். அதே போல விசுவல் மீடியாவில் இருப்பவர்களுக்கும்  அதற்கென்று கோர்ஸ்கள் உண்டு.

ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு அரசியல் தலைவரோ அல்லது மீடியா ஆளோ அல்ல, இருப்பினும் அவரின் ஒரு உரை இன்றளவும் பல கல்லூரி, பள்ளிகளில் மற்றும் தன்னம்பிக்கை கோர்ஸ்களில் காட்டபடுகிறது  ஒரு புகழ் பெற்ற கம்பெனி நிறுவனர், உலகை திரும்பி பார்க்க வைத்தவர், அவர் கவர்ந்து இழுக்க கூடிய பேச்சாளராகவும்  நான் பார்த்தது ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களை தான்.


ஸ்டீவ் ஜாப்ஸ் யார் என்று தெரியாதவர்களுக்கு.

இன்று உலகமெங்கும் மூலை முடுக்குகள் அனைத்திலும் ஆக்கிரமித்து இருக்கும் ஆப்பிள் Mac  கம்ப்யூட்டர்கள் , Ipad, Iphone, Ipod  என்று சகலமும் இவரின் உழைப்பில் வந்தவை. ஆப்பிள் கம்பெனியை உருவாக்கியவர்.


சாவதற்கு முன் வாழ்வது எப்படி--ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் 2005 உரை 

என்னை மிகவும் கவர்ந்த மனிதர் இவர். அவரின் சுயசரிதை படித்து இருக்கிறேன். சாவதற்கு முன் வாழ்வது எப்படி என்ற 2005 ஸ்டான்போர்ட் பல்கலைகழக உரை என்னை மிகவும் உலுக்கிய ஒன்று. அதில் அவர் குறிப்பிட்ட சில துவக்க கால போராட்டங்கள் மிகவும் தன்னம்பிக்கை தந்தது. கணைய கான்செர் வந்து, ஆபரேஷன் செய்து ஒரு வருடம் கழித்து அவர் நிகழ்த்திய உரை இது. 2011 அக்டோபரில் கான்செர் அவர் உயிரை பறித்து விட்டது என்றாலும். இன்று வரை அவரின் கரிஸ்மா/கவர்ச்சி/ப்ரெசென்ஸ் எல்லாம் மறக்க முடியாதவை.




அவரின் இந்த உரையில் என்னை கவர்ந்த சில பகுதிகள் .

'நம் வாழ்கையில் பல நேரங்களில் ஒரு சில விஷயங்கள் நடக்கும். அப்பொழுது நமக்கு என் இப்படி நடக்கிறது என்று புரியாது. உதாரணமாக,  கல்லூரிக்கு படிக்க என் பெற்றோர் அனுப்பினார். ஆனால் நானோ, கல்லூரியை கட் அடித்து விட்டு, காளிக்ரபி  எனப்படும் எழுத்துருக்கள் மாற்றியமைக்கும், புதிய வடிவில் வடிவமைக்கும் கோர்ஸ் சென்று படித்தேன். அப்பொழுது எனக்கு எப்படியாவது கல்லூரியை கட் அடிக்க, என்று நான் நினைத்து பன்க்கு செய்ய நினைத்த காரியம், பின்னாளில் ஆப்பிள் கம்ப்யூட்டர் வடிவமைக்கும் போது எனக்கு, ஆப்பிள்க்கு  என்று புதிய எழுத்துருக்கள் வடிவமைக்க நான் படித்த அந்த கோர்ஸ் உதவியது."

"அதே போல, நான் உருவாக்கிய கம்பெனியில் இருந்து நான் நீக்கப்பட்டேன், சில மாதங்கள் பைத்தியம் பிடித்தவன் போல அலைந்த நான்..சாதிக்க வேண்டும், நிருபிக்க வேண்டும் என்ற உந்துதலில் புதிய கம்பெனி ஆரம்பித்தேன். கிராபிக் டிசைன் கம்பெனி pixar உருவானது..அதுவே என்னை மறுபடியும் ஆப்பிளுக்கு உள்ளே என்னை இழுத்தது. இன்று வரை Pixar மிக பெரிய குழந்தைகள் விரும்பும் அனிமேஷன் படம் உருவாக்கும் கம்பெனி ஆக இருக்கிறது. அப்பொழுது தான் என் வருங்கால மனைவியை சந்தித்தேன். இன்று வரை சந்தோசமாக வாழ்கை சென்று கொண்டு இருக்கிறது. ஒரு வேளை நான் ஆப்பிளில் இருந்து நீக்க படாமல் இருந்து இருந்தால்
Pixar  உருவாகி இருக்காது, அதே போல என் மனைவியையும் சந்தித்து இருக்க மாட்டேன். அது நடந்த போது எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று காரணம் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது புரிகிறது."

 "நான் கூற விரும்பும் மூன்றாவது கதை மரணத்தை பற்றியது. என் பதினேழு வயதில் நான் கற்றது இது தான். "இன்று தான் உன் வாழ்கையில் கடைசி நாள் என்று ஒவ்வொரு நாளும் நினைத்து வாழ்ந்தால், எதோ ஒரு நாள் அது உண்மையாக நடக்கும்" என்பது. அது என்னுள் ஒரு மாற்றத்தை உருவாகியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் நான் கண்ணாடி முன் நின்று "இன்று உன் வாழ்கையின் முடிவு நாள் என்றால், நீ இன்று செய்ய விளைவதை  செய்ய நினைப்பாயா?" என்று என்னை நானே கேட்டு கொள்ளுவேன். தொடர்ந்து பல நாட்களுக்கு என் பதில் "இல்லை" என்று வந்தால் நான் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் என்று அர்த்தம். உடனே என் செயலை மாற்ற முயற்சிப்பேன்"

இப்படி நிறைய நியர் டெத் அனுபவங்கள் பற்றி குறிப்பிடும் அவர், முடிவாக முடிப்பது இது தான்.
"Stay Hungry, Stay foolish" . அதாவது, வள்ளலார் அவர்கள் குறிபிட்டது போல "தனித்திரு, விழித்திரு, பசித்திரு". மனதை திறந்த மனதுடன் வைத்து கொண்டு தினமும் தேடி கொண்டு இரு. எப்பொழுதும் தான் ஒரு முட்டாள் என்று நினைத்து புது புது விஷயங்களாய் கற்று கொண்டிரு.  எல்லரோரையும் போல ஒரே மாதிரி யோசிக்காமல் வித்தியாசமாக யோசி..

என்ன ஒரு வரிகள் இவை எல்லாம். என்னை மிகவும்  கட்டி போட்ட ஒரு உரை அது. என்னை பொருத்தவரை, ஒரு பெரிய நிறுவனர் இப்படி கவர்சிகரமான பேச்சாளராகவும் இருந்தது, ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே.

நன்றி.

Wednesday, July 22, 2015

இந்திய பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய 5 குணங்கள்

சேத்தன் பகத் - இந்தியர்களுக்கு அந்நியமானவர் அல்ல. இவரின் சில நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு இருக்கின்றன. இவரின் five point someone, இந்தியில் "3 இடியட்ஸ்" ஆகி பின்னர் தமிழ் "நண்பன்" ஆனது. இவரின் இன்னொரு நாவலும் 2 states என்ற இந்தி படமாக எடுக்கப்பட்டது. இவர் தன்னுடைய தளத்தில் , இந்திய பெண்கள் மாற்றி கொள்ளவேண்டிய 5 குணங்கள் என்ற கட்டுரை வசிக்க நேர்ந்தது. அவரின் சில கருத்துகள் என்னுடைய தற்போதைய இந்திய பயணத்தில் நான் சந்தித்த சில பெண்களுடன் பொருந்தி போனதால் இங்கே பகிரலாம் என்ற எண்ணத்தில் உண்டான பதிவு இது.

அவர் சொல்லும் சில மாற்றப்பட  வேண்டிய குணங்களும் என்னுடைய அனுபவங்கள் சிலவும் இங்கே.

1. பெண்களான நீங்கள் முதலில் மற்ற பெண்களுடன் பழகாமல் அவர்களை பற்றி முழுதும் தெரிந்து கொள்ளாமல், அவர்களை பற்றிய அரைகுறை அறிவுடன், பார்த்தவுடன் எடை போடாதீர்கள்.  உதாரணமாக ஒரு பொது இடத்தில் இருக்கிறீர்கள் அப்பொழுது ஒரு எடை கூடிய பெண் அங்கே வருகிறார் என்றால் உடனே அவளை பற்றி கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் "அங்க பாரு யானை குட்டி மாறி இருக்கா பாரு என்று தங்களுக்குள் கமெண்ட் அடிப்பது". ஒரு பெண் சகஜமாக ஆண்களுடன் பேசினால் அல்லது தன்னம்பிக்கையுடன் நடந்தால் உடனே அவளை "நடத்தை கெட்டவள், ஆம்பளைகளை பார்த்து சைட் அடிக்கிறவள், வழிகிறவள்" என்று முத்திரை குத்துவது.   கொஞ்சம் அழகாக இருந்தால் அல்லது நன்றாக டிரஸ் பண்ண தெரிந்தவள் என்றால் உடனே "எப்படி அலப்புற பாரு" என்று கமெண்ட் அடிப்பது.போன்று பேசுவதை  நினைப்பதை முதலில் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் ஆயிரகணக்கான குறைகளை பற்றி கவலை படாமல், உங்கள்  முதுகில் இருக்கும் அழுக்கை பற்றி கவலை படாமல் அடுத்தவர்களை இப்படி எடை போடுவது எந்த வகை நியாயம். நீங்கள் அடுத்தவர்களை குறை சொன்னால் உங்களை பற்றி குறை சொல்ல ஆயிரம் பேர் இருப்பார்கள் என்பதை எப்பொழுதும் நினைத்து கொள்ளுங்கள்.

2. தங்களுக்கு என்று எந்த சுயமும் அல்லாமல் எந்த குறிக்கோளும் வைத்து கொள்ளாமல் குடும்பத்திற்காக தியாகம் செய்கிறேன் பேர்வழி அல்லது குடும்பத்தை பார்த்து கொள்ளுகிறேன் பேர்வழி என்று சொல்லி கொண்டு வீட்டில் உக்கார்ந்து கொண்டு டிவி மேலே டிவி பார்த்து கொண்டு இருப்பது. இப்படி சொல்லுவதற்கு மன்னிக்கவும். ஆனால் இப்பொழுது இருக்கும் முக்கால் வாசி பெண்கள் வீட்டில் உக்கார்ந்து கொண்டு டிவி பார்த்து கொண்டு நடத்தும் டிராமா சொல்லி மாளாது. நிறைய திறமைகள் கொண்ட பல பெண்களும் தற்போது இந்த நிலையில் தன்னை சுருக்கி கொண்டு இருப்பதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது.

