Wednesday, April 13, 2016

இல்லத்தரசிகள் தற்கொலை: இந்தியாவை பிடித்தாட்டும் தொற்றுநோய்


கடந்த மாதம் என்னுடைய தோழி ஒருவரின் மரண செய்தி காதில் வந்து விழுந்தது. என்னுடன் பள்ளியில் படித்த பெண் அவர். திருமணமாகி 15 வருடங்களில் தன்னை அழித்து கொள்ள துணிந்து விட்டார் அவர். இளநிலை கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திருமணம், இரண்டு பெண் குழந்தைகள் என்று சென்ற வாழ்கை என்னவானதோ முடிந்து விட்டது. பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். வாழ்க்கை பட்டு போன இடத்தில் அதிகம் படிக்காத மாமியார், மாமனார். இரண்டும் பெண் குழந்தைகள் என்பதால், மாமியார் வருத்தப்பட மெதுவாக மனஸ்தாபம் வந்து இருக்கிறது. அதனால் தனது கணவருடன் தனிக்குடித்தனம் சென்று இருக்கிறார். பின்னர் என்னவானதோ தற்போது உயிருடன் இல்லை.

இது என்னுடைய தோழி மட்டும் என்று இல்லை, நிறைய பெண்கள் சொல்ல போனால் 20,000 பெண்கள் முக்கியமாக இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக இந்திய குற்றபிரிவு அறிக்கை தெரிவிக்கிறது.  இது 2014 இல் நடந்த விவசாயிகள் மரணத்தை விட 4 மடங்கு அதிகம். ஆனால் இதனை போன்ற ஒன்று பத்திரிக்கையின் முதல் பக்கத்தை பிடிப்பது இல்லை. உடனே, ஒரு கள்ள காதல் அல்லது எதோ ஒன்று என்று கதை கட்டி விட்டு கேஸ்ஐ முடித்து விடுகிறார்கள். உண்மையில் என்ன நடந்தது, என்ன காரணம் என்று யாரும் கவலைபடுவது இல்லை, நடவடிக்கை எடுப்பதுவும் இல்லை.

இந்தியாவில் 1லட்சம் பெண்களுக்கு 11 பெண்கள் தற்கொலை செய்து கொள்ளவதாக இது ஒரு தொற்றுநோய் போல பரவி வருவதாக BBC செய்தி ஒன்றும்  அதனை சார்ந்த ஆய்வறிக்கை ஒன்றும் படிக்க நேர்ந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை பார்க்கும் போது திருமணம் ஒரு பெண்ணின் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்தியா இதற்க்கு விதிவிலக்கு போல. 2011 இல் இந்தியாவில் நடந்த தற்கொலைகளில் தற்கொலை செய்த 70% பெண்கள் திருமணமானவர்கள்.  


photo from  google images 

இந்தியாவில் திருமணமான 30- 45 வயதான பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுவது என்பது 15 முதல் 30 வயது பெண்களை விட இரண்டரை மடங்கு அதிகம் என்று மருத்துவ ஆராய்ச்சி கட்டுரை லான்செட் தெரிவிக்கிறது 

சரி புள்ளி விவரங்கள் போதும், என்ன காரணமாக இருக்கும் என்று யோசிப்பவர்களுக்கு. தலைமுறை இடைவெளி, புகுந்த வீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியாமல் போவது, அதனை சார்ந்த மன அழுத்தம், புகுந்த வீட்டில் சப்போர்ட் இல்லாமல் இருப்பது போன்ற ஒரு சில  காரணமாக ஆய்வில் சொல்ல படுகின்றன.

பெரும்பாலான நேரங்களில் படிக்கும் நேரத்தில் அல்லது படித்து முடித்த வுடனே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறது. பெண்களின் ஆசைகள் நிராசைகள் என்னென்ன என்பது பலரும் கேட்பதில்லை அறிய முற்படுவதில்லை. திருமணமாகி செல்லும் பெண்கள், தனது ஆசை கனவுகள் சில நேரங்களில் சாதிக்க நினைக்கும் பலவற்றையும் குடும்பத்துக்கு என்று தியாகம் செய்கிறார்கள். அதிலும் பல நேரங்களில் குடும்பபிரச்சனைகள் எல்லாவற்றையும் தாண்டி தனக்கு தன் கணவரிடம் இருந்து சப்போர்ட் இல்லை என்று பலர் நினைக்கும் போது இது போன்ற எக்ஸ்ட்ரீம் முடிவுகள் எடுக்கின்றனர். தனிக்குடித்தனம், அல்லது சப்போர்ட் ஸ்ட்ரக்சர் அல்லது கவுன்சிலிங் என்பது போன்ற எதுவும் இல்லாத போது, மனதுக்குள் புழுங்கி புழுங்கி இது போன்ற எக்ஸ்ட்ரீம் முடிவுகள் எடுக்கிறார்கள்.

எது எப்படியோ, இது ஒரு தொற்று நோய் போல மிக தீவிரமாக பரவிவருகிறது என்பதை மறுப்பதற்க்கு இல்லை. சீக்கிரம் இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுப்பது என்பது பல தற்கொலையை தவிர்க்க உதவும்.

நன்றி.

டிஸ்கி 

இது என்னுடைய சொந்த அனுபவத்திலும், வாசித்ததிலும் எனக்கு தெரிந்தார்களின் அனுபவத்திலும் இருந்து எடுக்கப்பட்டது. யாரையும் குறிப்பிடவில்லை. 



References 
http://ncrb.nic.in/
http://www.bbc.com/news/world-asia-india-35994601
http://www.epw.in/journal/2016/14/thinking-clearly-about-suicide-india.html
http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(12)60606-0/fulltext?_eventId=login



3 comments:

Avargal Unmaigal said...

சில நாட்களுக்கு முன்பு இந்த செய்தியை நானும் படித்து வருந்தினேன்....... விருப்பம் இல்லாமல் செய்யப்படும் கல்யாணம் கடைசியில் இப்படிதான் முடிகிறது பெற்றோர்கள் உண்மையிலே அதிகம் சிந்திக்க வேண்டும் இல்லை என்றால் இன்னும் அதிகரித்து கொண்டே போகும்

ஆரூர் பாஸ்கர் said...

இது சமூக அவலமே. //வாழ்க்கை பட்டு போன // என்பது வாழ்க்கைப் பட்டு போன என்றும் இருக்கலாம்.

Unknown said...


Most Indian (dependent)women prefers to be a housewives rather to stand on their own legs. This is a typical outcome of Codependency. The victim of codependent men seek for outlet in alcohol, drugs and in some cases sex.

Equal opportunity, equality and independent attitude is the need of time.