Sunday, October 13, 2019

குழந்தைகளும், பொறுப்புணர்வும்!!


picture adopted from
https://www.isd197.org/news/news_archives/2015-16_news_archives/realistically_raising_a_responsible_child#.XaNSxS-ZOgQ

பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கும் குழந்தைகள் பற்றிய முதல் கவலை என்னவாக இருக்கும் என்றால், "எப்படி பொறுப்பா வர போறானோ/போறாளோ தெரியல , எப்போ பாரு டிவி/கம்ப்யூட்டர்/போன்/ கேம்ஸ்  அப்படின்னு திரியுறாங்க?" என்பதாக இருக்கும்.


இது பொதுவாக உபயோகப்படுத்தப்படும் ஒரு வாக்கியம் என்றாலும், கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால், பல அர்த்தங்கள் கொண்டது.

பொறுப்புணர்வு என்று எதனை குறிக்கிறோம்?

1. ஒரு காரியத்தை கொடுத்தால், அதனை முழுமையாக தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையாக  செய்து முடிக்கும் தன்மையா?

2. வார்த்தை சுத்தம், தொழில் சுத்தம், வார்த்தை மாறாமல் சொன்னதை செய்யும் தன்மையா?

3. கொடுத்த காலக்கெடுவுக்குள் ஒரு காரியத்தை செய்து முடிக்கும் தன்மையா?

4. உங்களின் முழு திறமையும் செலுத்தி காரியம் முடிக்கும் திறனையா?

5. தவறு செய்தாலும் நன்மை செய்தாலும், அதனால் விளையும் விளைவின் பலனை ஏற்றுக்கொண்டு கலங்காமல் இருக்கும் திறனிலா?

6. தான் சார்ந்த குடும்பத்துக்கு, வேலைக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகத்துக்கு ...தன்னால் ஆன பங்களிப்பை  கொடுத்து நல்ல பேர் வாங்குவதையா?

இப்படி சொல்லி கொண்டே போகலாம். "பொறுப்பு" என்ற ஒரு வார்த்தை பன்முகம், பல பரிமாணங்கள் கொண்டது. ஆயினும், ஒவ்வொரு குழந்தையும் மேலே குறிப்பிட்ட அந்த பல பரிமாணங்களையும் எப்படியாவது கற்று கொள்ள வேண்டும், அல்லது பெற்றோர் அதற்க்கு உதவ வேண்டும்.இது பள்ளி, கல்லூரி, வேலை, குடும்பம் என்று அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்.

பொறுப்புணர்வும், கீழ்ப்படிதலும் 

பொறுப்புணர்வு என்று சொன்னாலே பெருபாலான பெற்றோர் அதனை கீழ்ப்படிதல் என்று நினைத்து கொள்கிறார்கள். அதாவது, "நான் என்ன சொல்லுறேனோ/எதிர்பார்க்கிறேனோ, கேட்டு , பதில் கேள்வி எதுவும் கேக்காமல், அதன் படி(யே) நடக்கணும்/செய்யணும் " , இது கீழ்ப்படிதல்.

ஆனால் பொறுப்புணர்வு என்பது " எவரும் இதனை செய், அதனை செய் என்று சொல்லாமல் தானாகவே  எது செய்யவேண்டியதோ, அதனை தானாக செய்வது".

இரண்டுக்கும் ஒரு மெல்லிய கோடு அளவு வித்தியாசமே. அது, "பிறர் எதிர்பார்ப்பு" என்பது போய்  "தானாக முடிவெடுக்க முடியும்" என்ற ஒரு உணர்வு வரும் போது பொறுப்பு வந்துவிட்டது என்று உணரலாம்.

சொல்லப்போனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை, அவர்கள் பெரியவர் ஆன பின்பும் கூட, கீழ்ப்படிதல் கொண்ட ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் தவிர, பொறுப்பானவர் ஆக, தானாக முடிவெடுக்க முடிந்தவர் ஆக, அல்ல. தான் சொல்லுவதை கேட்க வேண்டும், பதில் ஏதும் சொல்லாமலே, அப்படியாயின் அவர், பொறுப்பான பிள்ளை. இல்லை எனில் "சொன்ன பேச்சு கேக்காத தறுதலை"

எப்படி பொறுப்புணர்வை வளர்ப்பது?

எப்போது கீழ்ப்படிதல் எதிர்பார்ப்பு என்பதுபோய்  பொறுப்புணர்வு எட்டிப்பார்க்கும்? எவ்வளவு தூரம் குழந்தைகள் கையை பிடித்து நடக்க சொல்லி கொடுப்பது? அல்லது எப்படியாவது போ?  என்று தண்ணீர் தெளித்து விடுவதா? அல்லது எப்போது அவர்களாகவே சென்று கற்றுக்கொள்ளட்டும் என்று விடுவது? எப்போது அவர்க ளுக்கு நம் அறிவுரைகள் தேவை என்று அறிவது? இப்படி பல பல கேள்விகள்.

எப்போதும் பிள்ளைகள் நம் கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோரின் முதல் முதல் பயமே, "நம்ம கண்ட்ரோலில் இல்லை எனில், பிள்ளை தவறான பாதையில் போயிடும், பின்ன நமக்கு தான் பெரிய பாரம், வேலை" என்ற எண்ணத்திலே , விரல் நுனியில் பிள்ளைகளை வைத்துஇருக்கிறார்கள் . ஆனால், இப்படி வைத்திருப்பின், உங்கள் கட்டளைகளை கேட்கும் ஒரு ரோபாட் போல அவர்கள் இருப்பார்களே தவிர, எப்போது எதனை செய்தால் நல்லது, என்று முடிவெடுக்கும் பக்குவம் தெரியாதவர்களாக இருப்பார்கள்.

அதனால், இது உன்னுடைய வேலை, அதனை எப்படி செய்வாயோ அது உன்னுடைய திறமை. ஆனால் இதன் இறுதி நாள் அடுத்தவாரம் , அதற்குள் எப்படி முடிக்க முடியுமோ, முடித்து கொள். ஏதேனும் உதவி தேவை படின் கேள்? என்று சொல்லலாம்.


