Sunday, January 15, 2017

கலவை- படித்த, கவனித்த, கேட்ட, ரசித்தவை


படித்தது 

“Oysters open completely when the moon is full; and when the crab sees one it throws a piece of stone or seaweed into it and the oyster cannot close again so that it serves the crab for meat. Such is the fate of him who opens his mouth too much and thereby puts himself at the mercy of the listener"
 Leonardo da Vinci, 1452-1519


தமிழில் மொழி பெயர்த்தால், "சிப்பிகள்" முழு நிலவை கண்டதும் முழுதும் திறந்து இருக்கும். இதனை சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் நண்டு, சிறிய கல்லையோ, அல்லது கடற்பாசியையோ அதில் போட்டு விடும். அதன் பின்பு அந்த சிப்பியால் மூட முடியாது, நண்டிற்கு உணவாகிவிடும்.  நேரம் காலம் பார்க்காமல், எப்போதும் தான் பேசுவதே வார்த்தை என்று வள வள வென்று பேசிக்கொண்டிருக்கும் ஒருவனுடைய வாழ்க்கையும், ஏதேனும் காரியம் ஆகா வேண்டுமாயின், எதிரிஅவனை தூண்டி விட்டு அவன் வாயாலேயே உளற விட்டு, அவசர கதியில் செயல் செய்ய வைத்து உங்களை எளிதாக தோற்க்கடித்து விடுவான். எப்போதும் ஓயாது பேசி கொண்டிருக்கும் பலருக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறன். 


கவனித்தவை: முன்பெல்லாம் பஸ் நிலையம், ரயில் நிலையம், லிப்ட், சிக்னல் போன்ற பொது இடங்களில் நின்று கொண்டிருந்தாலோ அல்லது பொது போக்குவரத்துகளில் சென்று கொண்டிருந்தாலோ தெரியாத மக்களாக இருப்பினும் ஏதேனும் பேசுவது அல்லது சிரிப்பது என்பது நடந்தது. உதாரணமாக, டவுன் பஸ்களில் அடிக்கடி செல்லும் நேரம், யாரேனும் வயதானவர்கள் வந்தால் எழுந்து இடம் கொடுப்பது, கர்ப்பினி பெண்கள் வந்தால் இடம் கொடுப்பது என்று இருக்கும். அல்லது ஒரு புத்தகம் வாசிப்பது, வார இதழ் வாசிப்பது என்பதெல்லாம் சாதாரணம். அதுவும் நீண்ட தூர பயணம் செய்பவர்கள், எதோ ஒரு வகையில் ரயில் சிநேகம் உண்டாக்கி ஒரு வித நட்பு கூட தொடரலாம்.  எனக்கே அப்படி சில அனுபவங்கள் உண்டு. ஒரு வயதான, ஆங்கிலம் தெரியாத அம்மாவை பிளைட்டில் அழைத்து வந்ததற்கு இப்போதும் போன் செய்து நன்றி சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் பழைய கதை என்று நினைக்க சொல்ல வைக்கிறது இப்பெல்லாம் நான் கவனிக்கும் பல இளைய தலைமுறை மக்களின் செயல்.

 இப்போதெல்லாம் மக்களிடம்  ஐ காண்டாக்ட் என்பதே அருகி போய் விட்டது. நீங்களே கவனித்து பாருங்கள், முன்பெல்லாம் லிப்ட்க்கு காத்திருக்கிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அப்போது ஏதாவது பேசுவார்கள். முக்கியமாக, அன்றைய வெதர் எப்படி இருக்கு, கேம்ஸ், என்பது போன்ற பொது விடயம் நிறைய இருந்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம், ஆளுக்கொரு போன் வைத்து கொண்டு எல்லா நேரமும் அதில் முகம் புதைத்து கொள்கின்றனர். போன் என்பது ஒரு எஸ்கேப் வழி ஆகிவிட்டிருக்கிறது.  உங்களுக்கு பிறரிடம் பேச விருப்பம் இல்லையா,  தவிர்க்க நினைக்கிறீர்களா, உடனே போனை எடுத்து அதில் பார்க்க வேண்டி இருக்கோ இல்லையோ, எதையாவது நோண்ட வேண்டியது. இல்லை 1000 வைத்து முறையாக ஏதாவது வந்திருக்கிறியாதா என்று வாட்ஸாப் பார்க்க வேண்டியது, என்று செய்வதை அப்பட்டமாக காண முடிகிறது. இல்லை, இளைய தலைமுறை மக்கள், காதில் ஏர் போனை சொருகி கொண்டு, கண்ணை மூடி கொள்ளுகிறார்கள்.