 இந்த ஒரு நிலை அமெரிக்கா  வந்த இந்திய பெண்களிடமும் நிறைய பார்கிறேன். நிறைய பெண்கள் டிரைவிங் லைசென்ஸ் போன்ற அத்தியாவசிய ஒன்றை கூட எடுத்து கொள்ளுவதில்லை. எல்லாவற்றிக்கும் தன் கணவரை சார்ந்து இருப்பார்கள். ஆனால் பார்ட்டி அல்லது ஏதாவது நிகழ்ச்சி  என்றால் உடனே இவர்கள் வந்து அடுத்தவர்களை பற்றி குறை சொல்லுவதை பார்த்து இருக்கிறேன். அதனை பார்க்கும்போது  எனக்கு சிரிப்பாக வரும்.


3. அடுத்தவர்களுக்காக நடிப்பது. அதாவது, உங்களுக்கு அந்த விஷயம் பிடிக்கவே பிடிக்காது..ஆனால் அடுத்தவர்களுக்காக பிடிக்கும் என்று நடிப்பது அல்லது பொய் சொல்லுவது. உதாரணமாக குடும்பத்துக்காக அல்லது கணவருக்காக என்று அவர் சொல்லும் மொக்கை ஜோக்குகள், அல்லது திரைப்படங்கள் அவருக்கு பிடிகிறது அல்லது உங்களின் குடும்பத்திற்கு என்று தேமே என்று செய்வது. அதாவது..நீங்கள் நீங்களாகவே இருப்பது இல்லை. இப்படி ஒவ்வொரு விசயத்திற்கும் நடித்து நடித்து சில நேரங்களில் உங்களின் சுயம் என்ற ஒன்றை இழந்து விடுவீர்கள். உதாரணமாக, உங்களுக்கு நன்றாக பாட தெரியும் என்று வைத்து கொள்ளுங்கள் உங்கள் குடும்பத்திற்கு பிடிக்காது என்று உங்கள் சுயத்தை இழந்து விடுவது. உங்கள் திறமைகளை ஏன் விட்டு கொடுக்குறீர்கள், அதுவும் தங்கள் குடும்ப நன்மைக்காக என்று சொல்லி கொண்டு இதனை செய்கிறீர்கள். உங்கள் குடும்பதினரை உணர செய்து உங்களின் சுயத்தை விட்டுகொடுக்காமல் வாழ பழகி கொள்ளுங்கள்.


4. ஆண்களோ பெண்களோ உங்களுக்கு வேண்டியது , "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எண்ணங்கள் ", இளைய இந்தியர்கள் முக்கியமாக பெண்கள் ஏதாவது வாழ்கையில் சாதிக்க வேண்டும் என்று நோக்கம் வைத்து கொள்ளுங்கள். இந்தியா போன்ற ஆணாதிக்க நாடுகளில் பெண்கள் சாதிப்பது முன்னேற உதவுவது போன்ற விடயங்கள் உற்சாகபடுத்த போவதில்லை. அதற்காக முயற்சிக்காமல் இருக்காதீர்கள், கதவை தட்ட தட்ட மட்டுமே திறக்கும். முயற்சி செய்ய செய்ய மட்டுமே நமக்கு எதிர்காலம் கிடக்கும். எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும் . முன்னேற விளையும் போது எதிர்ப்புகள் எல்லா திசைகளில் இருந்தும் வரலாம். துணிந்து நின்று எதிர் கொள்ள பழகி கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்.இந்தியா போன்ற சமூகத்தில்  உங்களுக்கு மரியாதை வேண்டும் என்றால் நீங்கள் நிறைய சாதிக்க வேண்டும்.

5. முடிவாக முக்கியமான ஒன்று.  எல்லாவற்றையும் டிராமா செய்யாதீர்கள். குறிப்பாக உறவுகளுக்குள் நடக்கும் சிறிய சிறிய விசயங்களையும் டிராமா செய்து தனக்கு சாதகமாக வரும் வரை டிராமாவை தொடர்வது. இப்படி டிராமா செய்வதன் மூலம் நீங்கள் ஒரு தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்று தெளிவாக தெரிகிறது. தன்னை அறிந்தவள் எந்த டிராமா விலும் சிக்கி கொள்ளாமல் அப்படி டிராமா செய்பவர்களை, பிரச்னை வந்தாலும் அதனை எப்படி சமாளிப்பது என்று தெளிவாக தெரிந்து இருப்பாள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமே நிலைமையை சமாளிக்க தெரியாமல்  எல்லாவற்றியும் டிராமா செய்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து தான் நினைத்த படி நடக்கும் வரை டிராமாவை தொடர்வார்கள். இப்படி நீங்கள் செய்ய செய்ய உங்களின் எதிர் பாலினம் அல்லது குடும்பத்தினர், "எதுக்கு  பிரச்னை? வேணாம் " என்று அந்த நிமிடம் ஒதுங்கி போனாலும், உங்கள் மேல் சுத்தமாக மரியாதை வைத்து இருக்க மாட்டார்கள். "இவ டிராமா குயீன், எல்லாத்தையும் அழுது அழுது சாதிப்பா?" என்று மரியாதை குறைவாக நினைப்பார்கள் நடத்துவார்கள். இது தேவையா.

நீங்கள் முதலில் மரியாதை கொடுப்பது உங்களுக்காக இருக்கட்டும். எது முக்கியம் எது முக்கியமல்ல என்று உணருங்கள். தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவும் இல்லை.


டிஸ்கி.

இதில் குறிப்பிட்ட சில குறிப்புகளை வைத்து பெண்கள் யாரும் என்னிடம் சண்டைக்கு வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளுகிறேன். அப்படியே சண்டைக்கு வர வேண்டும் என்றாலும் தயவு செய்து சேத்தன் பகத்தின் தளத்தில் சென்று சண்டை இடுங்கள் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள்.



நன்றி.



Tuesday, July 21, 2015

திருப்பதி, பழனியில் இருந்து வெளிநாடு செல்லும் முடியின் விலை 3000 பவுண்ட் .

என்னுடன் வேலை பார்க்கும் கறுப்பின பெண் ஒருத்திக்கு கல்யாணம் அடுத்த மாசம்.. கடந்த வாரம், தலையில்  முடியே இல்லாமல் இருந்த அவளுக்கு திடீரென்று  நீளமான அடர்த்தியான முடி, அதுவும்  அவர்கள் செய்வது போல நிறைய சடைகள் போட்டு கொண்டு வந்து இருந்தாள் , எப்படி முடி முளைத்தது அதுவும் இவ்வளவு முடி என்று எனக்கு சந்தேகம். ஒரு வேலை விக் எதுவும் வைத்து இருப்பாளோ என்று கேட்டதில் அவள் சொன்னது இது தான் "ஹேர் எக்ஸ்டென்சன்  எனப்படும் . முடியை நீளபடுத்தும்  ட்ரீட்மென்ட் செய்து இருப்பதாகவும்.இப்படி  நீள படுத்தும் ட்ரீட்மென்ட் இல் இந்தியாவில் இருந்து வரும் முடிக்கு விலை அதிகம்" என்றும் கூறினாள்.



இது என்னடா புது கதை, என்று எனக்கு இதனை பற்றி அதிகம் தெரியாததால் என்ன தான் சொல்கிறாள்  என்று வாசித்து பார்த்தேன். முடியை வைத்து நடக்கும் ஒரு மல்டி பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி பார்த்து அசந்து போனேன்.

ஒவ்வொரு நாளும் லட்சகணக்கான மக்கள் திருப்பதிக்கு சென்று தங்கள் முடியை காணிக்கையாக கொடுக்கிறார்கள். இவர்கள் காணிக்கையாக கொடுக்கும் முடியினை ஏலம் விட்டு கிட்டத்தட்ட வருடத்திற்கு 2000 கோடி சம்பாதிக்கிறார்கள் திருப்பதி தேவஸ்தானத்தார்.

ஒரு பெண்ணின் தலையில் இருந்து சராசரியாக 283.5 கிராம் முடி கிடைக்கிறது. இப்படி காணிக்கை கொடுக்கும் முடி வெர்ஜின் முடி அல்லது கன்னி முடி என்று ஹேர் இண்டஸ்ட்ரி இல் அழைக்க படுகிறது. அதாவது, எந்த ட்ரீட்மென்ட், கலரிங், டையிங் என்று எதுவும் இல்லாமல் சுத்தமான முடி என்று இது அழைக்க படுகிறது. பொதுவாக இந்தியர்களின் முடி அடர்த்தியானது, நீளமானது மற்றும் வலுவானது. எந்த டிசைனுக்கும், கலரிங் க்கும் பொருந்தும் முடி.

இப்படி நீளமான 283.5 கிராம் முடிக்கு வெளிநாட்டு மார்கெட்டில் இருக்கும் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 30ஆயிரம் ரூபாய். அதாவது தன்னுடைய 30 ஆயிரம் மதிப்புள்ள முடியை காணிக்கையாக கொடுக்கிறார் அந்த பெண். ஆனால் இது ஏலம் விடுவதற்கு முன் மதிப்பு. பொதுவாக ஏலம் எடுத்த பின் கிடக்கும் முடிகளை இவர்கள் ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்.

1. 31 இன்சை விட நீளமாக முடி
2. 16-30 இன்ச் நீளமான முடி
3. 10-15 இன்ச் நீளமான முடி
4. 5-10 இன்ச் நீளமான முடி
5. 5 இன்ச்க்கும் குறைவான நீளமான முடி

ஒவ்வொரு வகையான முடிக்கும் ஒரு இண்டஸ்ட்ரி இருக்கிறது. நீளமான, அடர்த்தியான முடிகள் பாலிவூட் நடிகைகளில் இருந்து ஹாலிவூட் நடிகை வரை தங்கள் விக் ஆக பயன்படுத்துகிறார்கள்.
நீளம் குறைவான சிறிய முடிகள் சீனாவில் விக்க்குகலா தயாரிக்கப்பட்டு எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகின்றன.

