Friday, October 29, 2010

இந்தியா தூதரகமா?

இன்று குடும்ப நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்திருந்தோம். அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்தாலும் இங்கே குடியுரிமை பெற்று விட்டார். தற்போது திருமணம் முடித்து மனைவியை அழைத்து வந்துள்ளார்.

இங்கே வந்த பிறகு திருமண லைசென்ஸ் விண்ணப்பித்து மனைவிக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் கிரீன் கார்டு வாங்கியும் விட்டார். தற்போது இந்தியன் பாஸ்போர்ட் இல் இருக்கும் மனைவியின் குடும்ப பெயரை மாற்றி தன் குடும்ப பெயரை சேர்க்க இந்தியா தூதரகத்தில் விண்ணப்பித்து இருக்கிறார். அதில் நடக்கும் கூத்துகளை அவர் கதையாக சொன்ன போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.

முதலில், அந்த பெண் இங்கே வந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. இப்போது தான் அந்த பெண்ணிற்கு சோசியல் செக்யூரிட்டி நம்பர் வந்து இருக்கிறது. SSN எனப்படும் அது வந்த பிறகே எதுவும் செய்ய முடியும் உதாரணமாக, டிரைவர் லைசென்ஸ், வீடு வாடகைக்கு எடுப்பது, கிரெடிட் கார்டு வாங்குவது போன்ற சில.

பெயர் மாற்றத்திற்காக இந்தியா தூதரகத்திற்கு அவர் தன்னுடைய கல்யாண சான்றிதல், அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் அவரின் டிரைவர் லைசென்ஸ் எல்லாம் வைத்து அனுப்பி இருக்கிறார். சில வாரங்களுக்கு பிறகு ஒரு நோட் உடன் அது திரும்பி வந்து இருக்கிறது. அந்த நோட் இல் "பெண்ணின் டிரைவர் லைசென்ஸ் வைத்து அனுப்பவும் அதோடு முப்பது டாலர் போஸ்டல் செலவுக்கு பணமும் அனுப்பவும்" என்று வந்திருக்கிறது.

"இனிமேல் தான் டிரைவர் லைசென்ஸ் வாங்க போகிறாள் அந்த பெண் " என்று சொல்ல அவர் பல முறை போன் செய்து பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அது வாய்ஸ் மெசேஜ் க்கு சென்றிருக்கிறது. வாய்ஸ் மெசேஜ் கூட விட முடியாதபடி அவர்களின் மெயில் பாக்ஸ் புல் ஆகி இருக்கிறது. வேறு வழியில்லாமல் பல முறை போனில் தொடர்பு கொண்ட பிறகு ஒருவர் போன் எடுத்து இருக்கிறார். அவரிடம் எல்லாம் விளக்கிய பிறகும், தூதரகத்தில் இருப்பவர் "ரூல்ஸ் எல்லாம் ரூல்ஸ் தாங்க லைசென்ஸ் வாங்கியபிறகு எங்களுக்கு அனுப்புங்க" என்று சொல்லி போன் ஐ துண்டித்து இருக்கிறார்.

எங்கள் நண்பர் இந்தியாவில் யாரோ தெரிந்தவரை பிடித்து ஒரு வழியாக சரி காட்டி அவர் மூலமாக இங்கே உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டு பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றும் வேலை செய்ய திரும்ப அனுப்பி இருக்கிறார்.

தற்போது பாஸ்போர்ட் வந்து விட்டது ஆனால், எங்கள் நண்பரின் மனைவி பாஸ்போர்ட் அல்ல அது. வேறு யாருடைய பாஸ்போர்ட் ஒ அது. திரும்ப தூதரகத்தை தொடர்பு கொண்டாலும் அதே வாய்ஸ் மெயில், அதே பிரச்சனை.

இப்போது எனக்கு ஒன்று விளங்க வில்லை. எங்கள் நண்பர் கையில் கிடப்பதற்கு பதில் வேறு யார் கையிலாவது அந்த வேறு ஒருவருடைய பாஸ்போர்ட் கிடைத்து இருந்தால் என்ன ஆகி இருக்கும். என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமே அதனை வைத்து?. என்ன ஒரு அலட்சியம் பாருங்கள். அதனை திருப்பி அனுப்ப கூட யாரை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் முழிக்கிறார் எங்கள் நண்பர்.

