Sunday, November 21, 2010

கேள்வி, புதிர் விடை

நேற்று நான் கேட்ட முதல் மூன்று கேள்விகளுக்கு பல பதில்கள் உண்டு, அவை எந்த வகை வேலைக்கு நீங்கள் அப்ளை செய்திருக்கிறீர்கள் என்பதனை பொறுத்தது

நீங்கள் மேனேஜர் அல்லாத வேலைக்கு அப்ளை செய்திருக்கிறீர்கள் என்றால்

1) பாதாள சாக்கடை மூடி வட்டமாக இருப்பதேன்? என்ற கேள்விக்கு கும்மி அவர்கள் சொன்ன பதில் சரியாக இருக்கும்.

அதுவே நீங்கள் மேனேஜர் வேலைக்கு அப்ளை செய்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வேறு மாதிரி விடை தர வேண்டும்

உதாரணமாக
எந்த வடிவத்தை எடுத்துக்கொண்டாலும் வட்ட வடிவமே அல்லது கோள வடிவமே அனைத்திலும் உறுதியானது. நீர் துளி துளியாக விழுவது முதல் பூமி முதல் அனைத்து கோள்களும் கோளமாக இருக்கின்றன, ஏன் என்றால் அந்த ஒரு வடிவத்தில் மட்டுமே பரப்பு இழுவிசை அனைத்து பக்கமும் சமன் செய்யப்பட்டு மிக உறுதியாக இருக்கும்.

அதனால் வட்ட வடிவ மூடி மட்டுமே பூமியின் பக்கவாட்டில் அழுத்தும் திறனை நன்கு தாங்க வல்லது, அதனால் மூடி நிறைய நாட்கள் உழைக்கும். நமக்கும் செலவு குறைவு. போன்ற cost- management பதில்களை எதிர் பார்கிறார்கள்.


2) அமெரிக்காவில் எத்தனை பெட்ரோல் பம்ப்கள் உள்ளன?

இந்த கேள்விக்கு யாராலும் சரியான பதில் தர இயலாது, ஆயினும் ஒரு approximate பதில் தரலாம்.

உதாரணமாக அமெரிக்க மக்கள் தொகை 300 மில்லியன் அதில் பாதி பேருக்கு கார் இருக்கிறதென்றால் 150 மில்லியன் மக்களுக்கு கார் உண்டு.

ஒரு பிஸி ஆன நகரத்தில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு இரண்டு நிமிடத்திற்கு ஒரு கார் பெட்ரோல் போடுகிறது என்று வைத்து கொள்வோம் ஒரு மணி நேரத்திற்கு முப்பது கார்கள், இருபத்தி நாலு மணி நேரமும் திறந்திருக்கும் பேங்க் என்றாலும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 500 கார்கள் பெட்ரோல் போடலாம்.

150 million கார்களுக்கு பெட்ரோல் போட எத்தனை பங்குகள் தேவை

150 million / 500 ~ 300,000


இந்த கேள்வி ஏன் கேட்கபடுகிறது என்றால் உங்களால் எத்தனை தூரம் cost estimate செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளவே. எந்த ஒரு மேனேஜர் கும் முதல் தேவை இது என்பதால் இதனை போன்ற estimation கேள்வி கேட்கப்படுகிறது.


3. இது நாள் வரை நீங்கள் அனுபவித்த வித்தியாசமான உணர்வு எது?

இது behavioral சம்பந்தமான கேள்வி. இது பெரும்பாலும் பெண்களிடம் கேட்கப்படுகிறது. பெண்கள் உணர்ச்சி பூர்வமானவர்கள். ஒரு மேனேஜர் பொறுப்பை பெண்ணிடம் கொடுத்தால் உணர்ச்சி பூர்வமான முடிவு எடுக்க கூடாது என்பதற்காகவே இது போன்ற கேள்வி கேட்கப்படுகிறது.

