Wednesday, December 29, 2010

சகுனங்களும் வாழ்கையும் !


சிறு வயதில் நிறைய பேர் சகுனங்கள் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். "நமக்கு நல்லது நடக்கிறதா இருந்தா சில பல சகுனங்கள் நமக்கு உணர்த்தும்" என்று என்னுடைய பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன். சகுனங்கள் என்பது உண்மையா?, சகுனங்கள் நமக்கு எதனை உணர்த்துகின்றன. நிறைய பேர் "எனக்கு இப்போ நடக்கிறதெல்லாம் பார்த்தா நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்" என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்..அப்படியானால் நமக்கு சுற்றிலும் நடப்பவை நமக்கு எதையோ உணர்த்துகின்றனவா? இவை எல்லாம் எனக்கு நிறைய நேரம் எழும் கேள்விகள்.

சில மாதங்களாக வேலைக்கு முயற்சி செய்து ஒன்றும் சரியாக கிளிக் ஆகாத நிலையில் மனது வெறுத்து இருந்தேன். அந்த நேரத்தில் சில நாட்களுக்கு முன் பாலோ கேல்ஹோ அவர்களின் தி அல்கெமிஸ்ட் என்ற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது.

- The Alchemist- : பாலோ கேல்ஹோவின் முக்கியமான புத்தகம். ஒரு மனிதனின் விதியை தேடிய பயணத்தை பற்றியது இந்த புத்தகம். அது தன்னம்பிக்கை புத்தகமா அல்லது கதையா, நாவலா எதிலும் வகைப்படுத்த முடியாத படியான அருமையான புத்தகம் அது. இப்போது படிக்கும் போது ஒரு வகையான எண்ணங்களை தருகிறது இந்த புத்தகம், ஒரு வேலை சில வருடங்கள் கழித்து படிக்கும் போது வேறு எண்ணங்கள் எனக்கு தோன்றக்கூடும்.


ஒரு மனிதன் தன்னுடைய விதியை நோக்கி பயணம் செய்யும் போது இந்த உலகமும் அதனை சார்ந்த அனைத்தும் உதவும் என்று அந்த புத்தகத்தில் படித்தேன். எத்தனை தூரம் இது உண்மை.

சில காரியங்களை செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் எல்லாமே நல்ல படியாக நடப்பது போன்று இருக்கும், ஆனால் நாட்கள் ஆக ஆக தடைகள் ஒன்றன் பின் ஒன்றாக தலை எடுக்கும். பின் ஒரு கட்டத்தில் எல்லாமே முடிந்து விட்டது நமக்கு இதில் எதிர் காலமே இல்லை என்று அந்த காரியத்தை ஊத்தி மூட நினைப்போம், அப்போது எல்லாமே நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். இவை எல்லாம் எதனை குறிக்கின்றன?

அந்த புத்தகத்தின் படி இயற்கை/விதி எதுவோ ஒன்று நம்மை ஒரு செயலில் ஈடுபடுத்த முதலில் நம்பிக்கை தருவது போல சில லக் தரும் அது பிகிநேர்ஸ் லக் என்கிறார். பிறகு காலம் செல்ல செல்ல வாழ்கையை/உலகத்தை புரிய வைக்க நமக்கு கஷ்டத்தை தருகிறது. பலர் இந்த கஷ்டம் தாங்க முடியவில்லையே என்று வருந்தி முயற்சியை கை விட்டு விடுகிறார்கள். அவர்கள் losers ஆகிறார்கள். ஆனால் முயற்சியை கைவிடாமல் கடைசி வரை முயல்பவன் ஜெயிக்கிறான்.

அதனை தான் ஒரு வேலை

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "

என்று வள்ளுவர் குறிப்பிட்டாரோ, தெரியவில்லை.

