Wednesday, April 29, 2015

குழந்தைஇன்மையும் Peer பிரஷர்ம்

நான் பதிவெழுத ஆரம்பித்த புதிதில் Peer பிரஷர் என்ற ஒரு பதிவு எழுதி இருந்தேன்.அதில் சிறு வயது முதல் நான் சந்தித்த peer பிரஷர் அல்லது சக ஒப்பீடு பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.

இது இந்தியாவில் வளர்ந்த பலருக்கும் தெரிந்திருக்கும். சிறு வயது முதல் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு பெண்களை அல்லது ஆண்களை நம்முடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு அவர்கள் எப்படி படிகிறார்கள் அல்லது வேலை பார்கிறார்கள் நீ பாக்குறியா என்று ஒரு ஒப்பீடு செய்வார்கள் நம் பெற்றோர்.

ஆணாக இருந்தால் "அவன் எவ்வளவு மார்க் வாங்குறான் பாரு, நீயும் தான் வாங்குறியே? " ,  "அவனுக்கு அரியர் இல்லையாம், நீயும் தான் எத்தனை வச்சு இருக்கிற?"  "அவன் வேலைக்கு போயிட்டான் நீ எப்போ போக போற?"

பெண்களுக்கு மேலே இருக்கும் அனைத்தும் பொருந்தும் என்றாலும் ஒரு சில சில மாற்றங்களும்  உண்டு, "அவ எத்தனை வீட்டு வேலை செய்யுறா பாரு, நீயும் தான் இருக்கியே, இங்க இருகிறதா அங்க எடுத்து வைக்கிரயா, போற வீட்டுல என்ன கேட்ட பேரு வாங்கி கொடுக்க போறியோ?" , "உன்னோட பெரியம்மா பொண்ணு பாரு உன் வயசு தான் ஆனா கல்யாணம் ஆகி 6 மாசம் ஆச்சு, உனக்கு எப்போ கல்யாணம்னு ஊரெல்லாம் கேட்குறாங்க, என்ன பதில் சொல்ல நான் அவங்களுக்கு, சீக்கிரம் ஒருத்தன் கிட்ட உன்ன பிடிச்சு கொடுக்குற வரை வயித்தில நெருப்ப கட்டிட்டு இருக்கேன்" , இப்படி சில ஒப்பிடுகள் நிறைய பெண்கள் கேட்டு இருக்கலாம்.

ஆனால் சிறு வயது முதல் நாம் அதுவும் பெண்கள் கேட்கும் ஒப்பீடுகள்எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆக்கி விடும் ஒரு ஒப்பீடு உண்டென்றால் அது குழந்தை இல்லை அல்லது குழந்தை பிறப்பு தள்ளி போகிறதுஎன்னும் போது  உருவாகும் ஒப்பீடும்  அதனால் ஏற்படும் peer பிரஷர் ம் தான். கல்யாணம் ஆகி 3-6 மாசம் வரை பொறுக்கும் நம் பெற்றோர், உற்றார் உறவினர்கள் எல்லாரும் ஒரு வருடம் கழித்தும் "நல்ல செய்தி" சொல்லவில்லை என்றால் மெதுவாக ஆரம்பிப்பார்கள். நம் பெற்றோரே "எப்போ நல்ல செய்தி சொல்ல போற, பாரு உன் சித்தி பொண்ணுக்கு உனக்கப்புறம் கல்யாணம் இப்போ அவ 6 மாசம் முழுகாம இருக்காலாம்", என்று ஆரம்பிப்பார்கள். அப்போது ஆரம்பிக்கும் ஒரு வித டென்ஷன். இவை போன்ற கேள்விகள் எல்லாம் பெண்களை தான் குறி வைத்து முதலில் எய்ய படும். யாரும் ஆண்களை இப்படி கேட்பதை அதிகம் பார்த்ததில்லை.

"நமக்கு எதோ பிரச்சனையோ, அதனால தான் உண்டாகலையோ" என்று மெதுவாக ஒரு பயம் பெண்களை எட்டி பார்க்கும். அது முதல் குழந்தையின்மை peer பிரஷர். பின்னர் இன்னும் 6 மாதம் ட்ரை செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால், உடனே "கோயிலுக்கு நேந்துகிறது" என்று ஆரம்பிப்பார்கள் நம் சொந்தங்கள். இன்னும் பிரஷர் அதிகமாகும்.