இதற்க்கு பதிலாக நான் காதலித்த, குழந்தை பிறந்த நேரத்தில் ஏற்பட்ட அனுபவம் என்று பதில் சொல்லாமல் வேலையில் சாதித்த தருணம், அல்லது பட்டம் வாங்கியபோது எழுந்த உணர்வு இது போன்று professional ஆக பதில் எதிர் பார்க்கிறார்கள்.

மற்ற இரண்டு கேள்விகளும் நிறைய ஆப்டிடுட் டெஸ்டில் கேட்பது போன்றது

4) 1, 2, 6, 42, 1806, _____??? ஆறாவது எண் எது?

இதற்க்கு கும்மியும் கெக்கே பிக்குனியும் சரியான பதில் தந்து இருக்கிறார்கள்.

இது ஒரு geometric sequence

1*(1+1) =2
2*(2+1)=6
6*(6+1)=42
42*(42+1)=1806
1806*(1806+1)=3263442

So

A(n) = A(n-1)*( A(n-1)+1)

5) J ? M A M J J A S O N D விடுபட்ட எழுத்து என்ன?

J F M A M J J A S O N D

இதற்கும் கும்மியும் கெக்கே பிக்குனியும் சரியான பதில் தந்து இருக்கிறார்கள்.

இது ஆங்கில மாதங்களின் முதல் எழுத்தை குறிக்கிறது

So இரண்டாவது மாதம் Feb அதன் முதல் எழுத்து F

Saturday, November 20, 2010

சில புதிர்களும் கேள்விகளும்

சில மாதங்களாக வேலைக்காக தொடர்ந்து நேர்முக தேர்வுக்கு சென்று வருகிறேன். அதில் கேட்கப்பட்ட ஒரு சில சுவாரஸ்யமான கேள்விகளும் அதற்க்கு தயார் செய்யும் போது என் கவனத்துக்கு வந்து சில புதிர்களும் இங்கே

பாதாள சாக்கடை மூடி வட்டமாக இருப்பதேன்?

அமெரிக்காவில் எத்தனை பெட்ரோல் பம்ப்கள் உள்ளன?

இது நாள் வரை நீங்கள் அனுபவித்த வித்தியாசமான உணர்வு எது?

1, 2, 6, 42, 1806, _____??? ஆறாவது எண் எது?

J ? M A M J J A S O N D விடுபட்ட எழுத்து என்ன?


நீங்கள் இந்த கேள்விகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



Friday, November 19, 2010

PIT போட்டிக்கு என் சார்பாக !



நிறைய நாட்கள் பிட் போட்டிக்கு புகைப்படங்களை அனுப்ப நினைத்திருந்தேன் ஆனால் நேரமின்மை, எப்படி அனுப்புவது என்று தெரியாமை என்று தள்ளி கொண்டே போனது, முடிவாக சில புகைப்படங்களை தேர்தெடுத்து இருக்கிறேன். எதை அனுப்பலாம் நீங்களே சொல்லுங்கள்.


1) இரவின் ஒளியில் ஐபில் டவர்


2) சூரிய உதயம் sunset பீச்


3) இரவின் தொடக்கம் நியூயார்க் சுதந்திர தேவி சிலை



4) சூரிய ஒளியில் Manhattan நகரம்




5) வீடு




எது உங்கள் சாய்ஸ்?

Tuesday, November 16, 2010

பொய் முகம்



V.S. Naipaul அவர்களின் புத்தகமான A Bend in the River இல் ஒரு பாதிரியார் ஒருவர் இருப்பார். அவரின் பொழுது போக்கு முகமூடிகள் சேகரிப்பது. இந்த கதையை படிக்கும் பலருக்கும் இந்த கதை மாந்தர் எதனை குறிக்கிறார் என்ற சந்தேகம் வருவதுண்டு. என்னை பொறுத்த வரை மனிதர்கள் பல நேரங்களில் நம் உண்மை முகத்தை மறைக்க உதவும் முகமூடியை இந்த கதை மாந்தர் சூசகமாக குறிக்கிறார் என்று சொல்லுவேன்.

