Thursday, November 26, 2015

தொலைத்த ஐடெண்டிடியும்?, குட்டி சுவர் பசங்களும்!


Images from google images

முதல் விஷயம், சில நாட்களுக்கு முன் "எது எனது அடையாளம்?" என்ற  ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது, (யாருடைய தளத்தில் என்பது மறந்து விட்டது,மன்னிக்கவும், யாராவது சொன்னால் சேர்த்துக்கொள்ள உபயோகமாக இருக்கும்), அதில் அவர் சொன்ன சில விஷயங்கள் குறித்து நானே நிறைய யோசித்து இருக்கிறேன். தற்போது கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியும் என்னை இந்த கேள்வியை குறித்து சிந்திக்க தோன்றியது.

நான் வேலை செய்யும் ஆபிசில் நிறைய இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அதில் நிறைய பேர் ஆப் சைட் க்கு இன்போசிஸ், TCS, CTS ...போன்ற பல கம்பனிகளில் இருந்து வந்தவர்கள். அதனை தவிர இங்கேயே சில ஆண்டுக்கு முன்பு வந்து செட்டில் ஆனவர்களும் இருக்கிறார்கள்.

என்னுடன் வேலை பார்க்கும் ஒரு குஜராத்தி தற்போது இரண்டாம் தலைமுறை குஜராத்தி. லண்டனில் பிறந்து வளர்ந்த இவர் இங்கே சிறு வயதில் வந்து விட்டார், இருப்பினும் நல்ல குஜராத்தி பேசுவதாக சக குஜராத்தி மக்கள் சொல்லுகிறார்கள். தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே UK என்றாலும் தன்னை ஒரு குஜராத்தி என்று சொல்லி கொள்ளுவதில் ஒரு பெருமை அவருக்கு.

இன்னொரு பெண் இருக்கிறார், தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆனால் பம்பாயில் சென்று சிறு வயதில் செட்டில் ஆனவர். முதலில் நான் அவரை சந்தித்த போது நீங்களும் தமிழா என்று கேட்டு இருக்கிறேன். அதற்க்கு "I dont know Tamil, since I grew up in Mumbai" என்று சொன்னார். எப்பொழுதும் தன்னை ஒரு "தமிழர்" என்று அடையாள படுத்த படுவதை இவர் விரும்பியதில்லை. ஆனால் மற்ற மொழி மக்கள் வந்தால் அவர்களுடன் ஹிந்தியில் பேசுவதன் மூலம் தான் ஒரு "வட இந்தியர்" என்று அடையாளபடுத்த படுவதை விரும்பி இருக்கிறார். சரி, மும்பையில் வளர்ந்தால் இருக்கும் என்று விட்டு விட்டேன்.

மற்றும் ஒரு பெண் சந்தித்தேன், அவரின் பையனும் முகுந்தும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அவரின் பெயரை வைத்து தமிழ் பெயர் என்று கணிக்க முடிந்ததால், தமிழில் பேசலாம் என்று பேச ஆரம்பித்தேன், அதற்க்கு அவர், "தமிழா கொஞ்சம் கஷ்டம், lets talk in english" என்றார். பின்னர் பேசியபோது, தான் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தாலும், தமிழில் படிக்கவில்லை என்றும்  தான் படித்ததெல்லாம் சமஸ்கிருதம்/பிரெஞ்சு/இத்தாலியன் என்றும் அதனால் "தமில் கொஞ்சம் கொஞ்சம் வரும்" என்று கூறினார்.

பின்னர் ஒரு "play date" இன் போது  குழந்தைகள் வேறு ஒரு மொழி கற்று கொடுப்பது குறித்து ஒரு முறை பேசி கொண்டு இருந்தோம், அப்பொழுது நான்  "தமிழ் பள்ளியில் விரும்பினால் சேர்த்து குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்கலாமே, ஜியார்ஜியாவில் மொழி கிரெடிட் வாங்கி கொள்ளலாம்" என்று கூறியதற்கு "இல்லை வேண்டாம் இண்டரெஸ்ட் இல்லை" என்று  சொல்லி விட்டார். அதனால் நானும் திரும்ப அதனை குறித்து பேச விரும்பவில்லை. ஆனால் கடந்த வாரம் பேசும் பொழுது, தன் குழந்தைகள் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கற்று கொள்ளுகிறார்கள் "பால விகாரில்" என்றார்.


அதனை கேட்டவுடன் எனக்கு தோன்றியது இதுதான் , இவர் தன்னை எப்படி அடையாள படுத்தி கொள்ள விழைகிறார் ?. எப்படியும் அமெரிக்காவை / அமெரிக்கர்களை பொருத்தவரை "நாமெல்லாம் ஒரு ஏலியன், அல்லது சவுத் ஈஸ்ட் ஆசியன் அல்லது person of indian origin". இதில் மற்ற மொழி காரர்களாவது, நாங்கள் person of indian origin, எங்கள் மொழி, ஹிந்தி அல்லது எங்கள் மொழி ஹிந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம். என்று சொல்லுவதில் பெருமை கொள்ளுகிறார்கள். ஆனால்மேலே நான் குறிப்பிட்ட பெண்களை போன்றோர்  எப்படி தன்னை அடையாளபடுத்துவார்கள்? " நாங்கள் person of indian origin, எங்கள் மொழி சமஸ்கிருதம்" என்று அடையாள படுத்த விரும்புகிறார்களா? தெரியவில்லை.