கண்ணை பார்த்து பேசாமல் அவாய்ட் பண்ணும் இவர்கள்,  நிஜத்தை, எதிரில் இருக்கும் ஒருவரின் பெர்சனாலிட்டியை அறிய முற்படாமல், எப்போதும் ஒரு கனவுலகில் வாழ்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. எந்த சூழலை எப்படி சமாளிப்பது என்பது எப்போதும் போனை பார்த்து கொண்டிருப்பதால் கிடைக்காது, இருக்கும் சூழலை கண் திறந்து பார்த்தால் மட்டுமே புரியும், பிடிபடும் என்று எப்படி இவர்களிடம் சொல்வது?

கேட்டது : கணவன் மனைவி உறவு குறித்தும், அதில் "அருகிவிட்ட காதல் என்பது எப்படி புதுப்பிக்க பட வேண்டும் என்பது குறித்த ரிலேஷன்ஷிப் கவுன்சிலர், T.T. Rangarajan அவர்களின் பேச்சினை தோழிகள் குழுமத்தில் ஷேர் செய்திருந்தனர். எப்பொழுதும் அடுத்தவரை நோக்கி குறை மட்டுமே சொல்லிக்கொண்டு நாம் திரிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் இது ஒரு நல்ல ஸெல்ப் செக் மற்றும் அனாலிசிஸ் போல தோன்றியது. நீங்களும் கேட்டு பாருங்கள், கட்டாயம் பிடிக்கும்.



ரசித்தது : எப்போதும் திரில்லர் வகை படங்கள் பார்க்க பிடிக்கும். எந்த ஒரு திரில்லர் படம் என்றாலும் கதாநாயகன் எவ்வளவு முக்கியமோ அதற்க்கு சமமான அளவில் வில்லனின் பாத்திரப்படைப்பும் இருக்கும் பட்சத்தில் படத்தின் வெற்றி உறுதி என்று சொல்லலாம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தனிஒருவன் படத்தின் சித்தார்த் அபிமன்யு, பாத்திர படைப்பு. கதாநாயகனை விட ஒரு படி மேலே சென்ற ரசிக்கும் படியான ஒரு வில்லன்.  அதே போல, எனக்கு பிடித்த ஒரு திரில்லர் என்றால் சமீபத்தில் பார்த்த "துருவங்கள் பதினாறு" படம். கடைசி வரை சீட் நுனியில், அடுத்து என்ன அடுத்து என்ன என்று தேட வைத்து சற்றென்று முடித்த ஒரு படம். என்ன முடிச்சிருச்சா?, என்னவானது என்று கேட்டு தெரிந்து முடிவை அனலைஸ் செய்து பார்த்து புரிந்து கொண்ட படம். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ரஹ்மான், நல்லவரா கெட்டவரா, என்று கடைசி வரை தெரியவில்லை. அது  பெர்செப்ஷன் பொறுத்தது. எனக்கு பிடித்த திரில்லர் பட வரிசையில் இந்த படமும் உண்டு.


நன்றி




Friday, January 13, 2017

"ஜல்லிக்கட்டு தமிழர்கள் அடையாளம் " அட்லாண்டாவில் ஒலித்த கோஷம் !

நாமெல்லாம் எதுக்குங்க தமிழ்ல ப்ளாக் எழுதுறோம், இன்னும் நாமெல்லாம் தமிழை பிடிச்சிட்டு இருக்கோம், ஏனென்றால் நாம் தமிழர் என்ற அடையாளம் எங்கு சென்றாலும் மறைவதில்லை. அது எந்த நாட்டுக்கு சென்றாலும் இருக்கும். அதே போல மற்றொரு அடையாளம், காலம் காலமாக நடைபெறும் ஒன்று, "ஏறு தழுவுதல்" என்ற பண்டைய பாரம்பரியம். ஏற்கனவே, ஒவ்வொரு விஷயமாக ஒவ்வொரு தலைமுறையிலும் மறைந்து, மருகி வரும் இந்த காலத்தில், இப்படி ஒரு பாரம்பரியமே நடைபெற கூடாதென்ற நிகழ்வு தடுக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில், ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், என்ற கோஷத்துடன் ஜல்லிக்கட்டை ஆதரித்து அட்லாண்டா வாழ் தமிழர்கள் இன்று அட்லாண்டா,"ஷாரன் பார்க்கில்" ஒன்று கூடி தங்களின் ஆதரவை தெரிவித்த நிகழ்வு நடந்தது. தமிழர்களின் அடையாளம் "ஜல்லிக்கட்டு" அதனை தொடர்ந்து நடத்துவோம். . என்று கூடிய தமிழர்கள் சார்பாக,  இங்கே சில புகைபடங்கள்.  










