Saturday, August 20, 2016

நிறைய இந்தியர்கள் இருக்கும் பகுதியில் வாழ்வது சரியா,தப்பா?

சில விஷயங்களில் நாம் செய்வது சரியா, தப்பா, நாம் சரியான வழியில் செய்கிறோமா, இல்லையா என்று ஒரே குழப்பம் வரும். அது போன்ற ஒரு குழப்பம் எனக்கு அடிக்கடி ஒரு விசயத்தில் வருகிறது. 
எந்த மாதிரி ஒரு சூழலில் நாம் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதே அது. நிறைய இந்தியர்கள் இருக்கும் ஒரு பகுதியில் குழந்தைகள் வளர்ப்பது சரியா?,  இல்லை இந்தியர்களே இல்லாத ஒரு பகுதியில் வளர்ப்பது சரியா? இது எனக்குள் தற்போது இருக்கும் ஒரு குழப்பம்.


இந்தியர்கள் நிறைய ஒரே இடத்தில் வீடு வாங்கி குடியேறுவது என்பது இங்கே சகஜம். அது தமிழர்கள் மட்டும் என்று இல்லை, கிட்ட தட்ட இந்தியாவின் எல்லா இந்திய மாநில, மொழி பேசும் மக்களும் ஒரே இடத்தில் வீடு வாங்கி குடியேறுவார்கள். ஒரு நெய்பர்ஹூடில் 200 வீடுகள் இருக்கின்றன என்றால் , அதில் 190 வீடுகள், சில நேரம் 200 வீடுகளும் இந்தியர் வீடுகளாகவே இருக்கும். ஒரு மினி இந்தியா அது. இப்படி நிறைய நெய்பர்ஹூட் எல்லாமே இந்தியர்கள் மட்டுமே இருப்பதால் இருக்கும் சாதக பாதகங்கள்.

சாதகங்கள் 
  • நாம் சிறு வயதில் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு குழந்தைகளுடன் அன்றாடம் விளையாண்டதை  போல, இங்கிருக்கும் குழந்தைகளும், தினமும் விளையாடுகிறார்கள். வீட்டில் வந்து கதவை தட்டி, உங்க பையனை வெளியே அனுப்புங்கள் என்று சொல்லி இழுத்து சென்று விடுகிறார்கள். நம் குழந்தைகளுக்கென்று ஒரு பிரென்ட் சர்க்ள் உருவாகி விடுகிறது. இது நல்ல விஷயம்.
  • நாம் இந்தியாவில் இருந்து அப்பா, அம்மாவை அழைத்து வரும் போது, அவர்கள் அனைவரும் சொல்லும்  ஒரே புலம்பல், "வீட்டுக்குள்ளேயே பூட்டிட்டு இருக்கிறது சிறையில் இருப்பது போல, எத்தனை நேரம் தான் டிவி பாக்குறது. அக்கம் பக்கம் மக்களே இல்லை, என்னன்னு பேசுறதுக்கு கூட." என்று புலம்பாத அப்பா, அம்மாக்கள் மிக குறைவு.  இது போன்ற நிறைய இந்தியர்கள் இருக்கும் பகுதியில் இருப்பின், அம்மா அப்பாக்களுக்கு நல்ல கம்பெனி கிடைக்கும். ஒன்றாக சேர்ந்து வாக்கிங், சமையல், போன் என்று தனக்கென்று ஒரு சர்க்ள் அமைந்து விடுகிறது.
  • தீபாவளி, பொங்கல் என்று எதுவென்றாலும் அந்த நெய்பர்ஹூஏ வெடி வெடித்து, சீரியல் செட் போட்டு என்று, நம்ம ஊர் பீல் வந்து விடுகிறது. 
  • நம்ம ஊர் போல, குழந்தைகளில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு படிக்க வேண்டும் என்று பெற்றோர் படுத்தி படுத்தி அவர்களும் அகாடெமிக்ஸ் மற்றும் பாட்டி, டான்ஸ், மியூசிக் என்று எல்லாவற்றிலும் நன்றாகவே செய்கிறார்கள். 
பாதகங்கள் 

