Monday, September 13, 2010

புற்றுநோய்

உலகில் அதிகம் பேரை கொல்லும் ஆட்கொல்லி நோய் எது?

இதற்க்கு நீங்கள் AIDS, என்று பதில் அளித்து இருந்தால், உங்கள் விடை தவறு.

உண்மையில் உலகை ஆட்டுவிக்கும் உயிர்கொல்லி நோய் புற்றுநோய்.

2008 ஆம் வருட புள்ளியியல் படி AIDS ஆல் இறந்தவர்கள் இருப்பது
லட்சம் பேர். ஆனால் புற்றுநோயால் இறந்தவர்கள் இரண்டு கோடி பேர். இது உலகம் முழுதும் எடுக்கப்பட்ட ஒரு வருட கணக்கு மட்டுமே. அதிலும் ஆசியா கண்டத்தில் தான் புற்று நோயாளிகள் அதிகம் என்று அந்த புள்ளியியல் தெரிவிக்கிறது .

தலை முதல் கால் வரை கிட்டதட்ட உடலின் அனைத்து உறுப்புகளும் புற்று நோய்க்கு இலக்கானாலும் ஆண்களும் பெண்களும் அதிகம் இறப்பது நுரையீரல் புற்று நோயால் தான். நுரையீரல் புற்று நோயின் முதல் காரனி புகையிலை. புகைப்பவர்களை விட அதனை சுவாசிப்பவர்கள் அதிகம் பாதிக்கபடுகின்றனர்.

பெண்களை அதிகம் தாக்கும் மற்ற புற்று நோய்கள், மார்பக புற்று நோய், கருப்பை வாய் புற்று நோய் மற்றும் கருப்பை புற்று நோய். இதனை தடுக்க நாற்பது வயதிற்க்கு மேல் ஒவ்வொரு பெண்ணும் வருடத்திற்க்கு ஒரு முறை மார்பக மற்றும் கருப்பை சோதனை செய்து கொள்ளுதல் அவசியம்.

அதே போல ஆண்களை அதிகம் தாக்கும் புற்று நோய், Prostate cancer எனப்படும் முன்னிலை சுரப்பி நோய். வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது புற்று நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய உதவும். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் பெரும்பாலான புற்று நோயை குணப்படுத்த முடியும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடத்திற்க்கும் மூன்று பேருக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்படுகிறார்கள்.

கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள அனைத்து பொது தொலைகாட்சிகளும் இணைந்து Stand up to Cancer என்னும் புற்றுநோய்க்கு எதிரான பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பின. அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புற்றுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தை முன் வைத்தனர். அதில் சொல்லப்பட்ட விவரங்களே மேலே நான் குறிப்பிட்டது.

அந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் புற்றுநோய் ஆராய்ச்சி குழுக்கள் பல கலந்துகொண்டன. அதில் பல இந்திய முகங்களை காண முடிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இந்தியாவிலும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் இதே போன்றதொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி மக்களுக்கு புற்று நோயை பற்றி எடுத்து சொல்வது அவசியம் என்பது என் கருத்து, செய்வார்களா?

5 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல விசயம் . இங்க கூட அவ்வை தமிழ்சங்கத்தில் இதற்கு அவர்நெஸ் ப்ரோக்ராம் மற்றும் மருத்துவ முகாம் ஒன்றை அன்னைத்தெரசாவின் 100 வது பிறந்தநாளை ஒட்டி செய்தார்கள்.

எங்கள் உறவினரில் இதுவரை இருவருக்கு மார்பு புற்று
வந்திருக்கிறது.
தாமதமான மருத்துவம் அவர்கள் உயிரை
எடுத்துவிட்டது. :(

ஹுஸைனம்மா said...

ஆமாம் முகுந்த் அம்மா; புற்றுநோய் பரவல் மிகவும் பயம் காட்டுகீறது. எப்படி தடுப்பது அல்லது தவிர்ப்பது என்பது குறித்து பிரத்யேகமாக எதுவும் சொன்னார்களா?

Thekkikattan|தெகா said...

அவசியமான, அவசரமான செய்திகளுடன் அமைந்த கட்டுரை. எனக்கு இந்தக் கட்டுரைக்குப் பின்புதான் தெரிந்தது ஆசியாவில்தான் அதிக புற்றுநோயின் தாக்கமென்று.

எனக்கு என்னவோ food related carcinogensதான் இத்தனை அதீத பெருக்கத்திற்கு இன்றைய தினத்தில் காரணமாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மரபணு மாற்றம் (GM) செய்ப்பட்ட உணவு??

மங்குனி அமைச்சர் said...

மேடம் ரொம்ப நல்ல பதிவு , இது நிறைய பேருக்கு தெரிவிக்க வேண்டிய பதிவு , நீங்க இதை இன்டலி , தமிழ் மனம் , உளவு , தமிழ் 10 இதில் எல்லாம் இணையுங்கள் , அப்புறம் facebook ல போடுங்கள் . இன்னும் நிறைய பேருக்கு ரீச் ஆகும்மேடம்

கோமதி அரசு said...

முகுந்த் அம்மா ,நல்ல பதிவு.

அமெரிக்காவில் தான் வீட்டுக்குள் சிகரெட் பிடிக்காமல் வெளியே பொது இடங்களில் சிகரெட் பிடிக்கிறார்கள். பிடிப்பவர்களுக்கும் சுவாசிப்பவர்களுக்கும் கேடு செய்கிறது.

இந்தியாவில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க கூடாது என்று சட்டம் உள்ளது.

உணவுப் பொருளில் கலப்படம்,உணவுப் பொருளில் ஏற்றப் படும் சாயப் பவுடர் எல்லாம் ஒரு காரணம்.

தெகா சொல்வது மரபணு மாற்றம் செய்யப் பட்ட உணவு அதுவும் ஒரு காரணம்.

17 வயதில் திருமணம்,25வயதில் இரண்டு குழந்தைகளை விட்டு மறைந்தார் என் அக்கா மார்பக புற்று நோயல்.முன்னோர்கள் யாருக்கும் புற்று நோய் கிடையாது.

மக்களிடம் புற்று நோய் விழிப்புணர்வு தேவை.