நமது பாரம்பரியம் ஜல்லிக்கட்டு அதனை தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற எனது கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.

நன்றி 

Wednesday, January 11, 2017

லாஸ் ஏஞ்சலீஸ் டு சான் பிரான்சிஸ்கோ, தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

இந்த வருடம் புது வருடம் பிறந்தது, புது ஊரில். ஒரு கருத்தரங்கில் பங்கேற்க, பேச என்று கலிபோர்னியா செல்ல நேர்ந்தது. முன்பே ஒரு முறை லாஸ் ஏஞ்சலீஸ் சென்றிருந்தாலும், முதல் முறை முகுந்துடன். "கோல்டன் கேட் பாலம்" பார்த்தே ஆகவேண்டும் என்று விரும்பியதால். LA யில் இருந்து சிலிக்கான் வேலி வரை பின்னர் SFO டு LA  வரை  5- 6 மணி நேர கார் பயணம். 

LA யில் இருந்து SFO செல்ல வேண்டும் என்றால் 3 வழிகள் உண்டு. ஒன்று மிக மிக அழகான "பசிபிக் கோஸ்ட் ஹை வே" கடற்கரை ஓரம் மலையில் அமைத்த பாதை கீழே ஆர்ப்பரிக்கும் பசிபிக் மகா சமுத்திரம், என்ற மிக மிக அழகான பாதை. அழகென்றாலே ஆபத்து உண்டு என்று யாரோ சொன்னது போல, மிக மிக கவனமாக ஓட்ட வேண்டிய பாதை. பகலில் மிக அற்புதமான சீனிக் டிரைவ் ஆக இருக்கும் இது, மாலை மயங்கியவுடன் மிக ஆபத்தான பாதை ஆகிவிடும். கும்மிருட்டில், மலைப்பாதையில், எதிர் வரும் ஆப்போசிட் ட்ராபிக் கண்ணில் ஒளி அடிக்கும் ஆபத்தில், கொஞ்சம் வண்டியை திசை திருப்பினாலும் கடலில் விழ வேண்டிய நிலை. வழியில் எந்த எக்ஸிட் ம் இல்லாமல், எந்த ஸ்டாப் ம் பண்ண முடியாமல்,  2- 3 மணி நேரம், அப்படி ஒரு சூழலில் வண்டி ஓட்டி வர நேர்ந்தது மறக்க முடியா அனுபவம்.  




இந்த  பாதை எவ்வளவுக்கு எவ்வளவு அற்புதமாக இருந்ததோ அதற்க்கு நேர் எதிர் இருந்தது, LA யில் இருந்து SFO நாங்கள் சென்ற ஐ-5 எனப்படும் சென்ட்ரல் கலிபோர்னியா வழி  செல்லும் ஒரு பாதை.

ஆரம்பிக்கும் போது இந்த பாதையும் அழகாகவே  இருந்தது, சுற்றிலும் மலைகள் சூழ, அதில் வெள்ளை போர்வைகள் போல பனி படர்ந்து அற்புதமான காட்சியாக இருந்தது. இந்த காட்சியை ரசித்து கொண்டே வண்டி ஓட்டி கொண்டிருந்த போது, தூரத்தில் ஒரு இருள் சூழ்ந்த நிகழ்வு போல, கரும் புகையா அல்லது புழுதியா என்று தெரியவில்லை லாண்ட்ஸ்கேப்பில் பார்த்தால் நம்மை சுற்றிலும் ஒரு 180 டிகிரி அளவு போல புகை போல படர்ந்தது போல தென்பட்டது. இதென்ன Smog ஆக இருக்குமோ என்று நினைத்து வண்டியை விட, அது உண்மையில் "டஸ்ட் பவுல்" என்று காலிஃபோர்னியர்கள் சொல்வது போல ஒரு புழுதி படலம். 