  • நிறைய இந்தியர்கள் வாழ்வதால், இந்தியாவில் வாழும் சூழல் போன்ற ஒன்றை நாம் உருவாக்கலாம், ஆனால், அமெரிக்கர்களுடன் எப்படி வாழ்வது, எப்படி ஊருடன் ஒட்டி வாழ்வது என்பது போன்றவற்றை நாம் அறிவது எப்போது? 
  • எப்போதும் இந்திய குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் இந்திய குழந்தைகள், மற்ற நாட்டினர் பற்றியோ அல்லது, அவர்களின் பழக்க வழக்கங்கள், அல்லது எப்படி அவர்களுடன் பழகுவது, எது லிமிட், என்று எப்பொழுது தெரிந்து கொள்ளுவார்கள் என்று தெரியவில்லை. அல்லது எப்படி இனவேறுபாடு போன்ற கமெண்ட்களை எதிர் கொள்ள பழகி கொள்ளுவார்கள் என்று தெரியவில்லை.
  • எனக்கு தெரிந்த சில பள்ளிகளில் 100 க்கு 100 மாணவர்களும் இந்திய குழந்தைகள், எனும்  பட்சத்தில் காம்பெடிஷன் நாறுகிறது. குழந்தைகளை படி படி என்று படிப்பை மட்டும் கற்று, ஸ்பில்லிங் பீ, சயின்ஸ் பீ, மேத் பீ, என்று எல்லா காம்பெடிஷன்களிலும் பெற்றோர் புஷ் செய்கிறார்கள்.
  • நான் வலெண்டீர் செய்யும் தமிழ் பள்ளியில், படிக்க வரும் பல விவரம் தெரிந்த குழந்தைகள் , எனக்கு இங்கே வர இஷ்டம் இல்ல, எங்க அம்மா, அப்பா புஷ் பண்ணுறாங்க அதனாலே தான் வர்றோம், என்று ஓபன் ஆகவே சொல்லுகிறார்கள். இதனால் குழந்தைகள், சீக்கிரமே burn out ஆகி விடுகிறார்கள். ஒருமுறை இப்படி ஆகி விட்டால், பின்னர் அவர்களை இன்டெரெஸ்ட் கொள்ள வைப்பது கடினம்.
  • எல்லாரும் இந்தியர்கள் இருக்கும் ஒரு இடத்தில், வழக்கம் போல நீ பெரியவனா, நான் பெரியவனா? என்ற பாலிடிக்ஸ் நாறுகிறது.
எனக்கு தெரிந்து 70-80 களின் போது இங்கு வந்து செட்டில் ஆன, பலர், தற்போது இருக்கும் மக்களை போல ஒரே இடத்தில் இருந்து குழந்தைகளை படிக்க வைக்க வில்லை. எப்போதும் இந்தியர்களுடன் மட்டுமே அவர்கள் பழக வேண்டும் என்ற ஒரு சூழலையும் உருவாக்கி தரவில்லை. அதனாலேயே, 70-80 களில் இங்கு வந்த  நிறைய ABCD கள், அமெரிக்கா சூழலில் எப்படி தன்னை மாற்றி கொள்ளுவது, எப்படி பழகுவது என்று நிறைய கற்று கொண்டார்கள் என்று அறிய முடிகிறது. 90 களின் இறுதியில் -2000 க்கு அப்புறம் வந்த பல இந்தியர்கள், எல்லாரும் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற ஒரு சூழலை உருவாக்கி தருகிறார்களா என்பது சந்தேகமே.

நன்றி.






 

Friday, August 19, 2016

ஒலிம்பிக்ஸ்ம், சோசியல் மீடியா கூத்துக்களும்

ஒவ்வொரு ஒலிம்பிக்ஸ்ன் போதும் நம் மக்களுக்கு ஒரு புது வியாதி தொத்தி கொள்ளும். அது ஒரு செலெக்ட்டிவ் அம்னீசியாவில் இருந்து வெளியில் வந்த ஒருவர் பார்ப்பதை குறித்து புதிதாக தன் கருத்தை கூறுவது போன்றது.  இது ஒரு சார்ட் டைம் மெமரி போல, ஒலிம்பிக்ஸ் முடியும் மட்டுமே நினைவில் இருக்கும் பின் எங்கோ போய் விட்டு மீண்டும் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தலை எடுக்கும்.

அது என்ன வென்று நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும்." இந்தியாவிற்கு ஏன் பதக்கங்கள் வரவில்லை?" என்ற ஆராய்ச்சி, இந்தியாவில் ஊழல், மக்கள் விளையாட்டுகளில் காட்டும் அலட்சியம் என்ற அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விடுவார்கள்.   கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகள், புத்தகங்கள், என்று எல்லாவற்றிலும் ஒரு இந்தியன் தன் நாட்டுக்கு ஏன் பதக்கங்கள் இல்லை என்ற காரணத்தை, பக்கம் பக்கமாக விவரிப்பார். நிறைய வெளிநாட்டு பத்திரிக்கைகளில் இதனை குறித்த ஆர்டிக்கில்  பார்க்க முடிந்தது.