(குழந்தைஇன்மை குறித்து என் சில பழைய பதிவுகள் இங்கே

குழந்தையின்மை சிகிச்சை வியாபாரமாக்கப்படுகின்றதா?

குழந்தையின்மை ஒரு நோயா?- 1

குழந்தையின்மை ஒரு நோயா?- 2

குழந்தையின்மை ஒரு நோயா? - 3 -அதிக எடை ஆபத்தானது

)


இரண்டு வருடங்கள் ஆகி விட்டது, இன்னும் குழந்தை இல்லைஎன்றால் அடுத்து "ட்ரீட்மென்ட்" என்று ஆரம்பிப்பார்கள். அது போல ஒரு ஸ்ட்ரெஸ் பெண்களுக்கு இல்லை என்பது என் கருத்து. IUI, IVF என்று எடுக்கும் ஒவ்வொன்றும் பெண்களுக்கு மனதளவில் உடலளவில் அவ்வளவு ஸ்ட்ரெஸ் கொடுக்க கூடியது. அதுவும் IVF இன் ஓவ்வொரு நிலையிலும் தினமும் பல ஊசிகள் போட வேண்டி வரும், ஹார்மோன் இன்ஜெக்சன் என்பதால் பயங்கர மூட் ஸ்விங் இருக்கும். அனுசரித்து செல்லும் கணவரும் குடும்பத்தினரும் இருந்தால் நல்லது. இல்லை என்றால் மிக கஷ்டம்.

உதாரணமாக, நம் ஊரில் எல்லாம் யாருக்கு குறை என்று எல்லாம் இன்னும் கூட பலர் பார்ப்பதில்லை, உடனே பெண்களை குற்றம் சொல்லும் "அவளை ஒதுக்கிட்டு இன்னொன்னை கட்டிக்கோ" என்று ஆணிடம் சொல்லும் பழக்கம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இப்படி நிலையில் எங்கே தனக்கு குழந்தை இல்லை என்றால் வாழ்கையே இல்லையோ என்று பயமும், ஸ்ட்ரெஸ் ம் அதிகமாகும் நிலை ஒரு சில நேரங்களில் பரிதாபத்துக்கு உரியது.


ஆனால் அப்படி எடுத்தும் ஒரு சிலருக்கு குழந்தை பிறப்பு இல்லாமல் இருந்து இருக்கிறது. அபப்டி பட்ட நிலையில், வாழ்கையில் ஒரு விரக்தி வரும் பாருங்கள், ஊர் கூடி மலடி என்று சொல்லாமல் சொல்வது, எத்தனை ட்ரீட்மென்ட் எடுத்த பின்பும் ஒன்றும் இல்லை அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலையில்லா தன்மை என்று எங்கு பார்த்தாலும் குழப்பங்கள். எதற்காக வாழ வேண்டும் என்று நினைப்பு..அப்பப்பா..

நம்ம ஊரில் அல்லது நம்மூர் மக்களிடம் இப்போதும் இருக்கும் ஒரு கெட்ட ஒப்பீடு,  குழந்தை இல்லாத தம்பதியினரை முன் வைத்து கொண்டு குழந்தை உள்ள பல தம்பதியினரை பாராட்டி பேசுவது. அல்லது நல்ல விசயங்களில் குழந்தை இருக்கும் பெண்களுக்கு முன்னர் குழந்தை இல்லா பெண்ணை கீழாக நடத்துவது என்று பல. நான் சொல்வது எல்லாம் இந்தியாவில் இருக்கும் சூழல் அல்ல, இங்கே அமெரிக்காவிலும் நடக்கும் சில அவலங்கள் தான்.

வேறு எங்கும் போக வேண்டாம், என்னுடைய சொந்த வாழ்கையில் நடந்தது இது. என் postdoc படிப்புக்காக என்று திருமணத்திற்கு பிறகு நாங்கள் குழந்தை பிறப்பை தள்ளி போட்டு இருந்தோம். அது பற்றி எதுவும் தெரியாத நிலையில், எங்களுக்கு நெருகிய சொந்தம் முதல் நெருங்கிய நண்பர்கள் வரை பலரும் எங்களை நல்ல விஷயங்கள் பலவற்றிக்கும் அழைப்பதில்லை, அப்படியே அழைத்தாலும் என்னை ஒரு சில விடயங்களை செய்யவிடவில்லை . என்னை மிகவும் காயபடுத்திய ஒரு சில விசயங்களில் நான் நெருங்கிய தோழியாக அப்போது நான் நினைத்த ஒரு பெண், தான் தாய்மை அடைந்ததை என்னிடம் சொல்லாமல் மற்ற அனைவருக்கும் சொல்லி அவர்களிடமும் "என்னிடம் சொல்ல வேண்டாம் 3 மாதங்கள் கழிந்த பின் சொல்லுங்கள்" என்று சொன்னது. அதே போல அவளுக்கு குழந்தை பிறந்ததை என்னிடம் சொல்லாமல் மற்றவர்கள் அனைவரிடமும் சொன்னது என்று பல.

