Sunday, January 28, 2018

ஏன், எனக்கு மட்டும் இது வந்தது???!!!

ஏன், எனக்கு மட்டும் இது வந்தது, ஏன் இந்த மாதிரி கஷ்டம் எனக்கு வந்தது. இந்த நிலை எனக்கு மட்டும் ஏன்? இந்த நிலை எனக்கு வராமல் இருந்திருக்கலாமே!!! இப்படி வாழ்க்கையில் புலம்பாதவர்கள் உண்டோ!!

என்ன ரொம்ப நாட்கள் கழித்து வலைப்பக்கம் வந்து எழுத ஆரம்பிக்கும் போதே புலம்பலா?? என்று நினைக்க வேண்டாம். வலைப்பக்கம் வர முடியாமல் பல மாதங்கள் ஆகும் நிலை. ஒவ்வொரு நாளும் Todo லிஸ்ட் போட்டு இதனை செய்து முடிக்க வேண்டும் அதனை செய்து முடிக்க வேண்டும் என்று பெரிய நீண்ட லிஸ்ட் , போட்டு செயலாற்ற வேண்டிய நிலை.  கடந்த ஆறு மாதத்தில் ஒவ்வொரு மாதமும் எதோ ஒரு ஊருக்கு வேலை நிமித்தமாக பயணப்பட நேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறை பயணப்படும் போதும் ஒரு டார்கெட் முடிக்க வேண்டும் என்று கொடுக்க படும், அதனை நிறைவேற்றவில்லை எனில், வேலை இருக்குமோ இருக்காதோ என்ற நிலை.. எல்லா நேரங்களிலும் எதோ ஒரு டென்ஷனுடன் சுத்த வேண்டிய நிலை.. இதில்..கூட இருந்து நல்லவர்கள் போல நடித்து, நம்மை பற்றி போட்டு கொடுத்து மேலிடத்தில் நல்ல பெயர் வாங்கும் மக்கள். அட போங்கடா...என்ன வாழ்க்கை இது... என்று ஒவ்வொரு முறை நான் பயணம் செய்ய ஆரம்பிக்கும் போது, தினமும்.... பதிவு ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்விகள் எனக்கும் தொக்கி நிற்கும். ஏன், எனக்கு மட்டும் இது நேர்கிறது.

3 விஷயங்கள் எல்லாமே எதோ ஒரு வகையில் எனக்கு இந்த கேள்விக்கான பதிலை கொடுத்து இருக்கின்றன.

முதல் விடயம் : "லார்ட் ஆப் தி ரிங்ஸ்"  இன் முதல் பகுதியான "பெல்லோஷிப் ஆப் தி ரிங்:

நெட்பிலிக்ஸில் , எதையோ ஒன்றை தேட போக, எதோ ஒன்று அகப்பட்டது போல "லார்ட் ஆப் தி ரிங்ஸ்"  இன் முதல் பகுதியான "பெல்லோஷிப் ஆப் தி ரிங்" வந்திருந்தது. இந்த படத்தை பார்த்ததும், என்னுடைய ஸ்பின்ஸ்டர்  வாழ்க்கை எனக்கு ஞாபகம் வந்தது. எந்த கவலையும் இல்லாமல், நண்பர்களுடன் இந்த படம் வந்த புதிதில் பார்த்த ஞாபகம்.

ரொம்ப சுருக்கமாக அதன் கதை.. மிக சந்தோசமாக தன்னுடைய வாழ்க்கையை "ஷையர்" என்ற ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் "பிருடோ" க்கு அவனுடைய அங்கிள் இடம் இருந்து ஒரு "ரிங்" கிடக்கிறது. அங்கே வரும் "கண்டல்ப்" மூலமாக அது "மந்திர ரிங்" அது "கருப்பு அரசன்" சவுரன் உடையது. இந்த ரிங் இல்லாமல் அவன், தற்போது மனித உரு எடுக்க முடியாமல் சூட்சும சரீரத்தில் சுற்றி கொண்டு இருக்கிறன். அவனுடைய படைகளான "ஒர்க்" ஐ பல ஊர்களுக்கும் அனுப்பி தேடி கொண்டிருக்கிறான். இப்போது அந்த "ரிங்கை" மோர்டர் என்ற ஊரில் இருக்கும் எரிமலையில் சென்று அழிக்க வேண்டும். இந்த பணியை செய்யும் பொறுப்பு "பிருடோ"வை அடைகிறது.