தற்போது சோசியல் மீடியாவில் இது ஒரு கூத்தாக போய் கொண்டு இருக்கிறது. நேற்று சாக்ஷி மாலிக் ஒரு வெண்கல பதக்கம் வாங்கியதை கேலியாக பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் "119 பேர் அனுப்பப்பட்டதற்கு 1 வெண்கல பதக்கம்" என்று  ட்வீட் செய்ய, நிறைய இந்தியர்களுக்கு, அமிதாப் பச்சன் உட்பட தேச உணர்வு பொத்துக்கொண்டு வந்து விட்டது. எப்படி சொல்லலாம், என்று சண்டை பிடிக்க, அந்த பத்திரிக்கையாளரோ சளைக்காமல் , 1.2 பில்லியன் மக்கள் தொகைக்கு ஒரு வெண்கல பதக்கம், ஆனால் வெறும் 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நோர்வே 2 பதக்கங்கள்..என்று கவுண்டர் கொடுத்து கொண்டு மேலும் உசுப்பேத்தி கொண்டு இருக்கிறார்.


எனக்கு என்ன புரியவில்லை என்றால். இது தான் நம் நிலை என்று எல்லா இந்தியர்களுக்கும் தெரியும். இந்தியா வீரர்களை அனுப்பும் போதே, அட்லிஸ்ட் ஒரு தங்க பதக்கமாவது வாங்கிட்டு வாங்க, என்று நாம் நினைக்க துவங்கி விட்டோம்.

அதற்க்கு என்ன காரணம் என்றும் எல்லாருக்கும் தெரியும், நம் நாட்டில் மக்களும் சரி, அரசாங்கமும் சரி, கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுக்கு கொடுப்பதில்லை. ஏனெனில் மற்ற விளையட்டுக்கு ஸ்பான்ஸர் இல்லை, மற்ற விளையாட்டு வீரர்களை ப்ரொமோட் செய்ய முடியாது, மக்களுக்கு தெரியாது. கிரிக்கெட் வியாபாரமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதனால் அதற்க்கு கிடைக்கும் விளம்பரங்கள் பல ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கு கிடைப்பதில்லை. வருமானம் தராத விளையாட்டுக்கு ஸ்பான்சர் செய்ய யாரும் முன்வருவதில்லை.

இது ஒரு புறம் இருக்க, அரசாங்கமும் அல்லது அரசியல் வாதிகளும் இதனை குறித்து கண்டு கொள்வதில்லை. ஏனெனில் இதனை வைத்து அரசியல் வாதிகள் அடிக்கும் கூத்து எல்லாருக்கும் தெரிந்தது. ஒலிம்பிக்ஸ் செலக்சன் போர்டில் அவர்களுக்கு தெரிந்த மக்களை சேர்ப்பது, தகுதியானவர்களை தவிர்ப்பது என்று எல்லா வித கூத்துகளும் நமக்கு தெரிந்தே நடக்கின்றன. இதுவும் எல்லாரும் அறிந்தே இருக்கிறார்கள்.

இன்னொரு புறம், சாதாரண மக்கள்  படிப்பு படிப்பு என்று படிப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கு கொடுப்பதில்லை. என்னை பொறுத்தவரை, கடந்த தலைமுறை மக்களை விட இப்போது இருக்கும் இளைய தலைமுறை, மிக மிக குறைவாக ஸ்போர்ட்ஸ் விளையாடுகிறார்கள். நிறைய பேர் கம்ப்யூட்டர் கேம்ஸ் க்கு மாறி விட்டார்கள். இதுவும் எல்லாரும் அறிந்தே இருக்கிறார்கள்.

 இப்படி எல்லாவற்றையும் மக்கள் அறிந்திருந்தும், நம்முடைய நாட்டின், மக்களின், அரசியல் வாதிகளின் செயலை உணர்ந்திருந்தும் ஏன் இந்த திடீர் வீரம், நாட்டுப்பற்று. ஏனெனில், நமக்கு அடுத்தவர்களை பார்த்து குறை சொல்ல, பேச மட்டுமே தெரியும். உண்மை நிலவரம் தெரிந்திருந்தாலும், நாங்கள் பேசி கொண்டே இருப்போம். அடுத்த நாடுகளை போல செயலில் இறங்கி வேலை செய்ய மாட்டோம். 

