Friday, September 9, 2016

கதாசிரியர்களும், உயிரி ஆயுதமும் !!

அது என்னவோ தெரியல..முன்னெல்லாம் TB, கான்செர் போன்ற வியாதிகளை முன்வைத்து கதை எழுதி வந்த சினிமா கதாசிரியர்களும் சரி அல்லது நாவல் எழுதுபவர்களும் சரி சில காலங்களாகவே உயிரியல் ஆயுதம் அல்லது உயிரியல் தொழில் நுட்பத்தை வைத்து கதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஒரு வகையாக நம்மை கொன்று விடுகிறார்கள்.
அதில் தற்போது இணைந்திருப்பவர் டான் பிரவுன்.


ஆங்கில நாவல்கள் எழுதுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட மைய கருத்து உண்டு அதிலிருந்து  அவர்கள் விலகுவது இல்லை. உதாரணமாக ஜான் க்ரிஷம் அவர்களின் அத்தனை நாவல்களும் வழக்கறிஞர் அல்லது அதனை சார்ந்த அத்தனை பாயிண்டுகளையும் மைய படுத்தி இருக்கும். ஜான் க்ரிஷம் ஒரு வழக்கறிஞர் என்பதால் அவரின் துறை சார்ந்த அனைத்து விஷயங்களையும் கலக்கி தெளித்து இருப்பார். உதாரணமாக "Time  to Kill", "The Firm",  "The Partner" etc.,

அதே போல, ராபின் குக் ஒரு மருத்துவர், இவரின் அத்தனை நாவல்களும் மருத்துவம் அல்லது உயிரியல் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். உதாரணமாக, Chromosome 6, Fever, Cell etc.,

அதே போல டாம் கிளான்ஸி அவர்களின் நாவல்கள் அனைத்தும் மிலிட்டரி அல்லது போர் சம்பந்தமானவை, பாலோ கோயல்ஹோ அவர்கள் எப்பொழுதும் மனோதத்துவ நாவல்கள் எழுதுபவர்.

இப்படி எல்லோருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருப்பது போல, டான் பிரௌனின் ஸ்டைல் என்பது cyptography - ரகசிய குறியீடு வைத்து நாவல் எழுதுவது. அவரின் கிட்டத்தட்ட எல்லா நாவலிகளிலுமே ஒவ்வொரு சாப்டர்றிலும் ஏதாவது ரகசிய குறியீடு அதனை எப்படி கண்டு பிடிப்பது என்று இருக்கும். The Davinci Code, Angels and Demons , Digital Fortress etc., இன்னொரு விஷயம் என்னவென்றால் கிரேக்க, ரோம கலை மற்றும் ஓவியம் குறித்த பழைய வரலாற்று செய்திகள் நிறைய நாம் இவரின் நாவல்களில் தெரிந்து கொள்ளலாம். மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி என்று பல ஓவியர்கள் பற்றியும் சிற்ப வல்லுநர்கள் பற்றியும் டாவின்சி கோட் புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பார்.

அந்த வரிசையில் "Inferno" வில் முழுக்க முழுக்க Dante குறித்து நிறைய அறிய  முடிந்தது.
அவரின் Inferno என்பது நரகம் எப்படி இருக்கும் எதற்கெல்லாம் தண்டனை தருவார்கள் என்பது குறித்த ஒரு சித்திரம். அதனை தவிர Dante வின் "The Divine comedy" என்ற புத்தகம் குறித்தும் நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. இது கிட்டத்தட்ட நம்முடைய கருட புராணத்தை ஒத்தது. அதாவது இந்த தப்புக்கு இந்த தண்டனை என்று கருட புராணத்தில் இருப்பது போல, 7 வகை குற்றங்களுக்கு என்ன தண்டனை என்பதே Inferno அதாவது இத்தாலிய மொழியில் Inferno என்றால் நரகம் என்று பொருள்.

இந்த புத்தகத்தின் அடிநாதமே, வில்லனின் முயற்சியான "மக்கள் தொகையை எப்படி கட்டுப்படுத்துவது, அதுவும் உயிரி ஆயுதம் கொண்டு கட்டுப்படுத்துவது என்பதே".  அதனை ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பது.


இந்த புத்தகத்தை படித்த பிறகு ஒரு சில விஷயங்கள் எனக்குள் தோன்றின. அதாவது, இதில் கூறப்படும் ஒரு விஷயம், உலகில் நடக்கும் அதிக மக்கள் தொகை பெருக்கம். அதன் பின்விளைவுகள் அல்லது அதனால் நடக்க போகும் நிகழ்வுகள் குறித்த கற்பனைகள். அது ஓரளவு உண்மை என்றே வைத்து கொள்ளுவோம். உதாரணமாக, சுதந்திரம் வாங்கிய போது ~40 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய மக்கள் தொகை தற்போது ~1 பில்லியன் அசுர 100 வளர்ச்சி.