Images from google images

இரண்டாவது விஷயம், "குட்டி சுவர் பசங்களை" போன்றது. அம்மாவின் அறுவை சிகிச்சைக்கு என்று மதுரை சென்ற போது  நான் கவனித்தது இது. என் அண்ணன் தற்போது மதுரையில் வசிக்கும் தெருவில் உள்ள ஒரு டீ கடையில் தினமும் சில விடலை பசங்க பேப்பர் படிக்கிறேன், போன் பார்க்குறேன் என்று வெட்டியாக உக்கார்ந்து கொண்டு இருப்பதை பார்த்தேன். இது போன்று ஊருக்கு ஒரு குட்டி சுவர் அல்லது டீ கடை என்று எல்லா தெரு முனைகளிலும் தினமும் இப்படி உக்கார்ந்து கொண்டு வேலை வெட்டியில்லாமல் கதை அடிப்பதை, என்னுடைய சிறு வயதில் இருந்து, பதின்ம வயது தொடர்ந்து  தற்போது வரை பார்த்து இருக்கிறேன். இவர்களை பார்க்கும் போதெல்லாம், "உங்களுக்கு எல்லாம் வேலை வெட்டி இருக்காதா? , இப்படி நேரத்தை கடத்துறீங்களே"என்று பல முறை கேட்க தோன்றி இருக்கிறது. எதுக்கு நமக்கு வம்பு என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து இருக்கிறேன்.

நேற்று , அண்ணனிடம் பேசிய போது, அருகில் பெரிய சண்டை சத்தம் கேட்டது, என்னவென்று விசாரித்த போது, "குட்டி சுவர் பசங்களில் ஒருவன், தெருவில் இருக்கும் யாரோ ஒரு பெண்ணை பார்த்து கிண்டல் செய்ய, அந்த பெண் போலீசில் ஈவ் டீசிங் கேசில்" போட்டு கொடுத்து விட்டதாகவும், அதற்க்கு அந்த பையனின் அம்மா, அந்த பெண் வீட்டில் வந்து தகராறு செய்ததாகவும் குறிபிட்டார். முதலில் தன் மகனை இப்படி வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்ற அனுமதித்த அம்மா, கிண்டல் செய்வதை அனுமதித்த அம்மா, எப்படி போலீசில் பிடித்து கொடுத்ததை மட்டும் குற்றம் என்று சொல்லுகிறார் என்று தெரியவில்லை.

உண்மையில் இப்படி குட்டி சுவர் பசங்களுக்கு என்று வேலை வெட்டி இல்லையா? எப்படி அவர்களின் பெற்றோர் இதனை அனுமதிக்கிறார்கள்? என்று தெரியவில்லை.



டிஸ்கி

இங்கே எழுதி இருக்கும் இரண்டு விசயங்களும் என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் கண்டவை மட்டுமே..யாருடைய எண்ணங்களையும் செயல்களையும் விமரிசிக்க வில்லை இங்கு.

நன்றி


9 comments:

ப.கந்தசாமி said...

//விளைகிறார்?//

விழைகிறார் என்று இருக்கவேண்டுமோ?

முகுந்த்; Amma said...

@பழனி. கந்தசாமி said...
சரி செய்துவிட்டேன் அய்யா. சுட்டி காட்டியதற்கு நன்றி.

anwar said...

தமிழன் என்று சொல்வதற்க்கும்..தமிழில் பேசுவதற்க்கும் எது தடையாக இருக்கும்??

Packirisamy N said...

தமிழ் நாட்டில் மூன்று கூட்டத்தினர், வீட்டில் தமிழில் பேசினாலும், அடுத்தவர்களைப்பற்றி சொல்லும் பொழுது, அவன் தமிழன் என்று சொல்லுவார்கள். அதாவது அடுத்தவர்கள் தமிழர்களாம். சின்ன வயதில் அதனைப்பற்றி பெரிதாக சிந்தித்ததில்லை. இப்பொழுது வித்தியாசம் தெரிகிறது. தங்களுக்கு இந்த அனுபவம் இல்லையென்று நினைக்கிறேன்.

செந்தழல் செ சேதுபதி said...

"தமில் கொஞ்சம் கொஞ்சம் வரும்"

சென்றவாரம் பேஸ்புக்கில் ஒரு காரசாரமான விவாதம்,தமிழை தமில் என்போருக்கு "ழ" உச்சரிப்பு வரவில்லையெனில் அவர்கள் தமிழர்களா? என்று,,, கிட்டத்தட்ட அதனை ஏற்காதாதிருந்த எனக்கு இப்போது ஏற்கத்தோன்றுகிறது,
அது உடல்ரீதியான கோளாரில்லை திட்டமிட்டே அவ்வகையினர் தமிழை புறக்கணித்திருக்கிறார்கள் என்பது உங்கள் பதிவின் மூலம் தெளிவாகிறது. குட்டி சுவர் விஷயத்தில் கருத்தேதும் சொல்ல விரும்பவில்லை அதில் நானுமொரு குற்றவாளி என்பதால்,,,

C932A said...

http://www.padalay.com/2015/11/blog-post_22.html

Read this article

முகுந்த்; Amma said...

Thanks for the article, as a matter of fact I mentioned about this article in the blog post. I will include this article as well.

வேகநரி said...

//முதலில் தன் மகனை இப்படி வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்ற அனுமதித்த அம்மா, கிண்டல் செய்வதை அனுமதித்த அம்மா, எப்படி போலீசில் பிடித்து கொடுத்ததை மட்டும் குற்றம் என்று சொல்லுகிறார் என்று தெரியவில்லை.//

சில அம்மாக்களின் போக்கு அங்கே இப்படி கொடுமையாக தான் உள்ளது. அவர்களின் அநீதியை கண்டித்த இந்த அம்மாவுக்கு பாராட்டுக்கள்.

Deiva said...

I had similar experience with couple of colleagues in office (in CA). They were born and brought up in Mumbai/Chennai. They will answer only in English if I speak in Tamil. But I heard them speaking to their family in Tamil. Not sure why.