எப்போது உதவுவது, எப்போது உதவாமல் இருப்பது என்று அறிவது ஒரு கலை 

எப்போது உதவுவது, எப்போதுகுழந்தைகளை சுதந்திரமாக முடிவெடுக்க விடுவது என்று அறிவது என்பது எளிதான விஷயம் அல்ல.

மிகவும் கண்டிப்பாக,நான் சொல்லுவதை கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றுநினைப்பதும் தவறு , என்ன வேண்டும் என்றாலும் செய், எப்படி வேண்டும் என்றாலும் செய், என்று அதிகம் செல்லம் கொடுப்பதும் தவறு. ஒரு பாலன்ஸ் வேண்டும். எப்போது செல்லம் கொடுக்க வேண்டும், எப்போது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்திருப்பது ஒரு கலை.

அன்பை பொழியும் பெற்றோர் ரோல் 

உதாரணமாக, நீங்கள் நல்ல மூடில் இருக்கிறீர்கள் எனில் குழந்தைகளோடு கருணையாக, அன்பாக அக்கறையாக, அவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேட்டு அவர்களோடு விளையாடி கொண்டு, உதவி கொண்டு இருக்கலாம்" இந்த நேரத்தில், நீங்கள் எந்தவித  எதிர்பார்ப்பில்லாத அன்பை குழந்தை மீது நீங்கள் செலுத்துகிறீர்கள்.

ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரோல் 

நீங்கள் எல்லா நேரத்திலும், மேலே சொன்னது போல, அன்பை பொழிந்து  கொண்டிருப்பேன், உண்மை வாழ்க்கை நிலவரம் குழந்தைகளுக்கு தெரியாது, அதனால். சிலநேரம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ரோல் நீங்கள் எடுக்க வேண்டியது வரும்.

இந்த நேரத்தில், நீங்கள் ஒரு வேலை முடிக்க 1. கால அளவு நிர்ணயிக்கலாம் 2. டிஸிப்ளின்  அல்லது இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஒழுக்கம் சொல்லலாம் 3. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடத்தை சொல்லி கொடுக்கலாம். 4. உங்களின் நன் மதிப்புகள் , நற்குணங்கள், கருணை போன்றவற்றை சொல்லி கொடுக்கலாம்.

குழந்தைகள் கேட்டதை உடனே கொடுக்காமல் அவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைகொடுக்கலாம். இது,  எனக்கு உடனே அது கிடைக்க வேண்டும் என்ற உந்துதலை கட்டுப்படுத்த உதவும். "Delayed gratification" என்பது குறைந்த மனக்கிளர்ச்சியை, "தான்/தன் சந்தோசம்" என்ற நிலையை விட்டு வர உதவும். இந்த எண்ணமே, வீடியோ கேம், இன்டர்நெட் அடிமையாக பிள்ளைகள்/பெற்றோர் கிடைப்பதற்கு அடிப்படை.

இது தான் "எதிர்பார்க்கப்படும் அடிப்படை ஒழுக்கம் " என்று தெளிவாக சொல்லி விடுங்கள். அதே போல, இதனை மீறினால் கிடைக்கும் விளைவுகளையும் சொல்லி விடுங்கள். தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளுக்கு குழந்தைகள் சந்தோசப்பட வேண்டும். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்பது அவர்களுக்கு விளங்க வேண்டும்.

இது ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரோலின் முக்கிய அம்சங்கள்.

இரண்டும் கலந்த கலவை ரோல் 

பெரும்பாலான குழந்தைகள், நீங்கள் அன்பாக, ஆதரவாக, அக்கறையாக,  சொன்னால் உங்களின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க சம்மதிப்பார்கள்.

ஆரோக்கியமான பொறுப்புணர்வான குழந்தைகள் எங்கே வளர்வார்கள் எனில், அங்கே அன்பும் கண்டிப்பும் ஒரு சேர இருக்கும் வீட்டில் தான். இந்த கண்டிப்பு, கீழ்ப்படிதல் எதிர்பார்ப்பு அல்ல, மாறாக, விளைவை சார்ந்த நல்ல தன்னம்பிக்கை கொண்டது.


  1. தன்னம்பிக்கை கொண்ட குழந்தைகள் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள். பொறுமையாக, நோக்கம் நிறைவேறும் வரை திரும்ப திரும்ப முயற்சி செய்பவர்களாக இருப்பார்கள். 
  2. தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக அதிலிருந்து பாடம் கற்று கொள்பவர்களாக இருப்பார்கள்.
  3. இறுதிவரை எடுத்த காரியத்தை செய்து முடிப்பார்கள். தேவை எனில் உதவி கேட்க தயங்க மாட்டார்கள்.
  4. அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்து இருப்பார்கள்.
  5. புதிய விஷயங்கள் செய்ய துணிவுகொள்வார்கள்
  6. ஏதேனும் தடங்கல்கள் வரின் தன்னால்  சமாளிப்பது எப்படி என்று அறிந்திருப்பார்கள்.
உனக்காக நான் இருக்கிறேன் என்ற உணர்வு கொண்டு வருவது 

சரி, "எப்படி குழந்தைகள் நாம்சரி தவறு எது  செய்தாலும் நம்முடன் பெற்றோர் இருப்பார்கள் " என்று நம்பிக்கை கொள்ள  வைப்பது 

"நான் எப்போதும் உன்னிடம் அன்பு செலுத்துவேன்" என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவது 

"நீ எனக்கு மகனாக/மகளாக கிடைத்தது என் பாக்கியம்" என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவது"

"உன்னுடன் நேரம் செலவழிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொடுக்கிறது" என்று சொல்லுவது 

இது போன்ற சின்ன சின்ன செய்திகள் அடிக்கடி சொல்வதன் மூலம், குழந்தைகள் நமக்கு பின்புலமாக நம் பெற்றோர் இருக்கிறார்கள், என்று நம்பிக்கை கொள்வார்கள்.

