Friday, May 15, 2015

ஜாக்பாட்டு அடித்த பலரும் பின் நடுத்தெருவுக்கு வருவதேன்?



என் கூட வேலை பார்த்தவரின் சொந்த காரர் அவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு எதோ லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது அவருக்கு என்று சொல்லி கொண்டு இருந்தார். நாங்கள் அனைவரும் "உங்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும், வேலையை விட்டு விடுங்கள்" என்று ஓட்டி கொண்டு இருந்தோம். நெடு நாளைக்கு பிறகு சென்ற வாரம் பேசும் போது அவர் சொன்னது இது தான் , அவருடைய சொந்தகாரர் இப்போது "ஓட்டாண்டி ஆகி விட்டார், bankruptcy file செய்து விட்டார்" என்று. பயங்கர ஷாக் எங்கள் அனைவருக்கும். இரண்டு வருடத்திற்கு முன்பு மில்லியனர் அவர், இப்போது ஓட்டாண்டி. என்ன முரண் இது, அதுவும் இரண்டு வருடத்திற்குள் எப்படி?

எனக்கு இந்த கதை கேட்கும் போது இந்தியாவில் சிறுவயதில் எங்கள் சொந்தகாரர் ஒருவருக்கு கிடைத்த 1 லட்சம் ருபாய் லாட்டரி பரிசும், அதற்க்கு பின் நிகழ்ந்த சில நிகழ்வுகளும் நினைவுக்கு வந்தன.  மிக மிக சாதாரணமான வேலை பார்த்தவர் அவர். சொல்ல போனால் தின வருமானம் போல. வாடகை வீட்டில், மனைவி மற்றும் 2 சிறிய குழந்தைகளுடன் வாழ்க்கை. லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்த அவருக்கு ஒரு நாள் 1 லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது. 80 களில் 1 லட்சம் ரூபாய் என்பது மிக  பெரிய தொகை. ஒரே நாளில் லட்சாதிபதி ஆன அவருக்கு தலை கால் புரியவில்லை. இது என் பணம் எனக்கு வந்தது என்ற தலைகனம் அவரிடம் ஒரே நாளில் வந்து ஒட்டி கொண்டது. நிறைய தேவை இல்லாத செலவுகள் செய்தார். பணம் இருக்கிறது என்று வந்து ஒட்டி கொண்ட காக்காய் கூட்டங்களுக்கு தினமும் "தண்ணி" "சாப்பாடு" என்று சகலமும் நடக்கும். அந்த காக்கைகளின் பேச்சை கேட்டு அவர்கள் சொன்ன பல இடங்களில் இன்வெஸ்ட் செய்கிறேன் என்று பலதும் செய்து இரண்டே வருடங்களில் எல்லா பணமும் தொலைத்து விட்டார். அவரின் பிள்ளைகள் பணம் இல்லாமல் படிப்பு படிக்க கூட பட்ட கஷ்டம் கண்ணீர் வரவழிக்கும். ஒரு பைசா கூட குழந்தைகளுக்கு என்று அவர் சேமித்து வைக்க வில்லை. மிகவும் கஷ்டப்பட்டு இறந்தார் அவர்.

கிட்டத்தட்ட இதே ஒரு நிலை இப்போது நான் கேள்விபடுகிறேன். ஆனால் இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நிலை போல. இணையத்தில் தேடிய போது சிக்கிய ஒரு கட்டுரை இதனை ஆமோதிக்கிறது. பரிசு விழுந்த 70% மக்கள் அதனை 1-5 வருடத்திற்குள் தொலைத்து விடுவார்கள் என்று.  

நம்மூரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்று. கிட்டத்தட்ட அதே ஒரு நிலை எல்லா பரிசு விழுந்த மக்களிடமும் இருக்கிறது. தேவை இல்லாத ஆடம்பரம் உடனே அவர்களின் வாழ்கையை ஆக்கிரமித்து இருக்கிறது. இது என் பணம், எனக்கு கிடைத்த வரம், என்று ஒரு திமிர் வந்து அவர்களிடம் ஒட்டி கொண்டு இருக்கிறது. தேவையே இல்லாமல் "கார், போட், பெரிய பெரிய வீடுகள், நகைகள், பெயிண்டிங்க்ஸ், தண்ணீ, போதை என்று இவர்கள் அனைவரும் பணத்தை தொலைத்து இருக்கிறார்கள். முறையான "financial planning" இல்லாமல் ஒரு பண திமிர், கர்வம் வந்து இவர்களை ஆக்கிரமித்து இருக்கிறது. இது நாடு, இன, மொழி, சாதி வேறுபாடின்றி அனைவரிடமும் பார்க்க முடிகிறது. இதற்காவே இப்போது அமெரிக்காவில் லாட்டரி பரிசு வென்றவர்களுக்கு என்று இப்போது நிறைய கவுன்செல்லிங் தருகிறார்கள். எப்படி இன்வெஸ்ட் செய்வது என்று. ஆனாலும் இது ஒரு மாயை, ஒரு குறிப்பிட்ட வருடங்களில் மறைந்து விடும் என்று பலரும் அறிவதில்லை. அந்த இன்ஸ்டன்ட் மட்டுமே நினைக்க தோன்றுகிறது. கொஞ்சம் நிதானமாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும்.