இதனை பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்த போது சமீபத்தில் மஸ்கட் நகரில் இந்திய தூதரக அதிகாரிகளின் அலட்சியத்தால் இறந்த அந்த பெண்மணியின் நினைவு வந்தது. எங்கே போய் சொல்வது இந்த அவலத்தை.




,

Tuesday, October 12, 2010

சிவப்பா, அழகா, ஒல்லியா...


அது, தன் பெண்களுக்காக அமெரிக்கா, UK போன்ற வெளி நாடுகளில் வேலை பார்க்கும் வரன்களை அப்பாக்கள் வலை போட்டு தேடிய, பத்து வருடங்களுக்கு முந்தய காலம். என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு சில பெண்கள் இப்படி திருமணம் ஆகி போக, அதே போல நாமும் போக வேண்டும் என்று நினைத்த என்னுடைய தோழி அவர். வெளி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற அவரது அவா என்ற நிலையை தாண்டி வெறி என்றே ஆகி விட்டிருந்தது.

அவரின் தந்தையும் பல சொந்த பந்தங்கள், ப்ரோக்கர்கள், பத்திரிக்கைகள் தவிர மேற்றிமொனியால் தளங்கள் வர ஆரம்பித்திருந்த தருணம் ஆகையால், அதிலும் அவளை பற்றி விளம்பரம் கொடுத்து இருப்பார். அவள் மாநிறமான , கொஞ்சம் பூசினாற்போல இருந்த சற்று குள்ளமான பெண். ஆனாலும் அவர் தந்தை விளம்பரத்தில் "Fair, tall, lean beautiful, domestically trained girl" என்று விளம்பரம் கொடுத்து இருந்தார். இதில் domestically trained என்பது வீடு வேலை செய்ய தெரிந்த பெண் என்று பொருள் தரும்படி எழுத பட்டு இருந்தது.

நாங்கள் எல்லாம் கூட "என்ன, உங்க அப்பா உன்ன ஒரு பிராணி லெவலுக்கு உயர்த்தி இருக்காரே" என்று கிண்டல் செய்தாலும் அவள் சளைக்காமல் "அதிலென்ன தப்பு, வீட்டு வேலை செய்ய தெரிஞ்ச பொண்ணுன்னு அப்புறம் எப்படி சொல்லுறதாம்" என்று சப்பை கட்டு கட்டுவாள்.

என்ன தான்அவள் தந்தை விளம்பரம் செய்தாலும் அவள் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை அவர்கள் சமூகத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிவப்பா, ஒல்லியா இருந்த பெண்ணையே விரும்பினார்கள். அதனால் இவளும் சிவப்பாக கிரீம் மேல கிரீம் ஆக போட்டு கொண்டு இருந்தாள். எந்த சிவப்பழகு கிரீம் மார்க்கெட்டில் வந்தாலும் உடனே அதனை முதலில் ட்ரை செய்து பார்ப்பவள் அவளாகத்தான் இருக்கும். பிறகு உடம்பை குறைக்கிறேன் பேர்வழி என்று சரியாக சாப்பிடாமல் டியட்டிங் வேறு இருக்க ஆரம்பித்தாள்.

பிறகுஅவளுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. நாங்கள் படிப்பை முடித்து வேறு வேறு திசையில் சென்று விட்டோம். பல வருடங்களுக்கு பின் நேற்று என்னுடைய அம்மாவிடம் பேசும் போது அந்த பெண்ணை கோவிலில் பார்த்ததாகவும் அடையாளம் தெரியாத அளவுக்கு அவள் குண்டாக இருப்பதாகவும், அவள் கணவன் அவளை இங்கு தனியே விட்டு விட்டு சிங்கப்பூரில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

