Tuesday, June 7, 2016

ஊர் சுற்றலும், ஊர் புராணமும்!

கூடல் நகர், தூங்கா நகரம், சங்கம் வளர்த்த நகரம் இப்படி பல பல பெயர்கள். எங்கள் ஊர், நாங்க மதுரைகாரங்க என்று பெருமையாக சொல்லாத மதுரைகாரங்களை பார்ப்பது அரிது. ரொம்ப கோவபடுவாங்க ஆனா பாசக்காரங்க. இதெல்லாம் பல காலங்களாக மதுரை காரங்களை குறித்து சொல்லப்படும் சில விஷயங்கள். போன வருடம் வந்ததுக்கும் இப்பொழுது வந்ததுக்குமே நிறைய வித்தியாசங்கள் காண முடிகிறது. என் பார்வையில் சில விஷயங்கள் இங்கு.

முதலில் கோவில்கள் குறித்து. ஏற்கனவே நிறைய எழுதியாகி விட்டதால் தற்பொழுது கொஞ்சம் மட்டுமே இங்கு. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் மற்றும் கூடல் அழகர் பெருமாள் கோவிலில் எல்லாம் நீங்கள் ஆயிரம் ருபாய் நோட்டை நீட்டினால் நடக்கும்  உபசாரம் அருமையாக இருக்கிறது. 20ருபாய் 50 ரூபாய் மற்றும் 100 ருபாய் என்று வித வித டிக்கெட்டுகள் எடுத்தாலும்  எல்லாவற்றிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. VIP லைன் என்று ஒன்று தனியாகவே விடுகின்றனர். அர்ச்சகர்கள் சாமியை மறைத்தது போக , பாதி நேரம் VIP லைனில் செல்லும் பலருக்கும் பக்கத்தில் நிறைய நேரம் தரிசனம் தரும் அம்மன், தர்ம தரிசனத்தில்  கால்கடுக்க 1- 2 மணி நேரம் நின்று  சாமி தரிசிக்க வரும் பக்தருக்கோ அம்மன் தரிசனம் தருவது சில செகண்ட்ஸ் மட்டுமே. சரி, சாமி பாக்குறதுக்கும் ரெகமேண்டசன் வேணும் போல என்று நினைத்து கொண்டேன்.

பக்கத்தில் பார்க்க முடிந்த சில சாமிகளை சுற்றி நிறைய கரப்பான் பூச்சிகள். சண்டிகேஸ்வரர், வல்ல சித்தர் என்று அனைத்து சாமிகளின் மீதும் புகுந்து விளையாடுகின்றன கரப்புகள். சரி எல்லா ஜீவா ஜீவராசிகளுக்கும் கடவுள் படியளக்கிறார் போல என்று நினைத்து கொண்டேன்.

நவகிரகங்கள் இருக்கும் இடத்தில் எலி செத்த நாற்றம் குடலை பிடுங்கு கிறது.  இந்த இடத்தின் அருகிலேயே பிரசாதம் விற்கிறார்கள். அதனையும் மக்கள் வாங்கி அருகில் அமர்ந்தே
சாப்பிடுகிறார்கள். சரி கடவுள் படைத்த உடல் தானே கடவுள் பிரசாதத்தில் சரியாகி விடும் என்ற நினைப்பு போல என்று நினைத்து கொண்டேன்.நம் கோவில்களின் சுத்தம் குறித்து நினைகையில் உடல் புல்லரிகிறது. எல்லாம் கடவுள் செயல்.