நன்றி.


4 comments:

வெட்டிப்பேச்சு said...

நீங்கள் சொன்னது அப்பட்டமான உண்மை.
லாட்டரிச் சீட்டு தமிழ்நாட்டில் வந்த புதிது. அப்போதும் இப்படித்தான் முதல் முறையாக ஒரு வண்டி இழுப்பவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்தது. பத்திரிக்கைகளில் மிகுந்த விளம்பரப் படுத்தினார்கள். அத்துனை பேங்க் மேனேஜர்களும் அவர் வீட்டிற்கு சென்று தங்களது பேங்கில் இட்டுவைப்பு செய்யச்சொல்லி மிகுந்த பிரயாசையுடன் கேட்டார்கள் அவரும் இப்படித்தான் மறுபடி இரண்டே மாதங்களில் பீடி இழுத்துக் கொண்டு எல்லாவற்றையும் இழந்து விட்டு வண்டி இழுக்க ஆரம்பித்தார்.

சிலருக்கு சில சூழல்களை சரியாக கையாளத் தெரிவதில்லை என்பதே உண்மை.

உங்கள் பதிவு பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது. நன்றி.

God Bless You

? said...

எப்படி பெரிய தொகை இன்ஸ்வெஸ்ட் செய்வது எனத் தெரியாவிட்டால், அமெரிக்க மாநில லாட்டரிகளில் உடனடியாக எல்லாத் தொகையும் பெறாமல் பகுதிகளாக பல வருடங்கள் பெற முடியும் என்று நினைக்கிறேன். ஒட்டு மொத்தமாக வாங்காமல், கொஞ்சம் கொஞ்சமாக வாங்கினால் இந்த ஓட்டாண்டி நிலை வராது. அது போக, இந்த லாட்டரிகளே டுபாக்கூரான விஷயம், இதுவரை வெற்றி பெற்ற ஆள் ஒருத்தனையும் யாரும் பார்த்தா மாதிரியே தெரியல என எண்ணியிருந்தேன். அட்லீஸ்ட் ஒரு நிஜமாகவே existing ஆள் ஒருத்தர் லாட்டரி வென்றது பற்றி நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள் என்பதிலிருந்து லாட்டரி ஜாக்பாட் உண்மைதான் போல!!!

SathyaPriyan said...

முற்றிலும் உண்மை. அமெரிக்காவில் பல மாநிலங்களில் நீங்கள் லாட்டரி வெற்றி பெற்ற பின்பு அனானிமஸாக பரிசை பெற்றுக் கொள்ளலாம். அப்படி இருந்தால் ஒரு அனானிமஸ் ட்ரஸ்ட் தொடங்கி அதன் பேரில் நீங்கள் பரிசை பெறுவது சிறந்தது.

அப்படி இல்லாவிட்டால் நந்தவனத்தான் சொன்னது போல முடிந்தால் 20 ஆண்டுகள் அனுயிடி (Annuity) முறையிலும் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக உங்களுக்கு 40 வயதுக்கு குறைவாக இருந்தால் அனுயிடி முறையில் பெற்றுக் கொள்வதே சிறந்தது.

இல்லை முழுதுமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால் பணத்தை பெற்றுக் கொண்டு அதை முறையாக இன்வெஸ்ட் செய்ய வேண்டும்.

பல மில்லியன் டாலர்கள் வந்தால் அதை 10 பிரிவுகளாக்கி, முறையே ரியல் எஸ்டேட், தங்கம், S&P 500, 5 அல்லது 6 தனித்தனி தொழில் பிரிவுகளில் ஸ்டாக் என்று இன்வெஸ்ட் செய்ய வேண்டும்.

கடைசியாக லீகலாக உங்கள் பெயரையும், உங்கள் குடும்பத்தினர் பெயரையும், உங்கள் விலாசத்தையும் மாற்றிக் கொண்டு சென்று விட்டால் பணம் கேட்டு வரும் தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம்.

அமெரிக்காவில் பரிசை பெற்றுக் கொள்ள அதிக பட்சம் 180 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதால் பணத்தை என்ன செய்யப் போகிறோம் என்று நன்றாக ஆலோசித்து முடிவு செய்த பிறகே பரிசை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வருண் said...

ஒரு சில ஏழைகள்கூட லாட்டரி சீட்டு பைத்தியம் பிடிச்சு அலைவாங்க, நானும் பார்த்து இருக்கேன். ஆனால் பலருக்கு பணம் வந்தமாதிரியே போயிடும்னு எனக்குத் தெரியாது. I am learning now.

I see people those who make lots of money. They could afford some things which middle-class or poor can not afford. But such things are NOT THAT important things for living a happy life. They are very stingy too. They dont help anybody wholeheartedly either. They have some excuses like, "I cant save the world even if I spend all my money". I dont know, I just dont understand how more money can make someone happy?! It does not. :)