உன்னால் முடியும் என்று ஊக்கப்படுத்துவது 

குழந்தைகளின் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கு அவர்களின் தன்னபிக்கை மிக முக்கியம். அதனை வளர்க்க சில வழிகளை பயன்படுத்தலாம்.

1. அவர்கள் தானாக செய்த திட்டப்பணி, படங்கள், உதவி போன்ற சிறு சிறு விஷயங்களையும் எடுத்து பாராட்டுவது. உதாரணமாக, அவர்களின் ஸ்கூல் ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்து கொண்டு, அவர்கள் எப்படி சிறப்பாக அதனை செய்தார்கள் என்று பாராட்டுவது.

2. வீட்டு வேலைகளில் ஏதாவது அவர்கள் உதவி இருப்பின் அதனை பாராட்டுவது.

3. அவர்கள்  ஏதாவது செய்த பிறகு,  "எனக்கு தெரியும் உன்னால் செய்ய முடியும் என்று" என்று  சொல்லுவது .

4. சொந்த பந்தங்களிடம் பரிவாக பேசும்போதோ அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் போதோ, அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று அறிய வைப்பது.

5. நாமாக சொல்லாமல் அவர்களாக எதாவது ஒரு உதவி செய்திருப்பின், அவர்களின் பொறுப்புணர்வை பாராட்டுவது. 


அதீத கவனிப்பும் அதன் விளைவும் 

நான் அதிகம் கவனித்த பார்த்த இந்த தலைமுறை குழந்தைகள் பலர் சுயநல வாதிகளாக, இருப்பதற்கு நன்றியுணர்வு இல்லாதவர்களாக, இது என் உரிமை, கொடு என்று வேண்டுபவர்களாக, தன்னால் செய்ய முடிந்ததையும் பிறர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாக, எதுவும் உடனே கிடைக்க வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களாக, தாம் செய்த தவறை ஒத்து கொள்ளாதவர்களாக, முயற்சி செய்யத்தவர்களாக, அடுத்தவர்களிடம் பகிராதவர்களாக, இருக்குகிறார்கள்.

மேலே சொன்ன அனைத்திற்கும் காரணம், பெற்றோர். தான் பட்ட கஷ்டம் தன குழந்தை படக்கூடாது என்று கேட்டதை வாங்கி கொடுத்து, அவர்கள் கேட்காததையும் வாங்கி கொடுத்து, "எல்லாமே ஈசி" என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறோம். உதாரணமாக, நீங்கள் Ipad /போன்/கேம்ஸ் என்று அனைத்தும் சிறு வயது முதலே குழந்தைக்கு கொடுப்பது 


இன்னொரு உதாரணம், குழந்தைகள் தாமாகவே செய்ய முடிந்த வேலையை செய்ய விடாமல் தானாக செய்வது. உதாரணமாக, டிவி பார்த்து கொண்டு, அது கொண்டு வா, இது கொண்டு வா என்று ஆர்டர் செய்யும் குழந்தைகள். அதனை செய்யும் பெற்றோர்.

இது தான் உன்னுடைய லிமிட் என்று தெளிவாக இலக்கு நிர்ணயிப்பது. "நோ" என்ற வார்த்தையை சொல்லுவது இவை இரண்டும் தாரக மந்திரம்.


முடிவாக, நம் நோக்கம் தன்னம்பிக்கை கொண்ட, சமூக பொறுப்பு, குடும்ப பொறுப்பு கொண்ட ஒரு பொறுப்பான ஒரு பிள்ளையை வளர்ப்பது.இது எளிதான காரியம் அல்ல,  இரு பக்கம் கூர்மையான ஒரு கத்தி மேல் நடப்பது போன்றது. அதிக செல்லமும் இல்லாமல், அதிக கண்டிப்பும் இல்லாமல் அதே நேரம், தெரிவான இலக்கு கொடுத்து வளர்க்க வேண்டிய ஒன்று. கொஞ்சம் முயற்சியும் சுய கட்டுப்படும் கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றி கொள்ளலாம்.

நன்றி.

Sunday, April 28, 2019

குழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது?

முதலில் சில கேள்விகள்?

1. உலகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டில் மனித கடத்தல் குறைவு?

  •  US 
  • இந்தியா 
  • உக்ரேன் 


2. சிறு பெண், ஆண்  குழந்தைகள் எதற்காக கடத்தப்படுகிறார்கள்?


  • பாலியல் தொழிலுக்காக 
  • பிச்சை எடுக்க 
  • அடிமை தொழில் செய்ய 
3. எந்த நாட்டில் 7 இல் 1 காணாமல் போகும் பெண் குழந்தைகள் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்த படுகிறார்கள்?

  • US 
  • கனடா 
  • இந்தியா 

1.  முதல் கேள்விக்கு விடை. எந்த நாடும் மனித கடத்தலில் இருந்து பாதுகாப்பானது கிடையாது. எல்லா நாடுகளிலும் மனித கடத்தல் கொடி கட்டி பறக்கிறது.

2. இரண்டாவது கேள்விக்கு விடை நாடு விட்டு நாடு மாறும். உதாரணமாக, பெண் குழந்தைகள் கடத்தப்படுவது முக்கால் வாசி நேரம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த என்றாலும், கம்போடியா போன்ற நாடுகளில் ஆண் குழந்தைகளும் பாலியல் தொழிலில்  சித்திரவதை செய்து ஈடுபட வற்புறுத்த படுத்துகிறார்கள். கம்போடியா பெண் குழந்தைகள் சீனாவில் கட்டாய திருமணம் செய்ய வற்புறுத்த படுகிறார்கள்.


3. மூன்றாவது கேள்விக்கு விடை, US. USA வில்  காணாமல் போகும் 7 இல் 1 பெண் குழந்தைகள்/பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள்.