எதோ ஒரு படத்தில் ஒரு வசனம் வரும். அதில் ரஜினி சொல்லுவார், "சீனா காரன் சூதாடாட்டி செத்து போயிடுவான், இந்தியன் பேசாட்டி செத்து போயிடுவான்" அது எவ்வளவு உண்மை.


டிஸ்கி
இது என்னுடைய அறிவுக்கு எட்டியவரை தெரிந்த விஷயங்களை கொண்டு எழுதிய என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே. எந்த அரசியல்வாதிகளையோ, மக்களையோ, இனத்தையோ, குறிப்பிட்டு சொல்லவில்லை.

Friday, August 12, 2016

சாமானியர்களும், பெரிய மனிதர்களும்!!

சிறு வயதில் என்னுடைய அனுபவம் இது. எங்கள் வீட்டிற்கு அருகே அந்த ஏரியா கவுன்சிலர் வீடு இருந்தது. அந்த கவுன்சிலருக்கு எங்கள் வயதுடைய குழந்தை இருந்தது. நாங்கள் எல்லாம் சிறு வயதில் வெளியில் சென்று விளையாடும் போது ஒரு நாள் அந்த குழந்தையும் விளையாட வர, அதன் பிறகு அவங்க வீட்டில இருந்து வந்த அந்த குழந்தையை எங்களுடன் விளையாட கூடாதென்று கண்டித்து அழைத்து சென்றார்கள். அப்பொழுதெல்லாம் என்னவென்று விளங்காமல் நாங்களும் அவங்க பெரிய ஆளுங்க  பா, அதனால நம்ம கூட எல்லாம் விளையாட விட மாட்டாங்க. என்று எங்களுக்குள் நாங்க சொல்லி இருக்கிறோம். பத்தாவது படிக்கும் போதெல்லாம் சைக்கிளே பெரிய விஷயமாக இருந்த எங்களுக்கு அந்த பிள்ளை காரில் பள்ளிக்கு செல்வது வழக்கம். பெரிய பள்ளியில் படித்து, மார்க்கே இல்லை என்றாலும் காசு கொடுத்து கல்லூரி சீட் என்று எல்லாவற்றிலும் ஒரு அட்வான்டேஜ் இருந்தது. எங்களிடம் இருந்து அதாவது சாதாரண மக்களிடம் இருந்து விலகியே இருந்ததை அறிய முடிந்தது. ஒரு சாதாரண கவுன்சிலரே தங்களை சாதாரண  மக்களிடம் இருந்து தங்களை வேறு படித்தி கொள்ளுவதை வழக்கமாக இருப்பதை எல்லோரும் கண்டு இருக்கிறோம்.

இது இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வா என்று நான் சிந்தித்ததுண்டு. ஆனால், சமீபத்தில் நான் வாசித்த கார்டியன் செய்தி இதெல்லாம் ஜுஜுபி என்று என்னை நினைக்க வைத்தது. அது எப்படி மெக்சிகோ நாட்டில் இருக்கும் அரசியல் வாதிகளின் குழந்தைகள் தங்களை அரச குடும்பத்தினர் போல நினைத்து கொண்டு நடப்பது குறித்து எழுதி இருந்தனர். அதில் ஒரு அரசியல் வாதியின் மகன், சைக்கிள் செல்லும் ரோட்டில் காரில் வந்து அங்கு காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் இவருக்கு வழிவிட வில்லை என்று அவருடன் சண்டை போட்ட ஒரு வீடியோ வைரல் ஆக யூடூபில் பரவி கொண்டு இருக்கிறது.



அதே போல, ஒரு அரசியல்வாதியின் மகள் தனக்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை என்று கோவப்பட்டு அந்த ஹோட்டலை போலீசை வைத்து மூட செய்த நிகழ்ச்சியும் அங்கே நடந்து இருக்கிறது. 

அப்போது, பெரிய மனிதர்களின் குழந்தைகள் எல்லாரும் இப்படி தான் இருப்பார்களா? என்று யோசித்த போது, அமெரிக்கா ப்ரெசிடெண்ட் ஒபாமாவின் மகள் தன்னுடைய கோடைகாலத்திற்கு என்று ஒரு வேலையில் இருப்பதனை அதுவும் ஒரு சாதாரண ஹோட்டலில் கேஷியர் ஆக வேலை செய்யும் போட்டோ வை காண நேர்ந்தது.