என் கணவர் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் ஒன்றை கூறுவதுண்டு. அது "நாமெல்லாம் லிபரல் என்ற முகமூடியில் இருக்கும் கன்செர்வேடிவ்கள்" என்பதே அது. இதனை நான் இந்தியர்கள் மட்டுமே அல்ல எல்லா நாட்டினர்க்கும் பொருந்தும் என்பேன்.

உதாரணமாக என்னுடைய பாஸ் ஆக இருந்த ஒரு ஜெர்மனை கூறலாம். மேற்கு ஜெர்மனியை சேர்ந்தவர் அவர். எங்க க்ரூப்பில் இருந்த ஒரு பையன் gay. ஆனாலும் மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறிய அவருக்கு gay பையனை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை. அவன் முதுகுக்கு பின்னால் பயங்கரமாக கிண்டல் செய்வார். லிவிங் டுகெதர் எல்லாம் சர்வ சாதரணமாக இருந்த அவருக்கு ஒரு பையன் இன்னொரு பையனுடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அவரை பொறுத்தவரை அவர் ஒரு லிபரல் ஆனால் கே விஷயத்தை எடுத்து கொண்டால் அவர் ஒரு கன்செர்வேடிவ். என்ன தான் அந்த பையனை கிண்டல் செய்தாலும் அவனுக்கு முன் சாதாரணமாகவே பேசுவார்.
அங்கு அவருக்கு லிபரல் முகமூடி தேவை பட்டது.

அறுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் சிவில் ரைட்ஸ் மூவ்மென்ட் வர ஆரம்பித்த பின்பு வரை கூட, ஒரு கறுப்பினத்தவர் ஒரு வெள்ளை இனத்தவரை காதலிக்கவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ முடியாது. இன்னும் கூட சில இடங்களில் இதனை இங்கு காணலாம். ஆனால் தேர்தல் நேரங்களில் அவர்கள் எல்லாம் நான் லிபரல் என்ற போர்வையை போர்த்திக்கொள்வார்கள்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் கருத்தடை மாத்திரைகள் சட்டபூர்வமாக்கபடும் வரை கூட பெண்களுக்கு சம உரிமை இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் எழுபதுகளில் மிகப்பெரிய பெண்ணிய இயக்கம் வந்து பெண்கள் சம உரிமை கேட்க்க ஆரம்பித்து அமெரிக்காவை புரட்டி போட்டார்கள். பெண்ணுரிமை இயக்கங்கள் கொடி பிடிக்க ஆரம்பிக்கும் போது இங்கு ஏற்பட்ட எதிர்ப்பு அலை அடங்க பத்தாண்டுகள் பிடித்தது எனலாம். ஆனாலும் தற்போது பெண்கள் சம உரிமை என்பதெல்லாம் இங்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆயினும் பெண்ணுரிமை இயக்கங்கள் கொடி பிடித்த போது அது பெரிய விசயமாக பார்க்கப்பட்டது.


என்னை பொறுத்தவரை இந்தியாவில், அமெரிக்காவில் எழுபதுகளில் ஏற்பட்ட நிலை போன்றதொரு நிலை வர ஆரம்பித்து இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய இந்தியா பயணத்தில் அதனை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஒரு பத்து வருடதிற்க்கு முந்தய காலத்தில் கூட எல்லாவற்றிர்க்கும் எதிர் கேள்வி பெண்கள் கேட்டதில்லை. ஆனால் இப்போது நான் சந்தித்த அனைத்து இளைய சமுதாயத்தினரும் ஏன், எதற்கு, இப்படி செய்தால் என்ன ஆகும்.... இப்படி பல கேள்விகள் கேட்கிறார்கள்.

