Friday, October 21, 2016

அழகென்பது யாதெனில் ...

அழகென்பது எது?, எது பெண்களுக்கு அழகு? எப்போது பெண்கள் அழகாக இருப்பார்கள்? என்ற கேள்வி சில நேரங்களில் எனக்குள் எழுவதுண்டு. நிறைய நகை போட்டு, பட்டு புடவை கட்டினால் ஒரு பெண் அழகாக இருப்பாளா? நிறைய மேக்கப் போட்டு மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஒரு பெண் அழகாக இருப்பாளா? நிறைய மேக்கப் இல்லாமல் அதிக படோடபம் இல்லாமல் சிம்பிள் ஆக இருந்தால் பெண் அழகாக இருப்பாளா?  ஏனென்றால், முகநூலில் தற்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் பல பல போஸ்களில் ஷேர் செய்யப்படும் புகை படங்கள் பார்த்த பின்னர், இப்பொழுதெல்லாம் இயற்கையான அழகு என்ற ஒன்று உண்டா என்பது என் கேள்வியாகி விட்டு இருக்கிறது. பார்க்க பார்க்க சலிப்பும் ஏற்படுகின்றது.

இந்த நேரத்தில், புது பெண்ணான பிறகு தான் தன் கணவருடன், தழைய தழைய புடவை கட்டி, ரொம்ப சிம்பிள் ஆக பூ வைத்து, மஞ்சள் கயிறு மின்ன, எந்த மேக்கப்ம் இல்லாமல், எந்த போஸும் கொடுக்காமல், வெக்கப்பட்டு  நிற்கும், என்னுடைய தோழி ஒருவரின் பழைய புகை படம் பார்க்க நேர்ந்தது. என்ன ஒரு அழகு அந்த புகைப்படத்தில்!, எந்த வித பாசாங்கும் இல்லாமல், புகைப்படத்துக்கான எந்த போஸும் இல்லாமல், போலி சிரிப்பு இல்லாமல் அற்புதமான புகை படம் அது. ஒரு நேச்சுரல் புகைப்படம். 

இதனை பார்த்த பின்னர் எனக்குள் நேர்ந்த தேடலின் விளைவு இந்த பதிவு.

அழகு என்பது என்ன?-உலகத்தில் எது அழகு?

"Beauty is not a matter of cosmetics, money, race or social status, but more about being yourself"

என்ற ஒரு கருத்து காண நேர்ந்தது. இதனை சார்ந்த ஒரு செய்தியும் காண/வாசிக்க நேர்ந்தது, அது உலக மகளிர் பலரின் புகைப்படங்கள் அதனை எடுத்தவர் Michaela Norac என்பவர் . அதில் காணும் ஒவ்வொரு பெண்ணும் மிக இயல்பாக கொடுக்கும் போஸ் அழகு உதாரணத்துக்கு இங்கே சில 

                                                               photo from Mihaela Noroc

                                                               photo from Mihaela Noroc


அதிலும் மிக அதிகம் பேரால் கொண்டாடப்பட்ட "ஆப்கான் கேர்ள்" எனப்படும் Steve McCurry
அவர்கள் எடுத்த புகைப்படம் உலக பிரசித்தி பெற்றது. அதில் ஷர்பத் குலா என்ற அந்த பெண்ணின் கண்களில் தெரிவது சோகமா, ஆற்றாமையா என்று யாராலும் கூற முடியாது. இது இன்னொரு மோனாலிசா ஓவியம் என்று கூட போற்றப்பட்டது.


எல்லாவற்றிலும் காஸ்மெடிக்ஸ் ஆக்கிரமித்த, முக சாயம் பூசிய, வித வித உடை மாட்டிய பெண்களுக்கு மத்தியில் இது போன்ற பெண்களின் புகை படங்கள், இயல்பான புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கின்றன. 