மத்திய காலிஃபோர்னியாவில் எங்கெங்கு நோக்கினும் தண்ணீர் பஞ்சம்,  சாலையில் இரு மருங்கிலும், வாடிய பயிர்களும், அதனை சார்ந்த அட்டைகளும் காண நேர்ந்தது. எது முக்கியம், புது புது பாலங்களா? இல்லை நிலத்திற்கு நீரா? என்று அரசாங்கத்தை தாக்கி பல பல போர்டுகள்.





இந்த பலகைகளை பார்த்து கொண்டே வந்த எங்களுக்கு திடீரென்று மூக்கை துளைக்கும் மாட்டு சாண நாற்றம். குடலை பிடுங்கும் ஒரு நாற்றம் அது. காரின், AC எல்லாவற்றையும் நிறுத்தி வைத்துவிட்டு வண்டியை செலுத்தினாலும் இந்த நாற்றத்தை பொறுக்க முடியவில்லை. 
அப்புறம் நாங்கள் பார்த்தது, "ஹாரிஸ் ரான்ச்" எனப்படும் அமெரிக்காவின் #1 மாடுகளை வளர்த்து/வாங்கி உணவுக்காக வெட்டும் இடம். ஆயிரக்கணக்கான ஏக்கரில், எங்கெங்கு காணினும் மாடுகள், பல லட்சம் மாடுகள், தங்களின் சாணத்தின் மீது தானே நின்று கொண்டு, மிக மிக குறைந்த இடத்தில், பார்க்கவே பாவமாக இருந்தது. 

இந்தியாவில், நிறைய மாட்டு கொட்டகைக்கு சென்று இருக்கிறேன், ஆனாலும் இப்படி ஒரு நாற்றத்தை நுகர்ந்ததில்லை. ஒரு வேளை , வெட்டப்படும் முன், நன்கு கொழுக்க வைக்க என்று ஸ்பெஷல் சாப்பாடு மாடுகளுக்கு கொடுக்க படுகிறது. அது நிறைய சோளமும், ப்ரொடீனும் நிறைந்த ஒரு வகை உணவு. அதனாலேயே, க்ரீன் ஹவுஸ் காஸெஸ் எனப்படும், கழிவு பொருட்களில் இருந்து வரும் கேஸ்கள் அதிகமாக இந்த மாடுகளில் இருந்து வருகிறதா தெரியவில்லை.  ஆனால், ஒரு முறை இந்த பக்கம் வந்து இந்த "வாசத்தை" நுகர்ந்த எவரும், ஹம்பர்கர்ஓ, அல்லது சடீக் ஓ அல்லது பீப் பிரை ஓ சில நாட்கள் கட்டாயம் சாப்பிட மாட்டார்கள். 




 இந்த மாடுகளுக்கு உணவளிக்க, தண்ணீர் காட்ட மட்டும் எப்படி இவர்களுக்கு தண்ணீர் கிடக்கிறது என்று எனக்கு ஒரே கேள்வி. ஏனெனில், ரெஸ்டாரெண்டில் சாப்பிட சென்றால் கூட, ஒரு முறை தண்ணீர் வந்து வைத்த பிறகு மறுமுறை வைக்க, கெஞ்ச வேண்டி இருக்கிறது. தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று எல்லா இடங்களிலும் போஸ்டர்.  அமெரிக்கா முழுதுக்கும் சாப்பாடு வருவது, கிட்டத்தட்ட 60-80% வரை கலிஃபோர்னியாவில் இருந்து. கலிபோனியாவில் இது போல தண்ணீர் பஞ்சம் இருக்க, சாப்பாட்டு உற்பத்திக்கு என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. மிக பெரிய கேள்வி குறி.

இதெல்லாம் எனக்கு, எங்கே செல்லும் இந்த பாதை என்று என்னுடைய "தண்ணீருக்காக ஒரு யுத்தம் வராமல் தடுப்போம்" முந்தைய பதிவை ஞாபக படுத்தின. 

மொத்தத்தில், லாஸ் ஏஞ்சலீஸ் , சான் பிரான்சிஸ்கோ பயணம், ஒரு மறக்க முடியா அனுபவம்.

நன்றி.