ஏதேனும் ஒன்றை செய்யாதே என்றால், செய்தால் என்ன ஆகும்? என்று கேட்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் இருந்த பெண்கள் கேள்வி கேட்க்க ஆரம்பித்திருப்பது புதுமையாக சிலருக்கு தெரிகிறது, அவர்களின் ரத்தம் கொதிக்கிறது. நாங்கள் பெண்களுக்கு சம உரிமை வழங்குபவர்கள் என்று அவர்கள் அணிந்திருந்த முகமூடியை கிழித்து கொண்டு அவர்களின் கன்செர்வேட்டிவ் முகம் வெளியில் தெரிய ஆரம்ப்பிக்கிறது. இதுவும் சில காலம் மட்டுமே வித்தியாசமாக தெரியும், பின்பு பழகிவிடும்.

இந்த எதிர்ப்பு அலைகள் அடங்க சிறிது காலம் பிடிக்கலாம் ஆனால் மாற்றம் என்பது மாறாதது. நாம் வேண்டாம் வேண்டாம் என்று அடக்க ஆரம்பித்தால் தான், அதில் என்ன தான் இருக்கிறது என்று முயற்சி செய்து பார்ப்பவர்கள் அதிகரிப்பார்கள் என்பது என் எண்ணம்.

இதற்க்கு உதாரணமாக நான் படிக்கும் போது சந்தித்த ஒரு பெண்ணை சொல்லலாம். அந்த பெண் இந்தியாவில் இருக்கும் ஒரு மெட்ரோ நகரத்தில் இருந்து வந்தவள், ஆனாலும் அவள் குடும்பம் ஒரு கட்டுப்பெட்டியானது. அவள் வீட்டில் அடக்கி அடக்கி வைத்திருந்ததன் விளைவாக வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன், அவள் புகை, தண்ணி...இன்னும் நிறைய.. எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டாள். திரும்பி நான் ஊருக்கு போகவே போவதில்லை அது நரகம் என்று சொல்லி கொண்டிருப்பாள். இதே போல நிறைய சொல்லலாம்..

ஆகவே நான் நல்லவன், அதனால் அதே போல அனைவரும் இருக்க வேண்டும், என்ற நம்முடைய முகமூடியை கழற்றி வைத்து விட்டு மாற்றத்தை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்வதே நன்மை பயக்கும். அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது, இதனை செய்தால் என்ன என்ன பக்க விளைவுகள் நேரலாம், அதிலிருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் என்று ஒரு நண்பர்கள் போல அறிவுரை கூறலாமே தவிர, அடக்கி வைப்பதென்பது இனி வரும் தலைமுறையிடம் உதவாது என்பதே என் எண்ணம்.

Saturday, November 13, 2010

பெண்களும் சுதந்திரமும்

இன்று நான் பார்த்த பெண் சுதந்திரம் மற்றும் கலாச்சாரம் குறித்த சில இடுகைகளை படித்த பிறகு எனக்குள் எழுந்த எண்ணங்களின் விளைவே இந்த இடுகை.

தற்போது இருக்கும் பெண்களுக்கு பொது அறிவு தெரியவில்லை அல்லது அரசியல் குறித்தோ அல்லது ஆட்சி குறித்தோ அறிந்திருக்க வில்லை. அவர்களுக்கு சுதந்திரம் என்றாலே என்ன என்று தெரியவில்லை. தெரிந்தால் தானே அவர்களுக்கு சுதந்திரம் தர முடியும்?. இவ்வாறெல்லாம் ஜோதிஜி அவர்களின் தளத்தில் பெண்கள் குழந்தைகள் கொஞ்சம் சுதந்திரம் என்ற இடுகையில் படிக்க நேர்ந்தது.

ஒரு விவாதத்திற்காக கீழ் காணும் ஒரு சூழல் நடப்பதாக வைத்துக் கொள்வோம்.