அதற்கு பக்கத்திலேயே மெக்ஸிகோ நாட்டின் ப்ரெசிடெண்ட் மகள்கள் இருவரும் ஹை சொசைட்டி மக்கள் போல உடை அணிந்து போஸ் கொடுக்கும் படங்களும் பார்க்க நேர்ந்தது.
இவை அனைத்தும் எனக்கு பழைய ஞாபகங்களை கிளறி விட்டது. இதில் எனக்கு தெரிந்த நான் அறிந்தது போல அரசியல் வாதிகளின் குழந்தைகள் தங்களை மாற்றி கொள்ளுவது, சாமானியர்களை விட்டு தள்ளி இருப்பது ஒரு புறம். இன்னொரு புறம் தான் பெரிய ஆள் என்றாலும் தன்னுடைய குழந்தைகளை சாதாரண மனிதர்கள் போல வளர்க்கும் ஒருவர்.

எல்லாரும் சமம், நம் குழந்தைகள் எல்லார் குழந்தைகளை போல சாமானியர்கள் என்று நினைக்கும் நடத்தும் செயல் ஆச்சரியமாக இருந்தது. இதுவே ஒரு காகேசியன் ரேஸ் ப்ரெசிடெண்ட் ஆக இருப்பின் இதனை செய்திருப்பாரா? என்ற கேள்வியும் தொக்கியே நிற்கிறது.

இதனை சார்ந்த ஒரு சில விஷயங்களும் எனக்கு தோன்றியதுண்டு. அதாவது, அரசியல் வாதிகள்எ, பெரிய மனிதர்கள் என்று இல்லை , நம்மள போல வெளி நாட்டுக்கு வந்த எத்தனை பேர் நம்ம குழந்தைகளை இது போல சம்மர் வேலைக்கு அனுப்புவோம். எனக்கு தெரிந்தே இங்கு வந்த பலர் தங்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவை முழுதும் செலவழித்து படிக்க வைப்பதை பார்த்து இருக்கிறேன்.  எத்தனை பேர் நார்மல் வாழ்க்கையை குழந்தைகளுக்கு சொல்லி தருகிறோம். நாம கஷ்டப்பட்ட மாதிரி நம்ம குழந்தைகள் கஷ்டப்பட கூடாது அப்படின்னு நினச்சு, எல்லாத்தையும் கொடுக்கிறோம். ஆனால் அது உபயோகப்படுமா? யோசிக்க வேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது.


நன்றி.


Sunday, August 7, 2016

மதத்தை மதிப்பவர்களும், மிதிப்பவர்களும்!!

சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது. அது இந்திய கோயில்களை பற்றியது. அடிக்கடி இதனை போன்ற செய்திகளை தோழிகள் க்ரூப் பார்வேர்ட் செய்தாலும் பார்க்காமல் இருந்த நான் என்ன கிரகமோ, அன்று படிக்க தொடங்கினேன். அதில் கூறப்பட்ட ஒவ்வொரு செய்தியும் சிரிப்பை வர வழித்தது. வாயை வைச்சிட்டு சும்மா இருக்காம, வாயை கொடுத்து நான் வாங்கி கட்டி கொண்ட கதை தான் இங்கு.

அந்த பார்வேர்டில்  கூறப்பட்ட ஒரு விஷயம், காசி நகரை சுற்றி 20 கிலோமீட்டர் வரை காகம், கருடன் பறப்பதில்லை, அங்கு பல்லி இருப்பதில்லை. என்பது போன்ற செய்தி. என்ன கிரகமோ, அதனை படிப்பதற்கு சில காலம் முன்பு தான் என்னுடைய பிரெஞ்சு நண்பர் ஒருவர் தன்னுடைய "காசி" அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதுவும், 24 மணி நேரமும் எரியும் சிதை, பாதி வெந்தும் வேகாமலும் கங்கையில் தூக்கி வீசப்படும் சடலங்கள் குறித்தும், அதனை உண்ணும் பறவைகள்  , கோட்டான்கள் குறித்தும் தான் பார்த்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அங்கு எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் காட்டி விவரித்து கொண்டு இருந்தார். நான் காசிக்கு சென்றதில்லை என்றாலும், அவர் காட்டிய புகைப்படங்கள் புல்லரிப்பை ஏற்படுத்தின.