மனதை வருத்தும் ஒரு விஷயம் என்னவென்றால், இது போன்ற கடத்தல்களும், அதற்கு துணை போகும் மக்கள் யார் என்று பார்த்தால், கடத்த பட்ட குழந்தைக்கு மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர் அல்லது கணவன்/காதலன். இது உலகம் முழுக்க இருக்கும் நிகழ்வு. ஒரு சில ஹாட் ஸ்பாட்ஸ் இந்த நிகழ்வுக்கு உண்டு. அந்த ஹாட் ஸ்பாட்ஸ் நாடுகளில் இருந்தும் எல்லா நாட்டு பெண்கள்/குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.

உதாரணமாக "மத்திய கிழக்கு நாடுகள்", "மேற்கு ஐரோப்பா நாடுகள்", மற்றும் "வட அமெரிக்கா" இவை மூன்றும் ஹாட் ஸ்பாட்ஸ். இந்த ஹாட் ஸ்பாட்ஸ் களுக்கு பல நாடுகளில் இருந்தும் மக்கள்/பெண்கள்/குழந்தைகள் சப்ளை செய்ய படுவார்கள்.



*Picture adopted from /www.unodc.org/


மனித கடத்தல் குறித்த போலாரிஸ் வீடியோ இங்கே






"மனித கடத்தலை தடுப்பது எப்படி" என்ற ஒரு "திட்டப்பணி" ஒரு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து செய்ய நேர்ந்தது. அதன் விளைவே இந்த பதிவு.

நன்றி


References:

  1. https://www.unodc.org/documents/human-trafficking/Country_profiles/North_America.pdf
  2. https://www.unodc.org/documents/data-and-analysis/glotip/2016_Global_Report_on_Trafficking_in_Persons.pdf




Sunday, April 7, 2019

மறுபடியும், கேரேமேர் Vs கேரேமேர், 90ml

ஒரு 40 வருடங்களுக்கு முன்பு 1979 இல், ஹாலிவூட்டில் "Kramer Vs Kramer" என்ற அற்புதமான படம். குடும்ப உறவுகளை, ஜெண்டர் பையஸ், அல்லது பாலின பாகுபாடுகள் குறித்து வந்த படம்.
ஆண்கள் பாதுகாப்பாளர்கள், வீட்டுக்கு தேவையானதை சம்பாதிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், தன் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கூட அறியாதவர்கள், அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், மதியம் உணவு வேளையில் கூட 3 மார்டினி அடிக்கலாம். மாறாக பெண்கள் :வீட்டை,  குழந்தைகளை, குடும்பத்தை, வீட்டு பெரியவர்களை பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும் கவலை குடும்ப பிரச்னை இருந்தாலும் பொறுத்து கொண்டு, தியாக சிகரம் ஆக இருக்க வேண்டும். என்ற ஜெண்டர் பையஸ் இல் இருந்து வெளியே வர துடிக்கிறாள் ஜோயன். தன்னுடைய மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ளாத கணவன், அவளுக்கு என்ன நடக்கிறது என்று கூட பரிமாறி கொள்ளாத கணவன் டெட்.

ஒரு நாள் மிக பெரிய ப்ரோமோஷன் கிடைத்ததை பகிர வீட்டுக்கு வரும் டெட் க்கு, தன்னுடைய மனைவி வீட்டை விட்டு செல்ல தயாராக இருக்கிறாள் என்று தெரிய வருகிறது. அவள் யாருடனும் "ஓடி போக வில்லை", மாறாக தன்னை புரிந்து கொள்ள அறிந்து கொள்ள, தன்னுடைய ஐடென்டிட்டி ஐ தெரிந்து கொள்ள செல்கிறாள்.

தானாக வாழ வேண்டும், தனக்கென்று ஒரு ஐடென்டிட்டி உருவாக்க விழையும் ஒரு பெண்ணின் தேடுதல் அது.  ஜெண்டர் ரோல்ஸ் மாற வேண்டும் என்று 40 வருடங்களுக்கு முன்பு சொன்ன படம் அது.







25 வருடங்களுக்கு முன்பு வந்த படம் . "மறுபடியும்"

"கல்யாணம்கிறது ஒரு செக்யூரிட்டி அப்படின்னு கவிதா நினைக்கிறாங்க, ஆனா ஒரு கையெழுத்து போட்டா அது முடிஞ்சிடும்னு அவங்களுக்கு தெரியல"

"மறுபடியும் என்னை கோழை ஆக்கிடாதீங்க. எல்லாத்தையும் உங்க மேல தூக்கி போட்டு ரிலாக்ஸ் ஆகிடுவேன் நான். எனக்கு அது வேண்டாம்."

"மறுபடியும்" படத்தின் அற்புதமான வரிகள்.

"கல்யாணம் என்பது  செக்யூரிட்டி" என்ற பார்வையில் இருந்து ஒரு பெண் விலகி தனி ஆளாக எந்த குடும்ப பெயர், கணவன் பெயர், அப்பா பெயர் இல்லாமல்  சுதந்திரமாக வாழ முடிவெடுத்த ஒரு இடத்தில் முடிந்த படம் அது. அந்த பெண்ணுக்கு வாழ ஒரு பிடிமானம் கொடுத்தது "தத்தெடுத்த அந்த குழந்தை"






"மறுபடியும்" படம் தற்போது வரை கொண்டாட படுகிறது என்றால் அதற்க்கு காரணம், "துளசி" கேரக்டர், ஒரு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற தமிழ் சமுதாயம் வரையறுத்த இலக்கணத்தில் இருந்து மாறாமல் அதே சமயம் தனக்கென்ற ஒரு ஐடென்டிட்டி தேடிய பெண்ணின் கதை என்பதால்.