ஐரோப்பாவில் இருக்கும் ஒவ்வொரு ஹேர் சலூனும் தற்பொழுது இந்திய முடிகளை விக்காக, ஹேர் எக்ஸ்டென்சன்க்கு என்று பயன் படுத்துகிறார்கள்.  விக்குகளாக மாற்றப்பட்டவுடன் அல்லது ஹேர் எச்ட்டேன்சொனுக்கு என்று பயன்படுத்தப்படும் முடியின் விலை அதன் தரத்தை பொறுத்து கிட்டத்தட்ட 3000 பவுண்டு வரை கூட செல்லுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சம் ருபாய்.

உதாரணமாக ஹாலிவூட் நடிகை Eva Longoria செய்திருக்கும் ஹேர் எக்ஸ்ட்டேன்சியன் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.




படங்கள் உதவி http://www.dailymail.co.uk/femail/article-2153691/From-Hindu-temple-Hollywood-hairdo-How-thousands-Indian-women-having-heads-shaved-gods-hair-end-3-000-extensions.html


மக்களின் கடவுள் நம்பிக்கையும் அதனை சுற்றி நடக்கும் மல்டி பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி யும் மலைக்க வைக்கின்றன. எப்படியோ, கோடிகணக்கில் பணம் காணிக்கையாகவும், காணிக்கை முடிகளை கொண்டும் கோடி கோடியாக திருப்பதி மற்றும் பழனி  தேவஸ்தான மக்கள் சம்பாதிக்கிறார்கள் என்றால் அது மிகை இல்லை.


டிஸ்கி

இது, படித்ததை, பார்த்ததை வைத்து எழுதியது மட்டுமே.. யாருடைய கடவுள் நம்பிக்கையும் பற்றி கூறவில்லை.


நன்றி.

Sunday, July 19, 2015

இந்தியாவில் பயோடெக்னாலாஜி படித்தால் வேலை கிடைக்குமா?

எனக்கு நடந்த ஒரு எதிர்பாராத அனுபவம் அது. அம்மாவின் ஆபரேஷன் க்கு பிறகு போஸ்ட்  செக்கப்க்கு என்று மருத்துவமனை அழைத்து சென்று இருந்தேன். அங்கு இருந்த ஒரு நர்ஸிடம் ஒரு அம்மா, என் பையன் +2 முடிச்சிட்டான், சயின்ஸ் குரூப், என்ன படிக்கலாம் என்று கேட்டு கொண்டு இருந்தார். அந்த நர்ஸ் அம்மாவும், பயோடெக்னாலாஜி படிக்க வையுங்க என்று சொன்னார். அப்போது, அங்கு செக்கப்க்கு வந்து இருந்த இன்னொரு அம்மா, "வேணாம் மா, என் பைய்யன் அதை தான் படிச்சிட்டு 10 வருசமா வேலை இல்லாம இப்போ தான் மா வேலைக்கு போய் இருக்கான், வேற என்னானாலும் படிக்க வையுங்க இது வேண்டாம்" என்று சொன்னார். 

எனக்கு அந்த அம்மா சொன்னது தூக்கி வாரி போட்டது. என்னது நம்ம பீல்ட் பத்தி இப்படி பேசுறாங்களே என்று. பிறகு அந்த அம்மாவிடம் கேட்டபோது, அவர் சொன்னது இது தான். அவரின் பைய்யன் BTech பயோடெக்னாலாஜி படித்து இருக்கிறார், அதன் பிறகு வேலை இல்லை. பின்னர், PhD சேர்ந்து பிளான்ட் பயோடெக்னாலாஜி படித்து முனைவர் பட்டம் வாங்கி இருக்கிறார். அதன் பிறகும் வேலை என்று பெரியதாக எதுவும் இல்லை ஆனால் 8-9 வருடங்கள் கடந்து இருக்கின்றன. இப்பொழுது Postdoc ஆக வெளி நாட்டுக்கு சென்று இருக்கிறார். அதுவும் postdoc சம்பளம் என்பது மிக குறைந்தது. "சம்பளம் கம்மி என்று யாரும் பொண்ணு கூட கொடுக்க மாட்டேங்கிறாங்க மா!" என்று புலம்பி தீர்த்து விட்டார். 

இது உண்மையா, இந்தியாவில் பயோடெக்னாலாஜி படித்தால் வேலை கிடைக்காதா? என்று எனக்கு தெரிந்த, இந்தியாவில் பயோடெக்னாலாஜி ஸ்டார்ட் அப் கம்பெனி வைத்து இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னது இது தான்.  இந்தியாவில்  பயோடெக்னாலாஜி என்பது வெறும் ஆராய்ச்சி சார்ந்த பீல்ட் மட்டுமே. ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல நிலைகள் clearance செய்ய வேண்டும். இது ஒரு புறம் இருக்க, இப்படி படித்து விட்டு வரும் மாணவர்களும் வெறும் புத்தக அறிவு மட்டுமே கொண்டு இருக்கிறார்கள். ப்ராக்டிகல் அறிவு இருப்பதில்லை. பல கல்லூரிகள்  பயோடெக்னாலாஜி என்ற பெயரில்ஆராய்ச்சி கூடம் கூட இல்லாமல் பாடம் நடத்துகிறார்கள். அங்கு படித்து விட்டு வெளிவரும் பலருக்கும் பல விஷயங்கள் தெரிவதில்லை. பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கூட Genetics, Recombinant DNA technology என்று எதுவும் சொல்லி தர தெரியவில்லை. ரொம்ப ஜெனெரல் ஆக படிக்கிறார்கள். specialize எதுவும் செய்து கொள்ளுவதில்லை.
இப்படி அனைத்தையும் மனபாடம் செய்து வெளி வரும் பலரும் இண்டர்வியு நேரத்தில் கேட்கும் அடிப்படை விசயங்களுக்கு கூட பதில் சொல்லுவதில்லை. இதனால் நல்ல subject தெரிந்த பலரை தேடி கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது. அதேபோல,  நிறைய பயோடெக் கம்பெனிகளும் இல்லை என்று சொன்னார். 

இது ஒரு புறம் இருக்க, வெறும் BTech  பயோடெக்னாலாஜி படிக்கும் பலரும் படித்து முடித்து வெளி வரும் போது கெமிகல் எஞ்சினீர், பயோ மெடிக்கல் எஞ்சினீர், பயோ கெமிஸ்ட்ரி, பயாலாஜி படித்தவர்கள் என்று அனைவருடனும் போட்டி போட வேண்டி இருக்கிறது. அடிப்படை அறிவு இல்லாமல் எல்லாத்தையும் நுனிப்புல் மேய்ந்து விட்டு வரும் இவர்கள் நிறைய தடுமாறுகிறார்கள். 

வெறும் Btech மட்டும் படித்த இவர்களுக்கு மார்க்கெட்டிங் வேலை மட்டுமே கிடைகிறது. மேல்படிப்பு அல்லது Phd படித்தால் மட்டுமே கொஞ்சம் நல்ல வேலை கிடைகிறது. அதனால், IT சார்ந்த படிப்புகள் போல படித்து முடித்தவுடன் 5-6 வருடங்களில் வேலை, ஓரளவு நல்ல துவக்க சம்பளம் என்று எதுவும் கிடைப்பதில்லை.

 clearance பிரச்சனையை பற்றி இன்னொரு இடத்திலும் கேள்வி பட்டேன். என்னுடைய தற்போதைய பயணத்தில் ஆராய்ச்சி விசயமாக ஒரு பல்கலைகழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இருக்கும் உபகரணங்கள் எல்லாம் நன்றாக லேட்டஸ்ட் கட்டிங் எட்ஜ் ஆக இருந்தது.. DBT இல் இருந்து பண்டிங்க் கிடைத்ததாக சொன்னார்கள்.  ஆனால் கிடைத்த பண்டிங்க் வைத்து அவர்களால் உபகரணங்கள் வாங்க முடிந்ததே தவிர அதனை தொடர்ந்து நடத்த, கரண்ட் பில் கட்ட கூட அவர்களால் முடிவதில்லை, clearance என்ற பெயரில் நிறைய ரெட் டேபிசம் நடப்பதாக சொன்னார்கள்.

1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது  நோய்களும், வைரஸ்களும், பாக் டீரியாக்களும் வந்து கொண்டு இருக்கையில், பயோ டெக் போன்ற துறை கள் வளர்வது  எவ்வளவு முக்கியம். எவ்வளவோ சாதிக்கலாம் .  ஆனால் இது தான் தற்போதைய  நிலையா? எதிர்காலம் இல்லாமல் இருக்கும் பயோடெக்னாலாஜி பட்டதாரிகள் நிலை என்னாகும்..தெரியவில்லை. 


நன்றி.


Friday, July 17, 2015

அமெரிக்க Ivy League பல்கலைகழகங்களில் ஆசியர்களுக்கு பாகுபாடு நடக்கிறதா?

கடந்த வாரம் அட்லாண்டாவில் இருந்து வெளி வரும் இந்திய பத்திரிக்கையான Khabarஇல் வாசித்த செய்து இது. ஏற்கனவே இது பற்றி அரசால் புரசலாக கேள்வி பட்டு இருந்தாலும் முழுதாக இப்பொழுது தான் இதனை பற்றி வாசிக்க நேர்ந்தது.



செய்தி இது தான் "Ivy League எனப்படும் அமெரிக்க டாப் கல்லூரிகளில் இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வந்து குடியேறியர்களின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்க படுகிறதா?"


இது என்ன Ivy League என்று கேட்பவர்களுக்கு. அமெரிக்காவில் வடகிழக்கில் இருக்கும் 8 பல்கலைகழகங்கள் Ivy League பல்கலைகழகங்கள் என்று அழைக்க படுகின்றன. ப்ரெஸ்டீஜ் பல்கலைகழகங்கள் இவை. ஹார்வர்ட், yale, பிரின்ஸ்டன், கார்நெல், பிரவுன், கொலம்பியா..என்று அமெரிக்காவில் புகழ் பெற்ற பல்கலைகழகங்கள் இவை.





இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 43 அமெரிக்க ஜனாதிபதிகளில் 14 பேர்  Ivy League பல்கலைகழகத்தில் படித்தவர்கள். அதே போல பில் கேட்ஸ், பில் கிளிண்டன்,  இல் இருந்து தற்போதைய ஒபாமா, மற்றும்  FB நிறுவனர் போன்ற பலரும்  இந்தபல்கலைகழகங்கள் உடன் எதோ தொடர்பு கொண்டவர்கள்.  இங்கு படித்து வெளியில் வந்தாலே எங்கோ ஒரு இடத்தில்  ஹை பொசிசன் நிச்சயம்.

சரி இப்பொழுது தொடங்கிய பிரச்சனைக்கு வருகிறேன். இங்கு எந்த கல்லூரிகளில்/பணிக்கு  இடம் கேட்டு விண்ணப்பம் போட்டாலும் அதில் "race" என்று ஒரு கேள்வி வரும். அதில் நீங்கள் எந்த race என்று ஒரு பகுதியை நிரப்ப வேண்டும். சர்வே க்கு மட்டுமே இதனை கேட்கிறோம் என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் வேலைக்கு சேர்கிறார்கள் அல்லது பள்ளியில் சேர்க்கபடுகிறார்கள் என்று கண்காணிக்கவே திரை மறைவில் இது நடக்கிறது.

சரி இதற்கும் Ivy League அட்மிசன்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு. எங்கே, நிறைய ஹை அச்சீவிங் ஆசியர்கள் உள்ளே நுழைந்து caucasian எனப்படும் வெள்ளை மக்களை முந்தி விடுவார்களோ என்ற பயம் தான் காரணம்.

ஆசியர்கள் பொதுவாக "tiger parenting" நடத்துகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகள் ஹை அச்சீவர் ஆக, படிப்பில் தலை சிறந்து விளங்க வேண்டும் என்று, ஏதாவது போட்டிகளில் தள்ளுகிறார்கள்.
ஸ்பெல்லிங் பீ, மேத் பீ, ஜியோக்ராபி பீ, SAT என்று எல்லா காம்பெடிடிவ் பரிச்சைகள் அல்லது போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று புஷ் செய்கிறார்கள். தன் குழந்தையின் வெற்றியை தன் வெற்றியாக, தன்னுடைய சமூக மக்களிடம் தெரிவிக்க ஒரு வாய்பாக இவர்கள் பார்கிறார்கள்.அதனால் , பல நேரங்களில் ஆசிய குழந்தைகள் Ivy league இல்லாவிட்டாலும் பல நல்ல கல்லூரிகளில் Pre -Med படிப்பதை பார்க்கலாம்.


அதனால் கிட்ட தட்ட எல்லா ஆசிய குழந்தைகளும் கல்லூரி அட்மிசன் பரிச்சையான SAT  பரிட்சையில் நல்ல ஸ்கோர் வாங்கி விடுகிறார்கள். தங்கள் குழந்தை மேல் படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று எல்லா ஆசிய பெற்றோர்களும்  முயற்சி செய்கிறார்கள். அதற்காக  சிறுக சிறுக சேமித்த பணமும் அவர்களிடம்  இருக்கிறது. இது மற்ற இன மக்களிடம் அதிகம் இருப்பதில்லை. உதாரணமாக Ivy league பல்கலைகழகங்களில் படிக்க என்று ஆகும் செலவை ஒரு லோயர் மிடில் கிளாஸ் கறுப்பின குடும்பமோ அல்லது மெக்சிகன் குடும்பமோ சந்திக்க இயலாது. ஆனால் ஒரு ஆசிய குடும்பம் இதனை எப்படியாவது சமாளித்து விடுகிறார்கள்.

நல்ல SAT மதிப்பெண்ணுடன், படிக்க வைக்க ஆகும் செலவும் தயாராக வைத்து இருக்கும் ஆசிய குடும்பங்கள் நிறைய. எங்கே இவர்களுக்கு மட்டுமே அட்மிசன் கொடுத்தால் Ivy League  கல்லூரிகள் ஆசிய கல்லூரிகள் ஆகி விடுமோ..என்று பயந்து நிறைய சாக்கு போக்கு சொல்லி விண்ணபங்களை நிராகரிக்கிறார்கள். உதாரணமாக இவர்கள் சொல்லும் ஒரு ஒப்பு சப்பு காரணம். ஆசிய குழந்தைகள், படிப்பை தவிர வேறு எக்ஸ்ட்ரா கரிகுலர் அறிவு அல்லது திறமை இல்லை. இவர்கள் வெறும் புத்தக புழுக்கள். பொது வெளியில் எப்படி பேசுவது, சமாளிப்பது, எல்லா இனத்தவருடன் எப்படி பழகுவது எப்படி என்று தெரியாது..என்பது போன்ற ஒரு சில ஒப்பு சப்பு காரணம் சொல்லுகிறார்கள்.

என்ன காரணமோ, இது ஒரு நடந்து கொண்டு இருக்கும் பிரச்னை. நிறைய நாளிதழ்களில் இதனை பற்றி கட்டுரை வெளியிட்டு இருகிறார்கள்.  இதே பிரச்சனையை கையில் எடுத்து மைக்கல் வாங் என்ற ஒருவர் தான் தொடர்ந்த வழக்கு பற்றி கார்டியன் பத்திரிக்கை செய்தி இது.

இவர்கள் எவ்வளவு தான் தடுத்தாலும் அமெரிக்காவில் அடுத்த தலைமுறையில் நிறைய இந்தியர்கள் மற்றும் சீன மக்கள் அதிகம் படித்தவர்களாக, பெரிய வேலை பார்பவராக இருப்பதை இவர்களால் தடுக்க முடியாது என்று மட்டும் நிச்சயாமாக கூறலாம்.

டிஸ்கி

இங்கே குறிப்பிட்டு இருப்பவை , என் கருத்துகள் மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எதிர் கருத்துக்க்கள் இருப்பின் தெரிவியுங்கள்.

நன்றி.

Wednesday, July 15, 2015

தடுப்பு ஊசிகளும் குழந்தைகளுக்கு வரும் ஆட்டிச குறைபாடுகளும்

நீண்ட நாட்களுக்கு முன்  எழுத  (ஜனவரியில்) ஆரம்பித்து கிடப்பில் இருந்த பதிவு இது. MMR (தட்டம்மை) தடுப்பு ஊசிகள் பற்றியும், அதனால் ஆட்டிசம் மேலும் தூண்டபடுகிறதா? என்பது பற்றியும் அபுதாபியில் பதிவர் ஹுசைன்அம்மா அவர்களை சந்தித்த போது எழுதும் படி கேட்டு இருந்தார். இவ்வளவு தாமதமான பதிவுக்கு காரணம் இது தான், உடல்நிலை சம்பந்தமான பதிவுகள் எழுதும் போது நிறைய குறிப்புகளை தேட வேண்டி உள்ளது, சரியான தகவல்கள் தரவில்லை என்றால் யாருக்கும் உபயோகம் இல்லை, அதே நேரம் தவறான தகவல்கள், தவறான புரிதலுக்கும் வழிவகுக்கின்றன என்பதால்  நிறைய தகவல்கள் சேரும் வரை அல்லது எனக்கு புரியும் வரை எழுதாமல் அல்லது சிறு சிறு பத்திகளாக எழுதி வைத்து இருந்தேன்.

ஆனால் கிடைத்த வரை போதும் என்று இப்பொழுது வெளியிட இரண்டு காரணங்கள் இங்கே. கடந்த வார இறுதியில் அமெரிக்க உணவகம் ஒன்றுக்கு சாப்பிட சென்று இருந்தோம். உள்ளே நுழையும் போதே..ஆ ஊ என்று ஒரு சிறு பெண்ணின் சத்தம். எந்த வித வார்த்தைகளும் இன்றி வெறும் சத்தம் மட்டுமே வந்தது. அந்த பெண்ணின் அம்மா அவள் ஒவ்வொரு முறை சத்தம் இடும் போதும் அமைதியாக "கூல் டௌன்" என்று சொல்லி கொண்டு இருந்தார். உணவகம் முழுதும் திரும்பி பார்த்த படி இருப்பினும் அந்த அம்மா பொறுமையாக அந்த பெண்ணையும் சமாதான படுத்தி சாப்பிட்டு விட்டு சென்றார். அந்த அம்மாவின் மன திடம் ஆச்சரிய பட வைத்தது.

அடுத்தது, என் தோழியின் பக்கத்து வீட்டு பெண் அவர். இந்தியர். அவருக்கு மூன்று வயது பெண் குழந்தை. அந்த குழந்தை இன்று வரை எதுவும் பேசுவதில்லை, வெறும் சத்தம் மட்டுமே எழுப்புகிறது. டாக்டரிடம் சென்று காட்டிய போது parasites எனப்படும் புழுக்களினால் ஆட்டிசம் உண்டாகி இருக்கிறது என்று உணவில் பல கட்டுபாடுகள் விதிக்கும் படி சொன்னதாகவும் அதனால் அவர்கள் வீட்டில் எதுவும் சமைக்காமல் இருப்பதாகவும் குறிப்பிட்டு சொன்னார். ஏற்கனவே, ஆட்டிசம் மற்றும் உணவுக்குழாயில் இருக்கும் பாக்டீரியா பற்றி சிறிது தகவல்கள் சேகரித்து வைத்து இருந்ததால் இந்த விடயம் பற்றி சிறிது தேடி நான் கண்ட சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு இங்கே.

டிஸ்கி
இது மருத்துவ அறிவுரை அல்ல. நான் படித்த சேகரித்த தகவல்கள் மட்டுமே.


ஆட்டிசம் என்றால் என்ன?

சிறு குழந்தைகளுக்கு வரும் சிறு மனநல குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒரே செயலை/ சொல்லை திரும்ப திரும்ப செய்து கொண்டு/சொல்லிக்கொண்டு  இருப்பார்கள். சரியாக பேச முடியாமல் அல்லது அடுத்தவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பார்கள். social interaction இருக்காது. 3 வயது வரை சரியாக பேச முடியாமல் அல்லது சுத்தமாக பேச முடியாமல் இருந்தாலே, இங்கு developmental disorder என்று அதற்குரிய டாக்டர்களை சென்று பார்க்கும் படி குழந்தைகள் மருத்துவர்கள் கூறுவார். இப்படி அறிகுறிகள் தோன்றியவுடன் அதற்குரிய மருத்துவரிடம் சென்று காட்டினால் கவனித்தால் இதற்குரிய அறிகுறிகள் குறைய வாய்ப்பு உண்டு என்று அறியப்பட்டு இருக்கிறது.