அமெரிக்காவில் பல குரூப்கள் உண்டு. இது சாதி மத மொழி தாண்டியது   அதாவது, ஒரு குழந்தை இருக்கும் பெற்றோர் அதே போல ஒரு குழந்தை இருக்கும் பெற்றோரிடம் நட்பு வைத்து கொள்வார்கள் அல்லது அப்படி ஒரு குழந்தை இருக்கும் பெற்றோர்கள் பலரை தங்கள் குருப்பில் சேர்த்து கொள்வார்கள். அதே போல இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருப்பவரும்  2 அல்லது 3 குழந்தைகள் இருக்கும் குருப்பில் இருப்பார்கள். ஆனால் இவர்கள் தவறி கூட ஒரு குழந்தை இல்லா பெற்றோரை தங்கள் குருப்பில் சேர்த்து கொள்ள மாட்டார்கள். எங்கே தன் குழந்தைகளை பார்த்து கண்ணு வைத்து விடுவார்களோ என்று ஒரு குறுகிய எண்ணம். ஒரு சப்போர்ட் குரூப் என்று எதுவும் இருபதில்லை. ஏற்கனவே குழந்தை இல்லை என்று நொந்து போய் இருக்கும் இவர்கள், சமூகத்தால், நண்பர்களாலும் ஒதுக்க படுவதை அறியும் பொது இருக்கும் மனஉளைச்சலை நானும்  கொஞ்ச காலம் அனுபவித்து இருக்கிறேன். எங்கு சென்றாலும் இந்திய மக்களிடம் இருக்கும் ஒரு குறுகிய மனப்பான்மை இருக்கு பாருங்கள் அதனை என்ன என்று  சொல்வது.

உடலில் எந்த குறையும் இல்லை என்றாலும் இது போன்ற ஸ்ட்ரெஸ் களே பல நேரங்களில் நமக்கு எதிரியாக இருக்கும் என்று பலரும் அறிவதில்லை.  பாசிடிவ் எண்ணங்கள், நமக்கும் குழந்தை பிறக்கும் என்ற எண்ணங்கள் கொண்டு ஒழுங்காக உடற்பயிற்சி செய்து, நல்ல சத்தான உணவுகளி உண்டு, முக்கியமாக பெண்கள் அதிக எடை போடாமல், சந்தோசமாக ரிலாக்ஸ் ஆக இருந்தாலே எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று நான் அறிந்த நிறைய infertility இணைய தளங்கள் அறிவுறுத்துகின்றன.

எவ்வளவு முயற்சி செய்தாலும் குழந்தை பேறு கிடைக்கவில்லை என்றாலும், கனவனம் மனைவி ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு  குழந்தை தத்து எடுத்து கொள்ளுங்கள். அதற்காக வாழ்க்கை விரக்தி வேண்டாம். குழந்தை என்பது வாழ்கையின் ஒரு அங்கம் தானே தவிர அதுவே முழு வாழ்கையும் அல்ல.

இது எனக்கு தெரிந்த, நெருங்கிய பல குழந்தையில்லா  தோழிகளின் வாழ்கையில் இருந்து எடுக்க பட்டது. அவர்களுக்காகவே எழுதப்பட்டது.

நன்றி.

3 comments:

வருண் said...

குழந்தையில்லை என்கிற பிரச்சினையை நாம் காலங்காலமாக பெரிதாக்கி, குழந்தை பெறமுடியாதவர்களை கஷ்டப் படுத்தி அவர்களை துன்புறுத்தி.. இதுதான் நம் கலாச்சாரம்.