இன்று வரை, பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் "பெண்ணின் விருப்பம் என்று ஒன்றும் இல்லை", ஆண் தன்னுடைய விருப்பத்தை பெண்ணின் மீதி திணிக்கலாம். பெண்கள் என்பவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும்  என்று திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. உதாரணமாக "ரோஜா", "மௌன ராகம் ".  ஒரு சில படங்களில் மட்டுமே வலுவான பெண் கதாபாத்திரம் இருக்கும். அதுவும் தனக்கென்று முடிவெடுக்க தெரிந்த, அந்த முடிவில் நிலைத்து நின்ற பெண் தமிழ் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சரி ஹாலிவுட்டில் 40 வருடங்களுக்கு முன்பு வந்த kramer vs  kramer போன்ற ஒரு கருத்து உள்ள படம் தற்போது தமிழில் எடுக்கப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள், என்ன எதிர் வினை வரும்? உடனே அந்த பெண்ணின் கேரக்ட்டர் மேல் படுகொலை நடந்து இருக்கும். என்னப்பா படம் எடுக்குறீங்க? எப்படி அந்த பெண் தன்னுடைய விருப்பப்படி முடிவெடுக்க முடியும். இது குடும்பத்துக்கு எதிரானது, கலாச்சார படுகொலை, என்று கத்தி இருப்பார்கள்.

இந்திய திரைப்படங்களை பொறுத்தவரை, ஜெண்டர் பையஸ் என்பது இன்று வரை மிக அதிகமாக விரவி கிடக்கிறது. இந்தியா போன்ற சமூகத்தில், ஒரு பெண் தனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை வாழ நினைக்கிறாள் என்பதை காட்சி படுத்த நினைத்த ஒரு படம் 90ML. "My life My rules!", தனக்கென்ற ஒரு ஐடென்டிட்டி திருமணம் ஆனால் தொலைந்து விடும் என்று நம்பும் ஒரு பெண், திருமணத்தை தவிர்க்கிறாள். தனக்கு பிடித்ததை செய்கிறாள். அது தண்ணி அடிப்பதில் ஆகட்டும், மற்ற வஸ்துகள் உபயோகிப்பதில் ஆகட்டும். இதுவே நம் கலாச்சார காவலர்களுக்கு பெரிய ஷாக் ஆகிறது. எப்படி சமூக சீர்கேட்டை இந்த படம் பரப்புகிறது என்று குய்யோ முறையோ என்று அடித்து கொள்கிறார்கள். அதாவது, இதே போன்ற ஒரு காட்சி 100இல் 99.99 தமிழ் படங்களில் கதாநாயகர்கள் செய்வார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படும். அதே சமயம், பெண்கள் இது போன்று செய்தால் கலாச்சார சீர்கேடாம்.




இன்னும் 40-50 வருடங்கள் பின்தங்கி இருக்கும் தமிழ் திரை உலகில்,  "My life My rules! போன்ற அல்ட்ரா மாடர்ன் கருத்துகளை கொண்டு இருக்கும் இது போன்ற படங்களை ஓட ஓட விரட்டியே தீர்வார்கள். இன்னும் அருக்காணி போல, "மாமா" என்று கதாநாயகனை விரட்டி விரட்டி காதலிக்கும் லூசு காதலி, அல்லது, தியாகசிகரம் மனைவி மட்டுமே இவர்கள் தேவை.  இந்திய சமூகத்தில், பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அதனை நீங்கள் சிறிதளவு தாண்டினாலும், நீங்கள் கலாச்சார சீரழிவை உண்டாக்குபவர்ஆக்கப்படும் .

இன்னும் மனதளவில் வளராத ஒரு சமூகத்தின் முன்பு, இது போன்ற கருத்துகள் கொண்ட படங்கள் தேவை இல்லை. ஏனெனில் புரிந்து கொள்ள படாது என்பது என் எண்ணம்.


டிஸ்கி 
இது என்னுடைய கருத்துகள் மட்டுமே. இது தமிழ் கலாச்சார சீர்கேட்டை ஆதரிப்பதாக படிப்பவர்களுக்கு தோன்றினால் அது என் பொறுப்பு அல்ல.






Sunday, March 24, 2019

கார் சேல்ஸ் ம், ஆண் உரிமையும், லிடியனும்!!

ரொம்ப நாள் கழிச்சு வலைப்பக்கம், ரொம்ப சந்தோசமா இருக்கு. அது என்னவோ தெரியல நிறய எழுதணும்னு நினைக்கும் போது நேரம் கிடைப்பது இல்லை. ஆனால் நேரம் இருக்கும் போது, ஒரு கோர்வையா எண்ணங்கள் வந்து விழ மாட்டேன்கிறது. என்ன ஆனாலும் சரி எதையாவது கிறுக்கணும்னு முடிவு செய்து எழுத ஆரம்பிக்கிறேன்.

செய்தி 1:

இப்போ எல்லாம் லண்டன் ல அல்லது UK ல இருக்கறவங்க எல்லாம் கார் வாங்குறது குறைஞ்சிருக்காம். ஒரு சில பிரெக்ஸிட்  னால  என்றாலும், சிலர்,  உபெர், லிப்ட் போன்ற செயலிகள் வந்ததன் தாக்கம் என்கிறார்கள்.  உபாயம் "தி கார்டியன்" , "பிபிசி" https://www.theguardian.com/business/2018/oct/04/bumper-to-slumper-new-emissions-tests-choke-uk-car-sales
https://www.bbc.com/news/business-47291627