இப்பெல்லாம் யாருங்க மேக்கப் போடாம டிரஸ் பண்ணிக்காம இருக்கா, நல்லா ப்ரெசென்ட்டபிள் ஆக இருக்கணும் இல்ல, என்று பல பெண்கள், அதுவும் இளவயது பெண்கள் கேட்கலாம்.  அது உண்மையா? அப்படி என்றால்  எல்லோரும் கொண்டாடிய ப்ரேமம் படத்தில் ரொம்ப இயல்பாக  எந்தவித மேக்கப் ம் இல்லாமல் நடித்து உள்ளத்தை கொள்ளை கொண்ட "மலர்" டீச்சர் ஆக நடித்த "சாய் பல்லவியை" ஏன் பலருக்கு பிடிக்கிறது. அதே பாத்திரத்தில் நடித்த "ஸ்ருதி ஹாசனை" பிடிக்கவில்லை.  ஏன், ஸ்ருதி ஹாசனை பல கேலி கிண்டல் செய்து மீம்கள்? உதாரணத்துக்கு கீழே சில.

இதெல்லாம் பார்த்த பிறகு, எனக்கு தோன்றியது. "அழகென்பது யாதெனில், எதனை அணியும் போது  நீங்கள் நீங்களாகவே உணர்கிறீர்களோ அதுவே உங்களுக்கு அழகு."



டிஸ்கி 

இது அழகு குறித்த என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. யாரையும் குறை கூறவில்லை. நன்றி.

Monday, October 17, 2016

"அம்மாவின்" உடல்நிலையும், ஆண்டிபையாட்டிக் எதிர்ப்பும்!

பல பல வதந்திகள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது கட்டு கதைகள், எங்கும் எதிலும் அம்மாவை பற்றிய செய்திகள், இதில் உண்மை கால்பங்கு என்றால் கற்பனை 75%. இது ஒருபுறம் இருக்க இதனை சார்ந்த பிரச்சனைகள், இதனை மையப்படுத்தி அதனை தனக்கு சாதகமாக்க துடிக்கும் சிலர். அதனை தொடர்ந்த சர்ச்சைகள் என்று ஒருவரின் உடல் நலக்குறைவை வைத்து காமெடி ஆக்கி கதை கட்டி  சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாமல் பல ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் தீனி போட்டன.



அதில் குறிப்பிடும் படியான ஒன்று மேலே.. உண்மையில் நடப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் கொடுக்கப்படும் மருத்துவ அறிக்கைகளில் இருந்து நான் கணித்தவற்றையம் தொற்று நோய் ஆராச்சியில் நான் அறிந்ததை வைத்தும் என்ன என்று என்னுடைய கணிப்பை இங்கு   எழுதி இருக்கிறேன் . இது உண்மையாக இல்லாமல் கூட இருப்பினும் அறிவியல் சார்ந்த விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.



2014 ஆம் ஆண்டு என்னுடைய பதிவு ஒன்றில் "ஆண்ட்டி பாக்டீரியல் சோப்புகளை உபயோகிப்பது நல்லதா இல்லையா?" ஆண்ட்டி பாக்டீரியல் எதிர்ப்பு குறித்து குறிப்பிட்டு இருந்தேன். அதில் ஆண்ட்டி பையாடிக் எதிர்ப்பு பாக்டீரியா வான MRSA  குறித்து குறிப்பிட்டு இருந்தேன்.

ஆண்டிபையாடிக் எதிர்ப்பு என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு.
நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் நோய் கிருமிகள் முக்கியமாக இரண்டு வகையாக பிரிக்கலாம். பாக்டீரியாக்கள், வைரஸ்கள். அதில் பாக்டீரியா தொற்றை தவிர்க்க என்று மருத்துவர்களால் பரிந்துரைக்க படும் மருந்துகள் ஆண்டிபையாட்டிக் மருந்துகள் எனப்படும். இவை பாக்டீரியாவிற்கு எதிராக நம் உடலில் இருக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக ஆன்டிஜென் ஐ தோற்றுவித்து நோய் தொற்றை தவிர்க்கும்.

இந்தியாவில் எதற்கெடுத்தாலும் தற்போது அன்டிபையாட்டிக் மருந்துகள் எழுதி தருகிறார்கள். அதனை தவிர நிறைய ஆண்ட்டிபையாட்டிக் சோப்புகளும் உபயோகிக்கிறார்கள். இதன் பின் விளைவு என்னவென்றால், நாம் பாக்டீரியாக்களை அழிக்க அழிக்க, அவை எப்படி உயிர் வாழ்வது என்று பல பல வகைகளில் தங்களை பரிணாம படி தகவமைத்து, தங்களின் DNA களில் மாற்றம் உண்டாக்கி அந்த ஆண்டிபையாட்டிக் மருந்துகள் மற்றும் சோப்பு களில் இருந்து காத்து கொள்ளுகின்றன.  இதனையே, ஆண்ட்டி பையாட்டிக் எதிர்ப்பு என்கிறோம்.