அடுத்தது மக்களின் நடவடிக்கை குறித்து. ஞாயிறு மதியம் போல ராஜாஜி பார்க் போகலாம் என்று  போயாயிற்று. எங்கும் எதிலும் கூட்டம்.. பார்க்க்கு டிக்கெட் எடுப்பதில் இருந்து ஒவ்வொன்றுக்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு பக்கம் குழந்தைகள் கூட ஓடும் பெற்றோர் என்று இருந்தால் இன்னொரு பக்கம் காதல் ஜோடிகள்.முன்பாவது கொஞ்சமாவது டிஸ்டன்ஸ் விட்டு அமர்ந்து இருந்த காதலர்கள், தற்பொழுது எல்லாம் ஒருத்தர் மேல் ஒருத்தர் கை போட்டு கொண்டு பப்ளிக் ஆக எல்லா விசயங்களும் செய்கிறார்கள். கொஞ்சம் கூட அடுத்தவர்கள் பார்கிறார்களே என்ற வெட்கம் இருப்பதில்லை. பப்ளிக் ஆக நிறைய அரங்கேற்றம் நடக்கிறது. ஒரு சில விடலை பசங்க மட்டும் இப்படி இருக்கும் ஜோடிகளை குறிவைத்து ஜோக் கமெண்ட் அடிக்கிறார்கள். அதுவும் முக்கால் வாசி நேரம் பெண்ணை குறித்தே இருக்கிறது. இதெல்லாம் அந்த பெண்கள் அறிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

அடுத்து மக்களுக்கு இருக்கும் சுத்த உணர்வு. பப்ளிக் பார்க் என்றாலும் டெல்லி அப்பளம், பாப்கார்ன், காலிபிளவர் பக்கோடா , ஐஸ் க்ரீம் என்று கன ஜோராக வியாபாரம் நடக்கிறது. அதனையும் வாங்கி சாப்பிடும் மக்கள்  சாப்பிட்டு முடித்தவுடன் குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு செல்கிறார்கள். இத்தனைக்கும் மூலைக்கு மூலை குப்பை தொட்டி வைத்து இருக்கிறார்கள்.
 ஆனால் யார் அதெல்லாம் பார்கிறார்கள். நம்ம சாப்பிட்டாச்சா குப்பைய தூக்கி எறிஞ்சிட்டு போயிடனும். அவ்வளவு தான். அடுத்தவர்கள் பக்கத்தில் உக்கரானுமே என்று  நினைப்பும் இல்ல. அதே போல முன்பெல்லாம் கொஞ்சம் இரக்க உணர்வு இருந்தது போல இருந்த மக்கள் இப்பொழுதெல்லாம் தான் தனக்கு என்று மட்டுமே பார்கிறார்கள். உதாரணமாக பொது இடம் பார்க்     பெஞ்ச் என்று வைத்து கொள்ளுங்கள் தான் அமர இடம் பார்த்து கொண்டு தன்  பை, சாப்பாடு கூடை என்று  வைத்து கொள்ளுகிறார்கள். அடுத்தவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமே என்றெல்லாம் நினைப்பே வருவதில்லை. அப்படி ஏதும் இடம் கேட்டு விடுவோமோ என்று நினைத்து நம் பக்கம் முகமே திருப்புவதில்லை.  இதே நிலை பஸ் போன்ற மற்ற இடங்களிலும் நடக்கிறது. கொஞ்சம்   கூட அடுத்தவர்களை பற்றியும் நினைக்க வேண்டும் என்று ஏனோ யாருக்கும் தோன்றுவதில்லை.

கடைசியாக நான் கவனித்த ஒரு விசயம் இன்னும் மக்களுக்கு இருக்கும் ஆண் குழந்தை தான் உசத்தி என்ற மனோபாவம் அதற்க்கு பெண்ணே காரணம் என்ற நினைப்பு அதனை சுற்றி நடக்கும் பிரச்சனைகள் எப்பொழுது மாறுமோ. இது ஒரு புறம் இருக்க உசிலம்பட்டி ஆண்டிபட்டி ஏரியாக்களில் எல்லாம் திரும்பும் இடம் எல்லாம் ப்ளெக்ஸ் பானேர்களில் மணமக்கள் பல வித போஸ்களில் சிரிக்கும் படங்கள். அதில் சிரிக்கும் ஒவ்வொரு மண மகள் கழுத்துகளில் சரம் சரமாக நகைகள். ஒவ்வொரு பெண்ணுக்கும் குறைந்தது நூறு பவுனாவது இருக்கும். நகை விற்கும் விலையில் எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று  தெரியவில்லை.

சரி போதும் என் ஊர்  சுற்றல் புராணம் என்று நினைக்கிறன்.

நன்றி .