 அதிக மக்கள் தொகை பெருக்கத்தால் நடக்கும் சில விஷயங்களில் முக்கியமானவை, சாப்பாடு, தங்கும் இடம், உடை மற்றும் கழிவு நீர் மேலாண்மை. அதிக மக்கள் தொகை பெருக இவை அனைத்தும் கிடப்பது அல்லது மேலாண்மை செய்வது என்பது எவ்வளவு கடினம். இந்தியாவை எடுத்து கொண்டாலே, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குப்பை அளவை விட தற்போது இருக்கும் தூக்கி வீசப்படும் குப்பை அளவு 100 மடங்கு அதிகம். தண்ணீர் என்பது கேன்களில் மட்டுமே, அடிகுழாய் தண்ணீர் என்பதெல்லாம் நமக்கு பின் வரும் சந்ததிக்கு மறந்தே விடும் போல. சாப்பாடும் அதனை தயாரிக்க அல்லது மக்களுக்கு தேவையான சாப்பிட்டுக்காகவே என்று மாஸ் ப்ரொடியூஸ் செய்ய என்று உயிரியல் தொழில் நுட்பம் புகுத்தப்பட்ட BT வகை உணவு பொருட்கள் சந்தையில் விடப்படுகின்றன, அவை மற்ற நாட்டு காய்கறிகளை சுத்தமாக அழித்து விடுகின்றன..இப்படி பல பல
எல்லாமே ஒரு டோமினோ எபெக்ட் போல..அதன் ஆரம்பம் என்பது அதிக மக்கள் தொகை பெருக்கம்..

ஆனால், இதனை தவிர்க்க உயிரி ஆயுதம் கொண்டு அதாவது 18 ஆம் நூற்றாண்டு நிகழ்ந்ததை போல பிளேக்  கொண்டு அல்லது "மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிளேக்" கொண்டு , உலகின் மக்கள் தொகையை பாதி அழித்து விடுவது என்று எழுதி சற்று விளையாடி இருக்கிறார் டான் பிரவுன். இது அக்டோபர் மாதம் படமாகவும் வரப்போகிறது. டாம் ஹாங்க்ஸ் ராபர்ட் லாங்டன் ஆக நடிக்க விருக்கிறார். இதோ ட்ரைலர்



எனக்கென்னவோ இதனை படித்த பிறகு, நம் இதே போல உயிரி தொழில்நுட்பத்தை ஆயுதங்களாக உபயோகித்த  தமிழ் சினிமா கதைகளான தசாவதாரம், 7 ஆம் அறிவு மற்றும்  ஐ போன்றவை ஞாபகத்துக்கு வந்தன. இவர்கள் எல்லாம் சொல்வது போல, உயிரி ஆயுதம் என்பது பண்டமிக் ஆக உபயோகிப்பது சாத்தியமா?.

வைரஸ் என்பது எப்போதும் பரிணாம வளர்ச்சிப்படி மாறி கொண்டே இருப்பது ஏனெனில் நம் உடல் என்பது அற்புதமான ஒரு மெஷின் . மாறி கொண்டே இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்ற பலவற்றுக்கும்  ஏற்ப ஆன்டிபாடி உருவாக்கி கொண்டே இருக்கும். அதனையெல்லாம் தாண்டி நம்மை நோயாளி ஆக்கவேண்டும் என்றால் தொடர்ந்த மரபியல் மாற்றம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அதனையே வைரஸ்கள் செய்கின்றன. ஆனால், ஒரு பண்டமிக் உருவாவது என்பது தற்போது இருக்கும் சூழ்நிலையில் சாத்தியம் என்றாலும் (உதாரணமாக 2009 இல் நடந்த H1N1 swine virus பண்டமிக்) வைரஸ் பரவுதல் என்பது குறைந்தது 7 நாட்கள் முதல் 10 நாட்கள் ஆகும். தசாவதாரம் படத்தில் காண்பது போல, ஒரு செகண்ட் இல் நடப்பது இல்லை.  வைரஸ் பரவ பரவ நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியும் ஆன்டிபாடிகளை உருவாக்கும்.

அதே போல இப்போது இருக்கும் சூழலில் ஒரு பண்டமிக் உருவாக்கி அது உலகில் இருக்கும் பாதி மக்கள் தொகையை கொள்வது என்பதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை. இது 18 ஆம் நூற்றாண்டு இல்லை, இப்பொழுது நடந்த 2009 H1N1 இல் கூட <0 .000001="" 3="" nbsp="" p="">பிளேக் க்கு தடுப்பு மருந்து உண்டு, ஆண்டிபயாடிக் ம் உண்டு.

அதனால் இது போன்ற வைரஸை உயிரி ஆயுதமாக கொண்டு உலகின் மக்கள் தொகையை பாதியாக குறைப்பது அல்லது வேரறுப்பது என்பது என்னை பொறுத்தவரை நடப்பது இயலாதது. கதாசிரியர்களும், சினிமா கதை எடுப்பவர்களுக்கு இனிமேலும் இதனை போன்ற கதை எடுக்க போகிறீர்கள் என்றால், வேறேதாவது ஒன்றை எடுத்து உலகை அழிக்க வில்லன் முயல்கிறான் என்று வைத்து எடுங்கள். தயவு செய்து உயிரி ஆயுதத்தை விட்டு விடுங்கள்.



டிஸ்கி
இங்கே குறிப்பிட்டு இருப்பவை எல்லாமே, அந்த புத்தகம் குறித்தும், சினிமா குறித்தும் என்னுடைய கருத்துக்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.


நன்றி

No comments: