Sunday, June 21, 2015

மக்கள் செல்லும் வாக்கிங்ம் பெருகி வரும் மருத்துவமனைகளும்



உடம்பை குறைக்கணும்னு  சிலர் வாக்கிங் போறாங்க. ஆனா ஜோக் என்னன்னா, இவர்கள் செய்யும் வாக்கிங் தான். காலையில ஒரு 6 மணிக்கு கிளம்ப வேண்டியது. தனியா நடந்தா போர் அடிக்கும்னு ரெண்டு பேரை கூட்டிட்டு போக  வேண்டியது. நடக்குறேன் பேர்வழி அப்படின்னு ஒரு சில தப்படி எடுத்து வேண்டியது. அப்புறம் மூச்சு வாங்கினா, ரெஸ்ட் எடுக்கிரோம்னு உட்கார்ந்துகிறது. அப்படி உட்கார்ந்து ஊர் கதை பேச வேண்டியது. அப்புறம் ரெண்டு தப்படி எடுத்து வைக்கிறது. இப்படி உட்கார்ந்து உட்கார்ந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க எப்படியும் அரை மணி நேரம் ஆக்கிடறது. சரி ஆச்சு வாக்கிங், எதவாது சூப் குடிக்க வேண்டியது. வல்லாரை சூப், பருத்தி பால், காளான் சூப் இப்படி லிஸ்ட் பெருசு.  அதில ஏதாவது குடிச்சிட்டு மறுபடியும் ஊர் கதை பேசிட்டு, காய் கறி,கீரை ஏதாவது வாங்கிட்டு வீட்டுக்கு போயிடறது.

எதுக்குங்க வாக்கிங் போக சொல்லுறாங்க. கலோரி எரிக்க தானே?, இவங்க இப்படி நடக்கிறதால 50 கலோரி கூட எரிக்க மாட்டாங்க. ஆனா, அவங்க குடிக்கிற சூப் எப்படியும் 100 கலோரி மேல இருக்கும்.  இதுனால நீங்க 50கலோரி இன்னும் உடம்புல ஏத்திட்டு தான் போறீங்களே தவிர குறைக்கல. 

இது காலையில் வாக்கிங் செல்பவர்கள் ரௌடீன் என்றால், மாலையில் வாக்கிங் செல்பவர்கள் செய்வது இன்னும் ஜோக். காலையிலயாவது சூப் மட்டும் தான் ஆனா சாயங்காலம் பேல்பூரி, பாணி பூரி, சில்லி காளான், சில்லி சிக்கன், பிரைடு நூட்லஸ் என்று வித விதமாக வாங்கி சாப்பிடுகிறார்கள் எப்படியும் 300-500 கலோரி சாப்பாடு இவை எல்லாம் . எதுக்கு இவங்க எல்லாம் வாக்கிங் போகணும், அட்லீஸ்ட் வீட்டுல இருந்தாலும் இப்படி வாங்கி சாப்டுரதுல வர்ற கலோரீஸ் கம்மியாகும். 

இவங்க உண்மையில உடம்ப குறைக்கணும்னு வாக்கிங் வர்றாங்களா இல்ல, ஏதாவது வாங்கி சாப்பிடலாம்னு வர்றாங்கலன்னு தெரியல. இது எல்லாம் இரண்டு நாள் மதுரை தெப்பகுளத்தை சுற்றி வாக்கிங் போனதில் பார்த்தவை. உண்மையா வாக்கிங் போகணும்னு வர்றவங்க 100துல 1 அல்லது 2 பேரு மாதிரி தான் தோணுது. மத்த மக்கள் எல்லாம் நாங்களும் வாக்கிங் போவோம்ல! என்று பேருக்கு வாக்கிங் வருகிறார்கள்.நிறைய obese எனப்படும் குண்டான மக்களை பார்க்க முடிகிறது. 

இன்னொரு விஷயம் தப்படி தப்படிக்கு மருத்துவமனைகளையும் காண முடிகிறது. பெரிய பெரிய ஆஸ்பத்திரிகள் ஊர் எங்கும் நிறைந்து இருக்க, சிறிய சிறிய கிளினிக் க்குகளும் ஊர் எங்கும் நிரம்பி வழிகின்றன. கிளினிக்குகளில் எல்லாவற்றிற்கும் ஊசி போடுகிறார்கள். என்ன காரணம், என்ன நோய் என்று கேட்க முடிவதில்லை. கேட்டாலும் பதில் வருவதில்லை. மக்களும் அதான் ஊசி போட்டுடாங்கல்ல சரியா போயிடும் அப்படின்னு சொல்லிட்டு மக்களும் போயிடறாங்க. எல்லா வற்றுக்கும் நிறைய அண்டிபையடிக்ஸ் மருந்து ஊசி வழி செலுத்துகிறார்கள். சளி, காய்ச்சல், வயிற்று போக்கு, வாந்தி என்று அனைத்திற்கும் சர்வ லோக நிவாரணியாக இது செலுத்த படுகிறது. வைரசால் கூட வாந்தி வயிற்று போக்கு வரலாம் எதற்கு அண்டிபயாடிக் என்று யாருக்கும் தெரியவில்லை, தெரிந்தவர்கள் கேட்டாலும் பதில் இருக்காது. 