கார் வாங்காம பப்லிக் ட்ராஸ்போர்ட், உபேர்  போன்ற வாகனங்களில் செல்வதில் என்னை பொறுத்தவரை நிறைய வசதிகள். டிராபிக் இல், எப்போ முன்னால இருக்கிற கார் போகும் நாம போகணும்னுகிற பிரச்னை இல்லை. ட்ரெயின் அல்லது பஸ் பிடிச்சோமா ஆபீஸ் போய் சேர்ந்தோமானு இருக்கு. இது போன்ற பப்லிக் ட்ரஸ்போர்ட் க்கு அல்லது HOV எனப்படும் நிறைய மக்கள் செல்லும் வண்டிகளுக்கு  என்று ஹை வே யில் தனி லேன்/பாதை உண்டு என்பதால், டிராபிக் இல் நிற்க வேண்டி இருப்பதில்லை. அது தவிர, கார் இன்சூரன்ஸ், பராமரிப்பு செலவு, பெட்ரோல் செலவு என்று அனைத்தும் மிச்சம். பல கம்பெனிகள் பயணப்படி கொடுப்பதால், நாம் ட்ரெயின் அல்லது பஸ்ஸுக்கு செலவுக்கும் பணத்தை திரும்ப ஆஃபிஸில் இருந்து வாங்கி விடலாம், நிம்மதியா ஆபீஸ் போனோமா வந்தோமான்னு இருக்கு. வார இறுதி நாட்களில் ஷாப்பிங் செல்ல மட்டுமே கார் என்பது எவ்வளவு சவுகரியமாக இருக்கிறது.

ஒரு இருபது வருடம் ரீவின்ட் செய்து பார்க்கிறேன். அப்போதும் இதே போல பஸ்ஸில் சென்றதுநியாபகம் வருகிறது. அப்போ எல்லாம், "ச்சே, நமக்குன்னு ஒரு கார் இருந்தா எப்படி இருக்கும்!!, இபப்டி கால் கடுக்க பஸ்ஸுக்கு நிக்க வேண்டியதில்லை இல்லை". என்று அலுத்து இருக்கிறேன். எல்லாம் பெர்செப்ஷன். அப்போ வசதின்னு நினைச்சது இப்போ உபத்திரவமா இருக்கு. அப்போ வேணும்னு தோன்றியது இப்போ வேணாமுன்னு தோணுது.


செய்தி 2:

எப்படி எல்லாம் 498A எனப்படும் பெண்களுக்கு ஆதரவான வரதட்சணைகொடுமை சட்டம், தற்போது ஆண்களுக்கு எதிராக பயன்படுத்த படுகிறது என்பது குறித்த ஒரு ஆவண படம் பார்க்க நேர்ந்தது.


தற்போது எல்லாம் கல்யாணம் கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியவில்லை பிரச்னை என்று வந்தால்,  பெண்கள் வசம் கையில் இருப்பது "மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துகிறார்கள்" என்ற வழக்கு. உண்மையாகவே வரதட்சணை பிரச்சனையால் கஷ்டப்படும் பெண்களுக்கு ஆதரவாக வடிவமைக்க பட்ட இந்த சட்டம். தற்போது ஆண்களுக்கு எதிராக எப்படி பெண்களால் அல்லது பெண் வீட்டாரால் பயன் படுத்த படுகிறது என்று  இந்த ஆவணப்படம் விளக்குகிறது. இதனையே சார்ந்த "நிஷா சர்மா, வரதட்சணை வழக்கு" அனைவரும் அறிந்திருக்க கூடும்.  எனக்கு தெரிந்தே சில வழக்குகள் இப்படி பெண்கள் சுய நலத்துக்காக  உபயோகித்து ஆண்களை பழி வாங்கிய சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாம், எப்படி பெண்களுக்கு பெண் உரிமை சட்டங்கள் பாதுகாக்க இருக்கிறதோ, அதே போல, ஆண் உரிமை சட்டங்களும் வேண்டுமோ? என்பதை யோசிக்க தூண்டி இருக்கின்றன.


உபாயம்: விக்கி, பிபிசி

https://en.wikipedia.org/wiki/Nisha_Sharma_dowry_case
https://www.bbc.com/news/world-asia-india-40749636



செய்தி 3:

Ambidextrous எனப்படும் இரு கைகளையும் வேறு காரியங்களுக்கு பயன்படுத்த கூடிய திறமை இருக்கும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவார்கள்.
 உபாயம் , "தி கார்டியன்", "வெப் எம் டி"

https://www.theguardian.com/education/2010/jan/25/ambidextrous-children-school-languages

https://www.webmd.com/children/news/20100125/ambidextrous-kids-more-likely-to-have-adhd#1

பெரும்பாலானவர்கள் "லிடியன் நாதஸ்வரம்" அவர்களின் "தி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட்" பரிசு வாங்கியதை பார்த்து என்னை போல ஆனந்த பட்டு இருப்பீர்கள். ஆனால், கவனித்து பார்த்தீர்கள் ஆனால், லிடியனின் இன்னொரு திறமை, Ambidexterity, அதாவது அவரின் இரண்டு கைகளும் இரண்டு பியானோவில் இரண்டு வகையான மியூசிக் வாசிக்கும் திறமை.





இது போன்ற இரண்டு கைகளையும் வெவ்வேறு காரியங்களுக்கு பயன்படுத்த பழகியவர்கள், அல்லது பிறவியிலேயே இது போன்ற திறமை கைகொண்டவர்கள் மிக மிக சிறந்த கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி. தலை சிறந்த இசை மேதைகள் அனைவரும் இப்படி இருக்கை பழக்கம் உடையவர்கள். ஏன் , சொல்ல போனால் ஐன்ஸ்டீன் அவர்களுமே, வலது மற்றும் இடது கைகளை ஒரே சமயத்தில் பல நேரத்தில் வேறு வேறு பணி செய்ய பயன்படுத்தினார் என்பது வரலாறு. அதனாலேயே அவர் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், அவுட் ஆப் தி பாக்ஸ் யோசித்து  "ரிலேட்டிவிட்டி தியரி" கொண்டு வர முடிந்தது.

இப்படி இரண்டு கை பழக்கம் உள்ளவர்கள் பள்ளிகளில், மொழிகளை கற்று கொள்ளுவதில் சிரமப்படுவார்கள் என்கிறது ஆராய்ச்சி. ஆனால், அவர்களுக்கு பிடித்த துறையில், பிடித்த விதத்தில் திறமையை ஊக்குவித்ததால் லிடியன் போன்று "இளம் ஜீனியஸ்" ஆகலாம். இவரின் இசை திறமையை ஊக்குவித்த இவரின் பெற்றோருக்கு பாராட்டுக்கள். படிப்பு மட்டும் உலகம் என்று எண்ணாமல், உள் திறமையை கண்டு ஊக்குவித்ததற்கு.