ஆட்டிசம் எதனால் உண்டாகிறது?

இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி? எதனால் ஏற்படுகிறது என்று அறிந்தால் இந்நேரம் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்க பல நடவடிக்கைகள் ஏற்பட்டு இருக்கும். ஆனால், இது காரணமாக இருக்கலாம் அல்லது அது காரணமாக இருக்கலாம் என்று பல யூகங்கள் தொடர்ந்து இருந்து வந்து கொண்டிருக்கின்றன என்றாலும், இது தான் முழு காரணம் என்று வரையறுக்க படவில்லை.

MMR (தட்டம்மை) தடுப்பூசிகள் ஆட்டிசத்தை அதிகரிகின்றனவா அல்லது தூண்டுகின்றனவா?

CDC யின் கூற்றுபடி ஆட்டிசத்திர்க்கும் தடுப்பூசிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. MMR ஊசிகள் ஆட்டிசத்தை தூண்டுகின்றன என்ற Andrew Wakefield என்ற மருத்துவரின் சோதனைகள் எல்லாம் பொய்யானவை, அவராக புருடா விட்டவை  நிருபிக்க முடியாதவை என்று பல தொடர் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன(1)

உடலில் வசிக்கும் நல்ல பாக்டீரியாக்களும் ஆட்டிசமும் 

 நான் வாசித்த பார்த்த ஒரு சில கட்டுரைகள், குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களுக்கும் ஆட்டிசத்திக்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிவிகின்றது (2).

என்னது குடலில் பாக்டீரியாக்களா? என்று கேட்பவர்களுக்கு. நம் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நமக்கு பெரும் பயன் விளைவிகின்ற்ன. நாம் சாப்பிடும் பொருட்களை செரிக்க உதவுவதில் இருந்து உடல் சமநிலை என்று பலதும் செய்வது இவை. மனிதர்கள்  மரபுப்பொருள் அளவில் 99% ஒரே போன்று இருக்கிறோம்....ஆனால் ஒருவரின் உடலில்  இருக்கும் பாக்டீரியாக்களும் அடுத்தவர் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களும் ஒன்று போல இருப்பதில்லை. நார்மல் மனிதருக்கும் நோயாளிக்கும் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அளவு மற்றும் வகைகள் வித்தியாசமானவை என்று தெரிவிக்கிறது. இதனை பற்றிய ஒரு பயனுள்ள TED வீடியோ இங்கே.


எப்படி உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் மாறுபடுகின்றன, அவற்றை கொண்டு என்ன என்ன செய்யலாம் என்று இந்த காணொளி தெரிவிக்கின்றது.

அடுத்து நான் வாசித்த /பார்த்த நடாஷா காம்ப்பெல் என்ற ஒரு ரஷ்யன் நரம்பியல் நிபுணரின் ஆராய்ச்சி மற்றும் கட்டுரை 20 நார்மல் குழந்தைகள் மற்றும் ஆட்டிச குழந்தைகளின் fecal samples (கழிவு சாம்பிள்) ஆராய்ந்ததில் Prevotella, Coprococcus, and Veillonellaceae போன்ற 3 பாக்டீரியாக்கள் இல்லாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மூன்று பாக்டீரியாக்களும் சக்கரை அல்லது கார்போஹைட்ரேட் உணவை அல்லது நொதிக்கப்பட்ட உணவை உடைக்க அல்லது செரிக்க உதவுவது. 

ஆராய்சிகள் குழந்தை பிறப்பிற்கு 20 நாட்களுக்கு முன்பிருந்து தாயின் குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் குழந்தையின் உடல் மற்றும் மன நிலை மாற்றங்களை நிர்ணயிக்கின்றன என்று தெரிவிகின்றன. பிறந்த குழந்தையின் குடலில் இயற்கைக்கு மாறான பாக்டீரியா அளவு இருப்பின் அந்த குழந்தைகளுக்கு  அப்படிப்பட்ட குழந்தைகள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்றும் , அந்த குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை தவிர்ப்பது அல்லது உடல் சமநிலை அடைந்த பின் கொடுப்பது நல்லது என்று தெரிவிக்கிகிறார்கள் (3). 




முடிவாக எது எப்படியோ, நல்ல உணவு பழக்கமும், சுத்தமும், கருவுற்று இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவுகளும் மாத்திரைகளும் உடற்பயிற்சியும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல குறைபாடுகளை தவிர்க்க உதவும் என்பது உண்மை.

நன்றி.



References

1) http://www.bmj.com/content/340/bmj.c1127.long
2) http://parkcountychiropractic.com/wp-content/uploads/2012/09/Gut-and-Psychology.pdf
3)Kang D-W, Park JG, Ilhan ZE, et al. Reduced Incidence of Prevotella and Other Fermenters in Intestinal Microflora of Autistic Children. Gilbert JA, ed. PLoS ONE. 2013;8(7):e68322. doi:10.1371/journal.pone.0068322.








Monday, July 13, 2015

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து!!


மேலை நாட்டவர்களிடம் இருந்து பல நல்ல? விசயங்களை இந்தியாவில் பின்பற்றுகிறார்கள், குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள் .உதாரணமாக, கிட்டத்தட்ட எல்லா குழந்தைகள் டிவி சீரியல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பபடுகின்றன. சாப்பாடு விசயத்தில், பிட்சா, பர்கர், பிரைஸ், சிக்கன் விங்க்ஸ், சாண்ட்விச், ப்ரௌனி, புட்டிங், நியூடெல்லா, பீனட் பட்டர்... என்று கொடுக்கிறோம்.  அதே போல விளையாட்டு பொம்மைகள் என்றால்..ஹாட் வீல்ஸ், தாமஸ் அண்ட் பிரெண்ட்ஸ், டோரா, பார்பி பொம்மைகள், பவர் ரேன்ஜெர்ஸ்  ...என்று நிறைய பொருட்களை தமிழ் நாட்டில் குழந்தைகள் விளையாட என்று கொடுக்கிறார்கள்.

இப்படி நிறைய விசயங்களை மேலை நாட்டிடம் இருந்து பின்பற்றும் மக்கள். இவர்களிடம் இருக்கும் முக்கியமான நல்ல குணமான "பொய் பேசாமல் இருப்பது" அல்லது "தவறு செய்து விட்டால் ஒத்து கொண்டு, பின்விளைவுகளை தைரியமாக சந்திப்பது" என்ற ஒரு நல்ல பழக்கத்தை சொல்லி கொடுக்கலாமோ என்று தோன்றியது.

நான் பார்த்தவரை இங்கு சிறு குழந்தைகளுக்கு பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி "Being Honest" என்ற ஒரு பழக்கத்தை சொல்லி கொடுக்கிறார்கள். அதற்காகவே Pinocchio கதைகளை போன்ற கதைகளை சொல்லுகிறார்கள். தவறு செய்வது இயல்பு. அப்படி செய்ததாலும், தவறை எப்படி ஒத்து கொள்ளுவது. ஒத்து கொண்ட பின் எப்படி தவறை சரி செய்வது. என்று திரும்ப திரும்ப குழந்தைகளுக்கு சொல்லி தருகிறார்கள்.

இதனை பற்றி ஏன் இப்பொழுது குறிப்பிடுகின்றேன் என்றால்..இந்தியாவில் குழந்தைகள் சிறு சிறு விசயங்களுக்கு கூட பொய்சொல்லுவதை , உடான்ஸ்விடுவதை  பார்க்க முடிந்தது. ஒரு சில நேரம் பெற்றோரே குழந்தைகள் பொய் பேசுவதை அனுமதிக்கிரார்களோ அல்லது உற்சாகபடுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. உதாரணமாக, சில காரியங்கள் நெருங்கிய சொந்தகளுக்கு கூட தெரிய கூடாது என்று, அவர்கள் முன் நம் வீட்டில் நடந்ததை சொல்லாமல் இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் பொய் சொல்ல சொல்லுகிறார்கள்.  அல்லது குழந்தைகளாகவே முன் வந்து  அப்படி பொய் சொன்னால் "சமத்து" என்று மெச்சுகிறார்கள். அப்படி செய்யும் நிகழ்வை "ஸ்ட்ரீட் ஸ்மார்ட்" அல்லது "இவன் பிழைச்சுகுவான்!" என்று சொல்லுகிறார்கள்.

இப்படி அனைத்திற்கும் பொய் உரைப்பது நல்லதா? எதற்கு திருவள்ளுவர் "வாய்மை" அதிகாரத்தில் பொய் பேசாமல் இருப்பதை பற்றி மாங்கு மாங்குன்னு எழுதி வச்சு இருக்கிறார்.

சிறு வயதில் இருந்து பொய் உரைக்கும் குழந்தைகள் பெரியவர்களானதும் என்னாகும். எப்பொழுதும், எல்லா விசயத்திற்கும் பொய் உரைப்பார்கள். அதனால், என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு?, குடும்பமோ, வேலையோ, உறவுகளோ ஒரு நம்பிக்கையில் உருவானவை. இவர் நமக்கு நம்பிக்கையாக இருப்பார், நம்மை கைவிட மாட்டார், இவர் ஒழுங்காக வேலை பார்பார், வேலையில் கையாடல் செய்ய மாட்டார், நேர்மையாக இருப்பார் என்று ஒரு நம்பிக்கையில் தான் உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது.  எதற்கு எடுத்தாலும் பொய் உரைக்கும் ஒருவரை எவரும் வேலையில் வைத்து கொள்ள மாட்டார்கள். குடும்பத்திலும் நம்பிக்கை இருக்காது. யாரும் நம்பாமல், யாரையும் நம்பாமல் குழப்பமான நிலை வரும். யாரை பார்த்தாலும் சந்தேகம் வரும். நீங்கள் பொய் சொல்லுவதை போல அவரும் சொல்லுவார்கள் என்று தோன்றும். வாழ்க்கை நரகமாகி விடும். இந்த நிலை தேவையா. யோசியுங்கள்.

நீங்கள் அதற்காக குழந்த்கைகள் தவறே செய்யாமல் ஒழுக்க சீலர் ஆக இருக்க வேண்டும், குழந்தைகளை அப்படி வளர்க்க வேண்டும் என்று நான் சொல்ல வர வில்லை. பொய் சொல்ல எப்பொழுது குழந்தைகள் ஆரம்பிக்கிறார்கள்? ஒரு தவறு செய்து விட்டு, பெற்றோரிடம் சொன்னால் நம்மை தண்டிப்பார்கள் என்னும் போது  தான். தவறு செய்வது எல்லாருடைய இயல்பு. அப்படி குழந்தைகள் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை தராமல், அவர்களிடம் பேசுங்கள். தவற்றை எப்படி திருத்தி கொள்ளுவது என்று சொல்லி கொடுங்கள்.

