Saturday, April 29, 2017

கழுகும், நடுத்தர வயது மனிதனும்!!

"கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை" என்ற பழமொழி எந்த விஷயத்தில் சரியாக இருக்கிறதோ தெரியவில்லை, என்னுடைய பதிவெழுதும் விசயத்தில் மிக சரியாகவே இருக்கிறது. வேலை மேல் வேலை என்பதை விட, கழுத்து முழுகும் வரை வேலை. சில நேரங்களில், உட்கார கூட முடியாமல், ஓடி கொண்டே இருப்பது போன்ற நிலை. வார நாட்களில் எல்லாம் காலையில் இருந்து மாலை வரை ஆபிசில் கழுத்து ஓடியும் வரை வேலை, வீட்டுக்கு வந்தவுடன், வீட்டு வேலை, முகுந்த்உடன் வீட்டுப்பாடம் செய்ய உட்கார, சமையல் என்று, அதிக நேரம் வேலை பார்த்து, பளு காரணமாக கழுத்து மற்றும் முதுகு வலி வேறு வந்து படுத்துகிறது.  எப்போ பாரு ஓடு ஓடுன்னு ஓடிட்டே இருக்கிற மாதிரி. சொல்ல போனால் வேலை பார்க்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு காமன் பிரச்னை இது.  அதுவும் பெண்களுக்கு.  என்னடா வாழ்க்கை என்று சில நேரம் தோன்றுகிறது.


picture from Google Images

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, நண்பர்கள் குழாமில் சிலர், "கழுகின் வாழ்க்கை" என்பது குறித்த ஒரு செய்தி அனுப்பி இருந்தார்கள். அது, ஒரு கழுகு 70 வயது வரை உயிர் வாழ முடியும்,  ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு, பிறகு கழுகின் அலகு மற்றும் கால் நகம் அதன் கொத்தி தின்னும் அல்லது பிடிக்கும் சக்தியை இழந்து விடும். இப்போது கழுகுக்கு இரண்டே இரண்டு சாய்ஸ் உண்டு, 1) எந்த இரையையும் பிடிக்காமல்/பிடிக்க முடியாமல் பட்டினி கடந்து சாக வேண்டியது 2) தனது அலகு மாற்று கால் நகத்தை ஏதாவது பாறை அல்லது கல்லில் மோதி உடைப்பது. அப்படி உடைக்கப்படும் நகம் மற்றும் அழகு, திரும்ப  வளர்ந்து அதனால் மறுபடியும் இரையை பிடித்து வாழ முடியும்"

அதே போல மனித வாழ்க்கையும், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, போதும் வாழ்க்கை..இருந்து என்ன செய்ய போறோம், வாழ்க்கை போறமாதிரி போய் முடிக்கட்டும். இனிமே என்ன புதுசா செய்ய போறோம், அதான் வயசாயிடுச்சில்ல..என்று பலர் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இந்தியாவில், ஒரு 30 வயதை கடந்தாலே, பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று ஒரு சோம்பேறித்தனம் வந்து விடுகிறதா? அல்லது வயசாயிடுச்சில்ல நமக்கு என்று எண்ணம் வந்துவிடுகிறதா என்று தெரியவில்லை. பெண்கள் அதுவும் குறிப்பாக, சமையல், குழந்தைகள் பார்த்து கொள்வது, அவர்களுக்கு சொல்லி கொடுப்பது, குடும்பத்தில் இருப்பவர்களை கவனிப்பது, பிறகு டிவி சீரியல்களை காலத்தை கழிப்பது.  இதுவே அவர்களின் ரொடீன்.  இதனை தவிர, அவர்களுக்கு என்று எதுவும் செய்து கொள்வதில்லை.  மற்ற ஊர்களில் எப்படியோ, ஆனால் இன்னும் மெட்ரோ அல்லாத ஊர்களில் எல்லாம் இந்த நிலை தான். இதனாலேயே முக்கால் வாசி இந்திய பெண்களுக்கு 30-40 வயதில் கூட சக்கரை வியாதி அல்லது மற்ற வியாதிகள் வருகிறது. இதனை இங்கு எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால், எங்கள் தோழி குடும்பத்தில் அவர்களின் அக்கா, 38 வயதில் மாரடைப்பு வந்து இறந்து விட்டார். உடம்பை கவனியாமல் இருந்ததால்  இப்படி ஒரு நிலை, 7, 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் அவருக்கு.


இந்த செய்திகள் எல்லாம் மனதில் ஒரு கிலியை வரவழைத்து இருக்கின்றன. இதனால்  தோழிகளுக்கு இடையே பிட்னெஸ் பிரென்ட்லி காம்பெடிஷன் வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இதில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஹெல்த் செக் அப் செய்து கொள்ளுவது, அரிசி உணவுகளை குறைப்பது, தினமும் நடப்பது. அதனை தவிர  ஒவ்வொரு மாதமும் லேடீஸ் டே அவுட் போகலாம் என்று தோழிகள் குழாமில் முடிவெடுத்து இருக்கிறோம். முக்கியமாக சினிமா கிடையாது. மாறாக, ஷாப்பிங், 5K , 10K  அல்லது பெர்சனல் ஹைஜீன், பிட்னெஸ்  என்று ஏதாவது செய்யலாம் என்று முடிவு. பார்க்கலாம் இந்த சம்மரில் எவ்வளவு தூரம் இது செயல் படுத்தப்படும் என்று. ஏனென்றால், அடுத்த மாதம் இந்தியாவில்  ஆபீஸ் வேலைக்கு ஹைதெராபாத் செல்லவேண்டும், அதோடு முகுந்தையும் சம்மர் விடுமுறைக்கு அழைத்து செல்லலாம் என்று நினைக்கிறன். எப்படி அனைத்தையும் சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

உண்மையில் "கழுகு" கதை உண்மையோ பொய்யோ தெரியாது..ஆனால்,  நடுத்தர வயதில், உடம்பை கவனியாமல் விட்டால் என்னாகும் என்பது மட்டும் நிதர்சனம்.

நன்றி.