Saturday, December 18, 2010

வழிபாடும் வழிபடும்முறையும் !

பிராத்திப்பது என்பது என்ன?, சில நேரங்களில் என்னுள் எழும் சில எண்ணங்களின் வெளிப்பாடே இந்த பதிவு.

இன்று இங்குள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றிருந்தோம். வழக்கமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு இருக்கும் பெருமாளுக்கு அபிஷேகமும், பின் அலங்கார ஆராதனையும் நடப்பதுண்டு. அபிஷேகம் ஆரம்பிக்கும் முன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருக்கும் பெரியாழ்வார் திருமொழியில் இருந்து "வெண்ணை அளந்த குணுங்கும்" என்ற பத்து பாசுரங்கள் பாடப்படுவது வழக்கம்.சிறு கண்ணனை குளிக்க யசோதை அழைப்பது போன்று அமைந்திருக்கும் அந்த பத்து பாசுரங்களும் கேட்க்க இனிமையானவை.

இவற்றை போன்ற பாசுரங்களை அனைவரும் படிக்கும் வண்ணம் கிட்ட தட்ட அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து புத்தகமாக வைத்திருப்பார்கள்.ஒவ்வொரு முறையும் சுவாமிக்கு அபிஷேகம் ஆரம்பிக்கும் போது அனைவரும் இந்த பாடல்கள் பாடுகின்றனர்.

இன்று மார்கழி பிறந்து முதல் சனிக்கிழமை, இன்றும் வழக்கம் போல அபிஷேகம் ஆரம்பிக்கும் போது சிலர் "வெண்ணை அளந்த குணுங்கும்" பாட ஆரம்பித்தார்கள். உடனே அங்கிருந்த சிலர் "யார் இதனை பாட சொன்னது?" இது மார்கழி மாதம் இந்த மாதம் முழுதும் திவ்ய பிரபந்தம் பாடக்கூடாது, தேசிக பிரபந்தம் மட்டுமே பாட வேண்டும் என்று கத்தி கட்டளை இட ஆரம்பித்து விட்டனர். அதில் பாட விளைந்த பலர் முகம் சிறுத்து போய் விட்டது.

வைஷ்ணவ சம்பிரதாயத்தின் படி இந்த மார்கழி மாதம் முழுதும் தேசிக பிரபந்தம் பாடுவார்கள், நம்மாழ்வார் மோட்சம் அன்று மட்டுமே அனைத்து திவ்ய பிரபந்த பாசுரங்களும் பாடுகிறார்கள்.

ஆனால் இந்த சம்பிரதாயம் எத்தனை பேருக்கு தெரியும்? அதன் பின் இருக்கும் கதை என்ன? ஏன் அப்படி ஒரு சம்பிரதாயம்? என்றெல்லாம் விளக்கி விட்டு பின் அவ்வாறு செய்திருக்கலாம் அல்லவா?. அங்கு பாட அமர்ந்திருந்த பலரும் வேறு வேறு மொழி பேசுபவர்கள். அவர்கள் தமிழ் பாசுரங்களை பாடுவதே நமக்கு கிடைத்த பெருமை அல்லவா.

என்னை பொறுத்தவரை இறைவனை நோக்கி பாடப்படும் அனைத்து பாடல்களும் இறைவனை சென்றடையும், அதில் இதை பாட வேண்டும் இதை இன்று பாட கூடாது என்று கூறுவதெல்லாம் வெறும் அந்தந்த சம்பிரதாயங்களை சார்ந்தது மட்டுமே. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளை இடுவது தேவையா?

1 comment:

சாந்தி மாரியப்பன் said...

எப்படிப்பாடினாலும், எந்த மொழியில் பாடினாலும் அது அவனைத்தான் போய்ச்சேருகிறது....