குடும்ப தலைவி ஆக இருக்கும் ஒரு பெண் அரசியல் குறித்து பேச ஆரம்பிக்கிறார் அல்லது இந்திரா நூயி குறித்து பேச ஆரம்பிக்கிறார் அல்லது நிறைய அரசியல் பற்றியோ அல்லது பொது அறிவு பற்றியோ படித்து தெரிந்து கொள்கிறாள்.

தான் அறிந்து கொண்டதை, அவள் கணவரிடம் தன்னுடைய நிலைப்பாடு குறித்தோ அல்லது எப்படி ஆட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்றோ பேச தலைப்படுகிறாள் என்று வைத்து கொள்வோம். எத்தனை கணவன் மார்கள் அதனை விரும்புவார்கள்?.

ஒரு சமயம் தன்னுடைய கணவனை விட உலக அறிவு அதிகம் தெரிந்து கொண்டாள் என்று வைத்து கொள்வோம் எத்தனை பேர் "பரவாயில்லையே! என்ன விட உனக்கு நிறைய தெரியுதே?" என்று ஊக்குவிப்பார்கள். அல்லது பிறரிடம் சொல்லி சந்தோஷ படுவார்கள்.

நான் சிறு வயதில் இருந்து பார்த்த சில சொந்தங்களையே இதற்க்கு பதிலாக தர விளைகிறேன்.

என் அம்மாவுக்கு நிறைய விஷயம் தெரியும், எப்படி பேசுவது, முடிவெடுப்பது, சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி.
அவர்களை போல தைரியமானவர்களை நான் பார்த்ததில்லை (என் பிரசவதிற்க்காக அமெரிக்காவுக்கு யார் துணையும் இன்றி தனியாக இரண்டு விமானம் மாற்றி வந்தார்) .

ஆனால் என் அப்பாவை பொறுத்த வரை தெருவில் நடந்து போகும் போது கூட என் அம்மா என் அப்பாவிற்க்கு முன்னால் நடந்து செல்ல கூடாது, பத்தடி பின்னால் வர வேண்டும். எதேனும் ஒரு விடயத்தை பற்றி என் அம்மா தன் கருத்தை என் அப்பாவிடம் சொன்னால் உடனே வரும் விடை “ஆமா, இவ எனக்கு முன்னால பிறந்தவ, ரொம்ப தெரியும் பாரு”.

என் தாத்தா வீட்டில் அடுக்களையை விட்டு என் அத்தை வந்ததில்லை. என் தாத்தா முன்பு எந்த பெண்ணும் உட்கார கூடாது. எதோ நான் சொல்வதெல்லாம் அறுபதுகளில் நடந்தது என்று நினைப்பவர்களுக்காக “இது இப்போதும் எங்கள் வீட்டில் நடந்து கொண்டிருப்பது”.

"பொண்ண இவ்வளவு படிக்க வைக்கிறயே எதுக்கு, எப்படியும் இன்னொரு வீட்டுக்கு போக போறா, அவளுக்கு இவ்வளவு செலவு பண்ணனுமா, இந்த செலவுக்கு பதிலா ரெண்டு பவுனு வாங்கி வச்சிருக்கலாம்"

இதெல்லாம் சின்ன வயதில் நான் கேட்ட வார்த்தைகள். என் அம்மாவிடம் வழங்கப்படும் என்னை சார்ந்த அறிவுரைகள்.

பெண்கள் பொது அறிவு பேச வேண்டும் ஆனால் அதிகம் பேச கூடாது. நிறைய சிந்திக்க வேண்டும் ஆனால் தன்னை விட அதிகம் சிந்திக்க கூடாது. இதெல்லாம் என்ன நியாயம்.

நீங்கள் சொல்வதெல்லாம் நான்சென்ஸ் நான் என் மனைவியை சரி சமமாக மதிக்கிறேன் என்று சொல்பவரா நீங்கள், உங்களை நான் மதிக்கிறேன், போற்றுகிறேன். ஆனால் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்? மனதை தொட்டு சொல்லுங்கள்.