இன்றும் என் சொந்தத்தில் குழந்தை பெரமுடியாதவர்கலுக்கு எப்படியாவது டெஸ்ட் ட்யூப் பேபி, ஆர்டிஃபிஷியல் இன்செமினேசன் என்று தொடர்ந்து முயல்கிறார்களேயொழிய தத்து எடுக்கவோ, அல்லது குழந்தை இல்லை என்றால் என்ன? குழந்தை வளர்க்கும் அந்த நேரத்தில் வேறு ஏதாவது உருப்படியாகச் செய்யலாமே.. என்கிற மனநிலையோ வரவில்லை. நான் சொல்வது என்னுடைய க்ளோஸ் ரிலேட்டிவ் களுடைய மனநிலை. உலகம் பற்றி எனக்குத் தெரியாது. நான் எடுத்துச் சொல்லியிருக்கேன். இருந்தாலும் அவர்கள் நான் பேசுவது பைத்தியக்காரத்தனம் என்பதுபோல்தான் பார்க்கிறார்கள். இதுதான் நிதர்சனம்.

Angel said...

///உடலில் எந்த குறையும் இல்லை என்றாலும் இது போன்ற ஸ்ட்ரெஸ் களே பல நேரங்களில் நமக்கு எதிரியாக இருக்கும் என்று பலரும் அறிவதில்லை////
absolutely true..

கம்பேர் செய்தே அழியும் சமூகம்
அருமையான பதிவு ..இதே நிலை நானும் கடந்து வந்திருக்கேன் ..அந்த ஸ்ட்ரெஸ் அப்பப்பா :(
any good நியூஸ் என்று யாராவது கேட்கும்போது கொலை வெறி வரும்
குழந்தை பிறப்பு என்பது இயர்கையான நிகழ்வு ..
நம் சமூகத்தில் மட்டும் எதற்கு இத்தனை ஆற்பாட்டம் ?

வருண் said...

***என்னை மிகவும் காயபடுத்திய ஒரு சில விசயங்களில் நான் நெருங்கிய தோழியாக அப்போது நான் நினைத்த ஒரு பெண், தான் தாய்மை அடைந்ததை என்னிடம் சொல்லாமல் மற்ற அனைவருக்கும் சொல்லி அவர்களிடமும் "என்னிடம் சொல்ல வேண்டாம் 3 மாதங்கள் கழிந்த பின் சொல்லுங்கள்" என்று சொன்னது. அதே போல அவளுக்கு குழந்தை பிறந்ததை என்னிடம் சொல்லாமல் மற்றவர்கள் அனைவரிடமும் சொன்னது என்று பல.***

இந்தளவுக்கு படித்து மேலே வந்த உங்களைச் சுத்தி உள்ள சமூகமே இப்படி இருக்கும்போது..

எனி வே,

* சரி, உங்களிடம் சொல்ல வேணாம்னு சொன்னது முதல் தப்பு. அது அந்தத் தோழியின் சிறுபுத்தி இல்லைனா அறியாமைனு பெரிய மனது செய்துவிட்டு விடுவோம்.

ரெண்டாவது, சொல்ல வேண்டாம்னு சொன்னதை "இன்னொரு உயிர்த் தோழி" உங்களிடம் சொல்லாமல் அந்தத் தோழியின் சிறுமையை மனதிலேயே வைத்து இருக்கலாம். அதை உங்களிடம் சொல்வ்வதால் உங்களுக்கு இன்னும் கஷ்டம்தான்..Sometime we do not want sympathy either. That does not solve the problem completely.

ஒரு சில நேரங்களில நம்மைப் பற்றி புறம்பேசுவதை நாம் அறியாமல் இருப்பது நல்லது. I am repeating this again and again. :) அப்படி செய்யாமல், நம்க்கு உதவுவதாக ஒரு சிலர் செய்யும் நன்மைகளும் உபத்திரவம்தான்.

தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம். நம்மைப் புரியாத உலகை துச்சமாக மதிக்க கற்றுக்கொள்ளணும். இதெல்லாம் எல்லாராலும் முடியாது.
அதுவும் உலக அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் சிந்திக்கத் தெரியாத சுற்றத்தார் மத்தியில் மாட்டிக்கொண்டவர்கள் நிலை எல்லாம் கொஞ்ச்ம கஷ்டம்தான்.

இதைப் பத்தி நெறையவே பேசலாம்..மாதொரு பாகன் கதைக்கு நான் முழு எதிர்ப்பு கொடுத்தற்கும் இதுபோல் சிந்தனைகளே காரணம். அதையெல்லாம் ஒவ்வொருவரிடமும் விளக்கிக் கொண்டு இருந்ந்தால் நான் ஆயிரம் ஆண்டு வாழ்ந்தாலும் பத்தாது. :)))

Sometimes we just have to say the bottom line and get going ..because of the lack of time or patience or wahtever.