Sunday, April 3, 2016

இன்டர்நெட்டால் ஒருவரின் தனித்தன்மை பறிபோகிறதா?

முதலில் சில  கேள்விகள் 

உங்களில் எத்தனை பேர் இன்டர்நெட்டில் முகம் தெரியாத சிலருடன் நண்பராக இருக்கிறீர்கள்?
அந்த சிலரை நீங்கள் ஒரு தரம் கூட நேரில் பார்த்தது பேசியது இல்லை?, உங்களின் முழு  உரையாடலும் இணையத்தில் மட்டுமே என்று இருக்குறீர்கள். 

நிறைய பேர் இதற்க்கு ஆமாம் எனக்கு முகம் தெரியாத நண்பர்கள் உண்டு என்கிறீர்களா?, தொடர்ந்து படியுங்கள்.

BBC கட்டுரை ஒன்று படிக்க நேர்ந்தது அது, எப்படி இணையம் பலரின் தனித்தன்மையை மாற்றி இருக்கிறது என்பதே.


Photo from google images

ஒவ்வொருவருக்கும் அவருக்கு என்று ஒரு அல்டெர் ஈகோ இருக்கும். அதாவது, நான் இப்படி இருக்க வேண்டும், இந்த வேலை செய்ய வேண்டும், இந்த உடை உடுத்த வேண்டும், இப்படி நிறைய.. அப்படி பல பல ஆசைகளுக்கு வடிகாலாக பலர் இணையத்தில் தன்னை பாவித்து கொள்ளுகிறார்கள் என்று அந்த BBC கட்டுரை உரைக்கிறது. உதாரணமாக ஆண்கள், பெண்கள் போல ப்ரொபைல் வைத்து கொள்ளுவது நம்மில் பலராலும் அறியப்பட்டு இருக்கிறது. அதே போல, வயதானவர் இளமையானவராக, கத்துக்குட்டிகள் தங்களை எக்ஸ்பெர்ட் ஆக கிராமப்புற மக்கள் தங்களை மெட்ரோ ஊர்களில் வசிக்கும் நவ நாகரிக மக்களாக, பேஷன் ஐகான் ஆக ...இப்படி தங்களின் அல்டெர் ஈகோவை இணையத்தின் ப்ரொபைல் மூலம் பலர் வெளிக்கொண்டு வருவதாக அது தெரிவிக்கிறது. 

இப்படி தன்னை வேறு ஒரு ஆளாக காட்டி கொள்ள ஆரம்பிக்கும் பலர் நாளாக நாளாக தன்னை அப்படி ஒரு ஆள் என்றே எண்ணி கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அதாவது, ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி. உண்மையில் அவர் ஒரு ஜொள்ளு பார்ட்டியாக இருப்பார், ஆனால் ஊருக்கு தான் ஒரு உத்தமன் என்று பகல் வேஷம் போடுவது. இது போல ஆகும் பலரும் தன்னுடைய உண்மை நிலைமையை மறந்து எப்பொழுதும் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து நிஜத்தை தொலைக்கிறார்கள் என்று BBC கட்டுரை தெரிவிக்கிறது.

இணையம் உபயோகிக்கும் அல்லது அடிக்ட் ஆகி இருக்கும் பலரிடம் நீங்கள் மெதுவாக "நீங்கள் யார் உங்களின் லட்சியம் என்ன?" என்று கேட்டு பாருங்கள். அவர்களின் பதில், "தான் எப்படி ப்ராஜெக்ட் செய்ய விரும்புகிறாரோ அதனை தான் சொல்லுவாரே தவிர நிஜத்தை அல்ல?" இதனால் என்ன தவறு எல்லாரும் கனவு காணத்தானே சொல்லுகிறார்கள்? என்று கேட்பவர்களுக்கு.

கனவு மட்டுமே காண்பவனுக்கு எப்பொழுதும் வெற்றி கிடைக்காது. உதாரணமாக, அடிக்ட்  ஆகி இருக்கும் ஒருவன் நிஜத்தை உணர மறுக்கிறான். நிஜத்தில் இருந்து தூர ஓடிப்போக மட்டுமே தன்னுடைய அல்டெர் ஈகோ வை வைத்து இருக்கிறான். இது ஒரு கனவு மட்டுமே. உண்மையில் நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் நிஜத்தை உணர வேண்டும். இது என் நிஜம், இந்த நிஜத்தில் இருக்கும் பிரச்சனையை தைரியமாக முதலில் எதிர் கொள்ள வேண்டும். பின்னர், அந்த நிஜத்தில் இருக்கும் மனிதரில் இருந்து கனவு காணும் அல்லது அல்டெர் ஈகோ மனிதன் ஆக என்னென்ன முயற்சிகள் எல்லாம் எடுக்க வேண்டுமோ அதனை எடுக்க வேண்டும்.

ஆனால் எனக்கு தெரிந்த ஒருவர் எப்பொழுதும் இணையத்தில் மூழ்கி கிடக்கும் ஒருவர். இணைய உலகில் தன்னை ஒரு பெரிய தலையாக காட்டி கொள்ள அதிகம் மெனக்கெடுவார், ஆனால் அவரால் வீட்டில் இருக்கும் மனைவி மக்களுக்கு  எந்த பிரயோஜனமும் இல்லை. அவர் காண்பது கனவு மட்டுமே, தான் பெரிய தலை என்று அவர் நம்பி நம்பி அந்த கனவில் மட்டுமே வாழும் அவர் என்னை பொருத்தவரை ஒரு உதவாக்கரை. 