அந்த ரிங் தன்னுடைய தலைவனை எப்படியம் அடைய வேண்டுகிறது, அதனால் எல்லா விதமான காரியமும் செய்கிறது..அதன் கனத்தை தாங்க முடியாமல் பிருடோ , கண்டல்ப் இடம் கேட்கிறான்..
"ஏன்  இந்த ரிங் என்னிடம் வந்தது?.. இது என்னிடம் வராமலே இருந்திருக்கலாம்?
அதற்க்கு கண்டல்ப், "இதனையே, இங்கு வாழும் பலரும் நினைக்கிறார்கள், ஆனால், அவர்கள் கையில் எதுவும் இல்லை. இப்போது நம் கையில் இருப்பது எல்லாம், இருக்கும் நேரத்தில் எப்படி இதனை செய்வது என்பதே. நம்மை சுற்றி , நம்மால் கட்டுப்படுத்த முடியாத, அறிய முடியாத சக்தி இருக்கிறது பிருடோ, கெட்ட சக்தியையும் தவிர.."என்கிறார்.


Photos from Google images

இரண்டாவது விடயம்: டான் பிரவுன் அவர்களின் நாவலான, "தி லாஸ்ட் சிம்பல்"
நேரம் கிடைக்கும் போது வாசிக்கும் விஷயங்களில் பல மாதங்களாக உக்கார்ந்து படித்த இந்த புத்தகத்தில் கிட்ட தட்ட மேலே சொன்னது போன்ற ஒரு கேள்வி "ராபர்ட் லாங்டன்" இடம் தொக்கி நிற்கும். "ஏன் இந்த பிரமிட் என்னிடம் கொடுக்க பட்டது?" எதற்க்காக என்னை அனைவரும் துரத்த வேண்டும், என்ற கேள்வி?" அதற்க்கு "இந்த பிரமிட்டில் உள்ள செய்தியை உன்னை தவிர வேறு யாரும் இதில் உள்ள குறியீடுகளை பகுக்க இயலாது. அதற்காகவே, உன்னிடம் வந்திருக்கிறது. இப்போது இருக்கும் நேரத்தில் இதனை எப்படி பகுத்து உணர்வது என்று மட்டுமே நீ சிந்திக்க வேண்டும்". என்று சொல்ல படுகிறது.

மேலும், Neotic Sciences, என்ற ஒரு அறிவியல் பிரிவு நமக்கு அறிவுறுத்த படுகிறது. IONS , எனப்படும் "இன்ஸ்டிடியூட் ஆப் நெஓடிக் சயின்சஸ்" என்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் குறித்து பகிரபடுகிறது. இது அறிவியலையும், மனோதத்துவத்தையும், கடவுளையும் இணைக்கும் ஒரு அறிவியல். எப்படி நாமெல்லாம் இந்த உலகின்/அண்டத்தின் ஒரு அங்கம், என்று படிக்கும் மற்றும் உணரும் ஒரு நிலை. (மேலும் இந்த நிறுவனம் பற்றி அறிய " http://noetic.org/about/what-are-noetic-sciences".). இதனை உருவாக்கியவர், "எட்கர் மிட்சேல்" என்னும் astronaut. நிலவுக்கு செல்லும் மிஷனில் ஒரு நாள் 360 டிகிரி சுழல நேரிட்ட போது, தனக்கு ஏற்பட்ட ஒரு நிலையை, வேறு எந்த புக், தியறியாலும் என்னால் உணர முடியவில்லை. ஆனால், அந்த நிலையை "சமாதி" என்று ஹிந்து மித்தாலஜி தெரிவிக்கிறது. என்று இந்த அறிவியல் பற்றி அவர் தெரிவிக்கிறார்.









நேரம் கிடைக்கும் போது, /ioNS பற்றி படித்து பாருங்கள். எனக்கு கிடைத்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்க கூடும்.


மூன்றாவது விடயம்: பகவத் கீதை, தமிழ் ஒலி வடிவம் 

எப்பொழுதெல்லாம், மனது கஷ்டமாக இருக்கிறதோ எதாவது ஒன்றை வாசிக்க விழைவேன். அதில்  பகவத் கீதை புத்தகமும் அடங்கும். எதையோ தேடும் பொது, இந்த பகவத் கீதை தமிழ் ஒலி  வடிவம் கிடைத்தது. கிட்டத்தட்ட, அதே கேள்வியை அர்ஜுனனும் கேட்கிறான். "ஏன், எனக்கு இந்த போர் வந்தது?, பேசாமல் நான் சன்யாசியாகி விடுகிறேன்", எனக்கு இது தேவை இல்லை, என்கிறான். ஆனால், ஒரே பதில், இதனை தீர்மானிப்பது நீ அல்ல, இது எனக்கு வேணும், அது வேணாம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் உனக்கு இல்லை. இப்போது உனக்கு இருக்கும் கடமை, கொடுக்கப்பட்ட கணத்தில், நேரத்தில், ஒழுங்காக கடமை ஆற்றுவது தான்."








எந்த மொழியாக இருப்ப்பினும், கதை, இதிகாசமாக இருப்பினும், இதுவே திரும்ப திரும்ப கூறப்படுகிறது. எதனை செய்ய வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுக்கும் அதிகாரம் நமக்கு இல்லை. நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்வதே, நம்முடைய அதிகாரத்தில்உள்ளது. வேறெதுவும் நம் கையில் இல்லை.