எப்படியோ அந்த புத்தகம் கிருஸ்துவ நம்பிக்கைகளை அங்கங்கே தூவினாலும் அது சொல்லும் கருத்துகள் மறுக்க முடியாததாக உள்ளன.

சில நாட்களுக்கு முன் CNN ஹீரோவான மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் இங்கு நியூ ஜெர்சி வந்திருந்த போது ஒன்று குறிப்பிட்டதாக நண்பர் ஒருவர் கூறியது ஞாபகத்திற்கு வந்தது, "நல்ல காரியம் செய்யனும்னு நான் ஆரம்பிச்சது தாங்க, நல்ல காரியம்னு ஆரம்பிச்சவுடன் fund தானா வர ஆரம்பிச்சது, எனக்கு பின்னால யாரவது இதனை தொடர்ந்து நடத்த ஆள் கட்டாயம் வருவார்" இது நாராயணன் கிருஷ்ணன் சொன்னது. இதனை தான் சகுனங்கள் என்பதோ?

டிஸ்கி: இந்த பதிவு புத்தக விமர்சனமா, அனுபவமா அல்லது கொசுவர்த்தியா எனக்கே தெரியவில்லை!

Wednesday, December 22, 2010

தி டின்னெர் கேம் , பீஜா பிரை & ஏப்ரல் பூல்






ஒரு வீடு, அதற்குள் இருவர், அதில் ஒருவருக்கு முதுகு வலி, இன்னொருவர் சற்று வெகுளியான மனிதர். இதுதான் கதை களம். இதனை வைத்துக்கொண்டு ஒரு முழு நீள காமெடி படம். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும் அளவு காமெடி. நான் சொல்வது நேற்று நாங்கள் பார்த்த பிரெஞ்சு படமான Le dîner de cons' பற்றி.

இந்த வெகுளியை தங்கள் நண்பர்கள் நடத்தும் டின்னெர் பார்டிக்கு அழைத்து செல்வதே முதுகுவலிகாரரின் நோக்கம். அங்கு, அவரவர் உடன் அழைத்து வரும் வெகுளி/முட்டாள்கள் அனைவருடனும் பேச விட்டு கலாய்த்து அதில் ஒருவருக்கு "சிறந்த முட்டாள்" என்று பட்டம் கொடுப்பார்கள். இது பற்றி டின்னெர் முடியும் வரை அழைத்து வரப்படும் வெகுளிகளுக்கு தெரியாது.

அந்த டின்னேர்க்கு அழைத்து செல்வதற்கு முன் முதுகு வலி ஏற்பட்டு பாடாய்படுத்த, அவர் மனைவி அவரை விட்டு விட்டு செல்ல, இன்கம் டாக்ஸ் காரர் வீட்டுக்கு வர என்று வரிசையாக எல்லாமே தப்பாய் முதுகு வலிகாரருக்கு நடக்க, ஒரே சிரிப்பு தான்.


ஆங்கிலத்தில் இந்த படத்தின் பெயர் 'தி டின்னெர் கேம்' . சப் டைட்டில் உதவியுடன் நாங்கள் அந்த படம் பார்த்தாலும், சப் டைட்டில் தேவையே இல்லை என்று சொல்லுமளவு François Pignon ஆக நடித்த Jacques Villeret அவர்களின் நடிப்பு. அவரின் சொட்டை தலையும் அவர் முக பாவனைகளும் பார்த்தாலே சிரிப்பாய் வரவழித்தது. முதுகு வலியுடன் Pignon கொடுக்கும் தொல்லைகளையும் பொறுத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நடிக்கும் கதாபாத்திரத்தில் Thierry Lhermitte நடித்திருந்தார்.

நான் பிரெஞ்சு படங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை ஆயினும் சிரித்து சிரித்து வயிறு வலி வந்தே விட்டது. இப்படி நல்ல படத்தை நம்ம மக்கள் காப்பி அடிக்காம இருக்க மாட்டாங்களே என்று தேடிப்பார்த்ததில் கண்டுபிடித்தது இது தான். ஹிந்தியில் 'Bheja Fry' அப்புறம் மலையாளத்தில் "ஏப்ரல் பூல்" இரண்டுமே அன் அபீசியல் காப்பி ஆப் தி டின்னெர் கேம் படம்.