இப்படி நிறைய பேர் பார்த்து இருக்கிறேன். இணைய உலகில் பெண்களை மடக்க என்று வித விதமாக வேஷம் போடும் பலர். இல்லாத ஒன்றை இருக்கு என்று தான் பெரிய இவர் என்று மெனக்கெட்டு காட்டி கொள்ளும் சிலர். எப்பொழுதும் தான் பெஸ்ட் என்று காட்டி கொள்ளும் சிலர் இப்படி சொல்லி கொண்டே போகலாம். சொல்ல போனால் ஒரு நாய் கூட தான் உலக அழகன்/அழகி என்று கதை விட்டு தன்னை நிலைபடுத்தி கொள்ள இணையம் உதவுகிறது.

இப்பொழுது தொடங்கிய கேள்விக்கு வருகிறேன், உங்களில் எத்தனை பேர் நீங்கள் சந்திக்கத நபருடன் நண்பராக இருக்குறீர்கள், அப்படி இருக்கும் நீங்கள் அந்த சந்திக்காத நபரை எவ்வளவு நம்புகிறீர்கள்?. ஏனெனில் இணையத்தில் உலவும் பலரும் வெளி வேஷம் போடுபவர்கள் அதனால் தன்னுடைய சுயத்தை இழந்தவர்கள் அல்லது இழந்து கொண்டு இருப்பவர்கள். அதனால் கவனம் மிக கவனம் தேவை.

நன்றி.



Reference

How disconnecting the internet could help our identityhttp://www.bbc.com/news/magazine-35895719



3 comments:

Avargal Unmaigal said...

இணையத்தால் மட்டும் மக்கள் மாறிவிடவில்லை மக்கள் அன்றிலிருந்து இன்று வரை போலித்தனமாகத்தான் வாழ்கிறார்கள். அதனால்தான் பசுத்தோல் போத்திய புலி. வெள்ளாட்டடு தோலை அணிந்த ஓநாய்கள் ,நீலச் சாயம் வெளுத்து போச்சு என்ற சொல் வழக்குக்கள் உண்டு. இந்த இணையம் வருவதற்கு முன்பே பலர் சொல்லி நீங்கள் அந்த ஆளை நல்லவன் என்று நான் மோசம் போயிட்டேன் என்று சொல்லி கேட்டு இருக்கலாம்..


பக்தி பழமாக காட்சி தரும் பல பெரியவர்கள் தன்னை நல்லவன் என்று நம்பி வரும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும் பலரும் அறிந்த செய்திகள்தான் .அதனால் சொல்லுகிறேன் இணையத்தால் அல்லது இணையம் வந்ததால் மட்டும் மக்கள் மாறிவிடவில்லை வேஷம் போடவில்லை.. பண்பாடு இல்லாமல் கட்டுப்பாடு இல்லாமல் உறவுகள் என்றால் என்ன்வென்று அறியாமல் வளர்ந்தவர்கள் எவரும் இப்படிதான் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


//நீங்கள் சந்திக்கத நபருடன் நண்பராக இருக்குறீர்கள், அப்படி இருக்கும் நீங்கள் அந்த சந்திக்காத நபரை எவ்வளவு நம்புகிறீர்கள்?. ஏனெனில் இணையத்தில் உலவும் பலரும் வெளி வேஷம் போடுபவர்கள் ///

நான் சந்திக்காத பலரை நம்புகிறேன் அவர்கள் பல பேர் எல்லோர் பெயரைடும் எழுத நேரமில்லாததால் சில பெயரை மட்டும் சொல்லி செல்லுகிறேன். மைதிலி, அவரதுகணவர் கஸ்தூரி ஸ்கூல்பையன், துளசிதரன்,கீதா, கிரேஸ்,முரளிதரன், உஷா அன்பரசு,விசு,பரதேசி என அழைக்கப்படும் ஆல்பிரேட் இது போன்ற பலர்.

ப.கந்தசாமி said...

இணையத்தை ஒரு பொழுது போக்காக மட்டுமே நான் பயன்படுத்துகிறேன். அதில் இருக்கும் எனக்கு அறிமுகமில்லாத நண்பர்கள் வெறும் கணக்கிற்காக மட்டுமே. இந்த இணையத்தை தன் வாழ்க்கையாக நினைப்பது அறிவீனம்.

வேகநரி said...

பேஸ்புக், டுவிட்டர்களில் நீங்க சொன்னமாதிரி பல மோசடிகள் நடப்பதாக சொல்கிறார்கள். மதுரை தமிழன் சொன்னதும் யோசனைக்குரியது.
கிராமப்புறத்தில் இருந்து வருகிறேன் என்பது குறைந்ததாகவும்,மெட்ரோ ஊர்களில் வசிப்பதாக சொல்லி பெருமைபடுவதெல்லாம் இந்தியாவில் தான் நடக்கும் என்று நம்புகிறேன்.மேற்குலகிலேயோ நான் இந்த சிற்றியை சேர்ந்தவன் இல்லை. அப்பா,அம்மா இந்த கிராமப்புறத்தை சேர்நதவர்கள். சில வருடங்களுக்கு முன்பு தான் நாங்கள் இங்கே வந்தோம் என்று சாதாரணமாக சொல்வதை பார்த்திருக்கேன்.