Sunday, November 7, 2010

இழப்பின் வலி !

2000 ஆவது ஆண்டு தீபாவளி மறக்க முடியாத தீபாவளி. குடும்பத்தில் அனைவரும் இருந்து வெடி வெடித்து, பலகாரம் சாப்பிட்டு, உறவினர்கள் வீட்டுக்கு சென்று, நண்பர்களை வீட்டுக்கு அழைத்து புகைப்படம் எடுத்து...இன்னும் நிறைய. கடந்த பத்து வருடங்களில் நான் கொண்டாடிய மகிழ்ச்சிகரமான தீபாவளி என்றாலும் அது தான்.

அடுத்த வருடம் நிகழ்ந்த பெரிய அண்ணனின் மறைவு குடும்பத்தை புரட்டி போட அந்த வருடம் தீபாவளி இல்லையென்று ஆனது. அதற்க்கு அடுத்த வருடம் நிகழ்ந்த அண்ணியின் மரணம் நெஞ்சில் தைத்து தீபாவளியை மறக்க செய்தது. வெளிநாட்டில் படிக்க போய் அங்கிருந்த படியே அடுத்தடுத்த வருடங்களில் தனியாக நான் கொண்டாடிய தீபாவளி சுவாரசியம் இல்லாமல் ஆனது. திருமணம் ஆன பின்பு கூட எங்கள் தலை தீபாவளி சந்தோசம் இல்லாமல் அவர் இங்கேயும் நான் வேறெங்கோ இருந்தும் தனித்தனியாக கொண்டாடியது நினைவில் வந்தது.

2005 தீபாவளி இல் நான் இங்கு வந்த பிறகு " அம்மா அப்பாவுடன் தான் சேர்ந்து தீபாவளி கொண்டாட முடியவில்லை அவருடன் சேர்ந்தாவது, தீபாவளி கொண்டாடலாம்" என்று இருந்தேன் அதற்கும் வேட்டு வைத்தது அவர் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மரணம். என்ன எங்கள் ராசி யோ தெரியவில்லை ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு தடங்கல், மரணம்.

எப்போ தான் தீபாவளி கொண்டாட போறோமோ என்று நினைத்து யோசித்த படியே ஊருக்கு போன் செய்ய, எடுத்தது என் பெரிய அண்ணன் மகள் "அத்தை ஹாப்பி தீபாவளி" என்று மகிழ்ச்சியோடு அவள் சொல்ல, என் மனம் அழ ஆரம்பித்து விட்டது. "நமக்கு அம்மா அப்பாவுடன் தீபாவளி கொண்டாட தான் முடியவில்லை ஆனால் அவளுக்கு அம்மா அப்பாவே இல்லையே".

Friday, November 5, 2010

B. A, M. A ., எதற்கு?

எனக்கு நிறைய நாட்கள் ஒன்று தோன்றுவதுண்டு. எதற்கு எல்லாரும் தங்கள் பெயருக்கு பின்னால் டிகிரி போட்டு கொள்கிறார்கள்?.

நான் கல்லூரியில் படிக்கும் போதெல்லாம் கல்யாண பத்திரிக்கையில் டிகிரி போட்டு கொள்வதற்காகவே படிப்பதாக என்னுடன் படித்த பெண்கள் சிலர் சொல்வார்கள்.

இன்னும் சிலர் ஒரே பாடத்தில் இளநிலை முடித்து முது நிலையும் அதே பாடத்தில் படித்திருந்தாலும் தன் பெயருக்கு பின்னால் இரண்டையும் போட்டு கொள்வதை பார்த்ததுண்டு.