படங்கள்: நன்றி இணையம்


Saturday, December 18, 2010

வழிபாடும் வழிபடும்முறையும் !

பிராத்திப்பது என்பது என்ன?, சில நேரங்களில் என்னுள் எழும் சில எண்ணங்களின் வெளிப்பாடே இந்த பதிவு.

இன்று இங்குள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றிருந்தோம். வழக்கமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு இருக்கும் பெருமாளுக்கு அபிஷேகமும், பின் அலங்கார ஆராதனையும் நடப்பதுண்டு. அபிஷேகம் ஆரம்பிக்கும் முன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருக்கும் பெரியாழ்வார் திருமொழியில் இருந்து "வெண்ணை அளந்த குணுங்கும்" என்ற பத்து பாசுரங்கள் பாடப்படுவது வழக்கம்.சிறு கண்ணனை குளிக்க யசோதை அழைப்பது போன்று அமைந்திருக்கும் அந்த பத்து பாசுரங்களும் கேட்க்க இனிமையானவை.

இவற்றை போன்ற பாசுரங்களை அனைவரும் படிக்கும் வண்ணம் கிட்ட தட்ட அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து புத்தகமாக வைத்திருப்பார்கள்.ஒவ்வொரு முறையும் சுவாமிக்கு அபிஷேகம் ஆரம்பிக்கும் போது அனைவரும் இந்த பாடல்கள் பாடுகின்றனர்.

இன்று மார்கழி பிறந்து முதல் சனிக்கிழமை, இன்றும் வழக்கம் போல அபிஷேகம் ஆரம்பிக்கும் போது சிலர் "வெண்ணை அளந்த குணுங்கும்" பாட ஆரம்பித்தார்கள். உடனே அங்கிருந்த சிலர் "யார் இதனை பாட சொன்னது?" இது மார்கழி மாதம் இந்த மாதம் முழுதும் திவ்ய பிரபந்தம் பாடக்கூடாது, தேசிக பிரபந்தம் மட்டுமே பாட வேண்டும் என்று கத்தி கட்டளை இட ஆரம்பித்து விட்டனர். அதில் பாட விளைந்த பலர் முகம் சிறுத்து போய் விட்டது.

வைஷ்ணவ சம்பிரதாயத்தின் படி இந்த மார்கழி மாதம் முழுதும் தேசிக பிரபந்தம் பாடுவார்கள், நம்மாழ்வார் மோட்சம் அன்று மட்டுமே அனைத்து திவ்ய பிரபந்த பாசுரங்களும் பாடுகிறார்கள்.

ஆனால் இந்த சம்பிரதாயம் எத்தனை பேருக்கு தெரியும்? அதன் பின் இருக்கும் கதை என்ன? ஏன் அப்படி ஒரு சம்பிரதாயம்? என்றெல்லாம் விளக்கி விட்டு பின் அவ்வாறு செய்திருக்கலாம் அல்லவா?. அங்கு பாட அமர்ந்திருந்த பலரும் வேறு வேறு மொழி பேசுபவர்கள். அவர்கள் தமிழ் பாசுரங்களை பாடுவதே நமக்கு கிடைத்த பெருமை அல்லவா.

என்னை பொறுத்தவரை இறைவனை நோக்கி பாடப்படும் அனைத்து பாடல்களும் இறைவனை சென்றடையும், அதில் இதை பாட வேண்டும் இதை இன்று பாட கூடாது என்று கூறுவதெல்லாம் வெறும் அந்தந்த சம்பிரதாயங்களை சார்ந்தது மட்டுமே. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளை இடுவது தேவையா?