வாழ்த்துக்கள் லிடியன்.

நன்றி.





Sunday, January 6, 2019

கலவை: 16 வயதினிலே டாக்டர்ம், ருமினேஷன்ம், சில அறிவு கேள்விகளும் !!

ஏதோ ஒன்றை தேட யூ டூப் தேட விழைந்த போது, "செந்தூர பூவே, செந்தூர பூவே!" 16 வயதினிலே  பாடல் கேட்க நேர்ந்தது. அப்படியே அதனை குறித்த சிந்தனை பரவ, அந்த படமும் அடுத்து பார்க்க நேர்ந்தது.  பிறகு அதில் வந்த டாக்டர் குறித்த சிந்தனை. அவரின் கேரக்டர் குறித்த சிந்தனை என்று ஒன்றுக்கு பின் ஒன்றாக தொடர ஆரம்பித்தது.

இது ஒரு வித தொடர் சிந்தனை. அதாவது, எதோ ஒன்றை பார்க்க போக, அதனை தொடர்ந்து சில பல சிந்தனைகள் உங்களை சிந்திக்க வைக்க, அதனை தொடர்ந்து வேறு சில விஷயங்கள் உங்களுக்கு வர என்று தொடரும். அல்லது ஒரே சிந்தனையை வேறு வேறு கோணத்தில் சிந்திக்க ஆரம்பிப்போம். உளவியலில் இந்த மாதிரியான சிந்தனை, செக்கு மாடு போன்று ஒரே விடயத்தை திரும்ப திரும்ப சிந்திக்கும் நிலை, "ருமினேஷன்", என்று அழைக்க படுகிறது. ருமினேஷனுக்கும் மனஅழுத்தம் மனசிதைவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்போது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப நினைத்தது மனம் வருந்துகிறோமோ, அப்போதே மனஅழுத்தம் உண்டாகி மனசிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டாகும்.




திரும்ப 16 வயதினிலே டாக்டர் க்கு வருவோம். இப்பொழுது எல்லாம் இது போன்ற பெர்சோனாலிட்டி கொண்டவர்கள் சர்வ சாதாரணமாக இருப்பினும். இதனை போன்றவர்கள் எல்லா காலத்திலும் இருந்து இருக்கிறார்கள், அதாவது, அவர்களின் டைம் பாஸ் காக மட்டும் ஆட்களை தேடுபவர்கள். இவர்களுக்கு தேவை எந்த கமிட்மென்ட்ம் இல்லாத fun, சந்தோசம். ஒரு பெண்ணுக்கு அல்லது பையனுக்கு வலை வீசுவது, அவர்கள் வலையில் வீழும் வரை நன்றாக பேசி, நடிப்பது. பின்னர் வலையில் வீழ்ந்தவுடன், நன்கு அவர்களிடம் இருந்து "கறக்க வேண்டியதை கறந்து விடுவது". பின்னர். எதோ காரணம் சொல்லி கழட்டி விடுவது. இவர்கள் டைம் பாஸ் லவ்வேர்ஸ். கழட்டி விட காரணம், முக்கியமாக பொருளாதார காரணமாக இருக்கும். "நீ சம்பாதிக்கல, உன் கிட்ட பணம் இல்லை, எப்படி என்னை வச்சு காப்பாத்த போற?", "உங்க அப்பா சாதாரண வேலை பாக்குறாரு, உன்னால நான் கேட்டதை வாங்கி கொடுக்க முடியாது" என்று பல பல காரணங்கள். எப்படி இந்த படத்தில் டாக்டர், "எனக்கு வரப்போற வைப், ஒரு பொட்டி கடை காரி பொண்ணா?" என்று கேட்டு கழட்டி விடுவாரோ அப்படி கழட்டி விட்டு விட்டு சென்று கொண்டே இருப்பார்கள். வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு அவர்கள் வேலை பார்த்து போய் விடுவார்கள். நம்ம 16 வயதினிலே, டைம் பாஸ் லவ் டாக்டர் போல.


முகுந்த் என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்டான்?


  •  பூமியின் மேலோட்டில் (Crust) இருக்கும் ஆழமான பகுதி எது?


வழக்கம் போல எனக்கு முதல் கேள்விக்கு "கிராண்ட் கேன்யன்" என்று சொல்லி விழித்தேன். அது தவறு என்று பதில் வந்தது. "மரீனா ட்ரென்ச் " என்னும் பசுபிக் மகா சமுத்திரத்தில் "குவாம்" நாட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு இடமே பூமியின் மேலோட்டு ஆழமான இடம். கிட்டத்தட்ட பூமியின் மேலோட்டுக்கு  கீழே 25 கிலோமீட்டர் ஆழம் செல்லும் இடம் அது.


  • உங்களிடம் சாப்பிட தட்டுகள் இல்லை, ஆனால் இருப்பது 3 தட்டு போன்ற தட்டையான 3 பொருட்கள்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தவேண்டும் என்றால், எது உபயோகப்படுத்தலாம், எதில் கிருமிகள் கம்மி?
    • ஐபாட் 
    • காய்கறி வெட்டும் கட்டிங் போர்டு
    • டாய்லட் சீட் 
இரண்டாவது கேள்விக்கு, காய்கறி வெட்டும் போர்டு என்று பதில் அளித்தவுடன் , "அது தான் ஒர்ஸ்ட்சாய்ஸ்" . என்றான்.

அதே போல, போன், ஐபாட் என்று எதுவும் நல்ல சாய்ஸ் கிடையாது. டாய்லெட் சீட்டில் இருக்கும் பாக்டீரியாவை விட மிக மிக அதிக பாக்டீரியா செல்போன் மற்றும் கிட்டிங் போர்டுகளில் உண்டு. 
கூகிளில் இதை பற்றி தேடினால் நிறைய அறிவியல் கட்டுரை கிடைக்கும் என்பதால். சில சாம்பிள்கள் மட்டும் இங்கே.