மேலை நாடுகளில் எல்லாம் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டால் அந்த உடலை உடனே அப்புறப்படுத்தி விடுவார்கள். அந்த உடல் அழகுபடுத்த எடுத்து செல்லப்பட்டு விடும். அதற்கு என்றே பியூனெரல் ஹோம்ஸ் எனப்படும் இறுதி சடங்கு இல்லங்களுக்கு சென்று, பின்னர் இறுதி சடங்கு அன்று எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்படும். இப்படி பார்த்து பழக்கப்பட்ட அந்த பிரெஞ்சு மனிதருக்கு 24 மணிநேரமும் எரியும் சிதையும் அதனை சுற்றி நடக்கும் விஷயங்களும், உடல்களை உண்ணும் பறவைகளும் கோட்டான்களும்  ஆச்சரியப்படுத்தியதில் வியப்பு எதுவும் இல்லை என்று தோன்றியது. இதனை சார்ந்த நேஷனல் ஜியோகிராபியின் செய்தி ஒன்றும் காண நேர்ந்தது  முடிந்தால் படித்து பாருங்கள். இதுவே இன்றைய நிலை. இப்படி இருக்க, எங்கிருந்து பறவைகள் பறப்பதில்லை என்ற செய்தி வந்தது என்று தெரியவில்லை.


அடுத்த விஷயம், சாமிக்கு செய்யும் அபிஷேக தயிர் புளிப்பதில்லை என்பது. இதனை படித்த பிறகு எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தயிர் புளிப்பது என்பது லாக்டோபேசில்லஸ் எனப்படும் பாக்டீரியா செய்யும் வேலை. அது பாலில் இருக்கும் லாக்டோஸை சாப்பிட்டு லாக்டிக் ஆசிட் ஆக மாற்றும் அதனாலே புளிப்பு சுவை வரும். எவ்வளவு பாக்டீரியா இருக்கிறதோ அவ்வளவு லாக்டிக் ஆசிட் இருக்கும். அவ்வளவு புளிப்பு ஏற்படும். இதில் எப்படி சாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிப்பதில்லை என்று சொல்கிறார்கள் தெரியவில்லை. தயிரில் இருக்கும் பாக்டீரியா முழுதும் கொல்லப்பட்டால் மட்டுமே இது சாத்தியம். அப்படி ஆக வேண்டும் என்றால் சாமி விக்கிரகத்தில் ஆன்டி பாக்டீரியா தன்மை இருக்க வேண்டும். அதனை தான் சொல்லுகிறார்களா?. இந்திய சாமி விக்கிரகங்களை சுற்றி எல்லா பூச்சிகளும் ஓடி விளையாடி பாக்டீரியா வளர்வதற்கு மிக மிக சாதகமான சூழலை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் இன்றைய வேளையில் இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.

இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க யோசிக்க கூடாது போல..ஏன்னா..இதெல்லாம் நான் சும்மா இருக்காம பார்வேர்ட் செய்த தோழிக்கு சொல்ல  , அவளோ  "என்னமா வெளி நாடு போயிட்டு நம்ம ஊரு சாமிய, சூழலை கிண்டல் அடிக்கிற, நாத்திகனாயிட்டாயா?, ரொம்ப படிச்சிட்டு இப்படி நம்ம கலாச்சாரத்தை குறை சொல்லுறது இப்ப பேஷன் ஆகிப்போச்சு....மத  துரோகி"..அப்படிங்கிறாங்க.. என்னத்தை சொல்லுவது...

கடவுள் அல்லது நமக்கும் மேலே ஒரு போர்ஸ் இருக்கிறது என்பதை நம்புபவள் நான், ஆனால், இப்படி கதை கதையாக கட்டி விட்டு, அதனை சாமியின் அருள் என்று கலர் கலர் ஆக ரீல் விட்டு. அதனை நம்புபவர்கள் மட்டுமே இந்து மதத்தை மதிப்பவர்கள், மற்றவர்கள் எல்லாம் மிதிப்பவர்கள் என்று வாதிடும் மக்களை என்னவென்று சொல்லுவது.


டிஸ்கி 

இது, என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. அறிவியல் ரீதியாக எனக்கு தெரிந்ததை மட்டுமே இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன். எந்த மதத்தையும் குற்றம் சொல்ல வில்லை.

நன்றி.