என்னவென்று மேலும் விசாரிக்க அம்மாவிடம் சொன்னேன். அவர்கள் சொன்னது மேலும் அதிர்ச்சி அளித்தது. அவள் தந்தை எப்படியாவது அவளுக்கு கல்யாணம் ஆனால் சரி நினைத்து அதிக வரதட்சணை கொடுத்து சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஒரு வரனை பார்த்து திருமணம் முடித்து இருக்கிறார். அந்த வரன் நல்ல பையன் என்றாலும் மனைவி ஒல்லியாக சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்ப, அவள் அதிகம் டியட்டிங் செய்ய ஆரம்பித்து இருக்கிறாள். ஒல்லியாக, அவள் செய்த டியட்டிங் வேறு வகையில் பக்க விளைவுகள் கொடுத்து பூசினாற்போல இருந்தவள் தைராய்டு பிரச்சனை ஏற்பட்டு அதிகம் குண்டாக ஆரம்பித்து இருக்கிறாள்.

சிலவருடங்கள் ஆவலுடன் வாழ்ந்த அவள் கணவன் அவள் குண்டாக ஆக அவளை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்து இருக்கிறார். கண்ட கண்ட கிரீம்கள் போட்டு அவள் முகம் வேறு கிழடுதட்ட ஆரம்பித்து இருக்கிறது. அதுவும் ஒரு காரணமாக சேர்ந்து கொள்ள "சிவப்பா, ஒல்லியா இருக்கிற பொண்ணுதான் வேணும்னு நினைச்சேன், எங்க அம்மாதான் உன்னை என் தலையில கட்டிட்டாங்க" என்று தினமும் திட்டி இருக்கிறார். அதோடு தைராய்டு பிரச்சனையால் குழந்தைபேறு வேறு தட்டி போக, அதையே ஒரு காரணமாக சொல்லி அவளை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் அறிய முடிந்தது.

இதில் யாரை குற்றம் சொல்ல? வெளிநாட்டு மோகத்தினால் வாழ்கை தொலைத்த என் தோழியையா அல்லது ஒல்லியான சிவப்பான பொண்ணுதான் அழகுன்னு நினைத்த அவள் கணவனையா!

Friday, October 8, 2010

இளைஞர்களிடம் தண்ணீ பழக்கம்!

வேலை விசயமாக குடிப்பழக்கம் பற்றிய ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதில் இந்தியாவில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தது. மேலும் அறிந்து கொள்ள கூகுளை தோண்டியபோது கிடைத்த தகவல்கள் மன வருத்தம் தந்தன.

India alcohol policy alliance, என்றழக்கப்படும் இயக்கத்தில் இருந்து வந்த கட்டுரை தந்த தகவல்கள் இவை.


பதினைந்து வருட இடைவெளியில் இளைஞர்களிடம் குடிப்பழக்கம் அபரிமிதமாக அதிகரித்து இருப்பதாக அது தெரிவிக்கிறது. அருகில் இருக்கும் அட்டவணையில் அது தெளிவாக கட்டப்படுகிறது. தொன்னூறுகளில் இரண்டு சதவீதமாக இளைஞர்களிடம் இருந்த குடிப்பழக்கம் தற்போது பதினான்கு சதவீதமாக மாறி இருக்கிறது.

அதே
போல,
எந்த வயதில் இளைஞர்கள் குடிப்பழக்கத்தை ஆரம்பிக்கிறார்கள், என்று பார்த்தபோது எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.


தொன்னூறுகளில் பத்தொன்பது வயதாக ஆரம்பித்த குடிப்பழக்கம், தற்போது பதிமூன்று வயதாக குறைந்து இருக்கிறது. இளமை காலம் ஆரம்பிக்கும் போதே குடிப்பழக்கமும் இளைஞர்கள் /குழந்தைகளிடம் வர ஆரம்பிக்கிறது என்று தெரிவிக்கிறது.


இப்படி சிறுவயதில் குடிப்பழக்கத்தை ஆரம்பிப்பவர்கள் வளர வளர நிரந்தர குடிகாரர்கள் ஆக மாறிவிடுகிறார்கள். இருபதுகளில் இருபத்தி ஏழு வயதில் நிரந்தர குடிகாரர்கள் ஆனவர்கள், தற்போது பத்தொன்பது வயதிலேயே அன்றாட குடிகாரர்கள் ஆவதாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது.