இது இப்படி இருக்க, வீடுகளில் மக்களே மருத்துவர்களாக மாறி விடுகிறார்கள். அதாவது, டாக்டர் உடம்புக்கு முடியல என்று சென்றால் அண்டி பயாடிக் 3-5 நாள்களுக்கு எழுதி கொடுத்தால், இவர்கள் முதல் ஒரு நாள் மட்டுமே மருந்து கொடுகிறார்கள். ஒரு நாள் போட்டவுடன் உடம்பு சரியானது போல இருந்தால் அடுத்த நாட்களுக்கு கொடுப்பது இல்லை. 

அண்டிபயாடிக் எடுத்து கொண்டால், வயிற்று போக்கு நிறைய மக்களுக்கு வரும், ஏனெனில் வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியா களும் அண்டிபயாடிக் மருந்துகளால் சாகும் என்பதால் இது சகஜம். அதற்காகவே, ப்ரோபியாடிக் மாத்திரைகள் அல்லது வீட்டில் தோய்த்த தயிர் சாப்பிட சொல்லுவார்கள். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடலுக்கு நல்லது என்பதால் வயிற்று போக்கு நிற்கும். ஆனால் நாம் ஊரு மூட நம்பிக்கை என்னவென்றால், உடம்புக்கு முடியாலய்னா தயிர் சாப்பிட மாட்டாங்க. தயிர் குளிர்ச்சி என்று ஒதுக்கி வைக்கிறார்கள். நாம் சொன்னாலும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போல பதில் வருகிறது.

அதே போல, இது சாப்பிட்டா சக்கரை நோய் வராது அல்லது குறையும் என்று யார் என்ன கொடுத்தாலும் சாபிடுகிறார்கள். இப்படி சாப்பிட்டுவிட்டு, உடல்பயிற்சி எதுவும் செய்யாமல் சக்கரை குறைய மாட்டேன்கிறது என்று புலம்பல் வேறு. 

உடல் பற்றிய விழிப்புணர்ச்சி, எப்படி நோய் வராமல் காப்பது அப்படியே நோய் வந்தாலும் எப்படி சமாளிப்பது என்று பலருக்கும் தெரிவதில்லை. நோய் வந்து விட்டால் டாக்டர் இடம் ஓட வேண்டியது, அவர்கள் கொடுக்கும் மருந்துகளில் உடனே நோய் குணமாக வேண்டும், இல்லையெனில் அந்த டாக்டர் நல்ல டாக்டர் இல்லை. ஐயோ சாமி..முடியல....

எப்பொழுது மக்களுக்கு உடல் நிலை பற்றி நல்ல விழிப்புணர்ச்சி வருவதோ..இப்படியே சென்றால் திரும்பும் இடமெல்லாம் மருத்துவமனை மட்டுமே காட்சியளிக்கும்.

நன்றி.

5 comments:

Yaathoramani.blogspot.com said...

விழிப்புணர்வூட்டும் பயனுள்ள பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

மதுரக்காரய்ங்க சொன்னபேச்ச கேக்க மாட்டாய்ங்க முகுந்தம்மா...... கலோரின்னா காக்கிலோ எவ்வளோனு கேப்பாய்ங்க....
அடிப்படையை அழகாக விளக்கினால் தான் மக்களுக்கு புரியும். எதற்கு உணவு......என்ற கேள்விக்கு பெரும்பாலும் பசிக்கு.... என்ற பதிலே வரும். அதுவரை நீங்கள் சொன்னது நடந்துகொண்டிருக்கும்.

Anonymous said...

மதுரக்காரய்ங்க சொன்னபேச்ச கேக்க மாட்டாய்ங்க முகுந்தம்மா. கலோரின்னா காக்கிலோ எவ்வளோனு கேப்பாய்ங்க.... மேலுக்கு முடியலன்னா மொதல்ல மெடிக்கல் ஷாப் போவாய்ங்க... அப்புறந்தா டாக்டரு...
எதுக்கு உணவு என்ற கேள்விக்கு பெரும்பாலும் பசிக்கு... என்று பதில் வரும். அதுவரை நீங்கள் சொன்னது நடந்துகொண்டிருக்கும்.....

S.P.SENTHIL KUMAR said...

மிக கூர்மையாக கவனித்திருக்கிறீர்கள். உண்மையில் இவர்களின் நடைபயிற்சியால் உடலுக்கு ஆரோக்கியத்தை விட தீமையே அதிகம்.

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பான விழிப்புணர்வு பதிவு. ஆனால் இவர்கள் திருந்துவதாக தோன்றவில்லை!