என்னை பொருத்தவரை "Being Honest" மற்றும் "எப்படி தவறை சரி செய்வது" என்று சொல்லி கொடுத்துவிட்டால் போதும். குழந்தைகள் எல்லாவற்றுக்கும்  பொய் சொல்ல மாட்டார்கள், பின்நாளில் வருந்தவும் மாட்டார்கள்.

நன்றி.

Friday, July 10, 2015

தமிழகத்தின் அம்மா பாசம் !!

டிஸ்கி
பொதுவாக நான் அரசியல் குறித்து எழுதுவதில்லை. ஏன் என்றால்?, நாம ஏதாவது மனசுல பட்டதை எழுதபோயி, வீட்டுக்கு ஆட்டோ ஏதும் வந்துட்டா, எதுக்கு வம்பு என்று தான். ஆனாலும் நியூ யார்க் டைம்ஸ் இல் நான் படித்த ஒரு கட்டுரையும், இந்திய பயணத்தில் நான் சந்தித்த சில நபர்களும் குறித்து எப்படியாவது எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அதன் விளைவே இது.இங்கு குறிப்பிட்டு இருப்பவை எல்லாம் அரசியலை குறித்தோ அல்லது குறிப்பிட்ட அரசியல் வாதியை குறித்தோ என்னுடைய கருத்து அல்ல. பொதுவாக நான் பார்த்த படித்த, பார்த்த  விஷயங்கள் மட்டுமே.

ஒரு மாநிலத்தை சினிமா நடிகர் ஆட்சி செய்தால் என்ன நடக்கும் ? இதுவே ஜூலை 1 வெளியான நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தி. அந்த கட்டுரையின் ஆசிரியர் Rollo Romig.



மே 8ஆம் தேதி பல கரை வேட்டிகளும், அமைச்சர்களும் பெருமாள் கோவிலில் செய்த பிரார்த்தனைகள் "பெருமாளே, நியாயம் ஜெயிக்கட்டும், தமிழ்நாடு செழிப்பான பாதையில் சென்று கொண்டு இருந்தது, ஆனால் தீய சக்திகள் வளர்ச்சியை தடுத்து விட்டன, அம்மா  புடம் போட்ட தங்கமாக வெளியே வந்து பணிகளை தொடரட்டும். அவரின் வளர்ச்சியை தடுத்தவர்கள் தண்டிக்கப்படட்டும்" என்று ஒரே கத்தல்கள்.

மக்களின் விசுவாசங்கள், உடல் முழுதும் பச்சை குத்திய பெண்கள். மாவட்ட செக்ரெட்டரி கையில் "அம்மா வாழ்க" என்ற பச்சை. கையில் தீச்சட்டி ஏந்தியபடி , தீ மேல் நடக்கும். அங்கபிரதட்சனம், யாகம்  செய்யும் அமைச்சர்கள். தீர்ப்பு வெளிவரும் நாட்களில் 1008 லட்சத்தி எட்டு என்று தேங்காய் உடைக்கும் "அம்மா பக்தர்கள்".

யார் இந்த அம்மா? என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழக முதல்வர் அவர்கள் என்பது பற்றி
அவர்களின் முந்தய கால வாழ்க்கை, MGR அவர்களுடன் நட்பு, AIADMK வில் எப்படி அவர் படிப்படியாக முன்னேறினார். அவருக்கும் DMK கலைஞர் அவர்களுக்கும் இருந்த போட்டி...என்று முன்னுரையில் குறிப்பிட்டு...கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த சொத்து குவிப்பு வழக்கில் நடந்த கைது, அதன் பின்னணி என்ன என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

கவர்ச்சியான சினிமா நடிகையாக அறியப்பட்ட இவர் , முதலில் செய்தது தன்னை அழகில்லாதவராக, சாதாரண மனிதராக காட்டி கொள்ளுவது. நகைகளை தவிர்த்து, நானும் உங்களை போன்ற ஒருவர் என்று கட்டியது. எனக்கு என்று எந்த சொந்தமும் இல்லை. நீங்களே என் சொந்தம், உங்களில் ஒருத்தி நான். உங்கள் "அம்மா" என்று ஒரு இமேஜ் உருவாக்கியது. தன்னை தானே ஒரு ப்ராண்ட் ஆக உருவாக்கியது. எங்கும் எதிலும் அம்மா முகம். அம்மா 5 ரூபாய் மதிய உணவு, அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா படம் பதித்த கம்ப்யூட்டர்கள், தமிழகத்தில் எங்கு நோக்கினும்  அம்மா..அம்மா...அம்மா என்று ஒரு ப்ராண்ட் உருவாக்கியது.


ஆனால் இந்த கட்டுரையின் சாராம்சம் தமிழக முதல்வர் பற்றியோ, அவரின் அரசியலை பற்றியோ அல்ல, மாறாக அம்மாவின் கைதும் அதன் பின்னர் அவருக்காக என்று நடந்த அம்மாவின் பக்தர்களின் பிராத்தனைகளும், பஸ் தீவைக்க பட்டது, உடைக்கப்பட்டது, தற்கொலைகள்..என்ன என்ன என்பதை பற்றியது.

பெருங்குளத்தூர் ஜங்ஷன் இல் ஹை வேயில் மக்கள் படுத்து கொண்டு "பஸ்ஸை எங்கள் மேல் ஏத்துங்கள், அம்மா சிறையில் இருக்கும் போது நாங்கள் ஏன் வாழ வேண்டும்?"  என்று மக்கள் கத்தியதை, நூற்றுகணக்கான மக்கள் தற்கொலை செய்து கொண்டது போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து குறிப்பிடுகிறார்.

இப்படி ஒரு பக்திக்கு என்ன காரணம்?. பக்கத்து மாநிலமான கேரளாவில், இப்படி ஆயிரகனக்கனோர்  ரோட்டில் படுத்து கொண்டு  பஸ்ஸை ஏத்துங்கள் என்று சொல்ல மாட்டார்கள். பின்னர் எப்படி இந்த பக்தி. தற்போதைய முதல்வர் அம்மா முந்தய நாள் கதாநாயகி என்பது தான் காரணமா என்று கேள்வி கேட்கிறார்.

தீர்ப்புக்கு மூன்று நாட்கள் முன்பு கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் என்று அனைத்திலும் கூட்டு பிரார்த்தனைகள் மதுரையில் 1008 தேங்காய் உடைப்பு, கோயம்பத்தூர்இல் 2008 பேர் பால்குடம் ஏந்தி யாத்திரை. திருவிளக்கு பூஜைகள்..எல்லாவற்றிலும் அம்மாவின் போட்டோ வைத்து , "கடவுளே அம்மாவை விடுதலை செய்து விடு" என்று பிரார்த்தனைகள்...


மெரினா கரை ஓரம் தான் சந்தித்த சில மீனவர்கள் பற்றியும் மீனவ குடும்பங்கள் பற்றியும் குறிப்பிடும் அவர் 
மீனவர்களின் அம்மா குறித்த வார்த்தைகள் பற்றி, "மீனவர்களை காப்பாற்றும் ஒரே மனிதர் அம்மா தான். அம்மா, சிறை சென்றதும் நாங்கள் அனாதைகள் ஆகி விட்டோம்". மீனவ பெண்களோ, "சுனாமி அடித்து ஓய்ந்த பிறகு ஓடோடி வந்து எங்களுக்கு ஆறுதல் சொன்னவர் எங்கள் அம்மா தான். யார் தவறு செய்யவில்லை இப்பொழுது, ஏன் அம்மா மீது மட்டும் இப்படி வழக்குகள்" என்று அவர் செய்தது தவறே இல்லை என்று சத்தியம் செய்யும் பெண்கள். 


"இப்படி அம்மா பாசம், தீக்குளிப்பு, பிரார்த்தனைகள், எல்லாம் கட்சிகாரர்கள் பணம் கொடுத்து செய்தது , செய்ய சொன்னது, அதன் மூலம் அம்மாவின் நன்மதிப்பை பெற அவர்கள் செய்த முயற்சி" என்று பத்திரிக்கையாளர் ஞானி போன்றவர்களின் கருத்தையும் பதிவு செய்து இருக்கும் கட்டுரை ஆசிரியர். அம்மா தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று தனது இரண்டு விரல்களை வெட்டிய சேலம்  Ex-SP ரத்தினம்,  ரத்தத்தால் அம்மாவின் சிலையை உருவாக்கிய ஹுசைனி போன்றவர்களை பற்றியும் குறிப்பிடுகிறார். இவர்களை போன்றவர்களின் பாசமும் அம்மாவின் அன்பை பெறுவதற்காகவா? அல்லது உண்மையான பாசமா?  என்று கேள்வி எழுப்புகிறார்.

என் சொந்த அனுபவத்தில் நான் கண்டது. என் அம்மாவின் தைராய்டு அறுவை சிகிச்சைக்கு என்று ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தோம். அங்கு இருந்த ஒரு டாக்டர் கூட அம்மா மோதிரம் அணிந்து இருந்ததை பார்க்க முடிந்தது. அங்கு வேலை பார்த்த பல நர்சுகளும் அம்மா சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று மண் சோறு சாப்பிட்டதாக சொன்னார்கள்.எனக்கு தெரிந்த சிலர்  தீசட்டி எடுத்தாகவும், அங்க பிரதட்சணம் செய்ததாகவும் சொன்னார்கள். இவர்கள் எந்த உள்நோக்கத்துடனும் இதனை செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. அல்லது அம்மாவின் நற்பெயரை எப்படியாவது பெற்று விட மாட்டோமா, அம்மாவின் கண் பார்வை தன்  மீது பட்டுவிடாதா என்று இவர்கள் செய்திருப்பார்களா? தெரியவில்லை..எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.  

நன்றி.


Wednesday, July 8, 2015

தமிழ் திரைப்படங்களில் பெண்கள் சரியாக சித்தரிக்க படுகிறார்களா?



