Saturday, March 12, 2016

மாதவிடாய் மனிதரும், இந்தியாவின் மகளும் மற்றும் தாலிக்கொடியின் கனமும்!

இரண்டு டாகுமெண்டரி பார்க்க நேர்ந்தது இரண்டும் பெண்களை குறித்தது என்றாலும் இரண்டும் மனதை பிசைந்த விடயங்கள். முதல் விஷயம் ஒரு நம் மண்ணின் மைந்தனின் சாதனை என்றால், இரண்டாவது  ஒரு சிலரால் நமக்கு ஏற்பட்ட தலைகுனிவு குறித்தது.

நான் தற்பொழுது முகநூல் பக்கமே செல்வது இல்லை. நேரமின்மை ஒரு காரணம் என்றாலும், ஏதாவது ஒரு மொக்கை ஜோக், அல்லது அரசியல் வாதிகளை கலாய்க்கும் காமெடி வரும்.இதெல்லாம் பார்க்குறது தேவையா என்று நினைத்து செல்வது இல்லை. உபயோகம் என்றால் அவ்வப்போது அறிவியல் வெப்சைட்களில் இருந்து கொஞ்சம் கட்டிங் எட்ஜ் செய்திகள் வரும். அதனை பார்க்க மட்டுமே நான் உபயோகிப்பது.

பல நாட்களுக்கு பிறகு முகநூலை திறந்த பிறகு ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. மனதை தொட்ட வீடியோ அது. "எப்படி  சின்ன சின்ன விஷயங்கள் பெரிய மாற்றத்தை தரும்" என்பதற்கு உதாரணமாக இருந்த ஒருவரை பற்றிய அல்ஜீரா வீடியோ. இதில் இன்னும் சந்தோசம் என்னவென்றால் அது ஒரு தமிழரை பற்றிய வீடியோ.

அவரை பற்றிய ஒரு செய்தியும் NPR செய்தியில் கேட்க நேர்ந்த போது, ஆச்சரியமாக இருந்தது. அவரை குறித்த ஒரு டாகுமெண்டரி யும் இருப்பதை கண்டு, இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று அதிசயமாக இருந்தது. அது அருணாசலம் முருகானந்தம் எனப்படும் "மாதவிடாய் ஆகும் ஆண்" ஒருவரை பற்றிய டாகுமெண்டரி.




இந்தியாவில் ஒன்றில் பத்து பெண்கள் பள்ளியை விட்டு விலகுவதற்கு முக்கிய காரணம் மாதவிடாய் நேரங்களில் சுகாதாரமான சானிடரி நாப்கின் கிடைக்காமல் கரைகளுக்கு பயந்து அல்லது ஒதுக்கப்பட்டு வெட்கப்பட்டு விலகுவது. அல்லது பழைய துணிகளை உபயோகித்து நிறைய நோய்களுக்கு ஆளாவது என்று பல பல பிரச்சனைகள் சந்திக்கிறார்கள். எப்படி இது போன்று இருக்கும் பெண்களுக்கு குறைந்த செலவில் நாப்கின்கள் உபயோகிக்க கொடுப்பது கிடைக்க செய்வது என்று முயற்சி செய்து வென்று காட்டிய ஒரு சாதாரண மனிதனின் சாதனை இது. தன்னுடைய ஒவ்வொரு முயற்சியும் எப்படி தன் மனைவியால் சொந்த பந்தங்களால் புறக்கணிக்க பட்டது, தன்னுடைய சோதனை முயற்சியை வெற்றியடைய செய்ய தானே சானிடரி நாப்கின் அணிந்து முயற்சி செய்தது என்று அருணாசலம் முருகானந்தம் அவர்களின் ஒவ்வொரு செயலும் வியக்க வைத்தன. இவற்றை எல்லாம் விட எனக்கு மிக மிக ஆச்சரியமும் பெருமையும் பட வைத்தது, இவரை பல பெரிய பெரிய கம்பனிகள் அணுகி இவரின் மெசினை வாங்க முயற்சி செய்தாலும் இது ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று யாருக்கும் விற்காமல் உறுதியுடன் இருக்கும் இவரை பார்த்தவுடன், இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறதோ என்று என்ன தோன்றுகிறது.


அடுத்த டாகுமெண்டரி, "இந்தியாவின் மகள்" எனப்படும் BBC வீடியோ. 2012 இல் நிகழ்ந்த நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை குறித்த டாகுமெண்டரி. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த டாகுமெண்டரி நெட்ப்ளிக்ஸ் புண்ணியத்தில் பார்க்க நேர்ந்தது. சமீப காலத்தில் நான் பார்த்த பல நிகழ்ச்சிகளில் என்னை மிக மிக உலுக்கிய ஒன்று உண்டென்றால் அது இது தான்.