உதாரணமாக

என்பெயர் B. A., M. A., என்று

இன்னும் சிலர் படித்து கொண்டிருப்பார்கள் அதற்குள் கல்யாணம் முடிந்து விடும் (அதற்க்கு பிறகு படிப்பார்களோ இல்லையோ, அது வேற விஷயம்) ஆனாலும் டிகிரி போட்டு கொள்வார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர் பத்தாவது படித்து முடித்தார், பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக படிப்பை மூட்டை கட்டி விட்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். பிறகு என்ன நினைத்தாரோ தெரிய வில்லை இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலை கழகத்தில் M. A., படிப்புக்கு அப்ளை செய்தார். அடுத்த சில மாதங்களில் அவருக்கு திருமணம் நிச்சயித்தார்கள். பத்திரிக்கையில் அவருடைய பெயருக்கு பின்னால் M. A என்று போட்டு கொண்டு மேலே கோடு போட்டு கொண்டார்.

இவராவது எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்ல வேண்டும். என்னுடைய சொந்த காரர்கள் வீட்டில் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்தனர். அந்த பெண் பிளஸ் டூ பாஸ் செய்ய வில்லை. ஆனாலும் கல்யாண பத்திரிகையில் அவள் பெயருக்கு பின்னால் B. A., என்று (ஒரு கோடு கூட போடாமல்) போட்டு கொண்டனர்.

எனக்கு தெரிந்த இன்னொரு (அரசியல்வாதி) நண்பர் வக்கீலுக்கு படிக்க விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து அனுப்பிய அடுத்த நாளே B. L என்று போட்டு கொண்டதை பார்த்திருக்கிறேன். என்னுடைய சமீபத்தைய இந்தியா பயணத்தின் போது கிட்ட தட்ட எல்லா ப்ளெக்ஸ் போர்ட்களில் இருக்கும் பெயருக்கு பின்னாலும் ஒரு டிகிரி போட்டு (சிலர் கோடு போட்டு) பார்த்திருக்கிறேன்.

யாரும் வந்து பரிசோதிக்க போவதில்லை என்பதால் எத்தனை டிகிரி வேண்டும் என்றாலும் போட்டு கொள்ளாலாமா?. ஏன் இந்த டிகிரி மோகம்?

Wednesday, November 3, 2010

The Metamorphosis - எனது பார்வையில்



கடந்த வாரம் தெகா அவர்கள் தன் தளத்தில் Franz Kafka வின் The Metamorphosis புத்தகம் பற்றிய அறிமுகமும் சுட்டியும் கொடுத்திருந்தார். Metamorphosis என்பது சில உயிரினங்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் என்று நான் அறிந்திருந்தாலும் , காஃப்கா பற்றி நான் அறிந்திருக்கக்வில்லை.

மாற்றம் என்பது மாறாதது, என்பதே கதையின் கரு. கதையின் நாயகன் கிறிகர் மூலம் அது காட்டப்படுகிறது. வளர்சிதை மாற்றம் என்பது வெளி தோற்றத்தில் ஏற்படுவது என்பது அறிவியல் கூறும் கருத்து. இந்த புத்தகத்தில் மற்றொரு மாற்றமும் நமக்கு அறிமுகப்படுத்தபடுகிறது. அது மனித மனங்களில் ஏற்படும் மாற்றம்.

கதையின் நாயகன் கிறிகர் சம்சா ஒரு சேல்ஸ் மேன். தன் தந்தை பட்ட கடனுக்காக ஒரு கம்பெனியில் அடிமை போல இரவு பகல், நாள் கிழமை எதுவும் பார்க்காமல் தனக்கென்று எதை பற்றியும் யோசிக்காமல் வேலை பார்கிறான். ஒரு நாள் காலையில் படுக்கையில் இருந்து எழும்போது தன் உடல் ஒரு பூச்சி போன்று மாறி விட்டதை போன்ற புறமாற்றத்தை பார்கிறான். அது ஒரு புற மாற்றமாகவே அவனுக்கு தெரிகிறது. அது சீக்கிரம் சரியாகிவிடும் தன் பணியை தொடரலாம் என்றே அவன் நினைக்கிறான்.