இதே நிலை தொடர்ந்தால், சீக்கிரமே இந்தியா ஒரு குடிகார, பொறுப்பற்ற நாடாக மாறும் என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது.

தமிழக அரசு
எல்லா ஊர்களிலும், சந்து பொந்துகளிலும் கூட டாஸ்மாக் கடை திறந்து இது போன்ற நிலையை ஊக்குவிப்பது போல இருக்கிறது. என்ன ஆகுமோ!

Saturday, October 2, 2010

ஒரு டாலர் தியேட்டர்ம் எந்திரன் படமும்



எங்க ஊரில ஒரு ஒரு டாலர் தியேட்டர் இருக்குதுங்க. அந்த தியேட்டர் நம்ம ஊரு டூரிங் தியேட்டர் மாதிரிங்க. அதாவது எப்போ புது படம் வந்தாலும் அந்த தியேட்டர் ரிலீஸ் ஆகிறதுக்கு மூணு மாசமாவது ஆகும். அதே போல எப்போ அந்த தியேட்டர் போனாலும் கொசு, பூச்சி கடி கிடைக்கும். அந்த தியேட்டர் படம் பார்க்க டிக்கெட் விலை ரொம்ப கம்மிங்க. எப்பவுமே எந்த படம் பார்கனும்னாலும் நாலு டாலர் தான் ஆகும். அதுவும் செவ்வாய் கிழமைன்னா எந்த படம்னாலும் ஒரு டாலர் தான்.

அப்படி இருந்த அந்த தியேட்டர் க்கு இந்த வாரம் வந்தது பாருங்க ஒரு மவுசு. ஒரு படம் பார்க்க இருவது டாலர் ஆம். அதுவும் preview ஷோன்னா 35 டாலராம். என்ன படத்துக்கு இப்படி மவுசுன்னு நீங்க யூகிச்சு இருப்பீங்களே. நம்ம எந்திரன் படத்துக்கு தாங்க.

ரஜினி எவ்வளவு காசு கொடுத்தும் பார்க்க மக்கள் ரெடி இருக்காங்கப்பா. யாரை பார்த்தாலும் கேட்குற முதல் கேள்வி "எந்திரன் பார்த்தாச்சா" அப்படின்னு தான். "இல்ல நாங்க இன்னும் பாக்கல அப்படின்னு சொன்னா" ஒரு மாதிரி பார்க்குறாங்க. அப்படி ஒரு எந்திரன் மாயை உருவாக்கப்பட்டு இருக்கு.

அதை விட கொடுமை என்னன்னா, எல்லா டிக்கெட் ம் படம் போடப்படுற எல்லா நாளும் booked. இங்க இந்திய அல்லது மற்ற மொழிப்படம் எல்லாம் ஒரு வாரம் தான் போடுவாங்க

ஒரு படம் வெளியிட அதிகப்படியா ஒரு 200-300 டாலர் அந்த தியேட்டர் வாடகை கொடுக்க வேண்டி வரும்ங்க. ஒரு நாள் மூணு ஷோ ஓட்டுறாங்க. எல்லா நாளும் டிக்கெட் booked ன்னா , 150 சீட்டிங் கபாசிட்டி இருக்கிற ஒரு தியேட்டர் எவ்வளவு லாபம் வரும்ன்னு நீங்களே கணக்கு போட்டுகோங்க.

ஒரு டிக்கெட் இருவது டாலர் விக்கிறாங்கன்னா எவ்வளவு டாலர் கொடுத்து அந்த படத்தை வாங்கி இருப்பாங்க. இது எங்க ஊரில மட்டும் தான். அமெரிக்கா புல்லா யோசித்து பாருங்க. இதில இன்னொரு விஷயம் என்னன்னா எவ்வளவு பேமஸ் ஆன ஆங்கில படமா இருந்தாலும் சரி, டிக்கெட் விலை பத்து முதல் பதினஞ்சு டாலர் தாங்க.

என்ன தான் இருந்தாலும் தலைவர் மதிப்பே தனி தான். ஆனா என்ன, பந்திக்கு முந்துன்னு சொல்லுவாங்க, இனிமே தலைவர் படத்துக்கு புக் பண்ண முந்துன்னு மாத்தணும் போல.