அந்த பெண் அனுபவித்த ஒவ்வொரு நிகழ்வும் நினைக்கவே மனது வலிக்கிறது. இது நிர்பயா மட்டும் அல்லாமல் நிர்பயா போன்றே எத்தனை எத்தனை பெண்கள் இது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று  மனம் வலிக்கிறது. இவற்றை எல்லாம் விட எனக்கு மிகவும் வலித்தது பெண்களை குறித்த குற்றவாளியின் வாக்குமூலம்.  இது குற்றவாளி என்று மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் பாதிக்கு  பாதி படிப்பறிவில்லாத பல ஆண்களின் மனவோட்டமாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. என்ன தப்பு நாங்கள் செய்து விட்டோம் என்று கூறும் குற்றவாளிகள் இருக்கும் வரை,நம்மை  போன்ற நாடுகள் எவ்வளவு தான் மற்ற விடயங்களில் முன்னேறியதாக அறிவிக்க பட்டாலும் என்னை பொருத்தவரை மிக மிக பின்தங்கிய நாடு மட்டுமே.

முடிவாக ஒரு லைட் மொமென்ட். அது என் அண்ணி கூறியது. மதுரையில் இப்பொழுதெல்லாம் ஒரு நம்பிக்கை நிகழ்வதாக அவர் கூறியது.  அதாவது  பெண்களின் தாலிக்கொடி எவ்வளவுக்கு எவ்வளவு தடிமனாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவளின் கணவரின் ஆயுள் கெட்டியாக இருக்கும் என்று நம்புவதாக கூறினார். எப்படியெல்லாம் நகை கடை காரங்க கதை கட்டி விடுறாங்கள் பாருங்க என்று சிரிக்க தோன்றியது.

டிஸ்கி
இங்கு குறிப்பிட்ட அனைத்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே யாரையும் குறிப்பிடவில்லை.

நன்றி.


4 comments:

நம்பள்கி said...

Thanks for sharing!
முதல் வீடியோ மட்டும் பார்த்தேன். Excellent!
இதைதான் நான் அன்றும் இன்றும் சொல்கிறேன். படிப்பு, அறிவு, ஆராய்ச்சி செய்யும் திறன் எல்லோருக்கும் உண்டு. நம் நாட்டில் ஒரு சில கும்பல்களுக்கு மட்டும் அறிவு உள்ளது என்பது எவ்வளவு பேத்தல் என்பது இந்த வீடியோவைப் பார்த்தால் போதும். அமேரிக்கா மாதிரி, இந்தியாவிலும் கிராமங்களில், சிறு ஊர்களில் வசதிகள் இருந்தால்...தான் நம் நாடு முன்னேறும். அதுவரை இந்தியா கிராமங்களில் வாழவில்லை!

செந்தழல் செ சேதுபதி said...

அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவிக்கப்பட்டபோது
பதிந்தது.
http://arumbithazh.blogspot.in/2016/01/blog-post_90.html

இது நிர்பயா மட்டும் அல்லாமல் நிர்பயா போன்றே எத்தனை எத்தனை பெண்கள் இது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று மனம் வலிக்கிறது.
#ஆமாம் உண்மைதான் நிர்பயாக்களை போன்று இந்தியப் பெண்கள் பல்வேறு தளங்களில் தங்கள் வலிகளை சொல்லமுடியாமலே இறந்து கிடக்கிறார்கள். ஆனால் ஒரு குறும்படத்தின் தாக்கத்தை எனக்கு ஒரு புகைப்படமே வெளிபடுத்தியது இந்திய கட்டமைப்பின் வெறுப்பையும் பெண்ணுரிமை மீட்பையும்
http://arumbithazh.blogspot.in/2016/02/blog-post_5.html

வேகநரி said...

அருணாசலம் முருகானந்தம் மிகவும் பெருமைக்குரியவர் அவருக்கு இந்திய அரசு விருது கொடுத்த உங்க வாசகரது தகவல் திருப்தியை தருகிறது.
இந்தியாவின் மகள் கொடுமை செய்த கொடூரன் சிந்தனைகளை ஒத்த கருத்துக்கள் சிலவற்றை தமிழகத்திலிருந்தும் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கேன்.
தாலிக்கொடி தடிமன்-மிகவும் உருவத்தில் பெரிதாக இன்னும் வருங்காலத்தில் தமிழகத்தில் பெருக்கெடுக்கும்.

S.P.SENTHIL KUMAR said...

'டைம்' இதழ் செல்வாக்குள்ள 100 மனிதர்கள் பட்டியலை வெளியிட்டபோது அதில் முருகானந்தமும் ஒருவராக இருந்தார். உடனே அவரது இடத்திற்கே சென்று நேரடியாக நேர்காணல் செய்து கட்டுரை எழுதினேன். நேரம் இருந்தால் வாசித்துப் பாருங்கள்...

http://senthilmsp.blogspot.com/2014/11/blog-post_19.html