நன்றி 


Tuesday, January 1, 2019

வருக 2019!!

 கடந்த வருடம் பெரும்பாலும் நன்றாக சென்றது என்றாலும் கடைசி இரண்டு மாதங்கள், நிறைய ஸ்ட்ரெஸ் கொடுத்தன. அதிலும் நடந்த சில விஷயங்கள் மனதை பெரிதும் பாதித்தன. முதல் விஷயமாக எங்கள் தோழிகள் குரூப்பில் நடந்த மரணம். அதுவும் சிறுவயது பெண்ணின் மரணம், எங்கள் அனைவரையும் உலுக்கிய ஒரு சம்பவம் அது. எவ்வளவு தூரம் பிடிவாதமாக இருக்கவேண்டும் அல்லது இருக்க கூடாது என்று எங்கள் அனைவருக்கும் செக் வைத்தது அந்த நிகழ்வு. 

எது சிறந்தது? ஆங்கில மருத்துவமா இல்லை இந்திய ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவமா?

வாட்ஸாப் முகநூல் என்று எது திறந்தாலும் உங்களுக்கு நிறைய பாரம்பரிய மருத்துவம், உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் தான் சிறந்தது, மற்றவை எல்லாம் கார்பொரேட் சதி என்று செய்திகள், பிரச்சாரங்கள் காணலாம். இது போன்ற பிரச்சாரங்கள் எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு ஜோடிக்கப்பட்ட பிரச்சாரங்கள். இந்த கேள்வி எனக்குள் அடிக்கடி

எவ்வளவு தூரம் ஒருவர் நம் மருத்துவ முறை தான் சிறந்தது, பாரம்பரியம், இயற்க்கை மருத்துவம், மூலிகை, ஆயுர்வேதம்  தான் உண்மையான மருத்துவம் மற்ற ஆங்கில மருத்துவம் எல்லாம் டுபாக்கூர் என்று இருக்கலாம்.  

அப்படி ஒருவர் இருந்து, ஆங்கில மருத்துவத்தில் சாதாரணமாக தீர்க்க கூடிய ஒரு வியாதியை கவனிக்காமல், முற்றவைத்து, பாரம்பரிய மருத்துவத்தை நாடி எந்த பயனும் இல்லாமல்  இறந்த ஒரு நிகழ்வே அந்த தோழியின் மரணம். தினசரி நான் அறிவுரை கூறினாலும், எதனையும் அவள் காது கொடுத்து கேட்கவில்லை. அட்வைஸ், பிரீ அட்வைஸ் என்று ஒதுக்கி விட்டு இருக்கிறார்கள். அந்த தோழியை நினைத்து நினைத்து நாங்கள் வருந்த மட்டுமே முடிந்தது. ஓரளவுக்கு மேல் எவருக்கும் அறிவுரை கூற இயலாது, என்று நான் கற்று கொண்டது அந்த நிகழ்வில் நடந்தது.

இரண்டாவது நிகழ்வு, ஒரு தோழியின் மிட் லைப் மெனோபாஸ் வாழ்வில் இருந்த டெப்ரேசன் கவனிக்கப்படாமல் விடப்பட்டு அவள் எஸ்ட்ரீம் எல்லைக்கு சென்ற நிகழ்வு அவளின் வாழ்க்கையில் பல கசப்பான நிகழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை போன்ற நேரங்களில் கணவன் மற்றும் சொந்தங்களின் அரவணைப்பு மிக தேவை. அது இல்லாமல் அவர்களே எதிரியாக இருந்தால் என்ன நடக்கும் என்று நான் கண்டது. இங்கும், எதுவும் செய்ய முடியாமல்,  நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் சில விஷயங்கள் நடந்தே தீரும் என்று நான் கண்டது.

எவ்வளவு முயன்றாலும் சில விஷயங்கள் நடக்கும் என்றால் நடந்தே தீரும் என்று கடந்த வருடம் காட்டி சென்று இருக்கிறது. 

ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போது, இந்த வருடம் அது செய்ய வேண்டும் இது செய்யவேண்டும் என்று நினைப்பதுண்டு. அது ரெசொலூஷன் என்றெல்லாம் இல்லை, மாறாக ஒரு டுடூ லிஸ்ட் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அப்படி இந்த வருடம், ஸ்ட்ரெஸ் கண்ட்ரோல் செய்வது, அல்லது ஸ்ட்ரெஸ் வந்தால் எப்படி சமாளிப்பது, என்னுடைய டு டூ லிஸ்டில் முதலில் இருக்கிறது. , முடிந்தவரை மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும், தியானம் செய்ய வேண்டும், என்பன ஒரு சில டு டூ ஐட்டங்கள். அதில் , முகுந்தின் இண்டெர்ஸ்ட் களை பப்லிஷ் செய்வது என்பதும் ஒன்று. அதன் விளைவே  முகுந்தின் பெர்சனல் ப்ளாக் 

முகுந்த் அவனுடைய பள்ளி ப்ராஜெக்ட் காக ஒரு கதை எழுதி அதில் சில பல படங்களையும் வரைந்து இருந்தான். அவனை உற்சாகப்படுத்த நான் ஒரு ப்ளாக் உருவாக்கி அதில் அவனுடைய கதையை வெளியிட்டு இருக்கிறேன். நிறைய இலக்கண பிழைகள்/எழுத்து பிழைகள் அதில் இருக்கலாம்.

முடிந்தால் படித்து கருத்திடவும். நன்றி.



எல்லோருக்கும் எல்லா வளமும் கிடைத்திட இந்த புது வருடத்தில் எல்லா வல்ல இறைவன்/இயற்கை அருள்புரியட்டும்!!


Happy New Year 2019.