ஆண்ட்டி பையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும் இடங்கள்.

எந்த இடங்களில் அதிகம் ஆண்டிபையாட்டிக் மருந்துகள் கையாள படுகின்றனவோ அந்த இடங்களில் ஆன்டி பையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். அதனாலேயே MRSA போன்றவை பெரிய மருத்துவ மனைகளுக்கு தலைவலி  கொடுக்கும் ஒன்றாக இருந்து வருகின்றன.

உதாரணமாக, அதிகம் கிளீன் செய்யப்படும் இடங்களான, ஆஸ்பத்திரிகள், ICU இடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் இதனை போன்று பரிணாம வளர்ச்சி படி தகவமைத்து எந்த அன்டிபையாட்டிக் மருந்துகளாலும் அழிக்க படாமல் அல்லது பல ஆண்டிபையாட்டிக் மருந்துகள் கொடுத்து அழிக்க வேண்டிய நிலையில் இருக்கும்.


அம்மாவின் உடல் நிலையம், 2ஆம் மாடி காலியாதலும் 

"அம்மா" அப்பல்லோவில் சேர்க்கப்பட்டவுடன் அந்த மாடி முழுதும் காலியாக்க பட்டு விட்டன, யாரும் உள்ளே சேர்க்கப்படவில்லை என்பது பெரிய விஷயமாக பேசப்பட்டது.  இதற்க்கு முக்கியகாரணம், அங்கு ஏற்கனவே இருந்த நோயாளிகள் மூலம் எந்த இரண்டாம் நிலை தொற்று அம்மாவுக்கு பரவாமல் இருப்பதற்காகவும், அங்கே இருந்த மற்ற நோயாளிகள் மூலம் "அன்டிபையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள்" பரவாமல் இருப்பதற்காகவும் என்று மருத்துவ அறிவியல் முறையில் விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், அம்மாவுக்கு இருக்கும் நுரையீரல் தொற்று (upper respiratory disease) நிமோனியாவாக இருக்கும் பட்சத்தில், இதனை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது அவசியம். இது அவருக்கு, செகண்டரி இன்பிக்சன் பரவாமல் தடுக்கும்.

மற்றொரு விஷயம், அவரின் வயது சார்ந்தது. இதே நிலை ஒரு 30 வயது ஒருவருக்கு ஏற்படும் எனில் அதற்கு இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை இல்லை. இவரின் வயதோ 68,  எந்த தொற்றாயினும் ( பாக்டீரியா அல்லது வைரஸ்) 60 வயதுக்கு மேல் ஏற்படின் அதற்க்கு அதிக கவனிப்பு தேவை, பாதுகாப்பு தேவை.  அதிலும், அவருக்கு இருக்கும் சக்கரை வியாதி, மற்றும் ரத்த கொதிப்பு இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு அதிக டோஸ் உள்ள ஆன்டிபயோட்டிக் கொடுக்க இயலாது. அப்படி கொடுத்தால் அது அவருக்கு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதுவும் அவருக்கு நிம்மோனியா போன்ற தொற்று ஏற்பட்டு இருப்பின், வெளி ஆட்களை உள்ளே சேர்க்காமல் இருப்பது, உடலில் எதிர்ப்பு  சக்தி ஏற்படும் வரை பாதுகாப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும்.  உடலின் எதிர்ப்பு சக்தி அளவு, ரத்த வெள்ளை அணுக்கள் அளவு எல்லாம் சரி பார்த்த பின்னர், மற்ற யாரையும் உள்ளே அனுமதிக்கலாம்.

இது இவருக்கு என்று இல்லை,வேறு  யாராக இருப்பினும், 60 வயதை தாண்டிய ஒரு பெரியவராக இருப்பின், அவருக்கு நுரையீரல் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பின், இதே போன்ற ஒரு மருத்துவ நிலை தேவை படலாம். அது அவரவருக்கு இருக்கும் பண வசதியை பொறுத்தது.

அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பின், அவரின் உடல் நிலை முழுதும் குணமாகும் வரை மருத்துவமனையில் இருப்பது நல்லது.


டிஸ்கி:  இது "அம்மாவின்" உடல்நிலை குறித்து அறிவியல் ரீதியான கருத்து மட்டுமே, உண்மை நிலை அல்ல.


நன்றி.


Friday, October 14, 2016

சவுத் இந்தியனும் கிளிஷேக்களும், உலக மகா பணக்காரர்களும்!!

சவுத் இந்தியனும், கிளிஷேக்களும்
 
எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன, மதராஸ் மாகாணம் 4, தற்போது 5 மாநிலங்களாக பிரிந்து. ஆனாலும் இன்னும் பல வட இந்திய மக்களிடம் "மதராஸி" என்ற சொல் வழக்கமாக இருக்கிறது. அந்த சொல் மட்டும் அல்ல, மதராஸி என்றால் இப்படி தான் இருப்பார் போன்ற பல கிளிஷேகளும் இன்னும் இருக்கின்றன. 

உதாரணத்துக்கு, தீபாவளிக்கு அம்மாவுக்கு புடவை வாங்கலாம் என்று இங்கிருக்கும் ஒரு வட நாட்டு துணி கடைக்கு சென்று இருந்தேன். உள்ளே நுழையும் போதே அங்கிருந்த அம்மா, வாங்க!, "பட்டு புடவைகள் எல்லாம் கடைசி செக்சனில் இருக்கு" என்றார்.  உடனே நான், இல்லங்க நான் சாதாரண புடவை பார்க்கணும் என்றவுடன், அவரோ, "நீங்க மதராஸி மக்கள் எப்பொழுதுமே பட்டு புடவை தானே வாங்குவீங்க, அதனாலதான் சொன்னேன்" என்றார்.

எங்க இருந்து இது போல கிளிஷேக்கள் உருவாகுதுன்னு தெரியல..இன்னொரு விஷயம், படேல் ஒருவரின் வீட்டுக்கு சாப்பிட போய் இருந்தோம், அவர், சாப்பிடும் போதே பெரிய தயிர் டப்பா எடுத்துட்டு வந்து வச்சார். அது டின்னெர் என்பதால் நாங்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கம். ஆனால் அவருக்கு "ஒரு ஆச்சரியம்," "என்ன சவுத் இந்தியன் நீங்க, தயிர் சாதம் சாப்பிடாம இருக்கீங்க!". என்று கேட்டார்.

இதே போல இன்னும் சில கிளிஷேக்கள், சவுத் இந்தியன் பெண்கள் எல்லாரும், கருப்பாக இருப்பார்கள், எல்லாரும் வெஜிடேரியன் என்று ஒரு சில கிளிஷேக்கள். எல்லாரும் பேசும் பொது ஐயோ, கடவுளே ..என்று பேசுவார்கள் என்றும் சில...இதனை குறித்து நான் அப்பப்போ யோசிப்பதுண்டு.  வேலைப்பளுவில் இருந்து ரிலாக்ஸ் ஆக என்று நான் யூ டூப் தட்டியபோது  "2 ஸ்டேட்ஸ்" என்ற படம் பார்க்க நேர்ந்தது. அதிலும் இப்படி பல பல கிளிஷே காட்சிகள்.  சவுத் இந்தியன் அல்லது தமிழன் என்றால்  கர்நாடக சங்கீதம், பட்டு புடவை, ஐயர், சந்தன பொட்டு, தயிர் சாதம், ஐயோ..என்று இருப்பார்கள் , என்பன போன்ற கிளிஷேக்களை உறுதி செய்கிறது. 
நான் வட இந்தியாவில் வசித்ததில்லை, அதனால் இது இன்னும் தொடரும் நிலையா என்று தெரியவில்லை.  இதனை குறித்து தேடிய போது, "We are south of India" என்ற ஆல்பம் பார்க்க நேர்ந்தது. அது இது போன்ற கிளிஷேக்கள் பற்றியது. நீங்களும் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கலாம்.

 




உலக மகா பணக்காரர்கள் 

"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்ற பழமொழி நிறைய பேர் கேள்வி பட்டு இருப்பார்கள். நானும் சிறு வயதில் இது போன்ற பல புது பணக்காரர்களை பார்த்து இருக்கிறேன். தற்போது பண புழக்கம் அதிகமான, சோசியல் மீடியா அதிகம் ஆன பிறகு, "ஷோ" காட்டுவது என்பது அதிகம் ஆகிவிட்டது என்று சொல்லலாம். தற்பெருமை காட்டுவது என்பது ஆண், பெண் பாகுபாடில்லாமல் நடக்கிறது. ஆண்கள் முக்கால் வாசி நேரம், "கார், பைக்" போன்றவற்றை ஷோ காட்டுவது, பல இடங்களுக்கு நாடுகளுக்கு சென்று பல போஸ்களில் போட்டோ இணையத்தில் உலவ விடுவது, சகஜம் என்றால். பெண்களோ!!, பல பல ட்ரெஸ்கள், நகைகள், மேக்கப் என்று பலவும் போட்டு, பல பல போஸ்களில் படம் எடுத்து உலவ விடுவது சகஜமான நிகழ்வு. 

இதெல்லாம் இளைய மக்கள் செய்து கொண்டிருக்க, மிடில் கிளாஸ் மக்களிடம் வேறு வகையான "ஷோ"   காட்டுவது என்பது உண்டு.  பெண்கள் எல்லாம் பெரிய தடிமனான செயின் போட்டு கொள்ளுவது. உதாரணமாக, "அம்மா" வின் பக்தைகள் சிலரின் புகைபடங்கள் காண நேர்ந்தது, அதில் காட்டப்படும் "நகை" காசு மாலை எல்லாம் பார்த்தால், எங்க இருந்து இவங்களுக்கு பணம் கிடைக்குது என்று கேட்க தோன்றும்.  

(photo from BBC) 

இதே போல நிறைய ஷோ பண்ணும் குடும்பம் என்றால், அமெரிக்காவை பொறுத்தவரை "கர்தாஷியன்" குடும்பம். "அற்பனுக்கு வாழ்வு..." பழமொழிக்கு சரியான உதாரணமான இவர்கள். 
ஆனால், இப்படி ஷோ காட்டுவதன் பின் விளைவுகள் என்ன என்று பார்த்தால் துப்பாக்கி முனையில் "கிம் கர்தாஷியன்" நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை கூறலாம். இதே, தற்பொழுது ஹாலோவீன் காஸ்டியூம் ஆகி கூட இருக்கிறது. 


ஆனால், உண்மையில் உலக மகா பணக்காரர்கள் எல்லாம் இப்படி ஷோ காட்டுபவர்களா, என்று பார்த்தால் ஆச்சரியம் மிஞ்சுகிறது. உதாரணமாக, "பில் கேட்ஸ் ம் அவரது மனைவியும்" தங்களது சொத்தில் பாதியை "பில் & மெலின்டா பவுண்டேஷன்" க்கு செலவளிக்கிறார்கள். (நானே அவர்களின் பவுண்டேஷன் க்கு நிறைய ஆராய்ச்சி அப்ப்ளிகேஷன் போட்டு இருக்கிறேன்)  அவர்களின் போகஸ் எல்லாமே, ஏழை நாடுகளில் இருக்கும் மக்களின் சுகாதாரத்தை குறித்த, உடல்நிலையை முன்னேற்றும் வழிகள், மருந்துகள் கண்டு பிடிப்பது போன்ற ஆராய்ச்சிக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். 

"வாரன் பாபட்",  1958 இல் வாங்கிய  அதே வீட்டில் இன்னும் வாழ்கிறார். முகநூல் CEO மார்க் தனது Facebook சேரில் 99% பொதுநல, சுகாதார விசயத்துக்கு என்று எழுதி வைத்து விட்டார். இன்னும் சிம்பிள் ஆக, அதே பணிவுடன், சாதாரண காரில், சாதாரணமாக வாழ்கிறார்கள்.  

"Too often, a vast collection of possessions ends up possessing its owner. The asset I most value, aside from health, is interesting, diverse, and long-standing friends."

-Warren Buffet


இதையே தான் நம்ம பாவனையில்  "கையில் கொஞ்சம் காசு இருந்தால் அது தான் நமக்கு முதலாளி, கழுத்து வரைக்கும் காசு இருந்தா அதுவே உனக்கு முதலாளி" என்று சொல்லி இருக்கிறார்கள் போல.
 

நன்றி.