சமீபத்தில் இரண்டு திரைப்படங்கள் காண நேர்ந்தது. ஒன்று விமானத்தில்  நான் பார்த்த ஆங்கில நகைச்சுவை காமெடி படமான "Spy" மற்றொன்று மதுரையில் தியேட்டரில் பார்த்த தமிழ் காமெடி? படமான "ரோமியோ ஜூலியட்"


முதலில் "Spy" பற்றி..40 வயதை கடந்த, அழகில்லாத, குண்டான சூசன் கூப்பர் தான் கதாநாயகி. ஜேம்ஸ் பாண்டு 007 பணி புரியும் துப்பறியும் நிறுவனம் போன்ற ஒரு நிறுவனத்தில் சைடு கிக் ஆக, டெஸ்க் வேலை செய்பவராக, மெயின் ஸ்பை ஒருவருக்கு உதவி செய்பவராக வாழ்நாட்கள் முழுதும் கழித்த ஒருவர் அவர். மெயின் ஸ்பை ஒரு விபத்தில் இறந்து விட, ஒரு மிசன் க்கு முகம் தெரியாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று இவரை அனுப்புகிறார்கள். தன்னுடைய தோற்றத்தை, திறமையை அவர் எப்படி மாற்றி அமைத்து, தன்னாலும் ஸ்பை ஆக முடியும் என்று நிருபித்து இருப்பார். 

துவக்கம் முதல் முடிவு வரை, விழுந்து விழுந்து சிரிக்க வைத்த படம் அது. சூசன் கூப்பர் ஆக "மெலிஸா மெக்கார்த்தி" நடித்து அசத்தி இருக்கிறார். தன்னுடைய தோற்றத்தை குறித்து தானே அடிக்கும் கமெண்டுகள் ஆகட்டும், 40 வயதை கடந்த பின்னும் தனக்கென்று ஒரு பாய் ப்ரெண்ட் இல்லையே என்று வருந்துவதாகட்டும்,  தன்னாலும் சாதிக்க முடியும் என்று துணிச்சலுடன் அவர் எடுக்கும் முடிவுகள் ஆகட்டும். உண்மையாகவே அசத்தலான நடிப்பு. 

முதலில் படம் ஆரம்பிக்கும் எதோ 007 படங்களின் Spoof படமோ என்று எண்ணினேன். ஆனால், அப்படி எல்லாம் இல்லை ஒரிஜினல் கதை, ஒவ்வொரு பிரேமும் அசத்தல். 

அடுத்து மதுரையில் என் அண்ணனின் குடும்பத்துடன் வெளியில் செல்லலாம் என்று முடிவு செய்து தியேட்டருக்கு சென்றாயிற்று.  இது நல்ல நகைச்சுவை படம் என்று என் அண்ணன் சொன்னதால் சரி நல்லா இருக்கும் இருக்கும் என்று நம்பி சென்று தலைவலியை வரவழித்து கொண்டேன்.

இந்த படம் பார்த்த பிறகு எனக்குள் தோன்றிய எண்ணங்கள் இங்கே, இப்பொழுது இருக்கும் காதல் காமெடி படங்களை எல்லாம் ஒரு பக்க கதைக்குள் அடக்கி விடலாம். 

காதல் பற்றி சில துவக்க காட்சிகள் அல்லது இயக்குனர் அறிமுக வரிகள். பின்னர், ஹீரோ- ஹீரோயின் சந்திப்பு. ஹீரோ ஹீரோயின் காதலிக்கும் வரை வரும் சில உப்பு சப்பிலாத பிரெண்ட்ஸ் காமெடி. பின்னர் காதல் ஆரம்பித்தவுடன் ஒரு டூயட். பின்னர், பிரிதல். முக்கியமாக ஹீரோயின் எதோ ஒரு காரணம் சொல்லி பிரிவார். உடனே "அவளே, இவளே, இந்த பொண்ணுங்களே இப்படி தான், போங்கடி நீங்களும் உங்க காதலும்"..என்று கன்னா பின்னா என்று பொண்ணுங்களை திட்டி ஒரு டாஸ்மாக் பாட்டு..அதில் ஹீரோ காதலித்து மனம் உடைந்து போய் விட்டாராம்.. பின்னர் சில உப்பு சப்பிலாத சீன்கள். அதன் பிறகு ஹீரோ ஹீரோயின் மீண்டும் இணைந்தார்கள்...

ஐயோ சாமி, முடியல. கிட்டத்தட்ட எல்லா படங்களும் இந்த சீக்வன்ஸ் கொண்டு இருக்கிறது. அதுவும் பொண்ணுங்களை திட்டி பாடும் டாஸ்மாக் பாட்டுக்கு தியேட்டரில் காது கிழியும் அளவிற்கு விசில் சத்தம். பொண்ணுங்களை திட்டி வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் விசில் சத்தம். என்ன நடக்கிறது. அப்படி என்ன வெறுப்பு பெண்கள் மேலே. காதல் மட்டுமே வாழ்க்கையா? காதல் முறிந்தால் ஆண்களுக்கு மட்டும் தான் வருத்தமா?, பெண்களுக்கு இருக்காதா? மனசு என்பது எல்லாருக்கும் பொது தானே. 
அதுவும் அந்த ஹீரோயின் சொல்லுகிறார், இப்போ "எனக்கு வயசு 24 நான் இப்போ  பிகர், இன்னும் அஞ்சு வருசத்தில நான் ஆண்டி யார் என்னை பார்ப்பா? "என்று. அட அட, என்ன அற்புதமான வசனங்கள். புல்லரித்து விட்டது. 

பொண்ணுங்களுக்கு என்று தன்னம்பிக்கை இருக்கிறது, எத்தனை வயதனாலும் சாதிக்க முடியும் என்று உரைக்கும் படி சொன்ன முதல் படம் எங்கே...காதல் மட்டுமே வாழ்க்கை பொண்ணுங்க இதற்க்கு தான் லாயக்கு என்று உரைக்கும் இந்த படம் எங்கே. இப்படி வரும் பாடல்களை படங்களை  ஏன் பெண்கள் ரசிக்கிறார்கள். தங்களை மிக கேவலமாக சித்தரிக்கிறார்களே என்று கோவம் வராதா.
என்னவோ போங்கப்பா, கஷ்டமா இருக்கு..

நன்றி.

Tuesday, July 7, 2015

அமெரிக்கர்கள் பாசமும் இந்தியாவில் அன்னியமாகும் சொந்தங்களும்

பொதுவாக அமெரிக்கர்கள் அல்லது வெஸ்டேர்னர்கள்   பற்றி சில clicheகள்  உண்டு. அவை, குடும்பங்களை பார்க்க மாட்டார்கள், தனியே வாழ்வார்கள். பெற்றோரை வயதான காலத்தில் கவனிக்க மாட்டார்கள். குடும்ப அமைப்பில் நம்பிக்கை இல்லை....இப்படி நிறைய.

இந்தியாவில் இருந்து வெளியே வருவதற்கு முன்பு வரை இவை எல்லாம் உண்மை என்று நான் நம்பிக்கை கொண்டு இருந்தேன். ஆனால், இப்படி சொல்லப்படும் அல்லது நம்பப்படும் குடும்பங்கள் நூற்றில் 10 இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்த 100க்கு 90 குடும்பங்கள் இன்னும் பாசம் பந்தம் எல்லாம் கொண்டு இருக்கிறார்கள். 

குடும்பம் குழந்தைகள் என்று தனக்கென்று ஒரு கூட்டை கட்டி கொண்டு அதில் குழந்தைகள் வளர்ந்து கல்லூரி காலம் வரை வெளியே செல்லும் வரை பாதுகாக்கிறார்கள். குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் விட்டது பொறுப்பு என்று நிறைய பெற்றோர் விடுவதில்லை. அவர்களுக்கு தனியே உலகில் வாழ கற்று கொடுப்பதற்காக தனி வீடு எடுத்து கொடுக்கும் பெற்றோர் பார்த்து இருக்கிறேன். ஆனால், குழந்தைகள் படிப்புக்கு என்று செலவழிக்கும் அல்லது குழந்தைகள் தானே சம்பாதிக்கும் வரை பணம் கொடுத்து சப்போர்ட் செய்யும் நிறைய பெற்றோரை பார்த்து இருக்கிறேன்.

நான் பார்த்த வரையில் இந்த விசயத்தில் ஒரே ஒரு வித்தியாசம் இவர்களுக்கும் இந்திய பெற்றோருக்கும் என்ன என்றால், குழந்தைகளை தங்களுடன் வைத்து கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு விசயமாக பார்த்து பார்த்து ஸ்பூன் பீட் செய்து கொண்டு அவர்களுக்கு வெளியுலகை சமாளிப்பது எப்படி என்று கற்று கொடுக்காமல் இருப்பதில்லை.

அதே போல, குழந்தைகளும், வயதான பெற்றோரை கவனியாமல் விடுவதில்லை. ஒரே வீட்டில் இருப்பதில்லை என்றாலும் நிறைய பெற்றோர் வீட்டின் அருகில் குழந்தைகள் வசிப்பது இங்கு சகஜம்.நான்  இங்கு  வந்த புதிதில் டிவியில் "Everybody Loves Raymond" என்று ஒரு தொடர் வரும். சரியான காமெடி தொடர் என்றாலும். எப்படி குழந்தைகளும் பெற்றோரும் அருகருகே வசிக்கிறார்கள், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்கிறார்கள் என்று நன்கு அறிந்து கொள்ள எனக்கு உதவியது.


இது எனக்கு தெரிந்த இரண்டு அமெரிக்க நண்பர்கள் தங்களின் வயதான பெற்றோரை எப்படி கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ளுகிறார்கள் என்று அறிந்து புல்லரித்து போய் இருக்கிறேன். அதிலும் என்னுடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரின் தாய் 90 களில் இருக்கிறார். Alzeimer நோயால் நினைவு தப்பி விட்டது. சாப்பாடு சாப்பிட மறுக்கிறார் என்று ஹோமில் வைத்து உணவு குழாய் மூலம் உணவு செலுத்துகிறார்கள். அவருக்கு எந்த நினைவும் யாரை பற்றிய நினைவும் இல்லை என்றாலும் தவறாமல் இவரும்  இவரின் தங்கையும் தினமும் சென்று பார்கிறார்கள்.வாரம் ஒரு முறை குழந்தைகளை கூட்டி கொண்டு காட்டுகிறார். 