ஆனால், மற்றவர்களுக்கு அவன் உதவாக்கரை ஆகி விட்டான். அங்கிருந்து ஆரம்பிக்கிறது அவனை சார்ந்த மனிதர்களின் மனங்களின் மாற்றங்கள். படிப்படியாக அவன் இருப்பை பற்றியும், அவனை பற்றிய நினைவுகளையும் அனைவரும் மறக்க ஆரம்பிக்கிறார்கள்.

அவன் இருந்த அறை பழைய சாமான்கள் வைக்கும் அறையாக மாறுகிறது. பழைய மிச்சம் மீதிகள் அவனுக்கு உணவாகின்றன. அவன் தன்னுடைய அறையை விட்டு வெளியில் வருவதில்லை. ஆனாலும் ஒரு முறை தன் அறையில், தான் இருக்கும் நிலையை பார்த்து அவன் தாய் மயங்கி விழுந்து விடுகிறாள். அதற்க்கு அவனை காரணம் காட்டி அவன் தந்தை அவனை ஆப்பிள் பழங்கள் கொண்டு வீசி எரிய ஒரு பழம் அவன் முதுகில் பதிந்து புண் ஆகி ரணமாக ஆரம்பிக்கிறது. யாருக்கும் அவனுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் போகிறது.

ஒரு நாள் தன் குடும்பம் பேசும் போது அவன் கேட்க நேரிடுகிறது, அதில் அவனுடைய தந்தை அவனுக்கு தெரியாமல் அவன் சம்பாத்தியத்தை சேர்த்து வைத்திருப்பதாகவும் இன்னும் சில காலம் அது குடும்ப செலவுக்கு பயன்படும் என்றும் அறிகிறான். தந்தை சேர்த்து வைத்த அந்த பணம் தனக்கு கொடுத்திருந்தால் முன்னமே அவன் செய்த அடிமை வேலையை விட்டு விட்டிருக்கலாமே என்றும் நினைக்கிறான். ஆனாலும், தன் தந்தை செய்தது நல்லது தான் என்றும் நினைக்கிறான்.

அது நாள் வரை அவன் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்து கொழுத்த அவன் சொந்தங்கள் இப்போது வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார்கள். அவன் செத்து தொலைந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இவன் ஒரு ஒட்டுண்ணி ஆக தெரிகிறான். ஆனால் அவர்களே இத்தனை நாள் அவனை சார்ந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்தார்கள் என்பதை மறக்கிறார்கள். ஒரு நாள் அவன் மூச்சை விடுகிறான் அவன் குடும்பம் "தொலைந்தது சனியன்" என்று நிம்மதி அடைகிறது. அவன் பெற்றோரின் கவனம் அவன் இளவயது தங்கையின் மேல் விழுகிறது. "அவளின் இளமை அவர்களின் கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கிறது". புத்தகம் முடிகிறது.

கிறிகர்யிடம் உடல் சார்ந்த மாற்றம் மட்டுமே நிகழ்கிறது. அதனை தவிர அவன் மனதளவில் அவன் அவனாகவே இருக்கிறான். ஆனால் பெரும் மாற்றத்திற்கு உட்படுபவர்கள் அவன் சொந்த பந்தங்களே.

புத்தகத்தை படிக்க ஆரம்பித்த போது ”96 பக்கம் தானே சீக்கிரம் முடிச்சிடலாம்” என்றே ஆரம்பித்தேன். படிக்க படிக்க ”ஒவ்வொரு வாக்கியத்தையும் பல முறை படிக்க வேண்டுமோ? , ஒவ்வொன்றுக்கும் பல அர்த்தம் இருக்கும் போல” என்று தோன்றுகிறது.

இப்படி ஒரு நல்ல புத்தகத்தை வாசித்து நெடுநாட்கள் ஆகி விட்டன. இப்படி பட்ட புத்தகத்தை அறிமுகம் செய்த தெகா வுக்கு எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.