இன்னொரு நண்பர், தன் முதுகெலும்பு உடைந்து நடக்க முடியாமல் போன தந்தையை கவனிக்க அவர் வீட்டில் ஒரு நர்ஸ் வைத்துஇருந்தார் . தினமும் அவரை தள்ளு வண்டியில் அழைத்து கொண்டு வாக்கிங் செல்வார். தன் தந்தை இறக்கும் வரை அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார்.

அதனால், மேற்கத்திய மக்கள் எல்லாரும் இப்படி தான் என்று நாம் முத்திரை குத்த முடியாது. 

அதே போல, இந்தியாவில் இருப்பவர்கள் குடும்ப அமைப்பில் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்  அனைவரும் தாய் தந்தையரை கண்ணும் கருத்துமாகபார்த்து கொள்ளுகிறார்கள் என்று யாரவது சொன்னால் அதுவும் உண்மை இல்லை.

எனக்கு தெரிந்த என் இரு  சொந்தகாரர்கள் குடும்பத்தில் அப்பா மீது மகளும் மகனும் கேஸ் போட்டு இருக்கிறார்கள். அவர் குடித்து குடித்து சொத்தை அழித்து கொண்டு இருக்கிறார். அதனால் எங்களுக்கு அப்பாவே வேண்டாம் என்று கேஸ் போட்டு இருக்கிறார்கள். தன்னை வளர்த்து ஆளாக்கி, கல்யாணம் முடித்து வைக்கும் வரை அப்பா வேணும், ஆனால் இப்பொழுது குடிக்கு அடிமை ஆகி இருக்கும் அப்பாவை மீட்க என்ன வழி என்று எல்லாம் பார்க்காமல், அப்பா செத்தாலும் பரவாயில்லை, தனக்கு சொத்து தான் முக்கியம் என்று இவர்கள் செய்யும் செயலை பார்த்து எங்கே செல்கிறோம் நாம் என்று மனம் வருந்தியது.

இதே போன்ற ஒரு நிலை என் தோழி ஒருவரின் வீட்டிலும் பார்க்க நேர்ந்தது. அப்பா இல்லை, அம்மா மட்டுமே, அவரும் வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றவர். தோழியின் அண்ணன் வெளி நாட்டில் இருக்கிறார், ஆனாலும் அவரின் மனைவி எந்த உதவியும் செய்வதில்லை அல்லது செய்ய விடுவதில்லை. எல்லாவற்றையும் தோழி பார்த்து கொள்ளுகிறார். ஆனாலும் அண்ணன், தங்கை மீது இப்பொழுது கேஸ் போட்டு இருக்கிறார். அம்மாவின் நகைகளும் சொத்தும் தன்னை சேர்ந்தது என்று. 

தாய் தந்தையர் இறந்தவுடன் முக்கால் வாசி வீடுகளில் சொத்து தகராறு நடந்து ஒரு காலத்தில் ஒற்றுமையாக இருந்த குடும்பங்கள் இப்போது தனி தீவுகளாக இருப்பதை பார்க்க முடிந்தது. பணம் பணம் இதுவே பிரதானம். பாசமாவது மண்ணாங்கட்டியாவது.

இது நான் பார்த்த சில இந்திய  சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் அமெரிக்க நண்பர்கள் வாழ்கை கொண்டு எழுதியது. இவர்கள் இப்படிதான் என்று பொதுவாக நம்பப்படும் சில விஷயங்கள் தற்போது எப்படி மாறி இருக்கின்றன? அல்லது தற்போதைய நிலை என்ன? என்று நான் பார்த்த அனுமானிப்பு மட்டுமே இது. பொதுப்படையானது அல்ல.

நன்றி.


 

Sunday, July 5, 2015

தனியே பயணமும், வாழ்க தமிழும் !!


இரண்டரை வார இந்திய விடுமுறை இனிதே முடிந்தது. தனியே இந்திய பயணம், என்னுடைய ஐரோப்பா நாட்களை நினைவு படுத்தியது. தனியே பயணம் செய்யும் போது ஒரு சில நன்மைகளும், கஷ்டங்களும்  உண்டு. நன்மைகள் என்றால். சிறு குழந்தைகளை வைத்து கொண்டு செல்லும் பயணம் போல மன இறுக்கம் இருப்பதில்லை. இந்தியாவில் சிறு குழந்தைகளுக்கு என்ன  நோய்கள் வருமோ என்று கவலை தேவை இல்லை. நம்முடைய நேரம் முழுக்க முழுக்க நம்முடையது, என்ன செய்ய விழைகிறோமோ அதனை செய்யலாம்...என்று சில நன்மைகள். கஷ்டங்கள் என்றால், பயணம் முழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பயண அட்டவணை சரியாக மனப்பாடம் செய்து இருக்க வேண்டும் மற்றும் விமானம் மாறும் நேரங்களில் பல நேரங்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும். இவை எல்லாம் சிறு சிறு கஷ்டங்கள் என்றால். பெரிய கஷ்டம் என்பது..இந்தியா சென்றவுடன் ஒரு பெண் தனியே பயணம் செய்கிறாள் என்றால் அதனை அட்வான்டேஜ் ஆக எடுத்து கொள்ள பார்க்கும் சிலர்.

உதாரணமாக, பயண உடைமை கோரல் இடத்தில் பெட்டியை எடுத்து வைக்க என்று நியமிக்க பட்டிருக்கும் பலரும் demand செய்யும் பணம். பெட்டி எடுத்து வைப்பது அவர்கள் கடமை. ஆனால் Cot எடுத்து கொண்டு கொடுப்பதற்கு கூட இவர்கள் பணம் கேட்கிறார்கள். நாம் சொல்வதற்கு முன்பே, இவர்கள் பெட்டியை எடுத்து வைத்து விட்டு பணம் கொடுங்கள் என்று demand செய்கிறார்கள்.

அதுவும் என்னுடையது, சென்னை வந்து இறங்கியவுடன், மதுரைக்கு தொடர் பயணம். இரண்டு மணி நேர இடைவெளியில் international டெர்மினலில் இருந்து டொமெஸ்டிக் ஓட வேண்டிய நிலை. அதற்காக என்று ப்ரீ கார் சர்வீஸ் வைத்து இருந்தாலும். பெரும்பாலான வெளிநாட்டு விமானங்கள் இரவு நேரங்களில் வந்து இறங்கும், நிறைய பேருக்கு அடுத்த விமானம் பிடிக்க வேண்டிய கட்டாயம் என்று இருக்கும் நேரத்தில், இவர்கள் available ஆக  இருப்பதில்லை, பல நேரங்களில் பணம் கேட்கிறார்கள். பணம் கொடுத்தால் கூட்டி கொண்டு செல்கிறார்கள். இல்லையேல் ஆட்களே இருப்பதில்லை. எங்கு செல்ல வேண்டும் என்று போர்டு கூட இருப்பதில்லை. இப்படி பல நேரங்களில் குழம்பும் நிலை.

அடுத்து எனக்கு இருந்த மிக நெருடலான விஷயம் என்றால், உள்ளூர் விமானங்களில் கொடுக்கப்படும் அறிவிப்புகள். எனக்கு தெரிந்து ஐரோப்பாவில் இருந்து சென்னை செல்லும் எல்லா விமானங்களிலும், அதே போல சென்னையில் இருந்து ஐரோப்பா செல்லும் எல்லா விமானங்களிலும் தமிழில் அறிவுப்பு செய்கிறார்கள். விமான பணியாளர்களும் தமிழில் பேசுகிறார்கள். உதவி செய்கிறார்கள். இது நான் இது வரை பயணம் செய்த, பிரிட்டிஷ், Lufthansa, ஏர்  பிரான்ஸ் மற்றும் KLM என்று அனைத்திலும் பார்க்க நேர்ந்தது. ஆனால் உள்ளூர் விமானங்களில் அதுவும் சென்னை டு மதுரை செல்லும் ஜெட் ஏர்வேஸ், spice Jet போன்ற விமானங்களில் ஒன்று ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள். விமான பணி செய்பவர்களும் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். உள்ளூர் விமானங்களில் அதிகம் பயணிப்பது உள்ளூர் மக்கள் என்பதால் ஏன் இவர்கள் தாய் மொழியில் அறிவிப்பு செய்வதில்லை என்று கேள்வி எனக்குள். உள்ளூர் விமானங்களில் தமிழுக்கு இருக்கும் மதிப்பை பார்த்து புல்லரித்து போனேன்.

இதே போன்ற நிலை ஒவ்வொரு வீடுகளிலும் பார்க்க நேர்ந்தது. உதாரணமாக, இப்போது CBSC சிலபஸ் பின்பற்றும் நிறைய பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் கட்டாய பாடமாக ஆக்கி இருக்கிறார்கள். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ பேசினால் மகிழ்ச்சி அடைகிறார்கள். தமிழில் தங்கள் குழந்தைகளுக்கு படிக்க தெரியவில்லை அல்லது பேச தெரிவதில்லை என்பது மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.

முகுந்த்கு தமிழ் சொல்லிதர என்று புத்தகங்கள் மற்றும் சார்ட் வாங்க மதுரை புது மண்டபம் சென்று  தேடும் போது, நிறைய கடை காரர்களே, ஹிந்தி வாங்கிகோங்க மா, என்று சொல்லுகிறார்கள். நிறைய ஆங்கில, ஹிந்தி புத்தகங்கள் மற்றும் சார்ட்கள் பார்க்க முடிந்தது.  தமிழில்  படங்கள் போட்ட புராண கதைகள் வாங்கலாம் என்று சென்று தேடி தேடி ஓய்ந்து விட்டேன். எல்லா புத்தகங்களும் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் இருந்தன. ஒரு வேலை நான் சரியாக தேடவில்லையா, அல்லது சரியான இடங்களில் தேடவில்லையா என்று தெரியவில்லை.

ஒன்று மட்டுமே நன்றாக தெரிந்தது, தமிழ் வளர்கிறதோ இல்லையோ, ஹிந்தி நன்றாக வளர்ந்து இருக்கிறது அல்லது வளர்க்க பட்டு இருக்கிறது. இன்னொரு மொழி கற்று கொள்ளுவது ஆரோக்கியமான விஷயம், அதனை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அது தாய் மொழியை அழிக்காமல் இருக்க வேண்டும். இன்னும் ஒரு பத்து இருபது  வருடங்களில் தமிழின் நிலை தமிழ் நாட்டில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

நன்றி.